பரிபூரணமான இரட்சகர்
வீட்டு மேம்பாடு நிகழ்ச்சி ஒன்றில், உட்புற வடிவமைப்பாளர் வீட்டின் புதிய குளியலறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினை பீங்கான் ஓடுகளைக் குறித்து பெரிதாய் பேசிக்கொண்டிருந்தார். அனைத்தும் ஒரே மாதிரியானவையாக வணிக ரீதியில் தயாரிக்கப்பட்ட ஓடுகளிலிருந்து வேறுபட்ட இந்த கைவினைப் பொருட்கள் "குறைகளோடு" இருந்தன. குறைபாடுகள் ஒவ்வொரு ஓடுக்கும் தனித்துவமான அழகைக் கொடுத்தன. பயன்பாட்டையும் கடந்து, இடத்திற்கு அழகையும் மெருகையும் சேர்த்தது.
எனக்கு மெருகு அல்லது வசீகரம் குறித்து அவ்வளவாக தெரியாது, அதிலும் அதற்கு ஓடுகள் எப்படி நேர்மறையாக அல்லது எதிர்மறையாகப் பங்களிக்கக்கூடும் என்பதெல்லாம் எனக்குப் புரியாது. இன்னும் அந்த ஓடுகள் அபூரணமாக இருக்க, இயேசுவானவர் மனித அவதாரத்தில் (அவர் ஒரு மனிதனாகப் பூமிக்கு வந்ததில்) முற்றிலும் பரிபூரணமாக இருந்தார். எபிரேயரின் எழுத்தாளர், “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபிரெயர் 4: 15) என்று உறுதியளித்தார். இயேசு தம்முடைய பூமிக்குரிய பயணத்தின் போது எந்த நேரத்திலும் ஒரு பாவமான வார்த்தையைப் பேசவில்லை அல்லது ஒரு பாவச் செயலைச் செய்யவில்லை. அவர் முற்றிலும் பரிபூரணர்.
எபிரேயர் சொல்வது போல், இயேசுவில் "நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்" (வ.14) என்பதே நமக்கான ஊக்கம். ஏனென்றால் நாம் சகிக்கும் போராட்டங்களை அவர் புரிந்துகொண்டு அனுதாபப்படுகிறார். அவரும் அந்த நிலையிலிருந்து அதை அனுபவித்துள்ளார்; ஆனால் பூரணமாகவே இருந்தார். நம்முடைய பரிபூரணமான இரட்சகர் எல்லாவற்றிலும் நமக்கு உதவ முடியும்.

நேசிப்பதற்கே மணமுடித்தல்
ராதாவின் திருமணத்தில், அவளது தாயார் 1 கொரிந்தியரிலிருந்து ஒரு அழகான வேத வாக்கியத்தை வாசித்தார். வேதாகமத்தின் "அன்பின் அதிகாரம்" என்று அடிக்கடி அழைக்கப்படும் பதின்மூன்றாவது அதிகாரம் அந்த வைபவத்திற்கு ஏற்றதாக இருந்தது. “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” (வ.4). இதைக் கேட்டவாறே, அப்போஸ்தலனின் அசைவுண்டாக்கும் இந்த வார்த்தைகளுக்குப் பின்பாக இருந்ததைத் தற்கால மணப்பெண்களும் மாப்பிள்ளைகளும் அறிவார்களா என்பது கேள்விக்குறியே. பவுல் ஏதோவொரு காதல் கவிதையை எழுதவில்லை. அப்போஸ்தலன், பிளவுபட்ட சபையில் கொதித்தெழும் பிரிவினைகளை ஆற்றும் முயற்சியாகத் தனது கெஞ்சலையே எழுதினார்.
எளிமையாகச் சொன்னால், கொரிந்துவில் உள்ள தேவாலயம் "சீர்கெட்டிருந்தது" என்று அறிஞர் டக்ளஸ் ஏ. கேம்ப்பெல் கூறுகிறார். தவறான உறவுமுறை, விபச்சாரம் மற்றும் மூப்பர்களிடையே போட்டிமனப்பாண்மை போன்றவை தலைதூக்கும் பிரச்சனைகளில் சில. சபை மக்களிடையே சட்ட வழக்குகள் சர்வ சாதாரணம். ஆராதனைகள் பெரும்பாலும் குழப்பமாகவே இருந்தன, அந்நிய பாஷையில் பேசுபவர்கள் முதலிடம் பெறப் போட்டியிட்டனர், தீர்க்கதரிசனம் உரைப்பவர்களோ பிறரை ஈர்க்கவே தீர்க்கதரிசனம் கூறினர் (பார்க்க. 1 கொரிந்தியர் 14).
இந்தக் குழப்பத்தின் பின்பாக இருந்தது, "ஒருவருக்கொருவர் அன்பில் உறவாடுவதில் ஏற்பட்ட அடிப்படை தோல்வி" என்று காம்ப்பெல் கூறுகிறார். மேன்மையான வழியைக் காட்ட, பவுல் அன்பைப் பிரசங்கித்தார், ஏனென்றால் “அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்” (13:8).
பவுலின் அன்பான நினைவூட்டல்கள் நிச்சயமாக ஒரு திருமண வைபோகத்தை உற்சாகமூட்டும். அவைகள் நம் அனைவரையும் அன்பாயும் கனிவாயும் வாழ ஊக்குவிக்கட்டும்.

தேவனால் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை
“சில நேரங்களில் நான் ஏதோ கண்ணுக்கே தெரியாதவள் போல உணர்கிறேன்" விமலா தன் தோழியிடம் பேசும்போது இந்த வார்த்தைகள் காற்றில் ஊசலாடின. விமலாவை அவள் சிறு குழந்தைகளுடன் கைவிட்டு, அவளது கணவன் வேறொறுவளோடு போய்விட்டான். அவள், "நான் அவருக்கு என் வாழ்விலேயே சிறந்த ஆண்டுகளைக் கொடுத்தேன். இப்போது யாரேனும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்றோ என்னை அறிவதற்கு நேரம் ஒதுக்குவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை" என்றாள்.
அவளுடைய தோழி பதிலளித்தாள்: "நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என் அப்பாவும் போய்விட்டார். அது எங்களுக்கு, குறிப்பாக அம்மாவுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் ஒரு இரவில் அவள் என்னைத் தூங்கவைத்த போது, நான் மறக்கவே இல்லாத ஒன்றைச் சொன்னால்: 'தேவன் தன் கண்களை மூடுவதேயில்லை'. நான் வளர்ந்த பிறகு, தேவன் என்னை நேசிப்பதையும், எனக்கு எப்போதும் தூங்கும்போதும் கூட காவலாய் இருப்பதையும் அவள் எனக்குக் கற்பிக்க முயன்றதை விலக்கினாள்".
சீனாய் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஒரு சவாலான நேரத்தில் தமது ஜனங்களுடன் பகிர்ந்துகொள்ள மோசேக்குத் தேவன் அருளிய வார்த்தைகளை வேதாகமம் முன்வைக்கிறது: “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே” (எண்ணாகமம் 6:24-26). இந்த ஆசீர்வாதமானது ஜனங்கள் மீது ஆசாரியர்களால் மொழியப்பட வேண்டும்..
யாராவது நம்மைப் பார்க்கிறார்களா அல்லது உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்களா என்று நாம் ஏங்குகிற நிலைமையான வாழ்க்கையின் வனாந்தரங்களில் கூட தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். தேவனின் தயவான அவரது பிரகாசிக்கும் முகமும் மாறிடாத அன்பும் அவரை நேசிப்பவர்களை நோக்கித் திரும்புகிறது, நம்முடைய வலியினிமித்தம், அவரை நம்மால் உணர முடியாவிட்டாலும் கூட, தேவனுக்கு மறைவானவர்கள் என்று யாரும் இல்லை.

நமது திட்டங்களும் தேவ திட்டங்களும்
பல ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல தீர்மானித்தார். கடைசி நிமிடத்தில், குழுவினர் பயணிக்க முடியாமல் தடைப்பட்டனர். அனைவரும் ஏமாற்றமடைந்தனர், ஆனால் விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவர்கள் சேகரித்த பணத்தை அவர்கள் பார்க்க முயற்சித்த மக்களுக்கு நன்கொடையாக வழங்கினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு மக்கள் அதைப் பயன்படுத்தினர்.
சமீபத்தில், ஒரு ஜெபக்கூட்டத்தில், என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவரைச் சந்தித்தார். இந்த நபர் ஒரு ஆசிரியர், அவர் தினமும் அதே கட்டிடத்தின் வழியாக நடந்து செல்வதாகக் கூறினார். அப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உபயோகமாகத் தேவன் அதைப் பயன்படுத்தினார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
நம்முடைய திட்டங்களும், விருப்பங்களும் தேவனின் மனதில் கொண்டிருப்பவற்றோடு எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஏனென்றால், "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 55:8). தேவனுடைய வழிகள் நம்மிடமிருந்து வேறுபட்டவை மாத்திரம் அல்ல; அவருடைய வழிகள் "உயர்ந்தவை" மற்றும் சிறந்தவை, ஏனெனில் அவர் செய்வதெல்லாம் அவர் யார் என்பதோடு ஒத்துப்போகிறது (வ.9). அவருக்கு ஊழியஞ்செய்வதற்கான நமது முயற்சிகள் நாம் திட்டமிட்டபடி நடக்காதபோது இந்த சத்தியம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
சில சூழ்நிலைகளில் தேவன் இடைப்பட்டதை நாம் அறிந்துகொள்வதற்கு, பல ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்க நேரிடலாம். இருப்பினும், தற்போதைக்கு, அவருடைய நாமத்தால் உலகத்தை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளுகையில், தேவன் எப்போதும் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம் (வ.11).

தேவன் நம் பின்னே ஓடி வருகிறார்
பல ஆண்டுகளாக, சஞ்சய் ஒரு அடிமைத்தனத்துடன் போராடினார், அது அவரை தேவனிடம் நெருங்கவிடாமல் தடுத்தது. அவருடைய அன்புக்கு நான் எவ்வாறு தகுதியுடையவனாக இருக்க முடியும்? என்று அவர் குழம்பினார். எனவே, அவர் தொடர்ந்து சபைக்குச் சென்றபோதும், தேவனிடம் தன்னை இணைக்கக் கூடாதபடிக்கு ஒரு பெரும் பள்ளம் இருப்பதாக உணர்ந்தார்.
ஆனாலும், சஞ்சய் எப்பொழுது ஊக்கமாய் ஜெபித்தாலும், தேவன் அவருக்குப் பதிலளிப்பதாகத் தோன்றியது. கடினமான காலங்களில் அவரை உற்சாகப்படுத்தவும் ஆறுதலளிக்கவும் தக்கவர்களைத் தேவன் அனுப்பினார். சில வருடங்களுக்குப் பிறகு, தேவன் தன்னைத் தொடர்ந்து விரட்டி வருவதையும், அவர் எப்போதும் தன்னை நேசிப்பதையும் அக்கறை காட்டுவதையும் சஞ்சய் உணர்ந்தார். அப்போதுதான் தேவனின் மன்னிப்பிலும் அன்பிலும் அவர் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். "இப்போது, நான் மன்னிக்கப்பட்டேன் என்பதை அறிவேன். மேலும் நான் இன்னும் என் அடிமைத்தனத்துடன் போராடிக் கொண்டிருந்தாலும், அவரிடம் நெருங்கும்படிக்கு என்னைத் தேவனுக்கு விட்டுக்கொடுக்க முடியும்" என்று அவர் கூறினார்.
எசேக்கியேல் 34:11-16 தம் மக்களைப் பின்தொடர்ந்த ஒரு தேவனைப் பற்றி நமக்குச் சொல்கிறது. "நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்" என்று அவர் கூறினார், அவற்றை மீட்பதாகவும், அவற்றுக்கு அபிரிதமானவற்றை வழங்குவதாகவும் வாக்களித்தார் (வ.11). அவர்களுடைய மனுஷீகமான தலைவர்கள் அவர்களைக் கைவிட்ட பிறகும், அவர்களும் தங்கள் மெய்யான மேய்ப்பருக்குக் கீழ்ப்படியாமல் போனபோதும் (வ.1-6) இது நிகழ்ந்தது. நாம் உதவியற்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது நம்முடைய சொந்த பாவத்தின் விளைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாலும் சரி, தேவன் நம்மை அன்பினால் பின்தொடர்கிறார். அவருடைய இரக்கத்தாலும், கிருபையாலும், அவர் நம்மை மீண்டும் அவரிடமாய் இழுக்கிறார். நீங்கள் தேவனை மறந்திருந்தால், அவரிடம் திரும்புங்கள். பின்னர், அவர் வழிநடத்துவதற்கேற்ப, ஒவ்வொரு நாளும் அவருடன் தொடர்ந்து நடங்கள்.