Archives: செப்டம்பர் 2019

விசுவாசத்தில் உறுதியாயிருத்தல்

டெஸ்மாண்ட் டாஸ் என்பவர் இரண்டாம் உலகப்போருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் யுத்தம் செய்பவனாக அல்ல. அவனுடைய மத நம்பிக்கை அவனை துப்பாக்கியேந்தி செல்வதை அனுமதியாததால், டாஸ், போர் வீரர்களுக்கு மருத்துவ சேவை செய்தான். ஒரு யுத்தத்தின் போது, எதிரிகளின் மும்முரமான துப்பாக்கி குண்டுகளையும்  தாண்டி, எழுபத்தைந்து காயமுற்ற வீரர்களை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றான். அவனுடைய கதை ஒரு செய்தி படமாக வெளியிடப்பட்டது. ஹேக்சா ரிட்ஜ் என்ற திரைப்படமாகவும் வெளியானது.

கிறிஸ்தவ விசுவாச வீரர்களின் பட்டியலில் இத்தகைய தைரியமான நபர்களானள் ஆபிரகாம், மோசே, தாவீது, எலியா, பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறுகின்றன. ஆனாலும் பாராட்டப்படாத விசுவாச வீரர்களானள் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும், நிக்கொதேமுவும், யூத மதத் தலைவர்களால் தங்களுக்கு ஆபத்து நேரிடும் அபாயம் இருந்த போதிலும், இவர்கள் இயேசுவின் சரீரத்தை கேட்டு வாங்கி, யூதர்களின் முறைமையின் படியே அடக்கம் பண்ணினார்கள் (யோவா. 19:40-42). யூதருக்கு பயந்து இயேசுவின் அந்தரங்க சீடனாக இருந்த யோசேப்புக்கும், இரவு நேரத்தில் மட்டுமே இயேசுவைச் சந்தித்த நிக்கொதேமுவுக்கும், இது ஒரு தைரியமான செயல். (வச .38-39). இதில் இன்னும் நம்மைக் கவர்வது என்னவெனில், இயேசுகிறிஸ்து வெற்றியாக கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவதற்கு முன்னரே இவர்கள் தங்கள் விசுவாசத்தை உறுதியாய் வெளிப்படுத்தினார்கள். ஏன் ?

இயேசுவின் மரணம் நேர்ந்த விதமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளுமே (மத். 27:50-54) பயந்திருந்த இந்த சீடர்களின் விசுவாசத்தை முற்றிலும் உறுதிபடுத்தின. அவர்கள் மனிதனுக்கு பயப்படுவதைக் காட்டிலும், தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்க கற்றுக் கொண்டனர். நாமும் இவர்களைப் போன்று, தேவன் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு, நமக்கு ஆபத்து நேரிடுவதாயினும் ,தைரியமாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவோம்.

பாதுகாப்பானது எனக்கருதப்படும் தவறான இடங்கள்

எங்களுடைய நாய் ரூபெர்ட் சிறிய குட்டியாக இருந்த போது, வெளியிடங்களுக்குச் செல்வதற்கு மிகவும் பயப்படும். நான் அதனை வலுக் கட்டாயமாக அருகிலுள்ள பூங்காவிற்கு இழுத்துச் செல்வேன். அப்படிச் சென்றிருந்த போது ஒரு நாள், நான் அதனைக் கட்டி வைத்திருந்த கயிற்றை விட்டு விட்டேன். அது வேகமாக ஓடி, தான் பாதுகாப்பான இடமெனக்கருதும் எங்கள் வீட்டை அடைந்தது .

இந்த அனுபவம், எனக்கு ஒரு மனிதனை நினைவுக்கு கொண்டு வருகின்றது. நாங்கள் அமர்ந்திருந்த விமானம், ஓடுதளத்தில் ஓட ஆரம்பித்ததும், அருகிலிருந்த       மனிதன் என்னிடம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தான். “நான் இந்த       விமான பயணத்தின் போது மது அருந்தி விடுவேன்” என்றான்.” “குடிக்க விரும்பவில்லை என்பது போல தோன்றுகின்றதே” என்றேன். “ஆம்” என்றான். “ஆனால் நான் மறுபடியும் குடிக்க ஆரம்பித்து விடுகிறேன்” என்றான். அவன் குடித்து விட்டான். அவன் விமானத்திலிருந்து இறங்கிய போது, அவனுடைய மனைவி அவனை அணைத்துக் கொண்டாள். அவன் அருந்தியிருந்த மதுவின் நாற்றத்தை முகர்ந்ததும் அவனைத் தள்ளி விட்டாள். இதனைக் காண்பதற்கு மிகவும் வேதனையாக இருந்தது. மது அருந்தினால் தான் ,பாதுகாப்பாக இருப்பதாக அவன் எண்ணுகின்றான். ஆனால் அப்படியல்ல.

இயேசு தன்னுடைய பணிக்காலத்தை துவங்கியதும், “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்றார் (மாற். 1:15) மனந்திரும்புதல் என்பது எதிர் திசைக்குத் திரும்புதல். “தேவனுடைய ராஜ்யம்” என்பது நம்முடைய வாழ்க்கையை அவருடைய அன்பின் கட்டளைகளால் ஆளுகை செய்வதாகும். நம்மைச் சிக்க வைத்துவிடும் ஓரிடரத்திற்கு ஓடிச் செல்வதை விட ,அல்லது பயத்தாலும், அடிமைத்தனத்தாலும் ஆளுகை செய்யப் படுவதையும் விட, தேவன் நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுப்போமானால், அவர் அன்போடு நம்மை ஒரு புதிய வாழ்விற்குள்ளும், விடுதலைக் குள்ளும் நடத்திச் செல்வார்.

இன்றைக்கு, ரூபெர்ட் பூங்காவினுள் குரைத்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு ஓடுகின்றது. நான் விமானத்தில் சந்தித்த அந்த  மனிதனும் தான் பாதுகாப்பானது என நம்பிக் கொண்டிருக்கும் மாய இடத்தை விட்டு விட்டு இதே மகிழ்ச்சியையும், விடுதலையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஜெபிக்கிறேன்.

தேவனுடைய பார்வையில் தகுதியைப் பெறுதல்

நான் கல்லூரி படிப்பை முடித்த போது, ஒரு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் என்னை அங்கு பணிபுரியும் படி தேர்ந்தெடுத்தது. அப்பொழுது எனக்கு கம்ப்யூட்டரில் புரோகிராம் எழுதுவதற்கு எதுவும் தெரியாது. தொழில்துறை அனுபவமும் இல்லை. அங்கு முதல் நிலை வேலைக்கான நேர்முகத் தேர்வின் போதுதான், அந்தக் கம்பெனி எந்தவொரு முன் அனுபவத்தையும் எதிர்பார்க்கவில்லையெனத் தெரிந்து கொண்டேன். ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்கும் தனித்திறன், சரியான தீர்மானம் எடுத்தல், குழுவினரோடு இணைந்து பணி புரிதல் போன்ற தனி நபர் பண்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இத்தகைய பண்பு கொண்ட நபர்களுக்கு தேவையான திறமைகளைச் சொல்லிக் கொடுத்து விடலாமென அக்கம்பெனி நம்பியது.

நோவாவிற்கு ஒரு கப்பலைக் கட்டக் கூடிய எந்த ஒரு முன் அனுபவமும் இருந்ததில்லை.  அவன் ஒரு படகு செய்யும் தொழிலாளியுமல்ல, தச்சு வேலை செய்பவனுமல்ல. மாறாக, நோவா ஒரு விவசாயி. தன்னுடைய மேலாடையில் அழுக்குப் படும்படி வேலை செய்பவன். கலப்பையை தன் கைகளால் பிடிப்பவன். அந்நாட்களில் உலகில் நடந்து வந்த கொடுமைகளை எதிர்க்க என்ன செய்ய வேண்டுமென தேவன் தீர்மானித்தார். நோவா இந்த தீங்குகளுக்கெல்லாம் தன்னை விலக்கிக் காத்துக் கொண்டான். ஏனெனில், “அவன் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்” (ஆதி. 6:9). நோவாவின் இருதயம் போதனைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததை தேவன் கண்டார். தன்னைச் சுற்றிலும் நடக்கும் ஊழல்களை எதிர்த்து நிற்கும் பெலத்தோடு நீதியாய் நடந்ததை தேவன் கண்டார்.

தேவனுக்குப் பணி செய்ய வாய்ப்புகள் நமக்குக் கொடுக்கப் படும் போது, நான் இந்தப் பணி செய்ய தகுதியானவனல்ல என நாம் நினைக்கத் தேவையில்லை. தேவன் நம்முடைய திறன்களின் அடிப்படையில் நம்மைத் தேர்வு செய்யவில்லை. அவர் நம்முடைய குண நலன்களையே கனப் படுத்துகின்றார். நாம் அவர் மீது வைத்துள்ள அன்பையும், அவரை நம்புவதற்குத் தயாராக இருக்கின்றோமா என்பதையுமே பார்க்கின்றார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இத்தகைய குணங்களை உருவாக்கி விட்ட பின்பு நாம் அவருடைய சித்தத்தை இப்புவியில் நிறைவேற்றுவதற்கு சிறிதும், பெரிதுமான வகைகளில் நம்மை பயன் படுத்துவார்.

என்னைச் சுற்றி பாதுகாக்கும் கேடகம்

என்னுடைய ஆலயத்தினர் மிகவும் வேதனையான இழப்பைச் சந்தித்தனர். எங்களுடைய ஆலயத்தின், திறமை வாய்ந்த போதகரான பால் என்பவர் அவரது முப்பத்தொன்றாம் வயதில் ஒரு படகு விபத்தில் மரித்துப் போனார். பாலும் அவருடைய மனைவி டுரோண்டாவும் துன்பங்களுக்குத் தூரமானவர்களல்ல. அவர்கள் தங்களுடைய அநேகக் குழந்தைகளை, அவை பிறக்குமுன்னரே இழந்திருக்கின்றனர்.  இப்பொழுது அந்த சிறிய கல்லறைகளுக்கருகில் மற்றுமொரு கல்லறை. இந்தக் குடும்பம் அநுபவிக்கின்ற உயிரிழப்பு அவர்களை நேசித்த அநேகருக்கு ஒரு பேரிடியாக அமைந்தது. 

குடும்பத்தின் துன்பங்களையும், தனிப்பட்ட துயரங்களையும் தாவீது அநுபவியாதவனல்ல. தன்னுடைய மகன் அப்சலோமின் எதிர்ப்புகளால் தாவீது நிலை குலைந்து போனான். இதனை சங்கீதம் 3ல் காண்கின்றோம். தானிருக்கும் இடத்திலேயே தங்கியிருந்து சண்டையிடுவதற்குப் பதிலாக தன்னுடைய வீட்டையும், ராஜ்யபாரத்தையும் விட்டு விட்டு (2 சாமு. 15:13-23) ஓடிப் போகின்றான். அநேகர், அவனை தேவனால் கைவிடப்பட்டவன் (சங். 3:2) என்று கூறினாலும் தேவன் அவனைப் பாதுகாப்பவராக இருப்பதை அறிந்திருந்தான். (வச. 3). அவன் தேவனை நோக்கிக் கூப்பிடுகின்றான். (வச. 4) அதேபோன்று தான், டுரோண்டாவும் கூப்பிடுகின்றாள். தன்னுடைய துயரங்களின் மத்தியில், நூற்றுக் கணக்கானோர் அவளுடைய கணவனின் நினைவாகக் கூடியிருந்த போது அவள் தன்னுடைய மென்மையான, அமைதியான குரலில் தான் தேவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்திப் பாடினாள்.

மருத்துவர்களின் கணிப்பு நம்மை ஊக்கமிழக்கச் செய்வதாயிருந்தாலும், நம்முடைய பொருளாதார நிலையின் அழுத்தம் குறையாத போதும், உறவுகளைச் சரி செய்ய எடுக்கும்  முயற்சி தோல்வியுற்றாலும் நமக்கு அருமையானவர்களைச் சாவு கொண்டு சென்றாலும், “ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்” (வச. 3) என்று கூறும்படி நாமும் பெலப் படுவோமாக.

வளர வளர தெரிந்து கொள்ளல்

“நீ வேறு இடத்திற்கு பரிமாற்று மாணவனாகப் போகிறாய்”. நான் பதினேழு வயதாயிருந்த போது, ஜெர்மனி தேசத்திற்குச் சென்று படிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன் எனக் கேட்ட போது புல்லரித்துப் போனேன்.  நான் அங்கு செல்வதற்கு இன்னமும் மூன்றே மாதங்களிருந்தன. நான் இன்னமும் ஜெர்மானிய மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை. அந்நாளிலிருந்து நான் ஜெர்மானிய மொழியைக் கற்க ஆரம்பித்தேன். அதிக மணி நேரங்களைப் படிக்க செலவழித்தேன். மனப் பாடம் செய்தேன், சில வார்த்தைகளை என் உள்ளங்கைகளில் எழுதி வைத்து மனனம் செய்தேன்.

பல மாதங்களுக்குப் பின், நான் ஜெர்மனி தேசத்தில் என்னுடைய வகுப்பறையில் அமர்ந்திருந்தேன். நான் மிகவும் சோர்வுற்றிருந்தேன், ஏனெனில் நான் இன்னமும் அம்மொழியை நன்கு தெரிந்து கொள்ளவில்லை. அந்நாளில் ஓர் ஆசிரியர், எனக்கு ஓர் ஆலோசனையைக் கொடுத்தார். “ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதென்பது மணல் குன்றின் மேலேறுவதற்குச் சமம். சில வேளைகளில் நீ கொஞ்சமும் ஏறாதது போலத் தோன்றும். ஆனால் நீ முயற்சி செய்து கொண்டேயிரு. உன்னால் உச்சியை அடைய முடியும்” என்றார்.

நான் இந்த ஆலோசனையின் உட்கருத்தை சிந்தித்துப் பார்ப்பேன். இயேசுவின் சீடனாக வளர்வதென்பது என்ன என்று சிந்திக்கும் போது, அப்போஸ்தலனாகிய பவுல், “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாக இருக்கக் கற்றுக் கொண்டேன்” என்கின்றார். பவுலுக்கும் இந்தச் சமாதானம் ஒரே நாளில் கிடைத்து விடவில்லை. அவர் இந்த  நிலைக்கு வளர்ந்து வந்திருக்கின்றார். அவர் தன்னுடைய வளர்ச்சியின் இரகசியத்தைப் பகிர்ந்து கொள்கின்றார். “என்னைப் பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினாலே  எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.” என்கின்றார் (பிலி. 4:11-13).

வாழ்வில் அநேக சவால்களுள்ளன. “நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33) என்பவரிடம் நாம் திரும்பும் போது, அவர் நம்மையும் வெற்றிப் பாதையில் வழி நடத்திச் செல்ல உண்மையுள்ளவராயிருக்கிறாரெனக் கண்டு கொள்வோம். நாம் அவரோடு கூட நடப்போமாகில் அவர் நமக்குச் சமாதானத்தைத் தந்து அவர் மீது நம்பிக்கையோடிருக்கச் செய்கின்றார். நம் பயணத்தைத் தொடர தேவையான பெலனையும் தருகின்றார்.