Archives: நவம்பர் 2022

எச்சரிப்பின் சப்தங்கள்

நீங்கள் எப்போதாவது ஒரு விரியன் பாம்பினை அருகில் பார்த்ததுண்டா? அப்படியானால், நீங்கள் அருகில் செல்லும்போது, அதின் சத்தம் மிகவும் உக்கிரமாக இருப்பதை கவனித்திருக்கக்கூடும். ஆபத்துகள் தன்னை நெருங்கும்போது, பாம்புகள் பொதுவாக சத்தமிடும் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன என்ற ஆராய்ச்சி சொல்லுகிறது. இந்த அதிர்வலைகள், அவைகள் இருக்கவேண்டிய இடத்தைக் காட்டிலும் மிக நெருக்கமாக இருக்கின்றன என்பதை அவைகளுக்கு தெரியப்படுத்துகின்றன. ஒரு ஆராய்ச்சியாளர், “கேட்பவர் தவறான எல்லைக்குள் வந்துவிட்டதாக, தனக்கு ஒரு பாதுகாப்பு விளிம்பை ஏற்படுத்திக்கொள்கிறது" என்று சொல்லுகிறார். 

சண்டையிடும்போது, மற்றவர்களை திட்டும் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கும்போது, அதிக ஓசை எழுப்பக்கூடும். இதுபோன்ற தருணங்களுக்கு உகந்த வகையில் நீதிமொழிகளின் ஆசிரியர் ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதிமொழிகள் 15:1). மேலும் மென்மையான பதில், “ஜீவவிருட்சம்” என்றும் “அறிவை இறைக்கும்” (வச. 4,7) என்றும் சொல்லுகிறார். 

நாம் யாருடன் சண்டையிடுகிறோமோ, அவர்களிடம் தன்மையாய் பேசுவதற்கான முக்கியமான காரணத்தை இயேசு சொல்லுகிறார்: நாம் அவருடைய பிள்ளை என்பதை வெளிப்படுத்தும் அன்பை பிரதிபலிப்பதின்; மூலமாகவும் (மத்தேயு 5:43-45) மற்றும் நல்லிணக்கத்தைத் தேடுதலின் மூலமாகவும் (18:15) அது சாத்தியமாகும். சச்சரவுகளின் போது நம் குரலை உயர்த்தியோ அல்லது கனவீனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் தம்முடைய ஆவியின் மூலம் நம்மை வழிநடத்துவது போல் மற்றவர்களுக்கு நாகரீகம், ஞானம் மற்றும் அன்பைக் காட்டுவோம்.

சூடான உணவு

பார்பிக்யூ கோழி இறைச்சி, பீன்ஸ், பாஸ்தா, ரொட்டி. ஒரு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய 54ஆம் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பெண்மணியிடமிருந்து 54 ஆதரவற்றவர்கள் இந்த உணவை பரிசாகப் பெற்றுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும், ஒரு உணவகத்தில் தங்கள் விருந்தை வழக்கமாய் அநுசரிக்காமல், சிகாகோவின் தெருக்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவை சமைத்து பரிமாற தீர்மானித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, மற்றவர்களையும் அவர்கள் பிறந்த நாளுக்கு அதுபோல காரியங்களை செய்யும்படி ஊக்குவித்தாள். 

இந்த சம்பவம், மத்தேயு 25-ல் இடம்பெற்றள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (வச. 40). அவருடைய ஆடுகள் தங்கள் சுதந்திரத்தை அடையும்படிக்கு தன்னுடைய நித்திய இராஜ்யத்திற்குள் அழைக்கப்படும் என்று சொன்ன பிறகே இந்த வார்த்தைகளைச் சொன்னார் (வச. 33-34). அந்த தருணத்தில், அவர்கள் மெய்யான விசுவாசத்தில் அவருக்கு உணவளித்து, உடுத்தியவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார் (அவரை நம்பாத பெருமையுள்ள மதவாதிகளைப் போலல்லாமல்; பார்க்கவும் 26:3-5). நாங்கள் எப்போது உங்களுக்கு உணவளித்து, உடுத்துவித்தோம் என்று “நீதிமான்கள்” அவரைப் பார்த்துக் கேட்பார்கள் (25:37). “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று பதிலளிப்பார். 

என்னோடு நட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, “இயேசு என்னுடன் நடக்கிறார்" என்ற பாடலை நற்செய்தி பாடகர் ஒருவர், பாடகர் குழுவுடன் பாடி, பிரபலமாக்கினார். அந்த பாடலின் வரிகளுக்குப் பின்னால் ஒரு அழகான கதை உள்ளது.

ஜாஸ் இசைக்கலைஞர் கர்டிஸ் லுண்டி, அவர் போதை மருந்து மறுவாழ்வு சிகிச்சையில் இணையும்போது, ஒரு பாடகர் குழுவைத் துவங்கினார். தன்னோடு சிகிச்சை பெற்ற சக நோயாளிகளை ஒன்றாக இணைத்து, அவர்களுக்கு ஒரு பழைய பாடலின் மீது இருக்கும் தாகத்தை அடிப்படையாய் வைத்து இந்த புதிய பாடலை அவர்களுக்காக இயற்றினார். “நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காய் பாடினோம்; இந்த போதைப் பழக்கத்திலிருந்து எங்களை முற்றிலும் விடுவிக்கும்படியாய் கிறிஸ்துவிடம் பாடினோம்” என்று அக்குழுவினர் ஒரு உறுப்பினர் ஒருவர் சொன்னார். மற்றொருவர் அந்த பாடலைப் பாடியபோது, அவளுடைய தீராத வலி தணிந்ததை சாட்சியிட்டார். அந்த பாடகர் குழு, தாளில் எழுதப்பட்டிருந்த வெறும் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை; மாறாக, மீட்கப்பட்ட வாழ்க்கைக்கான ஜெபத்தை ஏறெடுத்தனர். 

இன்றைய வேத வாசிப்பு அவர்களின் அனுபவத்தை நன்றாக விவரிக்கிறது. கிறிஸ்துவின் மூலம், எல்லா ஜனத்திற்கும் இரட்சிப்பை கொடுப்பதற்காக தேவன் வெளிப்பட்டார் (தீத்து 2:11). நித்திய வாழக்;கை என்பது இந்த பரிசின் ஒரு வெளிப்பாடாய் இருக்கையில் (வச. 13), நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கும், உலக ஆசைகளை புறக்கணிப்பதற்கும், அவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு நம்மை மீட்டெடுக்கவும் தேவன் நம்மில் கிரியை செய்கிறார் (வச. 12, 14). அந்த பாடல் குழுவினர் கண்டறிந்தபடி, இயேசு நம் பாவங்களை மட்டும் மன்னிக்கவில்லை, நம்மை அழிவுக்கேதுவான வாழ்க்கை முறைகளிலிருந்தும் விடுவிக்கிறார். 

இயேசு என்னோடு நடக்கிறார். அவர் உங்களுடனும் நடக்கிறார். அவரை தேடுகிற யாவரோடும் அவர் நடக்கிறார். இப்போது இரட்சிப்பை அருளுவதற்கும், எதிர்காலத்தின் நம்பிக்கையை அருளுவதற்கும் அவர் நம்மோடு இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் நமது அடைக்கலம்

2019 ஆம் ஆண்டின் வியத்தகு திரைப்படமான ‘லிட்டில் வுமன்’, என்னிடமிருந்த அதின் மூல நாவலின் பழையதாகிப்போன பிரதியை படிக்க உந்தியது. குறிப்பாக, விவேகமும் மென்மையும் படைத்த தாயார் மர்மியின் ஆறுதல் வார்த்தைகளை. அந்த நாவல் சித்தரித்த அவளுடைய உறுதியான நம்பிக்கையால் நான் ஈர்க்கப்பட்டேன், இது அவளுடைய மகள்களுக்கு ஊக்கமளிக்கும் பல வார்த்தைகளில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. எனக்குப் பிரத்யேகமாகத் தெரிந்தது இதுதான்: “சிக்கல்கள் மற்றும் சோதனைகள் . . . பல இருக்கலாம், ஆனால் உங்கள் பரலோகத் தகப்பனின் பலத்தையும் மென்மையையும் நீங்கள் உணரக் கற்றுக்கொண்டால், அவற்றையெல்லாம் வென்று வாழலாம்.”

மர்மியின் வார்த்தைகள் நீதிமொழிகளில் காணப்படும் சத்தியத்தை எதிரொலிக்கின்றன, “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (18:10). எதிரிகளின் தாக்குதல் போன்ற காரணமாக, ஆபத்தின் போது பாதுகாப்பு இடங்களாக பழங்கால நகரங்களில் துருகங்கள் கட்டப்பட்டன. அதுபோலவே, தேவனிடம் ஓடுவதன் மூலமே, இயேசுவை நம்புபவர்கள், “நமக்கு அடைக்கலமும் பெலனுமாக” (சங்கீதம் 46:1)உள்ளவரின் பராமரிப்பில் சமாதானத்தை அனுபவிக்க முடியும்.

நீதிமொழிகள் 18:10, பாதுகாப்பு என்பது தேவனின் “நாமத்தில்” இருந்து வருகிறது என்று சொல்கிறது. அவர் நாமமானது அவர் யார் என்ற அனைத்தையும் குறிக்கிறது. வேதவசனம் தேவனை, “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” (யாத்திராகமம் 34:6) என்கிறது. தேவனின் பாதுகாப்பு அவரது வல்லமையான பலத்திலிருந்து வருகிறது, அதே போல் அவரது மென்மையும் அன்பும் காயப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவரை ஏக்கமுற செய்கிறது. போராடும் அனைவருக்கும், நம்முடைய பரலோகத் தகப்பன் தம்முடைய பலத்திலும் மென்மையிலும் அடைக்கலம் அருள்கிறார். 

தேவனுக்கென்று நன்மை செய்தல்

அவர் வழக்கமாக தன்னுடன் பணத்தை எடுத்துச் செல்லவில்லை என்றாலும், வீட்டை விட்டு வெளியேறும் முன் கொஞ்சம் பணத்தை (சுமார் ₹400) பாக்கெட்டில் வைக்க தேவன் ஏவுவதை பேட்ரிக் உணர்ந்தார். அவர் பணிபுரிந்த பள்ளியில் மதிய உணவு நேரத்தில், ஒரு அவசரத் தேவையை பூர்த்திசெய்ய தேவன் அவரை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார் என்பதை அவர் புரிந்துகொண்டார். மதிய உணவு அறையின் சலசலப்புக்கு நடுவில், அவர் இந்த வார்த்தைகளைக் கேட்டார்: “ராணியின் [தேவையுள்ள ஒரு குழந்தைக்கு] கணக்கில் ₹400 போட வேண்டும், அப்போது அவள் வாரம் முழுவதும் மதிய உணவை சாப்பிடலாம் மற்றும் புத்தகங்கள் வாங்க முடியும்” ராணிக்கு உதவுவதற்காக பேட்ரிக் தனது பணத்தை கொடுத்தபோது அனுபவித்த உணர்வுகளை கற்பனை செய்து பாருங்கள்!

தீத்துவுக்கான நிருபத்தில், இயேசுவின் விசுவாசிகளுக்கு “நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல்” (3:5) என்று பவுல் நினைப்பூட்டினாலும், “நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி” (வ.8; பார்க்கவும் வ.14) சொன்னார். நம் வாழ்க்கை நேரம் இல்லாததாகவும், மிகவும் பளுவானதாகவும், பரபரப்பாகவும் இருக்கும். உங்கள் சொந்த நல்வாழ்வை கவனிப்பதே மிகப்பெரியதாக இருக்கும். ஆனாலும், இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக நாம் “நற்கிரியைகளுக்கு ஆயத்தமாக” இருக்க வேண்டும். நம்மிடம் இல்லாததையும் செய்ய முடியாததையும் நினைத்து விரக்தியடைவதற்குப் பதிலாக, தேவனின் நமக்கு உதவுவதற்கு ஏற்ப நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் மற்றவர்களுக்கு அவர்களின் தேவையுள்ள நேரத்தில் உதவுகிறோம், மேலும் தேவன் மகிமைப்படுகிறார். “இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16). 

பிறருக்கான சேவையில்

எஸ்தர் "பென்" கிம்சந்த், குஜராத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த 20 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர். அவர் தனது எழுத்துக்கள் மூலம் மாநிலத்தில் பெண்களின் உரிமைகளை ஆதரித்தார். நல்ல கல்வி பெண்களை அவர்களின் குடும்பங்களிலும் சமூகங்களிலும் மரியாதைக்குரிய இடங்களில் வைக்க உதவும் என்று அவர் எழுதினார். எஸ்தர் தன் திறமைகளை தனக்குத்தானே வைத்துக் கொள்ளவில்லை அல்லது தன் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக, தன்னைச் சுற்றியுள்ளவர்களை மேம்படுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்தினாள். பேதுருவின் நிருபம் ஆசியா மைனர் முழுவதும் அகதிகளாகச் சிதறியிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது (1 பேதுரு 1:1). "ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கவும்" மற்றும் "ஒருவருக்கொருவர் உதவிசெய்யவும்" அவர்கள் பெற்ற "எந்த ஈவையும்" பயன்படுத்தவும் அவர் அவர்களைத் தூண்டினார் (வ.10). இந்த ஈவுகளைக் குறித்து உரிமை பாராட்டாமல், அவர்களுடைய ஆவிக்குரிய வரங்களை “தேவனுடைய பற்பல கிருபை” என்று கருதும்படி பேதுரு அவர்களை வலியுறுத்தினார். தேவனுக்குச் சொந்தமானவற்றை ஜாக்கிரதையுடன் நிர்வகிக்கும் “நல்ல உக்கிராணக்காரர்போல” இருக்கும்படி அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் "தேவனுடைய வாக்கியங்களின்படி" பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பேசவும், "தேவன் தந்தருளும் பெலத்தின்படி" ஜனங்களுக்குச் சேவை செய்யவும் அறிவுறுத்தினார். அதனால் அவர்களின் செயல்களிலும், அவற்றின் மூலமாகவும் தேவன் மகிமைப்படுவார் (வ.11) . இத்தகைய முறையில் நாம் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுக்கு மகிமையைச் சேர்க்கிறோம். எஸ்தர் மற்றும் ஆதிச்சபையைப் போலவே, நம்மிடமும் ஈவுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ஈவுகள், நமக்குச் சாதாரணமாய் தோன்றினாலும், தேவனுடைய ராஜ்யத்தை விரிவாக்க உதவலாம். இது உணவைத் தயாரிப்பதோ, கேள்விகளுக்குப் பதிலளிப்பதோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு நம் வீடுகளைப் பகிர்வதோ கூட இருக்கலாம். நாம் பேசவும் செயல்படவும் தேவைப்படுகையில், நாம் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்து தேவனுக்கு மகிமை சேர்க்க வேண்டும் (வ.11). இப்படியாக, நம்மிடம் உள்ள ஈவுகள் எதுவாக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி பிறரை முன்னேற்றுவோம்.