Archives: ஆகஸ்ட் 2021

பரம வைத்தியர்

என் குடும்ப நபர் ஒருவரின் உணவுசெரிமான கோளாறுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை நன்றாய் பலனளிக்கத் துவங்கியதை அறிந்ததும் நான் ஆச்சரியத்தோடு, அதைக் குறித்து மற்றவர்களிடம் பெருமையாக பேசினேன். அந்த சிகிச்சையை கொடுத்த மருத்துவரை புகழ்ந்தேன். “சுகத்திற்கு எப்போதுமே தேவன் தான் காரணராக முடியும்” என்று என் சிநேகிதரில் சிலர் சொன்னார்கள். அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது. பரம வைத்தியரை முக்கியத்துவப்படுத்தாமல், சுகத்திற்கு மனிதனை விக்கிரகமாக்கிவிட்டேனோ?

இஸ்ரவேலர்களின் வியாதியை சுகமாக்க தேவன் பயன்படுத்திய வெண்கல சர்ப்பத்திற்கு தூபங்காட்ட துணிந்தபோது இஸ்ரவேலர்களும் ஏறத்தாழ இதே வலையில் சிக்கினர். “மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை” (2 இராஜ. 18:4) எசேக்கியா உடைத்துப்போடும் வரைக்கும் இஸ்ரவேலர்கள் அதை வழிபட்டுக்கொண்டிருந்தனர். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கொடிய விஷப்பாம்புகள் இஸ்ரவேலர்களை தீண்டியது. அதினால் பலர் மரிக்க நேரிட்டது (எண்ணாகமம் 21:6). அவர்களுடைய ஆவிக்குரிய முரட்டாட்டமே அதற்கு காரணம் என்றாலும் மக்கள் தேவனுடைய உதவிக்காய் கெஞ்சினர். அவர்களுக்கு இரக்கம் செய்யும்பொருட்டு, தேவன் மோசேக்கு ஒரு வெண்கல சர்ப்பத்தை செய்து அதை எல்லோரும் பார்க்கும்பொருட்டு உயர்த்தி பிடிக்கும்படி சொன்னார். அதை நோக்கிப் பார்த்தவர்கள் பிழைத்துக்கொண்டனர் (வச. 4-9). 

தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களை நினைத்துப் பாருங்கள். அவைகளில் ஏதாகிலும் தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பிரதிபலிப்பதற்கு பதிலாக நம்முடைய துதிக்கு பாத்திரமாய் மாறியிருக்கிறதா? நன்மையான எந்த ஈவையும் கொடுக்கும் (யாக்கோபு 1:17), நம்முடைய பரிசுத்த தேவன் மட்டுமே துதிக்குப் பாத்திரர். 

வரம்பற்றவர்

நான் அங்கே, பேரங்காடியில், (Shopping Mall) உணவு சாப்பிடும் இடத்தில், உட்கார்ந்திருக்கிறேன். என் உடல் பதட்டமாகவும் என் வயிறு, வேலைகளின் காலக்கெடுவினால் தத்தளித்துக்கொண்டிருந்தது. நான் என் உணவை எடுத்து, சாப்பிட ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த வேலைகளைக் குறித்து பதற்றமடைந்துக்கொண்டிருந்தனர். நாம் அனைவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, நேரம், ஆற்றல் மற்றும் திறன் இவற்றில் கட்டுப்பாடு, என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

நான், செய்ய வேண்டிய வேலைகள் என்ற புதிய பட்டியலை எழுதி முக்கியமான வேலைகளை முதலில் செய்ய நினைக்கிறேன். ஆனால் அதை எழுத பேனாவைத் திறக்கும்போது வேறொரு எண்ணம் என் மனதில் தோன்றுகிறது: தாங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கும், முடிவில்லாத மற்றும் எல்லையில்லாதவர்களைப் பற்றி நினைக்கிறேன். தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடுக்குகிறவர் நம் ஆண்டவர் (ஏசாயா 40:12) என்று ஏசாயா கூறுகிறார். அவர் நட்சத்திரங்களை பெயர்சொல்லி அழைத்து அவைகளின் பாதைகளை வழிநடத்துகிறவர் (வச. 26), அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார் (வச. 23), தீவுகளை ஒரு அணுவைப் போலவும், தேசங்களை கடலின் ஒரு துளியைப் போலவும் கருதுகிறார் (வச. 15). அவர் கேட்கிறார் “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (வச. 25). “கர்த்தராகிய அநாதி தேவன், இளைப்படைவதுமில்லை, சோர்ந்து போவதுமில்லை” என்று ஏசாயா பதிலளிக்கிறார்” (வச. 28). 

மனஅழுத்தமும், சிரமமும் நமக்கு ஒருபோதும் நல்லதல்ல; ஆனால் இந்த நாளிலே அவைகள் ஒரு வல்லமையான செய்தியை அளிக்கிறது. வரம்பில்லாத ஆண்டவர் என்னைப் போலல்ல; அவர் விரும்புவதை செய்து முடிக்கிறார். நான் என் உணவை முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை இடைநிறுத்துகிறேன். அவரை அமைதியோடு தொழுதுகொள்ளுகிறேன்.

எச்சரிப்பை கவனியுங்கள்

நான் என்னுடைய கோடை விடுமுறையை கழிக்கச் சென்ற தேசத்தில் என்னுடைய பணப்பையை ஒருவன் திருட முயற்சித்தான். அங்கு அது ஆச்சரியமில்லை. வழியில் திருடர் பயம் இருக்கும் என்ற எச்சரிப்பை நான் பார்த்தேன். ஆகையால் என்னுடைய பணப்பையை எப்படி பராமரிப்பது என நான் அறிந்திருந்தேன். ஆனால் அது சம்பவிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. 

அதிர்ஷ்டவசமாய் என் பணப்பையை உருவிய அந்த இளைஞனின் கைகள் வழுக்கியது. அதினால் அவன் உருவிய என் பணப்பை கீழே விழுந்தது. அதை சட்டென்று குனிந்து எடுத்துக்கொண்டேன். ஆனால் அந்த எச்சரிப்பை நான் பொருட்படுத்தியிருக்கவேண்டும் என்பதை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது. 

நாம் எச்சரிக்கைகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அவைகள் நம் வாழ்க்கையின் மகிழ்ச்சி பாதையில் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதற்கு கவனம் செலுத்துவதில்லை. வரப்போகிற தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அறிவிக்க தன்னுடைய சீஷர்களை அனுப்பும்போது, இயேசு அவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கிறார் (மத்தேயு 10:7). அவர் “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” (வச. 32-33).

நமக்கு தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு. நாம் தேவனோடு அவருடைய அன்பில் நித்திய நித்தியமாய் இருப்பதற்காக ஒரு இரட்சகரை நமக்கு அனுப்பியிருக்கிறார். நாம் தேவனை விட்டு திரும்பி, அவருடைய இரட்சிப்பின் செய்தியை நாம் புறக்கணிப்போமாகில் அவர் கொடுக்கும் நித்திய வாழ்க்கையையும் அவரோடு இருக்கும் வாய்ப்பையும் நாம் இழக்க நேரிடும். 

நம்மை நேசிக்கிறவரும் உண்டாக்கினவருமாகிய தேவனிடத்திலிருந்து நித்தியமாய் பிரிக்கப்படாதபடிக்கு நம்மை இரட்சிப்புக்கு தெரிந்துகொண்ட இயேசுவை நாம் நம்புவோம். 

ஒரு நல்ல காரணம்

பாதையின் இருபுறத்திலும் அவர்களின் இருக்கைகள் அமைந்திருந்தது. இரண்டு மணி நேர விமான பயணம். அவர்களுக்கு என்னால் உதவமுடியவில்லை என்றாலும் அவர்களின் சில பேச்சுகள் என் காதில் விழுந்தது. அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பது தெளிவாய் தெரிகிறது. உறவினராய் கூட இருக்கலாம். இருவரில் இளையவராய் இருந்தவர் (ஏறத்தாழ 60 வயது இருக்கும்) மூத்தவருக்கு (ஏறத்தாழ 90 வயது இருக்கலாம்) தன்னுடைய கைகளை அடிக்கடி நீட்டி ஆப்பிள் துண்டுகள், வீட்டில் தயாரித்த சான்ட்விட்ச், துடைக்கும் துண்டு என மரியாதையோடு கொடுத்துக்கொண்டேயிருந்தார். அந்த விமானத்திலிருந்து இறங்கியபோது, அந்த இளைய பெண்மணியைப் பார்த்து, “நீங்கள் அக்கறையெடுத்துக்கொண்ட விதம் அழகாய் இருந்தது” என கூறினேன். அதற்கு அவர்கள், “அவர் என்னுடைய நெருங்கிய சிநேகிதி, என்னுடைய அம்மா” என்று சொன்னார்கள். 

நாம் எல்லோரும் அப்படி சொன்னால் எவ்வளவு அழகாயிருக்கும்? சில பெற்றோர்கள் நல்ல நண்பர்களாய் இருப்பர். சில பெற்றோர்கள் அப்படியிருப்பதில்லை. உறவுகள் மேன்மையாய் அமைவதற்கு சில சிக்கல்கள் உண்டு. பவுல் தீமோத்தேயுக்கு எழுதிய நிருபம் அந்த சிக்கல்களை மறுக்கவில்லை. ஆனாலும் நம்முடைய பெற்றோர்களையும், பாட்டி தாத்தாவையும், உறவினர்களையும், நம் வீட்டாரையும் பராமரித்து தேவபக்தியாய் நடந்துகொள்ளும்படிக்கு அறிவுறுத்துகிறார் (1 தீமோத்தேயு 5:4,8).

நம்முடைய குடும்பத்து நபர்கள் நமக்கு நல்லவர்களாய் தெரிந்தால் மட்டுமே அவர்கள் மீது நாம் அக்கறை எடுத்துக்கொள்வோம். அதாவது, அவர்கள் அதற்கு தகுதியானவர்களாய் இருக்கவேண்டும். ஆனால் அவர்களை பராமரிப்பதற்கு பவுல் மிக அழகான ஒர் காரணத்தை சொல்லுகிறார். ஏனென்றால், அது “தேவனுக்கு முன்பாக பிரியமாயிருக்கிறது” (வச. 4). 

கர்த்தருடைய நடத்துதல்

குறிப்பிட்ட ஒரு கிராமத்திலிருந்து நாங்கள் துணிகரமாய் காட்டுக்குள் வெகுதூரம் பயணம் மேற்கொண்டோம். சில மாதங்கள் கடந்தபின், தண்ணீரின் மெல்லிய ஓசை எங்கள் காதுகளில் தொனித்தது. வேகமாய் நடக்கத் தொடங்கின எங்களை விரைவில் கருத்த மலைகளுக்கு இடையிலிருந்த வெண்மையான நீரோட்டம் வரவேற்றது. மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு காட்சி!

நாங்கள் அந்த இன்பச் சுற்றுலாவை அனுபவிக்க எண்ணி, எங்களுடைய பயணத்திற்கு துணைபுரிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலரை நாங்கள் திருப்பி அனுப்பிவிட்டோம். நல்ல திட்டம் தான். ஆனால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது? நாங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. என்னுடைய நண்பர்கள் அருகிலிருந்த காட்டுக்குள் சென்று சில பழங்கள், காய்கறிகள், மீன்கள் என்று சேகரித்து வந்தனர். அந்த ஆகாரம் எங்களுக்கு புதிதாயிருந்தது. ஆனால் மிக சுவையாய் தெரிந்தது. 

தேவனுடைய சிரு~;டிப்பில் நம் தேவைகள் அளவுக்கு அதிகமாய் இறைந்து கிடக்கிறது. அதற்கு ஆதாரமாய், “பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது” (ஆதியாகமம் 1:12) என்பதை எடுத்துக்கொள்ளலாம். “விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும் விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும்” (வச. 29) உண்டாக்கி, அவைகளை தேவன் நமக்கு ஆகாரமாய் கொடுத்திருக்கிறார். 

உன் தேவைகளுக்காய் தேவனை நம்புவது சிலவேளைகளில் கடினமாய் தோன்றுகிறதா? நீங்கள் இயற்கையை ரசிக்கும் ஒர் நடைபயணம் மேற்கொள்ளலாமே? உங்கள் பார்வையில் தென்படுவது இயேசுவின் உறுதியான வார்த்தைகளை நினைவுபடுத்தட்டும்: “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை  உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம்  அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத்தேயு 6:31-32).