Archives: ஆகஸ்ட் 2019

இறுக்கமான வட்டங்கள்

என்னுடைய வகுப்புத்தோழன் ஒருவன் எங்கள் குடும்பத்திற்கு, ஒரு சடைநிறைந்த வயதான நாயைப் பரிசளித்தார். அது குட்டிகள் போடமுடியாத அளவிற்கு வயதானதாக இருந்தது. ஆனால், வெகுவிரைவில் நாங்கள் கண்டுபிடித்த உண்மை என்னவெனில், அந்த நாயானது, ஒரு கூண்டுக்குள்ளேயே தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தது என்பதேயாகும். அது தன்னுடைய இறுக்கமான வட்டங்களுக்குள்ளே மட்டும் தான் நடக்கும். அது நீளமான பாதையில் ஓடமுடியாது. ஒரு பெரிய விளையாட்டு ஸ்தலத்தில்கூட அது தன்னை வேலியடைத்ததாகவே நினைத்துக்கொள்ளும்.

ஆதிக்கிறிஸ்தவர்களில் பல யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமானங்களினாலே வேலியடிக்கப்பட்டிருந்தனர். நியாயப்பிரமானமானது நல்லதாக இருந்தாலும், பாவத்திலிருந்து அவர்களை உணர்வடையச்செய்து இயேசுவுக்கு நேராகத் திருப்புவதாக இருந்தாலும் (கலா. 3:19-25), இப்பொழுது அவர்கள் கிறிஸ்துவின் சுயாதீனத்தினாலும், கர்த்தருடைய கிருபையினாலும் உண்டான புதிய விசுவாசத்தின்படியே வாழவேண்டிய அவசியத்தில் இருந்தார்கள். அவர்கள் தயங்கினார்கள். இந்த எல்லா நேரங்களிலும் அவர்கள் உண்மையாகவே விடுதலையாக்கப்பட்டிருந்தனரா?

நமக்கும் இவ்விதமான பிரச்சனை இருக்கலாம். ஒருவேளை நாம் கடுமையான சட்டத்திட்டங்களுள்ள திருச்சபையில் வளர்ந்து இருக்கலாம். அல்லது நாம் கடுமையான ஒழுக்கமுள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டு இருக்கலாம். எப்படியிருந்தாலும், இப்பொழுது நாம் கிறிஸ்துவினால் நமக்குக் கொடுக்கப்படுகிற சுதந்திரத்தை தழுவிக்கொள்ளவேண்டிய நேரமாகும் (கலா. 5:1). இயேசுவானர் நம்மை விடுதலையாக்கி, அவருக்கு நாம் அன்பினாலே கீழ்ப்படிய வேண்டுமென விரும்புகிறார் (யோவா. 14:21). மற்றவர்களுக்கு அன்பினாலே சேவை செய்ய வேண்டுமென விரும்புகிறார் (கலா. 5:13). மிகப்பெரிய சந்தோஷமும், அன்பும், 'குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள்" (யோவா. 8:36) என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

மாபெரும் காரியங்கள்!

நவம்பர் 9, 1989ஆம் ஆண்டு உலகமானது பெர்லின் சுவர் இடிந்து போனது என்ற செய்தியைக்கேட்டு ஸ்தம்பித்துப்போனது. பெர்லினையும், ஜெர்மனியையும் இரண்டாகப்பிரித்த அந்த சுவரானது உடைந்துபோய் 28 ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்த அந்த பட்டணமானது மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மகிழ்ச்சியின் மையம் ஜெர்மனியாக இருந்தாலும், அதைப் பார்க்கும் உலகமும் அந்த சந்தோஷத்தில் பங்கேற்றது. மாபெரும் காரியம் ஒன்று அங்கே நடந்தது.

கி. மு 538ல் இஸ்ரவேல் 70 வருட சிறையிருப்பிலிருந்து தன் தாயகத்திற்குத் திரும்பி வந்தபோது, அது நினைவிற்கொள்ள வேண்டிய சம்பவமாக மாறியது. இஸ்ரவேலின் சரித்திரத்தில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷத்தை ஆரம்பமாகக் கொண்டு சங்கீதம் 126 தொடங்கியது. இந்த அனுபவமானது, நகைப்பதினாலும் மகிழ்ச்சியோடு பாடுவதினாலும் வெளிப்படுத்தப்பட்டு, தேவன் தம் பிள்ளைகளின் மத்தியில் பெரிய காரியத்தைச் செய்தார் என்கின்ற ஒரு சர்வ தேச அங்கீகரிப்பைக் காட்டுகிறது (வச. 2). அந்த இரக்கத்தைப் பெற்றவர்கள், அதற்கு எவ்வாறு பதிலளித்தார்கள்? கர்த்தரிடத்திலிருந்து வந்த மாபெரும் காரியமானது, மாபெரும் சந்தோஷத்தைக் கொண்டு வந்தது (வச. 3). கடந்த காலங்களில் அவருடைய கிரியையானது, நிகழ்காலம் மற்றும் எதிர்கால நம்பிக்கைக்குரிய ஜெபத்தினை அடிப்படையாகக் கொண்டு இருந்தது (வச. 4-6).

நீங்களும், நானும் நம்முடைய அனுபவங்களில் தேவனால் உண்டான உதாரணங்களை மிக அதிகமான தூரத்திற்கு சென்று காணவேண்டிய அவசியம் இல்லை, விசேஷமாக, தேவனை அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக விசுவாசிக்கும் பொழுது காண்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த பாடலாசிரியரான ஃபேன்னி கிரோஸ்பி இந்த சத்தியத்தினை உணர்ந்தவர்களாய், 'சிறந்த காரியத்தை அவர் நமக்குப் போதித்தார், சிறந்த காரியத்தை அவர் செய்தார், குமாரனாகிய இயேசுவின் மூலமாய் நாம் மிகுந்த சந்தோஷமடைகிறோம்" என எழுதினார். ஆம், சகல கனம் மகிமை நம் ஆண்டவருக்கே! அவர் நம்மிடம் பெரிய காரியங்களைச் செய்தார்!

உங்கள் குரலை உபயோகியுங்கள்

உலகப் பிரசித்திப்பெற்ற ஒரு பியானோ வித்துவானைச் சந்திக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். நான் வயலின், பியானோ ஆகியவைகளை இசைக்கும் ஒரு சூழ்நிலையில் வளர்ந்ததாலும், திருச்சபைகளில், மற்றும் பல நிகழ்வுகளில் தனிப்பாடல்களைப் பாடும் வரம் பெற்றிருந்தபடியாலும் இவ்வாய்ப்பானது, எனக்கு அதிக உற்சாகமளிக்கக் கூடியதாக இருந்தது.

நான் அந்த பியானோ வித்துவான் இருக்குமிடத்தை அடைந்தபோது, அவர் கொஞ்சம் தான் ஆங்கிலத்தில் உரையாடுவார் என்பதைக் கண்டு கொண்டேன். அவர், நான் இதுவரை தொட்டேபார்க்காத ஸெல்கோ ஒரு இசைக்கருவியை என்னிடத்தில் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் என்னை வாசிக்கச் செய்து தானும் என்னோடு இணைந்து வாசிப்பதாக கூறினார். நான் சில இசைகளை வாசிக்க முயற்சி செய்தேன். என்னுடைய வயலின் பயிற்சியினை பயன்படுத்தி முயற்சித்தேன். ஆனால் இறுதியில் நான் தோற்றுப்போனேன்.

திடீரென நான் விழித்தபோது, இவைகளெல்லாம் ஒரு கனவாகத் தெரிந்தது. இந்த இசைப்பின்னணி என் கனவில் வந்தது உண்மையாகவே நடந்தது போலிருந்தாலும், என் மனமானது ஒரு வாக்கியத்தை மட்டும் திரும்பத்திரும்ப யோசித்துக்கொண்டே இருந்தது. 'உனக்கு பாடத்தெரியும் என்று நீ ஏன் அவரிடம் சொல்லவில்லை?".

ஆவிக்குரிய வரங்களையும், இயற்கையாக நம்மிடம் உள்ள தாலந்துகளையும் தேவன் நம்முடைய வாழ்வில் அதிகமாக்கி அதை மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும்படி செய்கிறார் (1 கொரி. 12:7). நம்மிடத்திலுள்ள தனித்தன்மை வாய்ந்த ஆவிக்குரிய வரங்களை, தேவனுடைய வார்த்தையினாலும், மற்றவர்களுடைய ஞானமான ஆலோசனையின் வாயிலாகவும் நாம் அறிந்து கொள்ளலாம். அவருடைய தீர்மானத்தின்படி (வச. 11) பரிசுத்த ஆவியானவர் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து அதை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என சிந்தித்து, பவுல் அப்போஸ்தலன் சொன்னதை ஞாபகத்தில் வைத்து செயல்படவேண்டும்.

மற்ற விசுவாசிகளுக்கு இயேசுவின் மூலம் பயன் உண்டாகவும் தேவனுடைய நாம மகிமைக்காகவும் நமது குரல் வளத்தினை பயன்படுத்தவேண்டும்.

வாழு, ஜெபி, நேசி

இயேசுவின்மேல் தன் பெற்றோர் கொண்ட ஆழமான விசுவாச வாழ்க்கையின் பலனாக, விளையாட்டு வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் சிறந்த ஒரு விசுவாச வீரராக வளர்ந்தார். 1936ல் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆப்பிரிக்க அமெரிக்க ஓவன்ஸ் அமெரிக்க அணியிலிருந்து விளையாடி தங்கள் இனத்திற்கு எதிரிகளான நாசிகளுக்கும், அவர்களின் தலைவனான ஹிட்லருக்கும் முன்பாக நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றார். அவர் தன்னோடு விளையாடிய விளையாட்டு வீரரான லஸ்லாங்க் என்ற ஜெர்மானியரை நண்பராக்கிக்கொண்டார். நாசிக்களின் பிரச்சாரங்களில் மூழ்கிப்போயிருந்த லஸ்லாங்க், ஓவனின் விசுவாச வாழ்க்கையினாலே பிற்காலத்தில் தொடப்பட்டார். இந்த லஸ்லாங்க் பிற்காலத்தில் ஓவன்ஸிற்கு இவ்வாறு எழுதினார், பெர்லினில் நான் முதன்முதலில் உங்களை சந்தித்து பேசும்பொழுது உங்கள் முழங்கால்கள் தரையில் முடங்கியிருந்தன. நீங்கள் ஜெபத்தில் இருந்தீர்களென நான் அறிந்தேன். நானும் அந்த தேவனை விசுவாசிக்க விரும்புகிறேன்.

ஓவன்ஸ், பவுலின், 'தீமையை வெறுக்கின்ற" அனுபவத்தை எவ்வாறு வெளிப்படுத்திக்காட்டுவது என்பதை நன்றாக அறிந்திருந்தார். 'அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்" என்கின்ற பவுலின் அறிவுரைகளையும் (ரோம. 12:9-10) அறிந்திருந்தார். அவர் தன்னைச் சுற்றியுள்ள தீமைகளுக்கு தீமை செய்ய வாய்ப்பிருந்தும், ஓவன்ஸ் தன்னுடைய விசுவாசத்தையும் அன்பையும் காட்டுவதை தெரிந்துகொண்டு, தன் நண்பனிடத்தில் அதைக்காட்டினபடியால், அவர் (லஸ்) பிற்காலத்தில் ஒரு பெரிய விசுவாசியாக மாறினார்.

தேவனுடைய பிள்ளைகள் ஜெபத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கும்போது (வச. 12) அவர் நம்மை 'மற்றவர்களோடு ஐக்கியமாய்" வாழ வல்லமையளிக்கிறார் (வச. 16). நாம் ஜெபத்தினை சார்ந்திருக்கும்பொழுது, நாம் நம்மை விசுவாசத்திற்கும், தேவசாயலில் உருவாக்கப்பட்ட எல்லாரையும் நேசிப்பதற்கும் ஒப்புக்கொடுத்து வாழ முடியும். நாம் கர்த்தரிடத்தில் கதறி அழும்போது, எல்லாத்தடைகளையும் உடைத்து, நம்முடைய அயலகத்தாரிடமும் சமாதான பாலத்தை அமைத்து அவர்களை நேசிக்க தேவன் நம்மை பெலப்படுத்துவார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.