Archives: அக்டோபர் 2023

தேவனுடைய செட்டைகளின் நிழலில்

எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள குளத்தில் வாத்து குஞ்சுகளுடன் பல வாத்து குடும்பங்கள் உள்ளன. அந்த சிறிய குஞ்சுகள் மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன. நான் நடந்து செல்லும்போது அல்லது குளத்தைச் சுற்றி ஓடும்போது அவைகளைப் பார்க்காமல் இருக்கமுடியாது. ஆனால் நான் கண்ணில் படுவதைத் தவிர்க்கவும், வாத்துக்களுக்கு ஒரு பரந்த இடத்தைக் கொடுக்கவும் கற்றுக்கொண்டேன். இல்லையெனில், அதனுடைய பெற்றோர்கள் அதற்கு நான் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சி என்னை துரத்தும் அபாயம் நேரிடும். 

ஒரு பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் உருவகத்தை வைத்து தேவன் தன்னுடைய பிள்ளைகளை எவ்வளவு மென்மையாய் பாதுகாக்கிறார் என்று வேதம் அறிவிக்கிறது (சங்கீதம் 91:4). சங்கீதம் 61இல், இந்த வகையான தேவனுடைய பராமரிப்பை அனுபவிக்க முடியாமல் தாவீது திணருவதை நாம் பார்க்கக்கூடும். அவர் தேவனை “அடைக்கலம்” மற்றும் “பெலத்த துருகம்” (வச. 3) என்றும் விவரிக்கிறார். அவர் தற்போது “பூமியின் கடையாந்தரத்திலிருந்து” கூப்பிட்டு, “எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2) என்று கெஞ்சுகிறார். அவர் மீண்டும் தேவனுடைய “செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (வச. 4) என்று உறுதியாய் அறிவிக்கிறார். 

மேலும் தனது வலியையும், குணமடைவதற்கான ஏக்கத்தையும் தேவனிடம் கொண்டுவந்து, தாவீது தனக்கு தேவன் செவிசாய்த்ததை அறிந்து ஆறுதல் அடைந்தார் (வச. 5). தேவனுடைய உண்மைத்தன்மையின் காரணமாக, அவருடைய “நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்” (வச. 8) என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார். 

சங்கீதக்காரனைப் போலவே, நாமும் தேவனுடைய அன்பை விட்டு விலகி தொலைவில் இருப்பதை உணரும்போது, நம்முடைய வலியிலும் கூட, அவர் நம்முடன் இருக்கிறார், ஒரு தாய் பறவை தனது குட்டிகளைக் காப்பது போல் நம்மைப் பாதுகாத்து, பராமரித்து வருகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் அவருடைய அன்பான கரங்களுக்குள் அடைக்கலம் புகலாம். 

ஸ்மார்ட்போன் இரக்கம்

உங்களுக்கு வாகனத்தில் உணவு கொண்டுவருபவர் தாமதமாக வந்தாரா? அவருக்கு ஒரு நட்சத்திர மதிப்பீட்டை வழங்க உங்களது மொபைலைப் பயன்படுத்தலாம். கடைக்காரர் உன்னிடம் குறும்பாக நடந்து கொண்டாரா? நீங்கள் அவளுக்கு ஒரு விமர்சன மதிப்பாய்வை எழுதலாம். ஸ்மார்ட்போன்கள், ஷாப்பிங் செய்ய, நண்பர்களுடன் பழக, மேலும் பலவற்றைச் செய்ய உதவும் அதே வேளையில், அவை ஒருவருக்கொருவர் மதிப்பிடும் சக்தியையும் கொடுக்கின்றது. மேலும் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

ஒருவரையொருவர் இவ்வாறு மதிப்பிடுவது சிலவேளைகளில் சிக்கலாகவும் இருக்கிறது. ஏனெனில் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் மதிப்பீடுகள் வழங்கப்படலாம். ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலை காரணமாக தாமதமாய் உணவுகொண்டுவந்ததற்காக மோசமாக மதிப்பிடப்படுகிறார். தன்னுடைய நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் இரவு முழுவதும் விழித்திருந்ததினால் கடைக்கார பெண் எதிர்மறையான விமர்சனத்தைப் பெறுகிறார். மற்றவர்களை இப்படி அநியாயமாக மதிப்பிடுவதை எப்படி தவிர்க்கலாம்?

தேவனுடைய சுபாவத்தை தத்தெடுப்பதின் மூலம் இதைத் தவிர்க்கக்கூடும். யாத்திராகமம் 34:6-7 இல், தேவன் தன்னை “இரக்கமும், கிருபையும்” உள்ளவராக காண்பிக்கிறார். அதாவது சூழ்நிலை புரியாமல் நம்முடைய தோல்விகளை அவர் நியாயந்தீர்க்கமாட்டார். “நீடிய சாந்தம்” உள்ளவர் - அதாவது, ஒரு தவறு நிகழ்ந்த மாத்திரத்தில் அதை எதிர்மறையாய் மதிப்பிடமாட்டார். “மகா தயையும்” கொண்டவர் - அதாவது அவருடைய சிட்சைகள் நமது நன்மைக்காகவே, பழிவாங்குவதற்காக அல்ல. “பாவத்தையும் மன்னிக்கிறவர்” - அதாவது நமது வாழ்க்கையை நமது ஒரு நட்சத்திர அந்தஸ்தினால் வரையறுக்க வேண்டியதில்லை. தேவனுடைய குணாதிசயமே நம்முடைய அடிப்படையாக இருக்க வேண்டும் (மத்தேயு 6:33). கிறிஸ்துவின் சுபாவத்தை செயல்படுத்துவதின் மூலம் ஸ்மார்ட்ஃபோன்களின் கடுமையான தன்மையைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் யுகத்தில், நாம் அனைவரும் மற்றவர்களை கடுமையாக மதிப்பிடலாம். இன்று ஒரு சிறிய இரக்கத்தைக் கொண்டுவர பரிசுத்த ஆவியானவர் நமக்கு கிருபையளிப்பாராக!

நீங்கள் தேவனை விசுவாசிக்கலாம்

என் பூனை மிக்கிக்கு கண் தொற்றுநோய் ஏற்பட்டபோது, தினமும் கண்களில் சொட்டு மருந்து போட்டேன். அதை நான் இருக்கையில் அமர்த்தி அதற்கு சொட்டு மருந்து போட முயற்சிக்கும்போது, அது சரியாய் உட்கார்ந்து, அந்த மருந்தை வாங்கிக்கொள்வதற்காக தன்னுடைய கண்களை திறந்து காண்பிக்கும். “நல்ல பையன்” என்று அதற்கு பாராட்டுக்கொடுப்பேன். நான் என்ன செய்கிறேன் என்பது அதற்கு புரியவில்லை என்றாலும், அது ஒருபோதும் குதிக்கவோ, சீண்டவோ அல்லது என்னைக் கீறவோ முயற்சிக்கவில்லை. மாறாக, அது என்னிடமாய் நெருங்கி வருவதற்கே முயற்சித்தது. அது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. என்னை அதனால் நம்ப முடியும் என்பது அதற்கு நன்றாய் தெரியும். 

தாவீது, சங்கீதம் 9ஐ எழுதியபோது, தேவனின் அன்பையும் உண்மைத்தன்மையையும் அவர் ஏற்கனவே அனுபவித்திருக்கவேண்டும். அவர் தன்னுடைய எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தேவனை நாடுகிறார். தேவனுடைய அவருடைய சார்பில் செயல்படுகிறார் (வச. 3-6). தாவீதின் தேவையின் போது, தேவன் அவரை கைவிடவில்லை. இதன் விளைவாக, தாவீது தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்கிறார். அவர் வல்லமையும் நீதியும், அன்பும் உண்மையும் கொண்டவர். அதனால் தாவீது தேவனை நம்புகிறார். தேவன் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருந்தார்.

நான் மிக்கியை அதன் சிறுபிராயத்தில் தெருவில் ஒரு பட்டினி கிடக்கும் பூனைக்குட்டியாகக் கண்ட இரவு முதல், பல நோய்கள் தருவாயில் அதை கவனித்துக்கொண்டேன். அதனால்; நான் அவருக்குப் புரியாத விஷயங்களைச் செய்தாலும் கூட, என்னை நம்ப முடியும் என்று அதற்குத் தெரியும். இதேபோல், தேவன் செய்யும் சில காரியங்களை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் அவர் இதுவரை செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரை அணுகுவது நல்லது. வாழ்க்கையில் கடினமான தருணங்களில் தேவனையே நம்ப முற்படுவோம்.

பொன்னைக் காட்டிலும் விலையேறப்பெற்ற

நீங்கள் எப்போதாவது ஒரு கண்காட்சி விற்பனையில் குறைந்த விலை பொருட்களை வாங்கி, அது நம்பமுடியாத விலைமதிப்புள்ள ஒன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டா? கனெக்டிகட்டில் நடந்த ஒரு மலர் வடிவம்கொண்ட சீன பழங்கால கிண்ணம் வெறும் 35 டாலருக்கு (சுமார் 2800 ரூபாய்) வாங்கப்பட்டது. அதே கிண்ணம், 2021 ஏலத்தில் 700,000 டாலருக்கு (கிட்டத்தட்ட 6 கோடி இந்திய ரூபாய்) விற்கப்பட்டது. இந்த கிண்ணம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு அரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருளாக மாறியது. சிலர் சிறிய மதிப்புடையதாகக் கருதுவது உண்மையில் பெரிய மதிப்பைக் கொண்டிருக்கும் என்பதற்கு இது ஒரு அற்புதமான உதாரணம். 

உலகம் முழுவதும் பரவியுள்ள விசுவாசிகளுக்கு எழுதும்போது, பேதுரு இயேசுவின் மீதான அவர்களின் நம்பிக்கை எல்லா கலாச்சாரத்தினராலும் நிராகரிக்கப்பட்ட ஒருவர் மீதான நம்பிக்கை என்று விளக்குகிறார். பெரும்பாலான யூத மதத் தலைவர்களால் வெறுக்கப்பட்டு, ரோமானிய அரசாங்கத்தால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றாததால், பலரால் பிரயோஜனமற்றவராகக் கருதப்பட்டார். ஆனால் மற்றவர்கள் இயேசுவின் மதிப்பை நிராகரித்த போதிலும், அவர் “தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய” (1 பேதுரு 2:4) மதிப்பு மிக்கவராய் திகழ்ந்தார். நமக்கான அவரது மதிப்பு வெள்ளி அல்லது தங்கத்தை விட விலையேறப்பெற்றது (1:18-19). மேலும், இயேசுவை நம்புவதற்குத் தேர்ந்தெடுக்கும் எவரும் தங்கள் விருப்பத்தைப் பற்றி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள் என்ற உறுதி நமக்கு இருக்கிறது (2:6).

மற்றவர்கள் இயேசுவை மதிப்பற்றவர் என்று நிராகரிக்கும்போது, நாம் வேறுவிதத்தில் பார்ப்போம். கர்த்தருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற பரிசைக் காண நமக்கு உதவுவார். அவர் தேவ குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் மாறுவதற்கான விலைமதிப்பற்ற அழைப்பை எல்லாருக்கும் கொடுக்கிறார் (வச. 10).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கடந்த மற்றும் நிகழ்கால தேவன்

நாங்கள் எங்கள் குடும்பமாய் வளர்ந்த ஓரிகான் நகரத்தை விட்டுவந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் அங்கு சிறந்த நினைவுகளை உருவாக்கினோம். அந்த இடத்திற்கு திரும்பி மீண்டும் வந்தபோது, நான் மறந்துவிட்ட தருணங்களை அது எனக்கு நினைவூட்டியது. எங்கள் பெண்கள் கால்பந்து விளையாட்டுகள், எங்கள் பழைய வீடு, தேவாலயக் கூட்டங்கள் மற்றும் எங்கள் நண்பர்களின் மெக்சிகன் உணவகம் என்று பல நினைவுகள் எனக்கு ஏற்பட்டது. இப்போது நகரம் முழுவதுமாய் மாறிவிட்டது. ஆனால் அங்கு வருவது உகந்தது என்று என்னை நம்பவைக்க போதுமான நண்பர்கள் எனக்கு அங்கு இருந்தார்கள். 

இஸ்ரவேலர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபோது, உறவுகள், அடையாளங்கள் மற்றும் கலாச்சாரத்தின் பரிச்சயத்தை அவர்கள் தவறவிட நேரிட்டது. தேவனுக்கு விரோதமாக கலகம் செய்ததற்காக சிறையிருப்புக்கு சென்றதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கள்ளத் தீர்க்கதரிசிகள், அவர்களிடம் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று கூறியபோது (எரேமியா 28:2-4; 29:8-9), அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். சீக்கிரம் அவர்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிவிடுவார்கள் என்ற பொய்யான தீர்க்கதரிசனத்தைக் கேட்பது அவர்களுக்கு இலகுவாய் இருந்தது. 

வியாபாரிகளையும் அவர்களின் பொய்யான வாக்குறுதிகளையும் தேவன் அனுமதிக்கவில்லை. “உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்” (29:8) என்று தேவன் அவர்களை எச்சரிக்கிறார். அவர் தன்னுடைய ஜனத்தைக் குறித்து அழகான திட்டம் வைத்திருக்கிறார். அவைகள் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணும் மேன்மையான திட்டங்கள் (வச. 11). அவர்களின் நிலைமை சவாலானது, கடினமானது மற்றும் புதியது. ஆனால் தேவன் அவர்களுடன் இருந்தார். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (வச. 13) என்று அவர்களிடம் சொல்லுகிறார். “நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்” (வச. 14) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நம்முடைய பழைய மேன்மையான நினைவுகளை நினைக்கும்போது அது நம்மை சோர்வடையச் செய்துவிடுகிறது. தேவன் இப்போது என்ன செய்கிறார் என்பதைத் தவறவிடாதீர்கள். அவர் வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் நிறைவேற்றுவார்.

 

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம். 

 

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.