முதன்முறையாக என்னுடைய மகன்களை 14,000 அடி உயரமுள்ள மலையேற்றத்திற்கு கூட்டிச்செல்லும்போது அவர்கள் சற்று பதட்டமாய் காணப்பட்டனர். அவர்களால் அதைச் செய்ய முடியுமா? அவர்கள் அந்த சவாலுக்கு ஒத்துக்கொண்டார்களா? என்னுடைய இளைய மகன், வழியில் நின்று அதிக நேரம் ஓய்வெடுத்தான். “அப்பா, இனி மேல் என்னால் போகமுடியாது” என்று திரும்ப திரும்பச் சொன்னான். ஆனால் இந்த பயணம் அவர்களுக்கு நன்மையானது என்று நம்பினேன், அவர்கள் என்னை நம்பவேண்டும் என்றும் விரும்பினேன். தன்னால் இனி போகவே முடியாது என்று கூறிய என்னுடைய மகன், சிகரத்தின் உச்சிக்கு ஒரு மைல் தொலைவில் எங்களை முந்திக்கொண்டு ஆர்வமாய் ஓடினான். அவனுடைய பயத்தின் மத்தியிலும் அவன் என்னை நம்பினதைக் குறித்து அவன் சந்தோஷப்பட்டான்.

மலையேற்றத்தின்போது ஈசாக்கு தன் தகப்பன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குறித்து நான் வியப்படைவதுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக தன் மகனின் மீது கத்தியை ஓங்கிய ஆபிரகாம் தன் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குறித்து நான் அசந்துவிட்டேன் (ஆதியாகமம் 22:10). அவனுடைய குழப்பமான, பதைபதைக்கும் நிலையிலும் ஆபிரகாம் கீழ்ப்படிந்தான். அதிர்ஷ்டவசமாய் ஒரு தேவ தூதன் அவனைத் தடுத்துவிட்டான். “பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே” (வச.12) என்றும் சொன்னான். ஈசாக்கு மரிப்பது தேவ சித்தமல்ல. 

இந்த சம்பவத்தையும் நம் வாழ்க்கையையும் கவனத்துடன் ஒப்பிடும்போது, துவக்க வரிகளை நினைவுகூருவது அவசியம்: “தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்” (வச. 1). இந்த சோதனையின் மூலம் ஆபிரகாம் எந்த அளவிற்கு தேவனை விசுவாசித்தான் என்பதை அறிந்துகொண்டான். தேவனுடைய அன்பான இருதயத்தையும் அவருடைய தேவையை சந்திக்கும் குணத்தையும் புரிந்துகொண்டான். 

நம்முடைய குழப்பமான, இருளான, சோதிக்கப்படும் தருணங்களில் நம்மைக் குறித்தும் தேவனைக் குறித்தும் நாம் கற்றுக்கொள்ளுகிறோம். மேலும் அந்த சோதனைகளின் மூலம் தேவன் மீது இன்னும் ஆழமான நம்பிக்கை வைக்க முடியும்.