Archives: நவம்பர் 2022

எச்சரிப்பின் சப்தங்கள்

நீங்கள் எப்போதாவது ஒரு விரியன் பாம்பினை அருகில் பார்த்ததுண்டா? அப்படியானால், நீங்கள் அருகில் செல்லும்போது, அதின் சத்தம் மிகவும் உக்கிரமாக இருப்பதை கவனித்திருக்கக்கூடும். ஆபத்துகள் தன்னை நெருங்கும்போது, பாம்புகள் பொதுவாக சத்தமிடும் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன என்ற ஆராய்ச்சி சொல்லுகிறது. இந்த அதிர்வலைகள், அவைகள் இருக்கவேண்டிய இடத்தைக் காட்டிலும் மிக நெருக்கமாக இருக்கின்றன என்பதை அவைகளுக்கு தெரியப்படுத்துகின்றன. ஒரு ஆராய்ச்சியாளர், “கேட்பவர் தவறான எல்லைக்குள் வந்துவிட்டதாக, தனக்கு ஒரு பாதுகாப்பு விளிம்பை ஏற்படுத்திக்கொள்கிறது" என்று சொல்லுகிறார். 

சண்டையிடும்போது, மற்றவர்களை திட்டும் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கும்போது, அதிக ஓசை எழுப்பக்கூடும். இதுபோன்ற தருணங்களுக்கு உகந்த வகையில் நீதிமொழிகளின் ஆசிரியர் ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதிமொழிகள் 15:1). மேலும் மென்மையான பதில், “ஜீவவிருட்சம்” என்றும் “அறிவை இறைக்கும்” (வச. 4,7) என்றும் சொல்லுகிறார். 

நாம் யாருடன் சண்டையிடுகிறோமோ, அவர்களிடம் தன்மையாய் பேசுவதற்கான முக்கியமான காரணத்தை இயேசு சொல்லுகிறார்: நாம் அவருடைய பிள்ளை என்பதை வெளிப்படுத்தும் அன்பை பிரதிபலிப்பதின்; மூலமாகவும் (மத்தேயு 5:43-45) மற்றும் நல்லிணக்கத்தைத் தேடுதலின் மூலமாகவும் (18:15) அது சாத்தியமாகும். சச்சரவுகளின் போது நம் குரலை உயர்த்தியோ அல்லது கனவீனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் தம்முடைய ஆவியின் மூலம் நம்மை வழிநடத்துவது போல் மற்றவர்களுக்கு நாகரீகம், ஞானம் மற்றும் அன்பைக் காட்டுவோம்.

சூடான உணவு

பார்பிக்யூ கோழி இறைச்சி, பீன்ஸ், பாஸ்தா, ரொட்டி. ஒரு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய 54ஆம் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பெண்மணியிடமிருந்து 54 ஆதரவற்றவர்கள் இந்த உணவை பரிசாகப் பெற்றுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும், ஒரு உணவகத்தில் தங்கள் விருந்தை வழக்கமாய் அநுசரிக்காமல், சிகாகோவின் தெருக்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவை சமைத்து பரிமாற தீர்மானித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, மற்றவர்களையும் அவர்கள் பிறந்த நாளுக்கு அதுபோல காரியங்களை செய்யும்படி ஊக்குவித்தாள். 

இந்த சம்பவம், மத்தேயு 25-ல் இடம்பெற்றள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (வச. 40). அவருடைய ஆடுகள் தங்கள் சுதந்திரத்தை அடையும்படிக்கு தன்னுடைய நித்திய இராஜ்யத்திற்குள் அழைக்கப்படும் என்று சொன்ன பிறகே இந்த வார்த்தைகளைச் சொன்னார் (வச. 33-34). அந்த தருணத்தில், அவர்கள் மெய்யான விசுவாசத்தில் அவருக்கு உணவளித்து, உடுத்தியவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார் (அவரை நம்பாத பெருமையுள்ள மதவாதிகளைப் போலல்லாமல்; பார்க்கவும் 26:3-5). நாங்கள் எப்போது உங்களுக்கு உணவளித்து, உடுத்துவித்தோம் என்று “நீதிமான்கள்” அவரைப் பார்த்துக் கேட்பார்கள் (25:37). “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று பதிலளிப்பார். 

என்னோடு நட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, “இயேசு என்னுடன் நடக்கிறார்" என்ற பாடலை நற்செய்தி பாடகர் ஒருவர், பாடகர் குழுவுடன் பாடி, பிரபலமாக்கினார். அந்த பாடலின் வரிகளுக்குப் பின்னால் ஒரு அழகான கதை உள்ளது.

ஜாஸ் இசைக்கலைஞர் கர்டிஸ் லுண்டி, அவர் போதை மருந்து மறுவாழ்வு சிகிச்சையில் இணையும்போது, ஒரு பாடகர் குழுவைத் துவங்கினார். தன்னோடு சிகிச்சை பெற்ற சக நோயாளிகளை ஒன்றாக இணைத்து, அவர்களுக்கு ஒரு பழைய பாடலின் மீது இருக்கும் தாகத்தை அடிப்படையாய் வைத்து இந்த புதிய பாடலை அவர்களுக்காக இயற்றினார். “நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காய் பாடினோம்; இந்த போதைப் பழக்கத்திலிருந்து எங்களை முற்றிலும் விடுவிக்கும்படியாய் கிறிஸ்துவிடம் பாடினோம்” என்று அக்குழுவினர் ஒரு உறுப்பினர் ஒருவர் சொன்னார். மற்றொருவர் அந்த பாடலைப் பாடியபோது, அவளுடைய தீராத வலி தணிந்ததை சாட்சியிட்டார். அந்த பாடகர் குழு, தாளில் எழுதப்பட்டிருந்த வெறும் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை; மாறாக, மீட்கப்பட்ட வாழ்க்கைக்கான ஜெபத்தை ஏறெடுத்தனர். 

இன்றைய வேத வாசிப்பு அவர்களின் அனுபவத்தை நன்றாக விவரிக்கிறது. கிறிஸ்துவின் மூலம், எல்லா ஜனத்திற்கும் இரட்சிப்பை கொடுப்பதற்காக தேவன் வெளிப்பட்டார் (தீத்து 2:11). நித்திய வாழக்;கை என்பது இந்த பரிசின் ஒரு வெளிப்பாடாய் இருக்கையில் (வச. 13), நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கும், உலக ஆசைகளை புறக்கணிப்பதற்கும், அவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு நம்மை மீட்டெடுக்கவும் தேவன் நம்மில் கிரியை செய்கிறார் (வச. 12, 14). அந்த பாடல் குழுவினர் கண்டறிந்தபடி, இயேசு நம் பாவங்களை மட்டும் மன்னிக்கவில்லை, நம்மை அழிவுக்கேதுவான வாழ்க்கை முறைகளிலிருந்தும் விடுவிக்கிறார். 

இயேசு என்னோடு நடக்கிறார். அவர் உங்களுடனும் நடக்கிறார். அவரை தேடுகிற யாவரோடும் அவர் நடக்கிறார். இப்போது இரட்சிப்பை அருளுவதற்கும், எதிர்காலத்தின் நம்பிக்கையை அருளுவதற்கும் அவர் நம்மோடு இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒருவருக்கொருவர் உதவுங்கள்

அவ்வளவாகப் பிரபலமாகாத பயிற்சியகத்தை சேர்ந்த கிரிக்கெட் அணியினர் கிரிக்கட் மண்டல போட்டிக்காகக் களம் இறங்கியபோது, அரங்கிலிருந்த ரசிகர்கள் தோல்வியடையக்கூடிய அந்த அணிக்கு ஆரவாரம் செய்து ஊக்குவித்தனர். இந்த அணி முதல் சுற்றில் வெற்றிபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் வென்றனர். இப்போது அவர்களுடன் இசைக்குழு இல்லையென்றாலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கைகள் பிரிவிலிருந்து அவர்களின் பள்ளி கீதம் ஒலிக்கக் கேட்டனர். இப்போது வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் எதிரணியின் இசைக்குழுவினர், போட்டி முடியும் சில நிமிடங்களுக்கு முன்புதான் இவர்களின் பள்ளி பாடலைக் கற்றுக்கொண்டனர். அந்த இசைக்குழுவினர் தங்களுக்குத் தெரிந்த பாடல்களை வெறுமனே வாசித்திருக்கலாம், ஆனால் அவர்கள் மற்றொரு பள்ளி மற்றும் மற்றொரு குழுவிற்கு உதவ அந்த பாடலைக் கற்றுக்கொண்டனர்.

இந்த இசைக்குழுவின் செயல்கள் பிலிப்பியரில் விவரிக்கப்பட்டுள்ள ஒற்றுமையை அடையாளப்படுத்துவதைக் காணலாம். பவுல் பிலிப்பியில் உள்ள ஆரம்பக்கால சபையாருக்கும் இன்று நமக்கும், ஒற்றுமையில் அல்லது “ஏக சிந்தை(யுடன்)” (பிலிப்பியர் 2:2) வாழச் சொன்னார், குறிப்பாக அவர்கள் கிறிஸ்துவில் ஒன்றுபட்ட காரணத்தால். இதைச் செய்ய, சுயநலமான நோக்கத்தை விட்டுவிட்டு, பிறர் நலனை தங்கள் சொந்த நலன்களுக்கு முன்னதாக கருத்தில் கொள்ளும்படி அப்போஸ்தலன் அவர்களை ஊக்குவித்தார். நம்மை விடப் பிறரை முக்கியத்துவப்படுத்துவது இயல்பாகவே வராமல் இருக்கலாம், ஆனால் கிறிஸ்துவை அவ்வாறே நாம் பிரதிபலிக்கலாம். பவுல், “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (வ.3) என்று எழுதினார். நம்மீது மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தாழ்மையுடன் “பிறருக்கானவகளையும் நோக்கு(வது)வானாக” (வ.4) சிறந்தது.

நாம் எப்படி மற்றவர்களைத் தாங்கக் கூடும்? அவர்களுக்கு எதிரானதைச் செய்வதோ அல்லது அவர்களுக்குத் தேவையானதை வழங்குவதோ என்பதை அவர்களின் ஆர்வங்களைக் கவனமாகப் பரிசீலிப்பதன் மூலமே நிறைவேற்றமுடியும். 

 

கும்பத்திற்கு மேலானதாக

செல்வா ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் முழுநேர பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது மூத்த சகோதரன் மோகன் மகிழ்ச்சியடைந்தார், ஆனால், சகோதரர்களாக, சிறுவயதில் செல்வாவை அவர் எவ்வாறு புழுதியில் தள்ளி சண்டையில் வெல்வார் என்பதைச் சொல்லி அவரையறியாமலேயே கிண்டல் செய்தார். செல்வா வாழ்க்கையில் வெகுதூரம் முன்னேறிவிட்டார், எனினும் அவர் எப்போதும் மோகனின் சிறிய தம்பியாகவே இருப்பார்.

நீங்கள் மேசியாவாகவே இருந்தாலும் குடும்பத்தால் மதிக்கப்படுவது கடினம். இயேசு நாசரேத்தின் மக்களிடையே வளர்ந்தார், எனவே அவர் விசேஷித்தவர் என்று நம்புவதற்கு அவர்கள் சிரமப்பட்டனர். ஆனாலும் அவர்கள் அவரை கண்டு வியந்தனர். “இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா?” (மாற்கு 6:2-3). இயேசு, “தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்” (வ. 4) என்று குறிப்பிட்டார். இவர்கள் இயேசுவை நன்கு அறிந்திருந்தனர், ஆனால் அவர் தேவனின் குமாரன் என்பதை அவர்களால் நம்பி ஏற்க முடியவில்லை.

ஒருவேளை நீங்கள் ஒரு ஆவிக்குரிய குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம். உங்கள் ஆரம்பக்கால நினைவுகளில் சபைக்குச் செல்வதும், பாடல்களைப் பாடுவதும் நிறைந்திருக்கலாம். இயேசு எப்போதும் ஒரு குடும்பத்தாரைப் போலவே உணர்ந்தார். நீங்கள் அவரை விசுவாசித்துப் பின்பற்றினால், இயேசு உங்கள் குடும்பத்தினர். அவர் “(நம்மை) சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்” (எபிரெயர் 2:11). தேவனின் குடும்பத்தில் இயேசு நம் மூத்த சகோதரர் (ரோமர் 8:29) இது ஒரு பெரிய பாக்கியம், ஆனால் நம்மிடையேயான நெருக்கம் அவரை சாதாரணமானவராகக் காட்டலாம். ஒருவர் குடும்பத்தினராக இருப்பதால் அவர்கள் விசேஷித்தவர் அல்ல என்று அர்த்தமல்ல.

இயேசு நமது குடும்பத்தினரும், குடும்பத்தினரை விட மேலானவர் என்பதிலும் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இன்று நீங்கள் அவரைப் பின்தொடரும்போது, அவர் மேலும் நெருக்கமானவராகவும், மேலும் விசேஷித்தவராகவும் உங்களுக்கு மாறுவாராக. 

 

குற்றவாளியாயினும் விடுதலை

“நான் அதைச் செய்யவில்லை!” அது ஒரு பொய், தேவன் என்னை இடைமறித்திருக்காவிட்டால் நான் கிட்டத்தட்ட அதிலேயே நிலைத்திருந்திருப்பேன். நான் நடுநிலைப் பள்ளியிலிருந்தபோது, ஒரு நிகழ்ச்சியின் போது எங்கள் இசைக்குழுவினரின் பின்பாக எச்சிலைத் துப்பிய கூட்டத்தில் நானும் இருந்தேன். எங்கள் இயக்குநர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் ஒழுக்கத்திற்கு பேர்போனவர், நான் அவரை கண்டாலே பயப்படுவேன். அதனால் என் சகாக்கள் என்னைக் குற்றத்தில் சிக்கவைத்தபோது, நான் அவரிடம் பொய் சொன்னேன். பிறகு என் தந்தையிடமும் பொய் சொன்னேன்.

ஆனால் பொய்யைத் தொடர்ந்திடத் தேவன் அனுமதிக்க மாட்டார். அவர் எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியைக் கொடுத்தார். பல வாரங்கள் எதிர்த்த பிறகு, நான் மனந்திரும்பினேன். நான் தேவனிடமும் அப்பாவிடமும் மன்னிப்பு கேட்டேன். சிறிது நேரம் கழித்து, நான் எனது இயக்குநரின் வீட்டிற்குச் சென்று கண்ணீருடன் ஒப்புக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, அவர் அன்பாகவும் மன்னிப்பவராகவும் இருந்தார்.

அந்த பாரம் நீங்கினது எவ்வளவு அருமையாக இருந்தது என்பதை என்னால் மறக்கவே முடியாது. நான் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு, பல வாரம் கழித்து முதல்முறையாக சநதோஷப்பட்டேன். தாவீது தனது வாழ்க்கையிலும் தன் குற்றத்தை அறிக்கை செய்த நேரத்தை விவரிக்கிறார். அவர் தேவனிடம், “நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால்” என்றவர் மேலும், “என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்” (சங்கீதம் 32:3-5) என்கிறார்.

நம்பகத்தன்மை தேவனுக்கு முக்கியம். நம்முடைய பாவங்களை அவரிடம் ஒப்புக்கொள்ளவும், நாம் தவறிழைத்தவர்களிடமும் மன்னிப்பு கேட்க அவர் விரும்புகிறார். “தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” (வ. 5)என்று தாவீது அறிவிக்கிறார். தேவனின் மன்னிப்பால் உண்டாகும் விடுதலையை அனுபவிப்பது எவ்வளவு அருமையானது!