மார்ச், 2025 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: மார்ச் 2025

உறுதியான இளைப்பாறுதல் தேவனில்

சீனாவின் புஜியனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் மிகவும் நன்றாகத் தூங்க உதவ விரும்பினர். அவர்கள் ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு சூழலில், சோதனை பொருட்களின் மீதான தூக்க விளைவுகளை அளந்தனர். பிரகாசமான, மருத்துவமனை தர விளக்குகள் மற்றும் இயந்திரங்களின் சத்தங்கள் மற்றும் செவிலியர்கள் பேசும் ஆடியோ பதிவுகளுடன் முழுமையான சோதனை அது. தூக்கக் கவசங்கள் மற்றும் காது செருகிகள் போன்ற கருவிகள் சோதனை பொருட்களின் ஓய்வை மேம்படுத்துவதாக அவர்களின் ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் உண்மையான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள உண்மையிலேயே நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, அமைதியான தூக்கம் இன்னும் கடினமாக இருக்கும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

நம் உலகம் நிலைகுலைகையில், நாம் எப்படி ஓய்வெடுப்பது? வேதம் தெளிவாகக் கூறுகிறது: தேவனை நம்புபவர்களுக்கு அவர்களின் சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட சமாதானம் இருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசி, பூர்வ இஸ்ரவேலர்ககளின் துன்பங்களுக்குப் பிறகு மீட்கப்படும் எதிர்காலத்தைப் பற்றி எழுதினார். அவர்கள் தங்கள் பட்டணத்தில் பாதுகாப்பாக வாழ்வார்கள், ஏனென்றால் அதைக் தேவன் காப்பாற்றினார் என்பதை அறிந்திருந்தார்கள் (ஏசாயா 26:1). அவர்களைச் சுற்றியுள்ள சூழலில் நன்மையைக் கொண்டுவர அவர் ஆற்றலுடன் இயங்குவதை அவர்கள் நம்புவார்கள். "அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்”, ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துகிறார், நீதியைக் கொண்டுவருகிறார் (வவ. 5-6). "கர்த்தர்தாமே நித்தியமான கன்மலை" என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்கள் அவரை என்றென்றும் நம்பலாம் (வ. 4).

ஏசாயா எழுதினார்: “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” (வச. 3). இன்றும் தேவன் நமக்கு அமைதியையும் இளைப்பாறுதலையும் வழங்க முடியும். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அவருடைய அன்பு மற்றும் வல்லமையின் உறுதியில் நாம் இளைப்பாறலாம்.

செய்ய அல்லது செய்யக்கூடாதவை

நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப் போரில் செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு பீரங்கி என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவ்வாகனத்தின் மீது ஏறுவதிலுள்ள ஆபத்து குறித்துப் பல எச்சரிப்பு குறிகள் இருந்தன. ஆனால் எனது நண்பர்கள் இருவரும் உடனடியாக துடிப்போடு ஏறினர். எங்களில் சிலர் சற்று தயக்கம் காட்டினாலும், இறுதியில் நாங்களும் அவ்வாறே செய்தோம். ஒரு சிறுவன் பதிவிடப்பட்ட எச்சரிப்புகளைக் காட்டி மறுத்துவிட்டான். ஒரு பெரியவர் நெருங்கியதும், இன்னொருவன் வேகமாகக் கீழே குதித்தான். விதிகளைப் பின்பற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை விட விளையாடும் ஆசை அதிகமாக இருந்தது.

நம் அனைவருக்குள்ளும் குழந்தைத்தனமான முரட்டாட்ட சுபாவம் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று கூறப்பட்டால் நமக்குப் பிடிக்காது. ஆயினும் எது சரியானது என்பதை அறிந்து அதைச் செய்யாவிடில் அது பாவம் (4:17) என்று யாக்கோபில் வாசிக்கிறோம். ரோமரில், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (7:19-20).

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் பாவத்துடன் போராடுவது புதிராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நாம் சரியானதைச் செய்வதற்கு நம் சொந்த பலத்தை மட்டுமே சார்ந்திருக்கிறோம். ஒரு நாள், இந்த வாழ்க்கை முடிவடையும் போது, நாம் உண்மையிலேயே பாவத் தூண்டுதல்களுக்கு மரித்திருப்போம். எவ்வாறாயினும் அதுவரை, தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவத்தின் மீதான வெற்றியை வென்றவரின் வல்லமையை நாம் நம்பலாம்.

தேவனுக்கு வேறு திட்டங்கள் இருந்தன

அவர்களின் துல்லியமான வயது தெரியவில்லை. தேவாலயத்தின் படிகளில் ஒருத்தி கண்டெடுக்கப்பட்டாள்; மற்றவளுக்கோ அவள் கன்னியாஸ்திரீகளால் வளர்க்கப்பட்டவள் என்பது மட்டுமே தெரியும். இரண்டாம் உலகப் போரின்போது போலந்தில் பிறந்து, ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாக ஹலினா அல்லது கிறிஸ்டினா ஒருவரையொருவர் பற்றி அறிந்திருக்கவில்லை. பின்னர் மரபணு பரிசோதனை முடிவுகள் அவர்கள் சகோதரிகள் என்பதை வெளிப்படுத்தியது, மற்றும் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைவதற்கு வழிவகுத்தது. இது அவர்களின் யூத பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தியது அவர்கள் ஏன் கைவிடப்பட்டனர் என்பதை விளக்குகிறது. தீயவர்கள் சிறுமிகளை அவர்களின் அடையாளத்தின் காரணமாகக் கொல்ல முயன்றிருந்தனர்..

பயந்துபோன ஒரு தாய், சாகப்போகும் தன் குழந்தைகளை அவர்கள் மீட்கப்படக்கூடிய இடத்தில் விட்டுவிடுவது என்பதைக் கற்பனை செய்தால், மோசேயின் கதையை நினைவுபடுத்துகிறது. ஒரு எபிரேய ஆண் குழந்தையாக, அவர் இனப்படுகொலைக்காகக் குறிக்கப்பட்டார் (யாத்திராகமம் 1:22 ஐப் பார்க்கவும்). அவரது தாயார் தந்திரமாக அவரை நைல் நதியில் விட்டுவிட்டார் (2:3), அவருக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். மோசேயின் மூலம் தம்முடைய மக்களை மீட்பதற்கு அவள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு திட்டத்தைத் தேவன் வைத்திருந்தார்.

அமைதிக்கான அழுத்தம்

வாழ்க்கையின் மிகப்பெரிய அழுத்தங்களில் ஒன்று வீட்டை மாற்றுவது. நான் எனது முந்தைய வீட்டில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வசித்த பிறகு, எங்கள் தற்போதைய வீட்டிற்குச் சென்றோம். நான் திருமணத்திற்கு முன் எட்டு வருடங்கள் அந்த முதல் வீட்டில் தனியாக வாழ்ந்தேன். பின்னர் என் கணவர் தனது எல்லா பொருட்களுடன் இனைந்தார். பின்னர், ஒரு குழந்தையைப் பெற்றோம், இன்னும் அதிகமான பொருட்கள் சேர்ந்தது.

நாங்கள் புதிய வீட்டிற்கு போன நாளிலும் கூட அமைதியில்லை. வீட்டை மாற்றும் பணியாளர்கள் வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னும்கூட, நான் இன்னும் புத்தகத்தை எழுதி முடித்துமே கொண்டிருந்தேன். புதிய வீட்டில் பல படிக்கட்டுகள் இருந்தன, எனவே திட்டமிட்டதை விட இரண்டு மடங்கு நேரம் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் அன்றைய நிகழ்வுகளால் நான் மன அழுத்தத்தை உணரவில்லை. பின்னர் அது என்னைப் பாதித்தது, ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கப் பல மணிநேரம் செலவழித்தேன். வேதம் மற்றும் வசனங்களின் கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம். தேவனின் கிருபையால், நான் தக்க நேரத்தில் முடிக்க வேதத்தைப் பார்த்து, ஜெபித்து, எழுதினேன். எனவே, வேதத்திலும் ஜெபத்திலும் நான் மூழ்கியதே காரணம் என்று நான் நம்புகிறேன்.

பவுல் எழுதினார், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று. நாம் ஜெபித்து, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கையில்” (வ. 4). பிரச்சினை மீதிருக்கும் நம் கவனத்தை நம் அருள் நாதரிடம் திருப்புகிறோம். மனவழுத்தத்தைச் சமாளிக்க உதவும்படி நாம் தேவனிடம் கேட்கலாம், ஆனால் நாம் அவருடன் இணைகிறோம், இது " எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம்" (வ. 7) அளிக்கும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

மலைமுகடுகளின் பாதை

ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.  
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).  
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.  
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.  

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.