ஜூலை, 2021 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூலை 2021

கிறிஸ்துவில் விலையேறப்பெற்ற வாழ்வு

தொலைந்த என் நிச்சயதார்த்த மோதிரத்தை, கண்களில் நீர்வழிய கண்மூடித்தனமாய் தேடினேன். மெத்தைகளை புரட்டிப்பார்த்து, இங்கும் அங்கும் எல்லா மூலைகளிலும் தேடிய என்னுடைய கணவர் ஆலன், “பரவாயில்லை, நாம் வேறொன்றை வாங்கிக்கொள்ளலாம்” என்றார். 

“நன்றி,” என்று சொன்னேன். “ஆனால் அதின் விலைமதிப்பைத் தாண்டி, அதில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பு இருக்கிறது.” அதை மற்றொன்றைக்கொண்டு ஈடுசெய்யமுடியாது. அதை கண்டுபிடிக்கவேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்தேன். “தேவனே, தயவுசெய்து அதை கண்டுபிடிக்க எனக்கு உதவிசெய்யும்.” 

ஒருசில நாட்களுக்குபின், அந்த விலைமதிப்பற்ற மோதிரத்தை என்னுடைய ஸ்வெட்டர் ஒன்றின் பாக்கெட்டில் கண்டெடுத்தேன். “நன்றி இயேசுவே” என்று மகிழ்ச்சியடைந்தேன். நானும் எனது கணவரும் மகிழ்ச்சியடைந்த தருணத்தில், வேதாகமத்தில் வெள்ளி நாணயத்தை தொலைத்த ஸ்திரீயைக் குறித்த உவமை எனக்கு நினைவுக்கு வந்தது (லூக்கா 15:8-10). தொலைந்த வெள்ளி நாணயத்தைத் தேடிய ஸ்திரீயைப் போல, தொலைந்த மோதிரத்தின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது. எங்களுடைய விலைமதிப்புள்ள ஒன்றைத் தேடும் எங்களின் முயற்சி தவறல்ல. இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தி, தான் சிருஷ்டித்த ஒவ்வொரு நபரையும் இரட்சிக்கும் அவரது ஆவலை வெளிப்படுத்துகிறார். ஒரு பாவியின் மனந்திரும்புதலினால் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாகிறது. 

தொலைந்துபோன பொருளைத் தேடுவதுபோன்று, மற்றவர்களுக்காக வாஞ்சையோடு ஜெபிக்கிற நபராய் மாறுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஒருவர் மனந்திரும்பி, தன்னுடைய வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புவிப்பது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! நாம் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைக்கும்போது, தொலைந்துபோன நம்மை விடாமல் தேடிக் கண்டுபிடித்ததின் சந்தோஷத்தை நாம் அனுபவிக்கமுடியும். நம்மை தேடிக் கண்டுபிடிக்குமளவிற்கு நாம் அவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்கள். 

பொறாமையை மேற்கொள்ளுதல்

பிரபல ஆங்கிலத் திரைப்படமொன்றில், வயதுமுதிர்ந்த இசைவாத்தியக் கலைஞர் ஒருவர் அந்த குறிப்பிட்ட நிகழ்விற்கு வந்திருந்த பாதிரியாருக்கு தன்னுடைய இசைகளில் சிலவற்றை பியானோவில் வாசித்துக் காண்பித்தார். சங்கடப்பட்ட பாதிரியார், அந்த இசை தனக்கு பிடிபடவில்லை என்றார். “இது எப்படியிருக்கிறது?” என்று எல்லோருக்கும் பரீட்சையமான ஒரு இசையை வாசித்துக் காண்பித்தார். இது உங்களுடையதா என்று அவர் கேட்க, வெறுமனே “இல்லை” என்று பதிலளிக்கிறார். ஆனால் அது பிரபல மொசார்த்தின் இசை என்பதை எளிதில் மக்கள் புரிந்துகொண்டனர். அதுமட்டுமின்றி, அவர் அதை வாசித்தது, அந்த பிரபல இசைக்கு காரணமான மொசார்த்தின் மரண நிகழ்வில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மொசார்த்தின் வெற்றியின் மீது அவர் கொண்ட பொறாமை அதை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. 

மற்றுமொரு பொறாமைக் கதையின் அடிப்படையாக ஒரு பாடல் அமைக்கப்பட்டுள்ளது. தாவீது கோலியாத்தை வெற்றிகொண்ட பின், மக்கள், “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” (1 சாமுவேல் 18:7) என்று மகிழ்ச்சியோடு பாடினர். இந்த ஒப்பிடுதல் சவுல் ராஜாவுக்கு திருப்தியாயில்லை. தாவீதின் வெற்றியின் மீது பொறாமைக் கொண்டு, தன்னுடைய ராஜ்யத்தை இழக்க நேரிடுமோ என்று பயந்த சவுல் (வச. 8-9), தாவீதைக் கொலை செய்வதற்காக நீண்ட முயற்சியை ஏறெடுக்கிறான். 

இந்த மூத்த இசைக்கலைஞரைப் போல, அதிகாரத்திலிருந்த சவுலைப் போல, நம்மைவிட திறமையானவர்களைச் சந்திக்கும்போது நாம் பெறாமைப்பட நேரிடலாம். அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டுவதையும் அவர்களின் வெற்றியை அற்பமாய் எண்ணுவதையும் விட்டுவிட்டு, நம்முடைய பொறாமையை மேற்கொள்ள பழகுவோம். 

சவுல் ராஜாவாக தெய்வீகமாய் தேர்ந்தெடுக்கப்பட்டான் (10:6-7, 24). அந்த தெரிந்தெடுத்தல் அவனுக்குள் பொறாமையை அல்ல, மாறாக, பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியிருக்கவேண்டும். நம்முடைய அழைப்பும் பிரத்யேகமானது என்பதினால் (எபேசியர் 2:10), மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்வதை நிறுத்துவதின் மூலம் பொறாமையை மேற்கொள்ளலாம் முயற்சிக்கலாம். அதற்கு பதிலாக, மற்றவர்களுடைய வெற்றியில் மகிழலாம். 

இயேசுவே நம் சமாதானம்

டெலிமேகஸ் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்த ஒரு துறவி இருந்தார். நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த அவருடைய மரணம் உலகத்தையே மாற்றியது. கிழக்கிலிருந்து ரோம் நகரத்தை பார்வையிட சென்ற துறவி, ரோம் நகர மைதானத்தில் அடிமைகளுக்கிடையில் நடைபெறும் கொடிய இரத்தம் தெரிக்கும் கிளாடியேட்டர் யுத்தத்தைத் தடுக்க எண்ணினார். அங்கே ஒருவரையொருவர் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்த அடிமை வீரர்களை தடுக்க எண்ணி, மைதானத்திற்குள் குதித்து அவர்களை தடுத்தார். கோபம்கொண்ட மக்கள் அவரை கல்லெறிந்து கொன்றார்கள். டெலிமேகஸின் இந்த செய்கையினால் தொடப்பட்ட ரோம பேரரசர் ஹோனோரியஸ், 500 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அடிமைகளின் இந்த மரண விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

பவுல் அப்போஸ்தலர் இயேசுவை “நம் சமாதானம்” என்று அழைக்கும்போது, அங்கே யூதர்களுக்கும் புறஜாதிகளுக்குமான விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் (எபேசியர் 2:14). தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, வேறுபிரிக்கப்பட்டு, பலவிதமான ஆசிர்வாதங்களை அனுபவித்தனர். உதாரணமாக, புறஜாதிகள் எருசலேம் ஆலயத்திற்குள் ஆராதிக்க அனுமதிக்கப்பட்ட பின்னரும், இதைத் தாண்டி வந்தால் மரணம் என்று வெளிப்புற அலங்கத்திலே யூதர்களால் தடுப்புச் சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. யூதர்கள் புறஜாதியினரை தீட்டாய் கருதினதால், இருதரப்பினருக்கும் எப்போதும் பகை நீடித்தது. ஆனால் இப்போது, எல்லோருக்குமான இயேசுவின் மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் யூதர்கள் புறஜாதிகள் அனைவரும் விசுவாசத்துடன் தேவனை ஆராதிக்கலாம் (வச. 18-22). தடுப்புச் சுவர் ஏதுமில்லை. எந்த இனத்தவருக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. தேவனுக்கு முன்பாக அனைவரும் சமம். 

டெலிமேகஸ் தன்னுடைய மரணத்தின் மூலமாய் அடிமை வீரர்களுக்கு சமாதானம் வரச்செய்தது போல, இயேசுவும் அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக அவரை நம்புகிற அனைவருக்கும் சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் வரச்செய்கிறார். இயேசு நம்முடைய சமாதானமாயிருந்தால் நம்முடைய வேறுபாடுகள் நமக்குள் பிரிவினை ஏற்படுத்துவதைத் தடுக்கமுடியும். அவருடைய இரத்தத்தினாலே நாம் ஒரே சரீரமாக்கப்பட்டுள்ளோம். 

உறுதியான தேவ அன்பு

அலிசா மென்டோசாவுக்கு 2020இல் அவளுடைய அப்பாவிடமிருந்து ஒரு ஆச்சரியமூட்டும் மின்னஞ்சல் வந்திருந்தது. அவர்களுடைய 25ஆம் திருமண நாளில் அவளுடைய அம்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏன் அதைக் கண்டு அவள் ஆச்சரியப்பட்டாள்? ஏனெனில் பத்து மாதங்களுக்கு முன்னரே அவளுடைய அப்பா இறந்துவிட்டார். அவர் வியாதியாயிருக்கும்போதே தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்து, அந்த மின்னஞ்சலை குறிப்பிட்ட தேதிக்கு போய்சேரும்படி ஏற்பாடு செய்திருந்தார் என்பதை அறிந்துகொண்டாள். அத்துடன், இனி வரப்போகிற தன்னுடைய மனைவியின் பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம் ஆகிய அனைத்திற்கும் பூங்கொத்து பரிசளிக்கும்படிக்கும் முன்னமே ஏற்பாடு செய்துவிட்டே இறந்திருக்கிறார். 

இந்த அன்பு, உன்னதப்பாட்டு புத்தகத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ள அன்பிற்கு ஒப்பாயிருக்கிறது. “நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது” (உன்னதப்பாட்டு 8:6). மரணத்தையும் பாதாளத்தையும் அன்போடு ஒப்பிடுவது சரியில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் அவைகளில் சிறைப்பட்டவர்கள் மீண்டு வருவதில்லை. அதேபோன்று உண்மையான நேசமும் தான் நேசித்தவர்களை என்றுமே விடுவதில்லை. 6-7 வசனங்களில் புத்தகம் உச்சநிலை அடைந்து, “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது” என்று திருமண அன்பின் மேன்மையை உருவகப்படுத்துகிறது (வச. 7). 

வேதாகமம் முழுவதிலும் கணவன்-மனைவி அன்பு தெய்வீக அன்பிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது (ஏசாயா 54:5; எபேசியர் 5:25; வெளி. 21:2). இயேசுவே மணவாளன், சபையானது அவருடைய மணவாட்டி. கிறிஸ்துவை இந்த உலகத்திற்காக மரிக்க ஒப்பக்கொடுத்ததின் மூலமாய் தேவன் தன் அன்பை நமக்கு காண்பித்துள்ளார். அதினால் இனி நாம் மரிக்க தேவையில்லை (யோவான் 3:16). நாம் திருமணமானவரோ அல்லது தனிநபரோ, ஆனால் தேவனுடைய அன்பு நாம் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவு உறுதியான அன்பு. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

மலைமுகடுகளின் பாதை

ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.  
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).  
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.  
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.  

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.