Archives: நவம்பர் 2023

தேவனை நம்புதல்

எனக்கு அவசரமாக இரண்டு மருந்துகள் தேவைப்பட்டன. ஒன்று என் அம்மாவின் ஒவ்வாமைக்காகவும் மற்றொன்று என் மருமகளின் அரிக்கும் தோலழற்சிக்காகவும் இருந்தது. அவர்களின் அசௌகரியம் மோசமடைந்தது. ஆனால் அவர்களுக்கான மருந்துகள் மருந்தகங்களில் கிடைக்கவில்லை. அவநம்பிக்கையான மற்றும் ஆதரவற்ற நிலையில், ஆண்டவரே, தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள் என்று நான் மீண்டும் மீண்டும் ஜெபித்தேன்.

சில வாரங்களுக்குப் பிறகு, அவர்களின் நிலைமைகள் சமாளிக்கக்கூடியதாக மாறியது. தேவன் இப்படியாக சொல்வது போல் தோன்றியது: “நான் சில சமயங்களில் குணமடைய மருந்துகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால் மருந்துகள் இறுதியாக தீர்வு அல்ல. நான் செய்வேன். அவைகள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். என் மீது நம்பிக்கை வையுங்கள்.”

சங்கீதம் 20 இல், தாவீது ராஜா தேவனின் நம்பகத்தன்மையில் ஆறுதல் பெற்றார். இஸ்ரவேலர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது மிகப்பெரிய பலம் “கர்த்தருடைய நாமத்தினால்” வந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் (வச. 7). அவர்கள் அவர் யார், அவருடைய மாறாத தன்மை மற்றும் தவறாத வாக்குறுதிகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகிய கர்த்தரின் நாமத்தில் நம்பிக்கை வைத்தார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் சர்வ மகத்துவமும் வல்லமையும் கொண்டவர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்டு அவர்களை எதிரிகளிடமிருந்து விடுவிப்பார் (வச. 6) என்ற உண்மையை அவர்கள் நம்பினர்.

கடவுள் நமக்கு உதவ இந்த உலகத்தின் வளங்களைப் பயன்படுத்தினாலும், இறுதியில், நம்முடைய பிரச்சனைகளின் மீதான வெற்றி அவரிடமிருந்தே வருகிறது. அவர் நமக்கு ஒரு தீர்மானத்தை கொடுத்தாலும் சரி அல்லது சகித்துக்கொள்ளும் கிருபைளை கொடுத்தாலும் சரி, அவர் சொல்லும் அனைத்தும் அவர் நம்மோடு இருப்பார் என்று நம்பலாம். நம்முடைய பிரச்சனைகளில் நாம் மூழ்கிவிட வேண்டிய அவசியமில்லை. அவருடைய நம்பிக்கையுடனும் சமாதானத்துடனும் நாம் அவற்றை துணிந்து எதிர்கொள்ள முடியும்.

ஒரு மெல்லிய சத்தம்

நியூயார்க் நகரின் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனில் உள்ள கிசுகிசுக்கும் சுவர், அப்பகுதியின் ஆரவாரத்திலிருந்து ஒரு மென்மையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த தனித்துவமான இடம் முப்பது அடி தூரத்தில் இருந்து மக்கள் அமைதியான செய்திகளை தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. கிரானைட் வளைவின் அடிவாரத்தில் ஒருவர் நின்று சுவரில் மென்மையாகப் பேசும்போது, ஒலி அலைகள் வளைந்த கல்லின் மேல் ஏறி, மறுபுறம் கேட்பவருக்குப் பயணிக்கின்றன.

யோபு கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்த சோகத்தால் நிரம்பியபோது, தன்னை சுற்றியிருக்கும் ஆரவாரத்தின் மத்தியில் ஒரு மெல்லிய சத்தத்தைக் கேட்க நேரிட்டது (யோபு 1:13-19; 2:7). அவரது நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பேசினர். அவரது சொந்த எண்ணங்கள் முடிவில்லாமல் பொங்கின. மேலும் அவரது இருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரச்சனை ஆக்கிரமித்தது. ஆனாலும், இயற்கையின் மகத்துவம் தேவனுடைய தெய்வீக சக்தியைப் பற்றி அவரிடம் மென்மையாகப் பேசியது.

வானத்தின் மகிமை, விண்வெளியில் நிறுத்தப்பட்ட பூமியின் மர்மம் மற்றும் அடிவானத்தின் உறுதிப்பாடு ஆகியவை, உலகம் தேவனுடைய உள்ளங்கையில் இருப்பதை யோபுக்கு நினைவூட்டியது (26:7-11). கொந்தளிக்கும் கடலும், சலசலக்கும் சூழ்நிலையும் கூட, “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்” (வச. 14) என்று சொல்லத் தூண்டியது. 

உலகின் அதிசயங்கள் தேவனுடைய மகத்துவத்தின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றால், அவருடைய சக்தி அதைப் புரிந்துகொள்ளும் திறனை மீறுகிறது என்பது தெளிவாகிறது. உடைந்த காலங்களில், இது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. துன்பத்தின் நேரத்தில் யோபுவுக்கு தேவன் செய்த நன்மைகள் உட்பட அவரால் எதையும் செய்ய முடியும். 

இரக்கம்காட்டும் திறன்

பதினான்காம் நூற்றாண்டில் சியன்னாவைச் சேர்ந்த கேத்தரின் எழுதினார்: “உங்கள் காலில் முள் குத்தியிருக்கிறது. அதனால்தான் நீங்கள் இரவில் சில நேரங்களில் அழுகிறீர்கள்.” மேலும், “இந்த உலகில் சிலர் அதை வெளியே இழுக்க முடியும். அவர்கள் எடுக்கும் திறமை தேவனிடமிருந்து  கற்றுக்கொண்டது.” கேத்தரின் அந்த “திறமையை” வளர்ப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதினிமித்தம் மற்றவர்களுடைய வேதனையை உணர்ந்து அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கிறவராய் மக்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறார். 

மென்மையும் திறமையும் தேவைப்படும் ஆழமாக பதிக்கப்பட்ட முள்ளாக அந்த வலியின் படம் என்னுள் நீடிக்கிறது. நாம் எவ்வளவு சிக்கலானவர்களாகவும் காயப்பட்டவர்களாகவும் இருக்கிறோம் என்பதையும், மற்றவர்கள் மீதும் நம் மீதும் உண்மையான இரக்கத்தை வளர்த்துக் கொள்ள ஆழமாக தோண்ட வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தும் வகையில் இது ஒரு தெளிவான நினைவூட்டலாகும்.

அல்லது, அப்போஸ்தலர் பவுல் விவரிக்கிறபடி, இயேசுவைப் போல மற்றவர்களை நேசிப்பதற்கு நல்ல எண்ணங்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் தேவை என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு படம்.  அதற்கு ஒருவர்மேலொருவர் பட்சமாயிருக்கவேண்டும் (ரோமர் 12:10). “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்” (வச. 12). அதற்கு மகிழ்ச்சியாயிருக்கிறவர்களோடு மகிழ்ந்திருந்தால் மட்டும் போதாது; “அழுகிறவர்களுடனே அழுங்கள்” (வச. 15). அது நம் அனைவருக்கும் தேவைப்படுகிறது. 

உடைந்த இந்த உலகில், நாம் யாரும் காயமடையாமல் தப்பிக்க முடியாது. காயம் மற்றும் வடுக்கள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமாகப் பதிந்துள்ளன. ஆனால் கிறிஸ்துவில் நாம் காணும் அன்பு இன்னும் ஆழமானது. இரக்கத்தின் தைலத்துடன் அந்த முட்களை வெளியே இழுக்கும் அளவுக்கு மென்மையான அன்பு, சிநேகிதனையும் எதிரியையும் அரவணைக்க தயாராக உள்ளது (வச. 14). 

தேவனின் பொருட்டு சேவை செய்தல்

இங்கிலாந்தின் ராணி எலிசபெத் செப்டம்பர் 2022இல் இறந்தபோது, அவரது இறுதி ஊர்வலத்தில் அணிவகுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தியாகமான சேவை மக்களால் பார்க்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை பெரிய கௌரவமாகக் கருதினர். “அவரது மாட்சிமைக்காக எங்கள் கடைசி கடமையை செய்ய இது ஒரு வாய்ப்பு” என்று ஒரு இராணுவ வீரர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அவர் என்ன செய்தார் என்பது அல்ல, ஆனால் அவர் அதை யாருக்காக செய்கிறார் என்பது ஒரு முக்கியமான வேலையாக மாறியது.

வாசஸ்தலத்தின் அலங்காரப் பொருட்களைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட லேவியர்களும் இதே நோக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆசாரியர்களைப் போலல்லாமல், கெர்சோனியர்கள், கோகாத்தியர்கள் மற்றும் மெராரியர்களுக்கு சாதாரணமான வேலைகள் ஒதுக்கப்பட்டன: பெட்டி, மேஜை, குத்துவிளக்கு, பீடங்கள், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகள், தொங்குதிரை அதினுடைய எல்லா வேலைகளுக்கும் நியமிக்கப்பட்டனர் (எண்கள் 3:25-26, 28, 31, 36-37). அவர்கள் இந்த ஆசரிப்புகூடார வேலைக்காக தேவனால் நியமிக்கப்பட்டனர். அவர்களின் சந்ததியர் அதை தொடர்ந்துசெய்ய கட்டளையிடப்பட்டனர். 

என்ன ஒரு ஊக்கமளிக்கும் சிந்தனை! இன்று, நம்மில் பலர் வேலையில், வீட்டில் அல்லது தேவாலயத்தில் என்ன செய்கிறோம் என்பது பட்டங்களையும் சம்பளத்தையும் மதிக்கும் உலகிற்கு அற்பமானதாகத் தோன்றலாம். ஆனால் தேவன் வேறு விதமாக பார்க்கிறார். நாம் அவர் பொருட்டு ஊழியம் செய்து அவருடைய நாம மகிமைக்காகப் பிரயாசப்படுவோமாகில் நம்முடைய பணியானது முக்கியமான ஒன்றாய் மாறுகிறது என்பதில் ஐயமில்லை.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

பெஹலே ஆப்

கருணை மற்றும் விருந்தோம்பலின் இந்தியாவின் முடிசூடா தலைநகரம் லக்னோ. பின்வரும் நகைச்சுவையில் இது பொருத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது: "ஏன் பயணிகள் லக்னோ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதில்லை? ஏனென்றால் அவர்கள் ரயில் நிலைய நடைபாதையில் ஒருவருக்கொருவர், "பெஹலே ஆப்!" ("நீங்கள் முதலில்" என்று மொழிபெயர்க்கிறது) என்று சொல்லி நகராமல் இருப்பதாலே". மற்றவர்களை முதலில் செல்ல அனுமதிப்பது பற்றி லக்னோ மக்களிடம் இருந்து நாட்டின் பிற பகுதிகள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது.

ஆனால் இயேசுவைப் பின்பற்றுபவர்களான நமக்கோ தாழ்மைக்கான நமது அளவுகோல் இயேசுவே. இயேசு சொன்னார், "உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்" (மத்தேயு 23:11). அண்ட சராசரத்தின் சிருஷ்டிகராகிய அவர், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல" (ஏசாயா 53:7) நடத்தப்படுவதற்கு அனுமதித்தபோது, அவர் நமக்குத் தாழ்மையை விளக்கிக் காட்டினார். பவுல் பிலிப்பி சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவின் தலைமையின் அளவை குறித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். இயேசு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி இருக்க அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (வ.6-8) என்ற உண்மையை நாம் சிந்தையில் கொள்ள அவர் நமக்கு உதவுகிறார். இந்த கீழ்ப்படிதலுள்ள தாழ்மையே அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தியது, அவருக்கு உலகின் ஒரே மீட்பராக "மேலான நாமத்தை" வழங்கியது (வ.9-11).

தாழ்மையான இதயம் கொள்வது எளிதல்ல. மற்றவரின் தேவைகளை நம் தேவைக்கு மேல் வைப்பது மிகவும் கடினம். குடும்பம் அல்லது நண்பர்கள் போன்ற நாம் விரும்பும் நபர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவ்வளவு கடினம் அல்ல, ஆனால் அந்நியர்களின் தேவைகளை நம்முடைய தேவைகளுக்கு மேல் வைப்பது கடினம் (மாற்கு 12:31). உண்மையான தாழ்மையின் தன்மையை இயேசு நமக்குக் காட்டினார். நாம் பின்பற்றும்படி அவர் நமக்கு ஒரு உதாரணம் கொடுத்தார். தாழ்மையானது கடினமாக இருந்தாலும், நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.