Archives: ஆகஸ்ட் 2019

இறுக்கமான வட்டங்கள்

என்னுடைய வகுப்புத்தோழன் ஒருவன் எங்கள் குடும்பத்திற்கு, ஒரு சடைநிறைந்த வயதான நாயைப் பரிசளித்தார். அது குட்டிகள் போடமுடியாத அளவிற்கு வயதானதாக இருந்தது. ஆனால், வெகுவிரைவில் நாங்கள் கண்டுபிடித்த உண்மை என்னவெனில், அந்த நாயானது, ஒரு கூண்டுக்குள்ளேயே தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தது என்பதேயாகும். அது தன்னுடைய இறுக்கமான வட்டங்களுக்குள்ளே மட்டும் தான் நடக்கும். அது நீளமான பாதையில் ஓடமுடியாது. ஒரு பெரிய விளையாட்டு ஸ்தலத்தில்கூட அது தன்னை வேலியடைத்ததாகவே நினைத்துக்கொள்ளும்.

ஆதிக்கிறிஸ்தவர்களில் பல யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமானங்களினாலே வேலியடிக்கப்பட்டிருந்தனர். நியாயப்பிரமானமானது நல்லதாக இருந்தாலும், பாவத்திலிருந்து அவர்களை உணர்வடையச்செய்து இயேசுவுக்கு நேராகத் திருப்புவதாக இருந்தாலும் (கலா. 3:19-25), இப்பொழுது அவர்கள் கிறிஸ்துவின் சுயாதீனத்தினாலும், கர்த்தருடைய கிருபையினாலும் உண்டான புதிய விசுவாசத்தின்படியே வாழவேண்டிய அவசியத்தில் இருந்தார்கள். அவர்கள் தயங்கினார்கள். இந்த எல்லா நேரங்களிலும் அவர்கள் உண்மையாகவே விடுதலையாக்கப்பட்டிருந்தனரா?

நமக்கும் இவ்விதமான பிரச்சனை இருக்கலாம். ஒருவேளை நாம் கடுமையான சட்டத்திட்டங்களுள்ள திருச்சபையில் வளர்ந்து இருக்கலாம். அல்லது நாம் கடுமையான ஒழுக்கமுள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டு இருக்கலாம். எப்படியிருந்தாலும், இப்பொழுது நாம் கிறிஸ்துவினால் நமக்குக் கொடுக்கப்படுகிற சுதந்திரத்தை தழுவிக்கொள்ளவேண்டிய நேரமாகும் (கலா. 5:1). இயேசுவானர் நம்மை விடுதலையாக்கி, அவருக்கு நாம் அன்பினாலே கீழ்ப்படிய வேண்டுமென விரும்புகிறார் (யோவா. 14:21). மற்றவர்களுக்கு அன்பினாலே சேவை செய்ய வேண்டுமென விரும்புகிறார் (கலா. 5:13). மிகப்பெரிய சந்தோஷமும், அன்பும், 'குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள்" (யோவா. 8:36) என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

மாபெரும் காரியங்கள்!

நவம்பர் 9, 1989ஆம் ஆண்டு உலகமானது பெர்லின் சுவர் இடிந்து போனது என்ற செய்தியைக்கேட்டு ஸ்தம்பித்துப்போனது. பெர்லினையும், ஜெர்மனியையும் இரண்டாகப்பிரித்த அந்த சுவரானது உடைந்துபோய் 28 ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்த அந்த பட்டணமானது மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மகிழ்ச்சியின் மையம் ஜெர்மனியாக இருந்தாலும், அதைப் பார்க்கும் உலகமும் அந்த சந்தோஷத்தில் பங்கேற்றது. மாபெரும் காரியம் ஒன்று அங்கே நடந்தது.

கி. மு 538ல் இஸ்ரவேல் 70 வருட சிறையிருப்பிலிருந்து தன் தாயகத்திற்குத் திரும்பி வந்தபோது, அது நினைவிற்கொள்ள வேண்டிய சம்பவமாக மாறியது. இஸ்ரவேலின் சரித்திரத்தில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷத்தை ஆரம்பமாகக் கொண்டு சங்கீதம் 126 தொடங்கியது. இந்த அனுபவமானது, நகைப்பதினாலும் மகிழ்ச்சியோடு பாடுவதினாலும் வெளிப்படுத்தப்பட்டு, தேவன் தம் பிள்ளைகளின் மத்தியில் பெரிய காரியத்தைச் செய்தார் என்கின்ற ஒரு சர்வ தேச அங்கீகரிப்பைக் காட்டுகிறது (வச. 2). அந்த இரக்கத்தைப் பெற்றவர்கள், அதற்கு எவ்வாறு பதிலளித்தார்கள்? கர்த்தரிடத்திலிருந்து வந்த மாபெரும் காரியமானது, மாபெரும் சந்தோஷத்தைக் கொண்டு வந்தது (வச. 3). கடந்த காலங்களில் அவருடைய கிரியையானது, நிகழ்காலம் மற்றும் எதிர்கால நம்பிக்கைக்குரிய ஜெபத்தினை அடிப்படையாகக் கொண்டு இருந்தது (வச. 4-6).

நீங்களும், நானும் நம்முடைய அனுபவங்களில் தேவனால் உண்டான உதாரணங்களை மிக அதிகமான தூரத்திற்கு சென்று காணவேண்டிய அவசியம் இல்லை, விசேஷமாக, தேவனை அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக விசுவாசிக்கும் பொழுது காண்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த பாடலாசிரியரான ஃபேன்னி கிரோஸ்பி இந்த சத்தியத்தினை உணர்ந்தவர்களாய், 'சிறந்த காரியத்தை அவர் நமக்குப் போதித்தார், சிறந்த காரியத்தை அவர் செய்தார், குமாரனாகிய இயேசுவின் மூலமாய் நாம் மிகுந்த சந்தோஷமடைகிறோம்" என எழுதினார். ஆம், சகல கனம் மகிமை நம் ஆண்டவருக்கே! அவர் நம்மிடம் பெரிய காரியங்களைச் செய்தார்!

உங்கள் குரலை உபயோகியுங்கள்

உலகப் பிரசித்திப்பெற்ற ஒரு பியானோ வித்துவானைச் சந்திக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். நான் வயலின், பியானோ ஆகியவைகளை இசைக்கும் ஒரு சூழ்நிலையில் வளர்ந்ததாலும், திருச்சபைகளில், மற்றும் பல நிகழ்வுகளில் தனிப்பாடல்களைப் பாடும் வரம் பெற்றிருந்தபடியாலும் இவ்வாய்ப்பானது, எனக்கு அதிக உற்சாகமளிக்கக் கூடியதாக இருந்தது.

நான் அந்த பியானோ வித்துவான் இருக்குமிடத்தை அடைந்தபோது, அவர் கொஞ்சம் தான் ஆங்கிலத்தில் உரையாடுவார் என்பதைக் கண்டு கொண்டேன். அவர், நான் இதுவரை தொட்டேபார்க்காத ஸெல்கோ ஒரு இசைக்கருவியை என்னிடத்தில் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் என்னை வாசிக்கச் செய்து தானும் என்னோடு இணைந்து வாசிப்பதாக கூறினார். நான் சில இசைகளை வாசிக்க முயற்சி செய்தேன். என்னுடைய வயலின் பயிற்சியினை பயன்படுத்தி முயற்சித்தேன். ஆனால் இறுதியில் நான் தோற்றுப்போனேன்.

திடீரென நான் விழித்தபோது, இவைகளெல்லாம் ஒரு கனவாகத் தெரிந்தது. இந்த இசைப்பின்னணி என் கனவில் வந்தது உண்மையாகவே நடந்தது போலிருந்தாலும், என் மனமானது ஒரு வாக்கியத்தை மட்டும் திரும்பத்திரும்ப யோசித்துக்கொண்டே இருந்தது. 'உனக்கு பாடத்தெரியும் என்று நீ ஏன் அவரிடம் சொல்லவில்லை?".

ஆவிக்குரிய வரங்களையும், இயற்கையாக நம்மிடம் உள்ள தாலந்துகளையும் தேவன் நம்முடைய வாழ்வில் அதிகமாக்கி அதை மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும்படி செய்கிறார் (1 கொரி. 12:7). நம்மிடத்திலுள்ள தனித்தன்மை வாய்ந்த ஆவிக்குரிய வரங்களை, தேவனுடைய வார்த்தையினாலும், மற்றவர்களுடைய ஞானமான ஆலோசனையின் வாயிலாகவும் நாம் அறிந்து கொள்ளலாம். அவருடைய தீர்மானத்தின்படி (வச. 11) பரிசுத்த ஆவியானவர் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து அதை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என சிந்தித்து, பவுல் அப்போஸ்தலன் சொன்னதை ஞாபகத்தில் வைத்து செயல்படவேண்டும்.

மற்ற விசுவாசிகளுக்கு இயேசுவின் மூலம் பயன் உண்டாகவும் தேவனுடைய நாம மகிமைக்காகவும் நமது குரல் வளத்தினை பயன்படுத்தவேண்டும்.

வாழு, ஜெபி, நேசி

இயேசுவின்மேல் தன் பெற்றோர் கொண்ட ஆழமான விசுவாச வாழ்க்கையின் பலனாக, விளையாட்டு வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் சிறந்த ஒரு விசுவாச வீரராக வளர்ந்தார். 1936ல் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆப்பிரிக்க அமெரிக்க ஓவன்ஸ் அமெரிக்க அணியிலிருந்து விளையாடி தங்கள் இனத்திற்கு எதிரிகளான நாசிகளுக்கும், அவர்களின் தலைவனான ஹிட்லருக்கும் முன்பாக நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றார். அவர் தன்னோடு விளையாடிய விளையாட்டு வீரரான லஸ்லாங்க் என்ற ஜெர்மானியரை நண்பராக்கிக்கொண்டார். நாசிக்களின் பிரச்சாரங்களில் மூழ்கிப்போயிருந்த லஸ்லாங்க், ஓவனின் விசுவாச வாழ்க்கையினாலே பிற்காலத்தில் தொடப்பட்டார். இந்த லஸ்லாங்க் பிற்காலத்தில் ஓவன்ஸிற்கு இவ்வாறு எழுதினார், பெர்லினில் நான் முதன்முதலில் உங்களை சந்தித்து பேசும்பொழுது உங்கள் முழங்கால்கள் தரையில் முடங்கியிருந்தன. நீங்கள் ஜெபத்தில் இருந்தீர்களென நான் அறிந்தேன். நானும் அந்த தேவனை விசுவாசிக்க விரும்புகிறேன்.

ஓவன்ஸ், பவுலின், 'தீமையை வெறுக்கின்ற" அனுபவத்தை எவ்வாறு வெளிப்படுத்திக்காட்டுவது என்பதை நன்றாக அறிந்திருந்தார். 'அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்" என்கின்ற பவுலின் அறிவுரைகளையும் (ரோம. 12:9-10) அறிந்திருந்தார். அவர் தன்னைச் சுற்றியுள்ள தீமைகளுக்கு தீமை செய்ய வாய்ப்பிருந்தும், ஓவன்ஸ் தன்னுடைய விசுவாசத்தையும் அன்பையும் காட்டுவதை தெரிந்துகொண்டு, தன் நண்பனிடத்தில் அதைக்காட்டினபடியால், அவர் (லஸ்) பிற்காலத்தில் ஒரு பெரிய விசுவாசியாக மாறினார்.

தேவனுடைய பிள்ளைகள் ஜெபத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கும்போது (வச. 12) அவர் நம்மை 'மற்றவர்களோடு ஐக்கியமாய்" வாழ வல்லமையளிக்கிறார் (வச. 16). நாம் ஜெபத்தினை சார்ந்திருக்கும்பொழுது, நாம் நம்மை விசுவாசத்திற்கும், தேவசாயலில் உருவாக்கப்பட்ட எல்லாரையும் நேசிப்பதற்கும் ஒப்புக்கொடுத்து வாழ முடியும். நாம் கர்த்தரிடத்தில் கதறி அழும்போது, எல்லாத்தடைகளையும் உடைத்து, நம்முடைய அயலகத்தாரிடமும் சமாதான பாலத்தை அமைத்து அவர்களை நேசிக்க தேவன் நம்மை பெலப்படுத்துவார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).