குழப்பத்தின் மத்தியில் அமைதி
ஏறக்குறைய ஒரு வருடம் தேடியும் மதுவுக்கு வேலை கிடைக்காதபோது, நிச்சயமற்ற எதிர்காலத்தைப் பற்றிய பயமுறுத்தும் எண்ணங்கள் அவள் மனதை மூடிமறைத்தன. இந்த நேரத்தில் மக்கள் அவளிடம் சொன்ன அன்பற்ற வார்த்தைகளால் அவள் தூக்கத்தையும் வாழ வேண்டும் என்ற ஆர்வத்தையும் கூட இழந்தாள். ஒரு நாள், சூரிய ஒளிக்கதிர் போல, ஒரு வேதாகம வசனம் அவளுடைய நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தது. அவள் அதை ஒரு அட்டையில் வைத்தாள், அவள் அதைச் சத்தமாகப் படிக்கும்போதெல்லாம், அவளுடைய விசுவாசம் வலுவடைந்தது, அவளுடைய பயம் விலகி அவள் நிம்மதியாக இருந்தாள்.
ஏசாயா 26, அமைதியான மனதைப் பெறுவதற்கான நடைமுறை யோசனைகளை வழங்குகிறது. முதலில், நம்மைக் காக்கும் தேவன் மீது விசுவாசம் வைப்பது (வ.2-3). அவரை நம்புவதுடன், நம் மனதையும் எண்ணங்களையும் தேவன் மீது உறுதியாக நிலைநிறுத்த வேண்டும் (வ.3). நாம் அவரை நம்பி, நம் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது, அவர் நம் மனதைக் காத்து, நமக்கு “பூரண சமாதானத்தை” (வ.3) தருவதாக வாக்களிக்கிறார். இந்த “பூரண சமாதானம்” என்பது மனசாட்சியில் அமைதி, குற்ற உணர்விலிருந்து அமைதி, பதட்டத்திலிருந்து அமைதி அல்லது நாம் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலைகளில் அமைதி ஆகியவை அடங்கும். நாம் நம்பும் ஒருவர் "நித்திய கன்மலையாயிருக்கிறார்" (வ.4) என்பதே நமது நிச்சயமாகும். நம்முடைய சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், அவருடைய சுபாவமும் அன்பும் மாறுவதில்லை. நாம் நிச்சயமற்ற தருணங்களினூடே செல்லும்போது, நம் மனம் கவலை மற்றும் பதட்டமான எண்ணங்களுடன் போராடக்கூடும். ஆனால், நம் பாடுகளைத் தேவனிடம் கொண்டு சென்று, நம் மனதை அவர் மீது நிலைநிறுத்தி, அவரது அற்புதமான வாக்குறுதிகளால் நம் எண்ணங்களை நிரப்பினால், மதுவைப் போல, வாழ்க்கையின் கொந்தளிப்புக்கு மத்தியிலும் நாம் அவருடைய சமாதானத்தை அனுபவிக்க முடியும். நாம் தேவனை நம்பி, நமது மன உளைச்சலை அவரிடம் ஒப்படைத்தால், அவர் தனது "பூரண சமாதானத்தால்" நம் மனதைச் சாந்தப்படுத்துகிறார், மேலும் நம் பயம் நீங்கும்படி செய்கிறார். நிச்சயமற்றதைப் பற்றிக் கவலைப்படுவதை விட, கைவிடாத இயேசுவை நம்புவோம்.
விண்மீன் நோக்குதல்
நான் மனச்சோர்வடைந்தால் அல்லது விரக்தியடைந்தால், நான் என் வீட்டின் மொட்டை மாடியில் தனித்திருக்க விரும்புகிறேன். அங்கே, நான் தாராளமாக ஜெபிக்கவும் கண்ணீர் சிந்தவும் முடியும். ஆனால், அங்கே நின்று, குளிர்ந்த இரவுக் காற்றால் சூழப்பட்ட நான், பச்சை, நீலம், சிவப்பு மற்றும் மஞ்சளாக மின்னும் விளக்குகளின் திரளை அடிக்கடி பார்த்து வியக்கிறேன். அவை என் மனதில் உள்ள குழப்பத்தை மறக்கச் செய்கின்றன. தெளிந்த இரவு வானத்தின் அழகு, என் கவனத்தை எனது பிரச்சினைகளிலிருந்து நம் சிருஷ்டிகரின் மகத்துவத்திடமாய் மாற்றுகிறது.
யோபு தனது துன்பங்களுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாதபோது, தேவன் தன்னிடம் பேசும்படி ஜெபித்தார் (யோபு 13:20-22). தர்க்கரீதியான கேள்விகளுக்கு விடையளிக்குமாறு யோபுவிற்கு சவாலிட்டு தேவன் பதிலளித்தார். தேவன் குவித்த பல ‘நீ அறிவாயா?’ என்ற கேள்விகளால் யோபு திணறினார். அக்கேள்விகளைக் கேட்டதன் மூலம், தேவன் யோபுவின் கவனத்தை அவனது பிரச்சினைகளிலிருந்து பிரபஞ்சத்தின் அற்புதமான காரியங்களிடமாய் திருப்பினார் (யோபு 38-41). தேவ வல்லமையாலும் ஞானத்தாலும் மூழ்கிப்போன யோபு, வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது தகுதியின்மை மற்றும் பலவீனத்தை ஒப்புக்கொண்டார் (40:4), மேலும் தேவனின் வழிகளும் ஞானமும் தனது புரிதலுக்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து அவர் மனந்திரும்பினார் (42:5-6).
நாம் விரும்பியபடி காரியங்கள் நடக்காதபோது, நம் மனதில் கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. யோபுவைப் போலவே, நாமும் அவற்றைத் தேவனிடம் கொண்டுசென்று, நம் உணர்ச்சிகளை அவரிடம் நேர்மையாகத் தெரிவிக்கலாம். இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனின் குரல் நம் வாழ்வில் இடியாக ஒலிப்பதை நாம் கேட்காமல் இருக்கலாம். ஆனால் காற்றில் பறக்கும் பறவைகள், கொல்லைப்புறத்தில் கிளைகளை அசைக்கும் மரங்கள் அல்லது இரவு வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் ஆகியவற்றை நோக்கி நம் பார்வையைத் திருப்பும்போது, அவற்றையெல்லாம் பராமரிக்கும் தேவன் நம் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகிறார் என்பதை நிச்சயித்துக்கொள்வோம் (மத்தேயு 6:26-27).
பிறருக்கான சேவையில்
எஸ்தர் "பென்" கிம்சந்த், குஜராத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த 20 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர். அவர் தனது எழுத்துக்கள் மூலம் மாநிலத்தில் பெண்களின் உரிமைகளை ஆதரித்தார். நல்ல கல்வி பெண்களை அவர்களின் குடும்பங்களிலும் சமூகங்களிலும் மரியாதைக்குரிய இடங்களில் வைக்க உதவும் என்று அவர் எழுதினார். எஸ்தர் தன் திறமைகளை தனக்குத்தானே வைத்துக் கொள்ளவில்லை அல்லது தன் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக, தன்னைச் சுற்றியுள்ளவர்களை மேம்படுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்தினாள். பேதுருவின் நிருபம் ஆசியா மைனர் முழுவதும் அகதிகளாகச் சிதறியிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது (1 பேதுரு 1:1). "ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கவும்" மற்றும் "ஒருவருக்கொருவர் உதவிசெய்யவும்" அவர்கள் பெற்ற "எந்த ஈவையும்" பயன்படுத்தவும் அவர் அவர்களைத் தூண்டினார் (வ.10). இந்த ஈவுகளைக் குறித்து உரிமை பாராட்டாமல், அவர்களுடைய ஆவிக்குரிய வரங்களை “தேவனுடைய பற்பல கிருபை” என்று கருதும்படி பேதுரு அவர்களை வலியுறுத்தினார். தேவனுக்குச் சொந்தமானவற்றை ஜாக்கிரதையுடன் நிர்வகிக்கும் “நல்ல உக்கிராணக்காரர்போல” இருக்கும்படி அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் "தேவனுடைய வாக்கியங்களின்படி" பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பேசவும், "தேவன் தந்தருளும் பெலத்தின்படி" ஜனங்களுக்குச் சேவை செய்யவும் அறிவுறுத்தினார். அதனால் அவர்களின் செயல்களிலும், அவற்றின் மூலமாகவும் தேவன் மகிமைப்படுவார் (வ.11) . இத்தகைய முறையில் நாம் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுக்கு மகிமையைச் சேர்க்கிறோம். எஸ்தர் மற்றும் ஆதிச்சபையைப் போலவே, நம்மிடமும் ஈவுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ஈவுகள், நமக்குச் சாதாரணமாய் தோன்றினாலும், தேவனுடைய ராஜ்யத்தை விரிவாக்க உதவலாம். இது உணவைத் தயாரிப்பதோ, கேள்விகளுக்குப் பதிலளிப்பதோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு நம் வீடுகளைப் பகிர்வதோ கூட இருக்கலாம். நாம் பேசவும் செயல்படவும் தேவைப்படுகையில், நாம் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்து தேவனுக்கு மகிமை சேர்க்க வேண்டும் (வ.11). இப்படியாக, நம்மிடம் உள்ள ஈவுகள் எதுவாக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி பிறரை முன்னேற்றுவோம்.
வனாந்தரத்தில் கேள்விகள்
ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய அணையைப் பார்ப்பதற்கு எங்கள் குடும்பம் ஆவலாக இருந்தது. அங்குச் சென்றதும், ஆற்றில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை, சுட்டெரிக்கும் வெயிலில் வறண்ட நிலம் மட்டுமே இருந்தது. எங்கள் பயணம் வீணாகிவிட்டதே என்று எண்ணியபடியே, இரண்டு உள்ளூர் மனிதர்களுடன் உரையாடினோம். அவர்களில் ஒருவர், “ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்?” என்று கேட்டார். அங்குத் தொடங்கி, இயேசுவைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நாங்கள் தழுவிக்கொண்டோம்.
தேவ ஆவியால் வழிநடத்தப்பட்ட பிலிப்பு, "தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்" (வ.26) தான் பயணிப்பதைக் கண்டுகொண்டார். செல்லும் வழியில், அவர் ஒரு எத்தியோப்பிய மந்திரியைச் சந்தித்தார் (வ.27). இந்த நபர் வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, "அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் (ள)" பிலிப்பு ஏவப்பட்டார் (வ.29). எனவே பிலிப்பு இரதத்திடம் ஓடியபோது, அவர் "ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக்" (வ.30) கேட்டார். அந்த மந்திரி பிலிப்பிடம், “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்?” என்று கேட்டார் (வ.34). இந்தக் கேள்வியில் தொடங்கி, பிலிப்புக்கு இயேசுவைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது (வ.35). பலர் சத்தியத்தைத் தேடுகிறார்கள், இயேசுவைப் பற்றி யாராகிலும் சொல்லும்படி காத்திருக்கிறார்கள். தேவனின் வழிகாட்டுதலுடன், வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களில் இயேசுவைப் பற்றி அவர்களிடம் பேசலாம்: வேலையில், உடற்பயிற்சி கூடத்தில், உணவகத்தில், பள்ளியில் அல்லது பயணத்தில் என்று எங்குமே. இயேசுவைப் பற்றிய உரையாடலுக்கு வழிவகுக்கும் கேள்வியை ஒருவர் எப்போது கேட்பார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், பவுல் சொல்வது போல், "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும்" (கொலோசெயர் 4:6) இருக்கவேண்டும். நீங்கள் ஒப்புக்கொடுத்தால், தேவன் தம் அன்பை உங்கள் மூலம் வெளிப்படுத்த முடியும். வனாந்தரத்தில் கேள்விகள் எழும்போது மக்கள் அணுகக்கூடிய நபராக இருங்கள்.