Archives: மார்ச் 2024

இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!

சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார்.

முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், "நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு 28:5–6) என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம்.

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

படப்பிடிப்பின் போது, ​​கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது.

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சிறிய வழிகளில்

எல்சி புற்றுநோயால் தாக்கப்பட்டபோது, இயேசுவுடன் பரலோகத்தில் ஜீவிக்க செல்லுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவள் அந்த வியாதியிலிருந்து குணமடைந்தாள். தேவன் ஏன் தன் உயிரைக் காப்பாற்றினார் என்று அவளை யோசிக்க வைத்தது. “நான் என்ன நல்லது செய்ய முடியும்? என்னிடம் அதிக பணமோ திறமையோ இல்லை, என்னால் நடக்க முடியாது. நான் உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்க முடியும்?” என்று அவள் தேவனிடம் கேட்டாள். 

பின்னர் மற்றவர்களுக்கு சேவை செய்ய சிறிய, எளிய வழிகளைக் கண்டறிந்தார். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் அவளுடைய வீட்டை சுத்தம் செய்கிறவர்களின் தேவையை அறிந்தாள். அவள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள். அவ்வப்போது பணத்தைக் கொடுத்தாள். இந்த ரொக்கப் பரிசுகள் சிறியதாக இருந்தபோதிலும், அவை தொழிலாளர்களுக்கு உதவி செய்ய நீண்ட தூரம் சென்றன. அவள் அவ்வாறு செய்யும்போது, தேவன் அவளுக்கு கொடுப்பதை அவள் கண்டாள்: நண்பர்களும் உறவினர்களும் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய அவளைத் தூண்டினர்.

அவள் தனது கதையைப் பகிர்ந்து கொண்டபோது, 1 யோவான் 4:19இல் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை எல்சி எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை: “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” மேலும் அப்போஸ்தலர் 20:35, “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று நினைப்பூட்டுகிறது. 

எல்சி கொடுத்தாள், ஏனென்றால் அவள் தேவனிடத்திலிருந்து பெற்றாள். அவள் கொடுத்ததைப் போலவே ஊக்கமும் பெற்றாள். ஆயினும்கூட, அன்பான, நன்றியுள்ள இதயம் மற்றும் தன்னிடம் இருப்பதைக் கொடுக்கத் தயாராக இருப்பதை விட அவளிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது. தேவன் கொடுக்கல்-வாங்கல் என்ற நல்லொழுக்க வட்டத்தில் அதிகமாய் அவளை பெருகச்செய்தார். அவர் நம்மை வழிநடத்தும் போது, கொடுத்து உதவ நன்றியுள்ள மற்றும் தாராள மனதைக் கொடுக்கும்படி அவரிடம் கேட்போம்!

 

இயேசு கறைகளை கழுவுகிறார்

வாஷிங் மெஷினில் என்னுடைய சட்டையை தேடி, “நீ என்ன வேடிக்கை காண்பிக்கிறாயா?” என்று உரக்க கத்தினேன். என் சட்டையை கண்டுபிடித்தேன். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. 

என் வெள்ளை சட்டையில் மை புள்ளி இருந்தது. மையின் கறைகள் அங்கிருந்த அனைத்து ஆடைகளிலும் பரவியிருந்தது. நான் தெளிவாக என் சட்டை பைகளை சரிபார்க்கவில்லை. அதிலிருந்து கசிந்த ஒரு பேனா மை அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. 

பாவத்தை விவரிக்க வேதம் பெரும்பாலும் கறை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு கறை துணியில் ஊடுருவி, அவற்றை அழிக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் பாவத்தை விவரித்தார். அதன் கறை அவர்களின் தூய்மைக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவூட்டுகிறது: “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரேமியா 2:22). 

அதிர்ஷ்டவசமாக, பாவம் நம்மை முழுவதுமாய் ஆளுகை செய்யப் போவதில்லை. ஏசாயா 1:18ல், பாவத்தின் கறையிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க முடியும் என்ற தேவனின் வாக்குறுதியை நாம் கேட்கிறோம்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”

என் சட்டையில் இருந்து மை கறையை வெளியே எடுக்க முடியவில்லை. என் பாவத்தின் கறையை என்னால் அகற்றவும் முடியாது. அதிர்ஷ்டவசமாக, 1 யோவான் 1:9 வாக்களித்தபடி, தேவன் நம்மை கிறிஸ்துவில் சுத்திகரிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

 

நிஜமாய் வாழுங்கள்

2000 ஆம் ஆண்டில் போதகர் எட் டாப்சனுக்கு ஏ.எல்.எஸ் இருப்பது கண்டறியப்பட்டபோது,ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்காக ஜெபித்தனர். குணமடைய நம்பிக்கையுடன் ஜெபித்தால் செய்தால், தேவன் உடனடியாக பதிலளிப்பார் என்று பலர் நம்பினர். எட்ஸின் தசைகள் சிறிது சிறிதாக சிதைவதற்கு காரணமான நோயுடன் பன்னிரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு (அவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு), தேவன் அவரை இன்னும் ஏன் குணப்படுத்தவில்லை என்று நினைக்கிறீர்கள் என்று ஒருவர் அவரிடம் கேட்டார். “நல்ல பதில் என்று ஒன்று இல்லை. அதினால் நான் கேட்கவில்லை” என்று அவர் பதிலளித்தார். அவரது மனைவி லோர்னா மேலும் கூறுகையில், “நீங்கள் எப்போதும் பதில்களைப் பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருந்தால், நீங்கள் உண்மையில் வாழ முடியாது" என்று சொன்னார்கள். 

எட் மற்றும் லோர்னாவின் வார்த்தைகளில் தேவனுக்கான கனத்தை உங்களால் உணர முடிகிறதா? அவருடைய ஞானம் தங்களுக்கு மேலானது என்பதை அவர்கள் அறிந்தார்கள். இருப்பினும் எட் ஒப்புக்கொண்டார், “நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.” நோய் அதிகரிக்கும் இயலாமையை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அடுத்த நாள் என்ன புதிய பிரச்சனை வரக்கூடும் என்று அவருக்குத் தெரியவில்லை.

நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுவதற்காக, எட் இந்த வசனங்களை தனது காரில், குளியலறை கண்ணாடியில், மற்றும் அவரது படுக்கைக்கு அருகில் வைத்தார்: “நான் (கர்த்தர்) உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5). அவர் கவலைப்படத் தொடங்கும் போதெல்லாம், அவர் தனது எண்ணங்களை சத்தியத்தின் மீது மீண்டும் ஒருமுகப்படுத்த உதவும் வசனங்களை திரும்பத் திரும்பச் சொல்வார்.

அடுத்த நாள் எதைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை எட் பயிற்சி, நம் கவலைகளை நம்பிக்கையின் வாய்ப்புகளாக மாற்ற நமக்கு உதவிசெய்யக் கூடும்.