“டக் டக்ஸ்” அல்லது “ஆட்டோ” என்று சொல்லப்படுகிற இந்தியாவின் மூன்று சக்கர வாகனங்கள் பெரும்பாலானவர்கள் பயணத்திற்கு வசதியாக இருக்கும். சென்னையில் வாழும் மாலா என்னும் பெண், ஆட்டோவை ஒரு மிஷன் பணித்தளமாய் பார்த்தாள். ஒரு நாள் ஆட்டோவில் ஏறி, சகஜமாய் பழகி, மார்க்கத்தைப் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஓட்டுநர் ஒருவரைக் கண்டாள். அடுத்த முறை அவரை சந்திக்கும்போது அவருக்கு சுவிசேஷத்தை சொல்லிவிட வேண்டும் என்றுஅவள் இருதயத்தில் தீர்மானித்தாள்.

“தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய” என்ற பவுலின் அறிக்கையோடே ரோமர் நிருபம் துவங்குகிறது (ரோமர் 1:1). சுவிசேஷத்தைக் குறிக்கும் “இவாஞ்சிலியோன்” என்னும் கிரேக்கப் பதத்திற்கு “நற்செய்தி” என்று பொருள். தேவனுடைய சுவிசேஷத்தைக் கூறுவதே தன்னுடைய நோக்கம் என்பதை பவுல் கூறுகிறார். 

அந்த நற்செய்தி என்ன? அது தேவனுடைய குமாரனைக் குறித்த நற்செய்தி என்று ரோமர் 1:3 சொல்லுகிறது. அந்த நற்செய்தியே, இயேசு! நம்முடைய பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கவே இயேசு வந்திருக்கிறார் என்னும் செய்தியை அறிவிக்கும் பாத்திரங்களாய் தேவன் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். என்னே தாழ்மையான சத்தியம்!

நற்செய்தியை பகிர்ந்துகொள்வது, கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிலாக்கியம். மற்றவர்களை இந்த விசுவாசத்திற்கு உட்படுத்த நாம் கிருபை பெற்றிருக்கிறோம் (வச.5-6). நாம் ஆட்டோவில் பயணித்தாலும் அல்லது எங்கே இருந்தாலும், நம்மை சுற்றியுள்ள மக்களிடம் சுவிசேஷத்தின் ஆச்சரியமான செய்தியை பகிர்ந்துகொள்ள தேவன் நம்மை பிரித்தெடுத்திருக்கிறார். மாலாவைப் போல ஒவ்வொரு நாளும் இயேசுவைக் குறித்த நற்செய்தியை அறிவிக்க நாமும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிரயாசப்படுவோம்.