கொரோனா பெருந்தொற்றின் நாட்களில் உலகம் முழுமையுமுள்ள பள்ளிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சீன தேசத்தில், டிங்டாக் என்னும் ஆன்லைன் செயலி மூலம் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. சங்கடப்பட்ட மாணவர்கள், இந்த டிங்டாக் செயலிக்கான நிகழ்நிலை மதிப்பீட்டை குறைவாகக் காட்டினால் அந்த செயலியை பயன்பாட்டிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று எண்ணினர். ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரேயொரு நட்சத்திர மதிப்பீட்டைக் கொடுத்து, அந்த செயலியை செயல்படவிடாமல் முடக்கினர். 

மாணவர்களின் இந்த பொறுப்பற்ற செயலை தேவன் அங்கீகரிக்கமாட்டார் என்றாலும், அவர்களின் புத்தி கூர்மையை தேவன் பொருட்படுத்துகிறார். தன் எஜமானிடத்தில் திட்டுவாங்கிய ஓர் உக்கிராணக்காரன் தன் கடைசி நாட்களில் மற்றவர்களுக்கு நன்மைசெய்ய முயன்றதைக் குறித்த ஒரு கதையை இயேசு சொல்லுகிறார். அந்த உக்கிராணக்காரனுடைய செய்கையை இயேசு நியாயப்படுத்தவில்லை. மாறாக, அவனுடைய புத்திகூர்மையான செயலை முக்கியத்துவப்படுத்தி, தன்னைப் பின்பற்றுகிறவர்களும் ஞானமாய் செயல்படவேண்டும் என்று கூறுகிறார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” (லூக்கா 16:9). 

பணம் என்று வரும்போது, அதை செலவழிக்காமல் பாதுகாக்க நம்மில் பலர் பிரயாசப்படுவர். ஆனால் ஞானமுள்ளவர்கள் அதை எப்படி நேர்த்தியாய் பயன்படுத்துவது என்று சிந்திப்பபர்கள். மற்றவர்களுக்குக் கொடுப்பதின் மூலமாய் “உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” என்றும் அதுவே பாதுகாப்பும் மேன்மையுமானது என்று இயேசு சொல்லுகிறார். எந்த ஒரு குழுவிலும் தலைவன் என்பவன் யார்? யார் பணத்தை முன்வந்து செலவழிக்கிறார்களோ அவர்களே. கொடுப்பது நமக்கு நித்திய வீட்டின் ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் என்றும், இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. 

நம்மிடத்தில் பணம் இல்லையென்றாலும், நேரம், திறமைகள் மற்றும் கேட்கும் செவி ஆகியவைகள் நம்மிடம் உண்டு. மற்றவர்களுக்கு எப்படி நேர்த்தியாய் உதவுவது என்பதை நமக்குக் காண்பிக்கும் பொருட்டு தேவனிடத்தில் கேட்போம்.