Archives: நவம்பர் 2023

தேவனை நம்புதல்

எனக்கு அவசரமாக இரண்டு மருந்துகள் தேவைப்பட்டன. ஒன்று என் அம்மாவின் ஒவ்வாமைக்காகவும் மற்றொன்று என் மருமகளின் அரிக்கும் தோலழற்சிக்காகவும் இருந்தது. அவர்களின் அசௌகரியம் மோசமடைந்தது. ஆனால் அவர்களுக்கான மருந்துகள் மருந்தகங்களில் கிடைக்கவில்லை. அவநம்பிக்கையான மற்றும் ஆதரவற்ற நிலையில், ஆண்டவரே, தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள் என்று நான் மீண்டும் மீண்டும் ஜெபித்தேன்.

சில வாரங்களுக்குப் பிறகு, அவர்களின் நிலைமைகள் சமாளிக்கக்கூடியதாக மாறியது. தேவன் இப்படியாக சொல்வது போல் தோன்றியது: “நான் சில சமயங்களில் குணமடைய மருந்துகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால் மருந்துகள் இறுதியாக தீர்வு அல்ல. நான் செய்வேன். அவைகள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். என் மீது நம்பிக்கை வையுங்கள்.”

சங்கீதம் 20 இல், தாவீது ராஜா தேவனின் நம்பகத்தன்மையில் ஆறுதல் பெற்றார். இஸ்ரவேலர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது மிகப்பெரிய பலம் “கர்த்தருடைய நாமத்தினால்” வந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் (வச. 7). அவர்கள் அவர் யார், அவருடைய மாறாத தன்மை மற்றும் தவறாத வாக்குறுதிகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகிய கர்த்தரின் நாமத்தில் நம்பிக்கை வைத்தார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் சர்வ மகத்துவமும் வல்லமையும் கொண்டவர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்டு அவர்களை எதிரிகளிடமிருந்து விடுவிப்பார் (வச. 6) என்ற உண்மையை அவர்கள் நம்பினர்.

கடவுள் நமக்கு உதவ இந்த உலகத்தின் வளங்களைப் பயன்படுத்தினாலும், இறுதியில், நம்முடைய பிரச்சனைகளின் மீதான வெற்றி அவரிடமிருந்தே வருகிறது. அவர் நமக்கு ஒரு தீர்மானத்தை கொடுத்தாலும் சரி அல்லது சகித்துக்கொள்ளும் கிருபைளை கொடுத்தாலும் சரி, அவர் சொல்லும் அனைத்தும் அவர் நம்மோடு இருப்பார் என்று நம்பலாம். நம்முடைய பிரச்சனைகளில் நாம் மூழ்கிவிட வேண்டிய அவசியமில்லை. அவருடைய நம்பிக்கையுடனும் சமாதானத்துடனும் நாம் அவற்றை துணிந்து எதிர்கொள்ள முடியும்.

ஒரு மெல்லிய சத்தம்

நியூயார்க் நகரின் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனில் உள்ள கிசுகிசுக்கும் சுவர், அப்பகுதியின் ஆரவாரத்திலிருந்து ஒரு மென்மையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த தனித்துவமான இடம் முப்பது அடி தூரத்தில் இருந்து மக்கள் அமைதியான செய்திகளை தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. கிரானைட் வளைவின் அடிவாரத்தில் ஒருவர் நின்று சுவரில் மென்மையாகப் பேசும்போது, ஒலி அலைகள் வளைந்த கல்லின் மேல் ஏறி, மறுபுறம் கேட்பவருக்குப் பயணிக்கின்றன.

யோபு கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்த சோகத்தால் நிரம்பியபோது, தன்னை சுற்றியிருக்கும் ஆரவாரத்தின் மத்தியில் ஒரு மெல்லிய சத்தத்தைக் கேட்க நேரிட்டது (யோபு 1:13-19; 2:7). அவரது நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பேசினர். அவரது சொந்த எண்ணங்கள் முடிவில்லாமல் பொங்கின. மேலும் அவரது இருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரச்சனை ஆக்கிரமித்தது. ஆனாலும், இயற்கையின் மகத்துவம் தேவனுடைய தெய்வீக சக்தியைப் பற்றி அவரிடம் மென்மையாகப் பேசியது.

வானத்தின் மகிமை, விண்வெளியில் நிறுத்தப்பட்ட பூமியின் மர்மம் மற்றும் அடிவானத்தின் உறுதிப்பாடு ஆகியவை, உலகம் தேவனுடைய உள்ளங்கையில் இருப்பதை யோபுக்கு நினைவூட்டியது (26:7-11). கொந்தளிக்கும் கடலும், சலசலக்கும் சூழ்நிலையும் கூட, “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்” (வச. 14) என்று சொல்லத் தூண்டியது. 

உலகின் அதிசயங்கள் தேவனுடைய மகத்துவத்தின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றால், அவருடைய சக்தி அதைப் புரிந்துகொள்ளும் திறனை மீறுகிறது என்பது தெளிவாகிறது. உடைந்த காலங்களில், இது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. துன்பத்தின் நேரத்தில் யோபுவுக்கு தேவன் செய்த நன்மைகள் உட்பட அவரால் எதையும் செய்ய முடியும். 

இரக்கம்காட்டும் திறன்

பதினான்காம் நூற்றாண்டில் சியன்னாவைச் சேர்ந்த கேத்தரின் எழுதினார்: “உங்கள் காலில் முள் குத்தியிருக்கிறது. அதனால்தான் நீங்கள் இரவில் சில நேரங்களில் அழுகிறீர்கள்.” மேலும், “இந்த உலகில் சிலர் அதை வெளியே இழுக்க முடியும். அவர்கள் எடுக்கும் திறமை தேவனிடமிருந்து  கற்றுக்கொண்டது.” கேத்தரின் அந்த “திறமையை” வளர்ப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதினிமித்தம் மற்றவர்களுடைய வேதனையை உணர்ந்து அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கிறவராய் மக்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறார். 

மென்மையும் திறமையும் தேவைப்படும் ஆழமாக பதிக்கப்பட்ட முள்ளாக அந்த வலியின் படம் என்னுள் நீடிக்கிறது. நாம் எவ்வளவு சிக்கலானவர்களாகவும் காயப்பட்டவர்களாகவும் இருக்கிறோம் என்பதையும், மற்றவர்கள் மீதும் நம் மீதும் உண்மையான இரக்கத்தை வளர்த்துக் கொள்ள ஆழமாக தோண்ட வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தும் வகையில் இது ஒரு தெளிவான நினைவூட்டலாகும்.

அல்லது, அப்போஸ்தலர் பவுல் விவரிக்கிறபடி, இயேசுவைப் போல மற்றவர்களை நேசிப்பதற்கு நல்ல எண்ணங்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் தேவை என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு படம்.  அதற்கு ஒருவர்மேலொருவர் பட்சமாயிருக்கவேண்டும் (ரோமர் 12:10). “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்” (வச. 12). அதற்கு மகிழ்ச்சியாயிருக்கிறவர்களோடு மகிழ்ந்திருந்தால் மட்டும் போதாது; “அழுகிறவர்களுடனே அழுங்கள்” (வச. 15). அது நம் அனைவருக்கும் தேவைப்படுகிறது. 

உடைந்த இந்த உலகில், நாம் யாரும் காயமடையாமல் தப்பிக்க முடியாது. காயம் மற்றும் வடுக்கள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமாகப் பதிந்துள்ளன. ஆனால் கிறிஸ்துவில் நாம் காணும் அன்பு இன்னும் ஆழமானது. இரக்கத்தின் தைலத்துடன் அந்த முட்களை வெளியே இழுக்கும் அளவுக்கு மென்மையான அன்பு, சிநேகிதனையும் எதிரியையும் அரவணைக்க தயாராக உள்ளது (வச. 14). 

தேவனின் பொருட்டு சேவை செய்தல்

இங்கிலாந்தின் ராணி எலிசபெத் செப்டம்பர் 2022இல் இறந்தபோது, அவரது இறுதி ஊர்வலத்தில் அணிவகுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தியாகமான சேவை மக்களால் பார்க்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை பெரிய கௌரவமாகக் கருதினர். “அவரது மாட்சிமைக்காக எங்கள் கடைசி கடமையை செய்ய இது ஒரு வாய்ப்பு” என்று ஒரு இராணுவ வீரர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அவர் என்ன செய்தார் என்பது அல்ல, ஆனால் அவர் அதை யாருக்காக செய்கிறார் என்பது ஒரு முக்கியமான வேலையாக மாறியது.

வாசஸ்தலத்தின் அலங்காரப் பொருட்களைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட லேவியர்களும் இதே நோக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆசாரியர்களைப் போலல்லாமல், கெர்சோனியர்கள், கோகாத்தியர்கள் மற்றும் மெராரியர்களுக்கு சாதாரணமான வேலைகள் ஒதுக்கப்பட்டன: பெட்டி, மேஜை, குத்துவிளக்கு, பீடங்கள், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகள், தொங்குதிரை அதினுடைய எல்லா வேலைகளுக்கும் நியமிக்கப்பட்டனர் (எண்கள் 3:25-26, 28, 31, 36-37). அவர்கள் இந்த ஆசரிப்புகூடார வேலைக்காக தேவனால் நியமிக்கப்பட்டனர். அவர்களின் சந்ததியர் அதை தொடர்ந்துசெய்ய கட்டளையிடப்பட்டனர். 

என்ன ஒரு ஊக்கமளிக்கும் சிந்தனை! இன்று, நம்மில் பலர் வேலையில், வீட்டில் அல்லது தேவாலயத்தில் என்ன செய்கிறோம் என்பது பட்டங்களையும் சம்பளத்தையும் மதிக்கும் உலகிற்கு அற்பமானதாகத் தோன்றலாம். ஆனால் தேவன் வேறு விதமாக பார்க்கிறார். நாம் அவர் பொருட்டு ஊழியம் செய்து அவருடைய நாம மகிமைக்காகப் பிரயாசப்படுவோமாகில் நம்முடைய பணியானது முக்கியமான ஒன்றாய் மாறுகிறது என்பதில் ஐயமில்லை.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். 

படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார். 

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன. 

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது. 

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர். 

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார். 

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம். 

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் ‘மாண்டடம்’ அதாவது “கட்டளை” என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.