எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கரோல் மக்வான்கட்டுரைகள்

பிறருக்கான சேவையில்

எஸ்தர் "பென்" கிம்சந்த், குஜராத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த 20 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர். அவர் தனது எழுத்துக்கள் மூலம் மாநிலத்தில் பெண்களின் உரிமைகளை ஆதரித்தார். நல்ல கல்வி பெண்களை அவர்களின் குடும்பங்களிலும் சமூகங்களிலும் மரியாதைக்குரிய இடங்களில் வைக்க உதவும் என்று அவர் எழுதினார். எஸ்தர் தன் திறமைகளை தனக்குத்தானே வைத்துக் கொள்ளவில்லை அல்லது தன் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக, தன்னைச் சுற்றியுள்ளவர்களை மேம்படுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்தினாள். பேதுருவின் நிருபம் ஆசியா மைனர் முழுவதும் அகதிகளாகச் சிதறியிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது (1 பேதுரு 1:1). "ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கவும்" மற்றும் "ஒருவருக்கொருவர் உதவிசெய்யவும்" அவர்கள் பெற்ற "எந்த ஈவையும்" பயன்படுத்தவும் அவர் அவர்களைத் தூண்டினார் (வ.10). இந்த ஈவுகளைக் குறித்து உரிமை பாராட்டாமல், அவர்களுடைய ஆவிக்குரிய வரங்களை “தேவனுடைய பற்பல கிருபை” என்று கருதும்படி பேதுரு அவர்களை வலியுறுத்தினார். தேவனுக்குச் சொந்தமானவற்றை ஜாக்கிரதையுடன் நிர்வகிக்கும் “நல்ல உக்கிராணக்காரர்போல” இருக்கும்படி அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் "தேவனுடைய வாக்கியங்களின்படி" பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பேசவும், "தேவன் தந்தருளும் பெலத்தின்படி" ஜனங்களுக்குச் சேவை செய்யவும் அறிவுறுத்தினார். அதனால் அவர்களின் செயல்களிலும், அவற்றின் மூலமாகவும் தேவன் மகிமைப்படுவார் (வ.11) . இத்தகைய முறையில் நாம் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுக்கு மகிமையைச் சேர்க்கிறோம். எஸ்தர் மற்றும் ஆதிச்சபையைப் போலவே, நம்மிடமும் ஈவுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ஈவுகள், நமக்குச் சாதாரணமாய் தோன்றினாலும், தேவனுடைய ராஜ்யத்தை விரிவாக்க உதவலாம். இது உணவைத் தயாரிப்பதோ, கேள்விகளுக்குப் பதிலளிப்பதோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு நம் வீடுகளைப் பகிர்வதோ கூட இருக்கலாம். நாம் பேசவும் செயல்படவும் தேவைப்படுகையில், நாம் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்து தேவனுக்கு மகிமை சேர்க்க வேண்டும் (வ.11). இப்படியாக, நம்மிடம் உள்ள ஈவுகள் எதுவாக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி பிறரை முன்னேற்றுவோம்.

வனாந்தரத்தில் கேள்விகள்

ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய அணையைப் பார்ப்பதற்கு எங்கள் குடும்பம் ஆவலாக இருந்தது. அங்குச் சென்றதும், ஆற்றில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை, சுட்டெரிக்கும் வெயிலில் வறண்ட நிலம் மட்டுமே இருந்தது. எங்கள் பயணம் வீணாகிவிட்டதே என்று எண்ணியபடியே, இரண்டு உள்ளூர் மனிதர்களுடன் உரையாடினோம். அவர்களில் ஒருவர், “ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்?” என்று கேட்டார். அங்குத் தொடங்கி, இயேசுவைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நாங்கள் தழுவிக்கொண்டோம்.

தேவ ஆவியால் வழிநடத்தப்பட்ட பிலிப்பு, "தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்" (வ.26) தான் பயணிப்பதைக் கண்டுகொண்டார். செல்லும் வழியில், அவர் ஒரு எத்தியோப்பிய மந்திரியைச் சந்தித்தார் (வ.27). இந்த நபர் வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, "அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் (ள)" பிலிப்பு ஏவப்பட்டார் (வ.29). எனவே பிலிப்பு இரதத்திடம் ஓடியபோது, அவர் "ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக்" (வ.30) கேட்டார். அந்த மந்திரி பிலிப்பிடம், “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்?” என்று கேட்டார் (வ.34). இந்தக் கேள்வியில் தொடங்கி, பிலிப்புக்கு இயேசுவைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது (வ.35). பலர் சத்தியத்தைத் தேடுகிறார்கள், இயேசுவைப் பற்றி யாராகிலும் சொல்லும்படி காத்திருக்கிறார்கள். தேவனின் வழிகாட்டுதலுடன், வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களில் இயேசுவைப் பற்றி அவர்களிடம் பேசலாம்: வேலையில், உடற்பயிற்சி கூடத்தில், உணவகத்தில், பள்ளியில் அல்லது பயணத்தில் என்று எங்குமே. இயேசுவைப் பற்றிய உரையாடலுக்கு வழிவகுக்கும் கேள்வியை ஒருவர் எப்போது கேட்பார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், பவுல் சொல்வது போல், "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும்" (கொலோசெயர் 4:6) இருக்கவேண்டும். நீங்கள் ஒப்புக்கொடுத்தால், தேவன் தம் அன்பை உங்கள் மூலம் வெளிப்படுத்த முடியும். வனாந்தரத்தில் கேள்விகள் எழும்போது மக்கள் அணுகக்கூடிய நபராக இருங்கள்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. 

 

நான் ஓட்டுநர் மட்டுமே

“அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?” பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். “கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்” என்றேன்.

“நான் ஓட்டுநர் மட்டுமே” என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு “வாகன ஓட்டுநராக” இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் “வெறும் ஓட்டுநர்” என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது. 

 

கிறிஸ்துவில் முடிப்பவர்களாக இருத்தல்

கலாவதி தனது கொள்ளுப்பேரனான ராஜேஷுக்காக பின்னிக்கொண்டிருந்த கம்பளிச்சட்டையை முடிப்பதற்குள் இறந்துவிட்டார். அதை நிறைவுசெய்ய மற்றொரு ஆர்வமுள்ள பின்னல்காரரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. “நிறைவு செய்பவர்கள்” எனப்பட்ட தன்னார்வ கைவினைஞர்களையும், தங்கள் பணிகளை முடிப்பதற்கு முன்னரே இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறினவர்களின் அன்புக்குரியவர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனத்திற்கு நன்றி. “நிறைவு செய்பவர்கள்” துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு பணியை முடிக்க தங்கள் நேரத்தையும் திறமையையும் அன்புடன் செலவிடுகின்றனர்.

தேவன் எலியாவின் பணிக்காகவும்கூட ஒரு “நிறைவு செய்பவரை” நியமித்தார். இஸ்ரவேலர்கள் தேவனின் உடன்படிக்கையை நிராகரித்து தீர்க்கதரிசிகளைக் கொல்வதைக் கண்டு அந்தத் தீர்க்கதரிசி தனிமையாகவும் மனச்சோர்வுடனும் இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவன் எலியாவிடம் “எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (1 இராஜாக்கள் 19:16) என அறிவுறுத்தினார். தேவனுடைய சத்தியத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான பணியானது எலியாவின் மரணத்திற்குப் பின்னரும் தொடரும் என்பதை இது உறுதி செய்தது.

எலியாவுக்குப் பின் தேவனின் தீர்க்கதரிசியாகத் தொடரும்படி தேவன் அவரை அழைத்தார் என்று எலிசாவுக்கு காண்பிக்க, எலியா “அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்” (வ. 19). தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான தேவசெய்தியை அறிவிப்பவா் ஒருவரின் அதிகாரத்தைக் குறிக்க ஒரு தீர்க்கதரிசியின் சால்வை பயன்படுத்தப்பட்டதால் (பார்க்க 2 இராஜாக்கள் 2:8), இந்த செயல் எலிசாவின் தீர்க்கதரிசிக்கான அழைப்பைத் தெளிவாக்கியது. இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, தேவனின் அன்பைப் பிறருடன் பகிரவும், “[அவருடைய] புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்பணியானது நம் ஆயுளை விட அதிகமாக இருப்பினும், அவர் இப்பணியை ஆதரிப்பார் என்றும், அவரை அறிவிக்கும் உன்னதமான வேலைக்கு பிற “நிறைவு செய்பவர்களை” தொடர்ந்து அழைப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம்.