Archives: செப்டம்பர் 2021

உங்களுக்குத் தேவையான அனைத்தும்

சாப்பாட்டு அறை மேசையின் மேல் அமர்ந்துகொண்டு என்னைச் சுற்றி நடந்துக்கொண்டிருந்த இன்பமான குழப்பங்களை நோக்கிக்கொண்டிருந்தேன். அத்தைகள், மாமாக்கள், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், இன்னும் மற்ற உறவினர்கள் எங்களுடைய குடும்பத்தின் கூடுகைக்கு வந்து ஒன்றாக உணவை மகிழ்ச்சியுடன் ருசித்துக்கொண்டிருந்தனர். நானும் அதை ருசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஒரு எண்ணம் என் இருதயத்தை பிளந்தது: உங்களுக்கென்று பிள்ளைகள் இல்லாத, சொந்தமாக ஒரு குடும்பம் இல்லாத ஒரே பெண் நீங்கள்தான்.

என்னைப் போல தனிமையாக இருக்கும் பெண்களுக்கு இதேபோலத்தான் எண்ணம் இருக்கிறது. திருமணத்தையும் குழந்தைகளையும் அதிகமாக மதிப்பிடும் ஆசியக் கலாச்சாரமான, என்னுடைய கலாச்சாரத்தில், தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாத சூழ்நிலை முழுமையடையாத ஒரு உணர்வை ஏற்படுத்தும். நீங்கள் யார் என்பதை வரையறுத்து, உங்களை முழுமையடைய வைக்கும் ஒன்று உங்களிடத்தில் இல்லாதது போல் தோன்றலாம். 

அதனால் தான் கர்த்தர் என் “பங்கு” என்ற சத்தியம் எனக்கு அதிக ஆறுதலைக் கொடுக்கிறது (சங்கீதம் 73:26). இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு அவரவருடைய சுதந்திரம் பங்கிடப்பட்டது. ஆனால் லேவி கோத்திரத்தாருக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை; மாறாக, கர்த்தரே அவர்களுக்கு பங்காகவும் சுதந்தரமாகவும் இருப்பதாக வாக்களித்தார் (உபாகமம் 10:9). அவர்கள் அவரிடத்தில் முழு திருப்தியடைந்து அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் அவர் கொடுப்பார் என்று நம்பினார்கள். 

நம்மில் சிலருக்கு பற்றாக்குறை என்ற உணர்வு குடும்பத்தோடு தொடர்புடையதாக இல்லாதிருக்கலாம். ஒருவேளை நாம் ஒரு நல்ல வேலைக்காக அல்லது உயர் கல்விக்காக முயற்சிக்கலாம். நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் நம்முடைய பங்காகத் தழுவிக்கொள்ளலாம். அவர் நம்மை முழுமையடையச் செய்கிறார். அவரிடம் நமக்கு எந்தக் குறையும் இல்லை. 

மகிழ்ச்சியான கற்றல்

இந்தியாவில் மைசூர் என்ற நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட இரண்டு ரயில் பெட்டிகள் இறுதியில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளுர் கல்வியாளர்கள், ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளை வாங்கவும் அவைகளை மறுவடிவமைக்கவும் தென்மேற்கு ரயில் நிறுவனத்துடன் இணைந்துக் கொண்டனர். இவைகள் பெரிய உலோகப் பெட்டிகளாக இருந்தன. தொழிலாளர்கள் அதில் படிகள், மின்விசிறிகள், விளக்குகள் மற்றும் சாய்வுமேசைகளை அமைக்கும் வரை அது உபயோகமில்லாததாய் இருந்தது. தொழிலாளர்கள் சுவர்களுக்கு வண்ணம் பூசி, உள்ளேயும் வெளியேயும் வண்ண வண்ண சுவரோவியங்களை ஒட்டினர். இப்படிப்பட்ட அற்புதமான உருமாற்றம் செய்யப்பட்டதின் காரணமாகத் தற்போது அறுபது மாணவர்கள் அங்கு வகுப்புகளில் கலந்துக்கொள்ளுகின்றனர்.

“உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2), என்ற பவுலின் கட்டளையைப் பின்பற்றும்போது, இன்னும் அதிக அற்புதமான காரியம் ஒன்று நிகழ்கிறது. உலகத்தோடும் அதின் வழிகளோடும் இருக்கும் தொடர்பிலிருந்து துண்டித்துவிட பரிசுத்த ஆவியானவரை நாம் அனுமதிக்கும்போது நம்முடைய வழிகளும், சிந்தனைகளும், மனப்பான்மையும் மாறத் தொடங்குகின்றன. நாம் அதிக அன்புள்ளவர்களாகவும், நம்பிக்கையுள்ளவர்களாகவும், உள்ளான சமாதானத்தினாலே நிரப்பப்பட்டவர்களாயும் இருக்கிறோம் (8:6).

இன்னும் ஏதோ ஒன்று நடக்கிறது. இந்த மறுரூபமாக்கப்படுதல் தொடர்ந்து நடக்கும் செயலாக இருந்தாலும், ரயில் பயணத்தைப் போல அநேக நிறுத்தங்களையும், துவக்கங்களையும் கொண்டிருந்தாலும், இந்தச் செயல்முறை தேவன் நம் வாழ்க்கையில் என்ன விரும்புகிறார் என்று புரிந்துக்கொள்ள உதவுகிறது. நமக்காக தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள உதவுகிறது (12:2). அவருடைய சித்தத்தை அறிவது பிரத்தியேகங்களை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். ஆனால் அது எப்போதும் நம்மை அவருடைய குணத்தோடும் அவர் இந்த உலகத்தில் செய்யும் கிரியைகளோடும் சீரமைத்துக்கொள்ள வைக்கிறது. 

இந்தியாவில் மறுவடிவமைக்கப்பட்ட பள்ளியின் பெயர் “நாலி காலி” - இதற்கு ஆங்கிலத்தில் “மகிழ்ச்சியான கற்றல்” என்று அர்த்தம். தேவனின் மறுரூபப்படுத்தும் வல்லமை அவருடைய சித்தத்தை அறிவதில் உங்களை எவ்வாறு வழி நடத்துகிறது?

இக்கபோத் விலகிப் போயிற்று

“த லெஜெண்ட் ஆஃப் ஸ்லீப்பி ஹால்லோ” (ஒரு ஆங்கில நாவல்), இதில் கட்ரீனா என்ற அழகான இளம் பெண்ணை திருமணம் செய்ய இக்கபோத் க்ரேன் என்ற பள்ளி ஆசிரியர் நாடுவதைப் பற்றி நூலாசிரியர் கூறுகிறார். குடியேறிய கிராமப்புறப் பகுதிகளை வேட்டையாடும் தலையில்லாத ஒரு குதிரைவீரன் தான் கதையின் திறவுகோல். ஒரு இரவு, குதிரையின் மேல் ஒரு பூதம் போன்ற தோற்றத்தைக் கண்ட இக்கபோத், பயத்தினால் அப்பகுதியை விட்டு ஓடிப்போகிறார். இந்தக் குதிரை வீரன் கட்ரீனாவுக்கு ஒரு போட்டியான முறைமைக்காரன் என்றும் பின்னர் அவன் கட்ரீனாவை திருமணம் செய்துக்கொள்ளுகிறார் என்றும் வாசகர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது.

இக்கபோத் என்பது முதன்முதலில் வேதத்தில் காணப்பட்ட ஒரு பெயர் மற்றும் ஒரு இருண்ட பின்னணியைக் கொண்டுள்ளது. பெலிஸ்தியரோடு யுத்தம் பண்ணும்போது இஸ்ரவேலர் தேவனுடையப் பெட்டியயைப் போர்க்களத்திற்கு கொண்டு வந்தனர். இது ஒரு தவறான நடவடிக்கை. இஸ்ரவேல் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு தேவனுடைய பெட்டி சிறைப்பிடிக்கப்பட்டது. பிரதான ஆசாரியரான ஏலியின் குமாரர் ஓப்னி மற்றும் பினகாஸ் கொல்லப்பட்டனர் (1 சாமுவேல் 4:17). ஏலியும் இறந்து விடுகிறார் (வச. 18). கர்ப்பமாயிருந்த பினகாஸின் மனைவி இந்தச் செய்திகளைக் கேட்டபோது, “அவள் குனிந்துப் பிரசவித்தாள். அவள் சாகும்போது “மகிமை இஸ்ரவேலரை விட்டுப் போயிற்று என்று சொல்லி தன் மகனுக்கு இக்கபோத் (மகிமை புறப்பட்டது) என்று பெயரிட்டாள்” (வச. 22).

அதிர்ஷ்டவசமாக, தேவன் ஒரு பெரிய கதையை வெளிப்படுத்துகிறார். அவருடைய மகிமை கடைசியாக இயேசுவிடம் வெளிப்படுத்தப்படும் என்று அவர் தம்முடைய சீஷர்களிடம் “நாம் ஒன்றாயிருக்கிறதைப் போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் (பிதா) எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று தம்முடைய சீஷர்களைப் பற்றி கூறினார் (யோவான் 17:22).

இன்றைக்கு தேவனுடையப் பெட்டி எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பரவாயில்லை. இக்கபோத் ஓடிவிட்டது. இயேசுவின் மூலம் தேவன் தம்முடைய மகிமையை நமக்குத் தந்திருக்கிறார். 

வரம்பற்றவர்

நான் அங்கே, பேரங்காடியில், (Shopping Mall) உணவு சாப்பிடும் இடத்தில், உட்கார்ந்திருக்கிறேன். என் உடல் பதட்டமாகவும் என் வயிறு, வேலைகளின் காலக்கெடுவினால் தத்தளித்துக்கொண்டிருந்தது. நான் என் உணவை எடுத்து, சாப்பிட ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த வேலைகளைக் குறித்து பதற்றமடைந்துக்கொண்டிருந்தனர். நாம் அனைவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, நேரம், ஆற்றல் மற்றும் திறன் இவற்றில் கட்டுப்பாடு, என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

நான், செய்ய வேண்டிய வேலைகள் என்ற புதிய பட்டியலை எழுதி முக்கியமான வேலைகளை முதலில் செய்ய நினைக்கிறேன். ஆனால் அதை எழுத பேனாவைத் திறக்கும்போது வேறொரு எண்ணம் என் மனதில் தோன்றுகிறது: தாங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கும், முடிவில்லாத மற்றும் எல்லையில்லாதவர்களைப் பற்றி நினைக்கிறேன். தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடுக்குகிறவர் நம் ஆண்டவர் (ஏசாயா 40:12) என்று ஏசாயா கூறுகிறார். அவர் நட்சத்திரங்களை பெயர்சொல்லி அழைத்து அவைகளின் பாதைகளை வழிநடத்துகிறவர் (வச. 26), அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார் (வச. 23), தீவுகளை ஒரு அணுவைப் போலவும், தேசங்களை கடலின் ஒரு துளியைப் போலவும் கருதுகிறார் (வச. 15). அவர் கேட்கிறார் “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (வச. 25). “கர்த்தராகிய அநாதி தேவன், இளைப்படைவதுமில்லை, சோர்ந்து போவதுமில்லை” என்று ஏசாயா பதிலளிக்கிறார்” (வச. 28). 

மனஅழுத்தமும், சிரமமும் நமக்கு ஒருபோதும் நல்லதல்ல; ஆனால் இந்த நாளிலே அவைகள் ஒரு வல்லமையான செய்தியை அளிக்கிறது. வரம்பில்லாத ஆண்டவர் என்னைப் போலல்ல; அவர் விரும்புவதை செய்து முடிக்கிறார். நான் என் உணவை முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை இடைநிறுத்துகிறேன். அவரை அமைதியோடு தொழுதுகொள்ளுகிறேன். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?