பாதையின் இருபுறத்திலும் அவர்களின் இருக்கைகள் அமைந்திருந்தது. இரண்டு மணி நேர விமான பயணம். அவர்களுக்கு என்னால் உதவமுடியவில்லை என்றாலும் அவர்களின் சில பேச்சுகள் என் காதில் விழுந்தது. அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பது தெளிவாய் தெரிகிறது. உறவினராய் கூட இருக்கலாம். இருவரில் இளையவராய் இருந்தவர் (ஏறத்தாழ 60 வயது இருக்கும்) மூத்தவருக்கு (ஏறத்தாழ 90 வயது இருக்கலாம்) தன்னுடைய கைகளை அடிக்கடி நீட்டி ஆப்பிள் துண்டுகள், வீட்டில் தயாரித்த சான்ட்விட்ச், துடைக்கும் துண்டு என மரியாதையோடு கொடுத்துக்கொண்டேயிருந்தார். அந்த விமானத்திலிருந்து இறங்கியபோது, அந்த இளைய பெண்மணியைப் பார்த்து, “நீங்கள் அக்கறையெடுத்துக்கொண்ட விதம் அழகாய் இருந்தது” என கூறினேன். அதற்கு அவர்கள், “அவர் என்னுடைய நெருங்கிய சிநேகிதி, என்னுடைய அம்மா” என்று சொன்னார்கள். 

நாம் எல்லோரும் அப்படி சொன்னால் எவ்வளவு அழகாயிருக்கும்? சில பெற்றோர்கள் நல்ல நண்பர்களாய் இருப்பர். சில பெற்றோர்கள் அப்படியிருப்பதில்லை. உறவுகள் மேன்மையாய் அமைவதற்கு சில சிக்கல்கள் உண்டு. பவுல் தீமோத்தேயுக்கு எழுதிய நிருபம் அந்த சிக்கல்களை மறுக்கவில்லை. ஆனாலும் நம்முடைய பெற்றோர்களையும், பாட்டி தாத்தாவையும், உறவினர்களையும், நம் வீட்டாரையும் பராமரித்து தேவபக்தியாய் நடந்துகொள்ளும்படிக்கு அறிவுறுத்துகிறார் (1 தீமோத்தேயு 5:4,8).

நம்முடைய குடும்பத்து நபர்கள் நமக்கு நல்லவர்களாய் தெரிந்தால் மட்டுமே அவர்கள் மீது நாம் அக்கறை எடுத்துக்கொள்வோம். அதாவது, அவர்கள் அதற்கு தகுதியானவர்களாய் இருக்கவேண்டும். ஆனால் அவர்களை பராமரிப்பதற்கு பவுல் மிக அழகான ஒர் காரணத்தை சொல்லுகிறார். ஏனென்றால், அது “தேவனுக்கு முன்பாக பிரியமாயிருக்கிறது” (வச. 4).