என் குடும்ப நபர் ஒருவரின் உணவுசெரிமான கோளாறுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை நன்றாய் பலனளிக்கத் துவங்கியதை அறிந்ததும் நான் ஆச்சரியத்தோடு, அதைக் குறித்து மற்றவர்களிடம் பெருமையாக பேசினேன். அந்த சிகிச்சையை கொடுத்த மருத்துவரை புகழ்ந்தேன். “சுகத்திற்கு எப்போதுமே தேவன் தான் காரணராக முடியும்” என்று என் சிநேகிதரில் சிலர் சொன்னார்கள். அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது. பரம வைத்தியரை முக்கியத்துவப்படுத்தாமல், சுகத்திற்கு மனிதனை விக்கிரகமாக்கிவிட்டேனோ?

இஸ்ரவேலர்களின் வியாதியை சுகமாக்க தேவன் பயன்படுத்திய வெண்கல சர்ப்பத்திற்கு தூபங்காட்ட துணிந்தபோது இஸ்ரவேலர்களும் ஏறத்தாழ இதே வலையில் சிக்கினர். “மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை” (2 இராஜ. 18:4) எசேக்கியா உடைத்துப்போடும் வரைக்கும் இஸ்ரவேலர்கள் அதை வழிபட்டுக்கொண்டிருந்தனர். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கொடிய விஷப்பாம்புகள் இஸ்ரவேலர்களை தீண்டியது. அதினால் பலர் மரிக்க நேரிட்டது (எண்ணாகமம் 21:6). அவர்களுடைய ஆவிக்குரிய முரட்டாட்டமே அதற்கு காரணம் என்றாலும் மக்கள் தேவனுடைய உதவிக்காய் கெஞ்சினர். அவர்களுக்கு இரக்கம் செய்யும்பொருட்டு, தேவன் மோசேக்கு ஒரு வெண்கல சர்ப்பத்தை செய்து அதை எல்லோரும் பார்க்கும்பொருட்டு உயர்த்தி பிடிக்கும்படி சொன்னார். அதை நோக்கிப் பார்த்தவர்கள் பிழைத்துக்கொண்டனர் (வச. 4-9). 

தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களை நினைத்துப் பாருங்கள். அவைகளில் ஏதாகிலும் தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பிரதிபலிப்பதற்கு பதிலாக நம்முடைய துதிக்கு பாத்திரமாய் மாறியிருக்கிறதா? நன்மையான எந்த ஈவையும் கொடுக்கும் (யாக்கோபு 1:17), நம்முடைய பரிசுத்த தேவன் மட்டுமே துதிக்குப் பாத்திரர்.