Archives: செப்டம்பர் 2021

உங்களுக்குத் தேவையான அனைத்தும்

சாப்பாட்டு அறை மேசையின் மேல் அமர்ந்துகொண்டு என்னைச் சுற்றி நடந்துக்கொண்டிருந்த இன்பமான குழப்பங்களை நோக்கிக்கொண்டிருந்தேன். அத்தைகள், மாமாக்கள், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், இன்னும் மற்ற உறவினர்கள் எங்களுடைய குடும்பத்தின் கூடுகைக்கு வந்து ஒன்றாக உணவை மகிழ்ச்சியுடன் ருசித்துக்கொண்டிருந்தனர். நானும் அதை ருசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஒரு எண்ணம் என் இருதயத்தை பிளந்தது: உங்களுக்கென்று பிள்ளைகள் இல்லாத, சொந்தமாக ஒரு குடும்பம் இல்லாத ஒரே பெண் நீங்கள்தான்.

என்னைப் போல தனிமையாக இருக்கும் பெண்களுக்கு இதேபோலத்தான் எண்ணம் இருக்கிறது. திருமணத்தையும் குழந்தைகளையும் அதிகமாக மதிப்பிடும் ஆசியக் கலாச்சாரமான, என்னுடைய கலாச்சாரத்தில், தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாத சூழ்நிலை முழுமையடையாத ஒரு உணர்வை ஏற்படுத்தும். நீங்கள் யார் என்பதை வரையறுத்து, உங்களை முழுமையடைய வைக்கும் ஒன்று உங்களிடத்தில் இல்லாதது போல் தோன்றலாம். 

அதனால் தான் கர்த்தர் என் “பங்கு” என்ற சத்தியம் எனக்கு அதிக ஆறுதலைக் கொடுக்கிறது (சங்கீதம் 73:26). இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு அவரவருடைய சுதந்திரம் பங்கிடப்பட்டது. ஆனால் லேவி கோத்திரத்தாருக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை; மாறாக, கர்த்தரே அவர்களுக்கு பங்காகவும் சுதந்தரமாகவும் இருப்பதாக வாக்களித்தார் (உபாகமம் 10:9). அவர்கள் அவரிடத்தில் முழு திருப்தியடைந்து அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் அவர் கொடுப்பார் என்று நம்பினார்கள். 

நம்மில் சிலருக்கு பற்றாக்குறை என்ற உணர்வு குடும்பத்தோடு தொடர்புடையதாக இல்லாதிருக்கலாம். ஒருவேளை நாம் ஒரு நல்ல வேலைக்காக அல்லது உயர் கல்விக்காக முயற்சிக்கலாம். நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் நம்முடைய பங்காகத் தழுவிக்கொள்ளலாம். அவர் நம்மை முழுமையடையச் செய்கிறார். அவரிடம் நமக்கு எந்தக் குறையும் இல்லை. 

மகிழ்ச்சியான கற்றல்

இந்தியாவில் மைசூர் என்ற நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட இரண்டு ரயில் பெட்டிகள் இறுதியில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளுர் கல்வியாளர்கள், ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளை வாங்கவும் அவைகளை மறுவடிவமைக்கவும் தென்மேற்கு ரயில் நிறுவனத்துடன் இணைந்துக் கொண்டனர். இவைகள் பெரிய உலோகப் பெட்டிகளாக இருந்தன. தொழிலாளர்கள் அதில் படிகள், மின்விசிறிகள், விளக்குகள் மற்றும் சாய்வுமேசைகளை அமைக்கும் வரை அது உபயோகமில்லாததாய் இருந்தது. தொழிலாளர்கள் சுவர்களுக்கு வண்ணம் பூசி, உள்ளேயும் வெளியேயும் வண்ண வண்ண சுவரோவியங்களை ஒட்டினர். இப்படிப்பட்ட அற்புதமான உருமாற்றம் செய்யப்பட்டதின் காரணமாகத் தற்போது அறுபது மாணவர்கள் அங்கு வகுப்புகளில் கலந்துக்கொள்ளுகின்றனர்.

“உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2), என்ற பவுலின் கட்டளையைப் பின்பற்றும்போது, இன்னும் அதிக அற்புதமான காரியம் ஒன்று நிகழ்கிறது. உலகத்தோடும் அதின் வழிகளோடும் இருக்கும் தொடர்பிலிருந்து துண்டித்துவிட பரிசுத்த ஆவியானவரை நாம் அனுமதிக்கும்போது நம்முடைய வழிகளும், சிந்தனைகளும், மனப்பான்மையும் மாறத் தொடங்குகின்றன. நாம் அதிக அன்புள்ளவர்களாகவும், நம்பிக்கையுள்ளவர்களாகவும், உள்ளான சமாதானத்தினாலே நிரப்பப்பட்டவர்களாயும் இருக்கிறோம் (8:6).

இன்னும் ஏதோ ஒன்று நடக்கிறது. இந்த மறுரூபமாக்கப்படுதல் தொடர்ந்து நடக்கும் செயலாக இருந்தாலும், ரயில் பயணத்தைப் போல அநேக நிறுத்தங்களையும், துவக்கங்களையும் கொண்டிருந்தாலும், இந்தச் செயல்முறை தேவன் நம் வாழ்க்கையில் என்ன விரும்புகிறார் என்று புரிந்துக்கொள்ள உதவுகிறது. நமக்காக தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள உதவுகிறது (12:2). அவருடைய சித்தத்தை அறிவது பிரத்தியேகங்களை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். ஆனால் அது எப்போதும் நம்மை அவருடைய குணத்தோடும் அவர் இந்த உலகத்தில் செய்யும் கிரியைகளோடும் சீரமைத்துக்கொள்ள வைக்கிறது. 

இந்தியாவில் மறுவடிவமைக்கப்பட்ட பள்ளியின் பெயர் “நாலி காலி” - இதற்கு ஆங்கிலத்தில் “மகிழ்ச்சியான கற்றல்” என்று அர்த்தம். தேவனின் மறுரூபப்படுத்தும் வல்லமை அவருடைய சித்தத்தை அறிவதில் உங்களை எவ்வாறு வழி நடத்துகிறது?

இக்கபோத் விலகிப் போயிற்று

“த லெஜெண்ட் ஆஃப் ஸ்லீப்பி ஹால்லோ” (ஒரு ஆங்கில நாவல்), இதில் கட்ரீனா என்ற அழகான இளம் பெண்ணை திருமணம் செய்ய இக்கபோத் க்ரேன் என்ற பள்ளி ஆசிரியர் நாடுவதைப் பற்றி நூலாசிரியர் கூறுகிறார். குடியேறிய கிராமப்புறப் பகுதிகளை வேட்டையாடும் தலையில்லாத ஒரு குதிரைவீரன் தான் கதையின் திறவுகோல். ஒரு இரவு, குதிரையின் மேல் ஒரு பூதம் போன்ற தோற்றத்தைக் கண்ட இக்கபோத், பயத்தினால் அப்பகுதியை விட்டு ஓடிப்போகிறார். இந்தக் குதிரை வீரன் கட்ரீனாவுக்கு ஒரு போட்டியான முறைமைக்காரன் என்றும் பின்னர் அவன் கட்ரீனாவை திருமணம் செய்துக்கொள்ளுகிறார் என்றும் வாசகர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது.

இக்கபோத் என்பது முதன்முதலில் வேதத்தில் காணப்பட்ட ஒரு பெயர் மற்றும் ஒரு இருண்ட பின்னணியைக் கொண்டுள்ளது. பெலிஸ்தியரோடு யுத்தம் பண்ணும்போது இஸ்ரவேலர் தேவனுடையப் பெட்டியயைப் போர்க்களத்திற்கு கொண்டு வந்தனர். இது ஒரு தவறான நடவடிக்கை. இஸ்ரவேல் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு தேவனுடைய பெட்டி சிறைப்பிடிக்கப்பட்டது. பிரதான ஆசாரியரான ஏலியின் குமாரர் ஓப்னி மற்றும் பினகாஸ் கொல்லப்பட்டனர் (1 சாமுவேல் 4:17). ஏலியும் இறந்து விடுகிறார் (வச. 18). கர்ப்பமாயிருந்த பினகாஸின் மனைவி இந்தச் செய்திகளைக் கேட்டபோது, “அவள் குனிந்துப் பிரசவித்தாள். அவள் சாகும்போது “மகிமை இஸ்ரவேலரை விட்டுப் போயிற்று என்று சொல்லி தன் மகனுக்கு இக்கபோத் (மகிமை புறப்பட்டது) என்று பெயரிட்டாள்” (வச. 22).

அதிர்ஷ்டவசமாக, தேவன் ஒரு பெரிய கதையை வெளிப்படுத்துகிறார். அவருடைய மகிமை கடைசியாக இயேசுவிடம் வெளிப்படுத்தப்படும் என்று அவர் தம்முடைய சீஷர்களிடம் “நாம் ஒன்றாயிருக்கிறதைப் போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் (பிதா) எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று தம்முடைய சீஷர்களைப் பற்றி கூறினார் (யோவான் 17:22).

இன்றைக்கு தேவனுடையப் பெட்டி எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பரவாயில்லை. இக்கபோத் ஓடிவிட்டது. இயேசுவின் மூலம் தேவன் தம்முடைய மகிமையை நமக்குத் தந்திருக்கிறார். 

வரம்பற்றவர்

நான் அங்கே, பேரங்காடியில், (Shopping Mall) உணவு சாப்பிடும் இடத்தில், உட்கார்ந்திருக்கிறேன். என் உடல் பதட்டமாகவும் என் வயிறு, வேலைகளின் காலக்கெடுவினால் தத்தளித்துக்கொண்டிருந்தது. நான் என் உணவை எடுத்து, சாப்பிட ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த வேலைகளைக் குறித்து பதற்றமடைந்துக்கொண்டிருந்தனர். நாம் அனைவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, நேரம், ஆற்றல் மற்றும் திறன் இவற்றில் கட்டுப்பாடு, என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

நான், செய்ய வேண்டிய வேலைகள் என்ற புதிய பட்டியலை எழுதி முக்கியமான வேலைகளை முதலில் செய்ய நினைக்கிறேன். ஆனால் அதை எழுத பேனாவைத் திறக்கும்போது வேறொரு எண்ணம் என் மனதில் தோன்றுகிறது: தாங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கும், முடிவில்லாத மற்றும் எல்லையில்லாதவர்களைப் பற்றி நினைக்கிறேன். தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடுக்குகிறவர் நம் ஆண்டவர் (ஏசாயா 40:12) என்று ஏசாயா கூறுகிறார். அவர் நட்சத்திரங்களை பெயர்சொல்லி அழைத்து அவைகளின் பாதைகளை வழிநடத்துகிறவர் (வச. 26), அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார் (வச. 23), தீவுகளை ஒரு அணுவைப் போலவும், தேசங்களை கடலின் ஒரு துளியைப் போலவும் கருதுகிறார் (வச. 15). அவர் கேட்கிறார் “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (வச. 25). “கர்த்தராகிய அநாதி தேவன், இளைப்படைவதுமில்லை, சோர்ந்து போவதுமில்லை” என்று ஏசாயா பதிலளிக்கிறார்” (வச. 28). 

மனஅழுத்தமும், சிரமமும் நமக்கு ஒருபோதும் நல்லதல்ல; ஆனால் இந்த நாளிலே அவைகள் ஒரு வல்லமையான செய்தியை அளிக்கிறது. வரம்பில்லாத ஆண்டவர் என்னைப் போலல்ல; அவர் விரும்புவதை செய்து முடிக்கிறார். நான் என் உணவை முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை இடைநிறுத்துகிறேன். அவரை அமைதியோடு தொழுதுகொள்ளுகிறேன். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார். 

 

வேலையில் மனநிறைவு

தங்கள் பணி அர்த்தமுள்ளதாக மருத்துவர்கள் உணருகிறார்களா என்பதை அறிந்துகொள்ள, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு ஆய்வுகளும் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் பணியில் மன அழுத்தம் இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவே கருதுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பணி திருப்திக்கான காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் நிரந்தரமான வேலை, பொறுப்புணர்வு, சுதந்திரம், வீட்டுவசதி, சக ஊழியர்கள் அவர்களை உணர்ந்த விதம் மற்றும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகள் போன்ற காரணங்களைச் சொன்னார்கள்.

பிரசங்கியின் ஆசிரியரும் வேலையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர், "மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?" (வ.22) என்று கேட்கிறார். நாம் நாள் முழுவதும் "அலுப்புடனும்" "துக்கத்துடனும்" வேலை செய்கிறோம், பின்னர் இரவிலும் நம் "மனதுக்கு இளைப்பாறுதலில்லை" (வ.23). வேலை "மாயையே" என்று அவர் முடிக்கிறார் (வ.23). இருப்பினும், மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது (வ.24) என்பதை உணர்கிறார். அவர் இல்லாமல் யாரால் உண்ண முடியும் அல்லது இன்பம் காண முடியும்? (வ.25). வீட்டிலோ அல்லது வெளியிலோ உடல் உழைப்பு அல்லது மன முயற்சியுடன் வேலை செய்வது ஒரு கெளரவம். நம்மில் பெரும்பாலோர் வேலை நாளின் முடிவில் திருப்தியைத் தேடுகிறோம். சிலர் இந்த திருப்தியைச் சேவை, பண ஆதாயம் அல்லது நட்பின் மூலம் கண்டடைய முயலலாம், இன்னும் பலர் வேலையைத் தேவன் கொடுத்த பாக்கியமென்று உணருமட்டும் வருத்தத்தோடு பிரயாசப்படுவார்கள் (ஆதியாகமம் 2:15). நாம் அதிருப்தி கொள்ளுகையில், நாம் தேவனிடம் செல்லலாம். ஏனெனில், எந்த வேலையும் நமக்கு முழு மனநிறைவை அளிக்காது என்பதுதான் உண்மை, ஆனால் நாம் செய்யும் வேலையில் மெய்யான அர்த்தத்தைக் கண்டறியத் தேவன் உதவுவார். ஆன் ஹரிகீர்த்தன்