Archives: அக்டோபர் 2018

எதிர்பாராத இரக்கம்

ஒரு பெரிய அங்காடியில், தான் வாங்கிய பொருள்களுக்குக் கட்டணம் செலுத்துவதற்காக என் தோழி வரிசையில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு முன்னால் நின்றவர் அவளுடைய கட்டணத்தில் 14 டாலர் குறையும் விதமாக ஒரு ரொக்கச்சீட்டைக் கொடுத்தார். சரியாக தூக்கம் இல்லாமல் நின்ற என் தோழிக்கு இந்த நற்செயல் அழுகையை வரவழைத்தது. பின்னர் அழுததை நினைத்து சிரிக்கத் தொடங்கினாள். அதிகம் சோர்வாயிருந்த தருணத்தில், எதிர்பாராத இந்த இரக்கம், அவள் மனதைத் தொட்டு, அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. வேறொரு நபர் மூலமாக கடவுள் அவளுக்குக் காட்டிய கிருபைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தினாள்.

எபேசுவில் உள்ள புறஜாதியாரான கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பவுல் கொடுப்பது குறித்து எழுதுகிறார். கிருபையால் இரட்சிக்கப்பட்டதால், அவர்களுடைய பழைய வாழ்க்கையை ஒழித்து, புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். நாம் கடவுளுடைய சாயலாக உருவாக்கப்பட்டு, அவர் “செய்கையாக” இருப்பதால், இந்த இரட்சிக்கும் கிருபையில் இருந்து நற்கிரியைகளைச் செய்ய நமக்கு ஆர்வம் பிறக்கிறது (2:10). அந்த அங்காடியில் உள்ள மனிதனைப்போல, நாமும் நம்முடைய அன்றாட செயல்களின்மூலம் கடவுளின் அன்பைப் பகிர முடியும்.

அவருடைய கிருபையைப் பகிர நாம் பொருள்களாகக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய செயல்களின்மூலமும் நாம் அவருடைய அன்பைப் பகிர முடியும். ஒருவர் நம்மோடு பேசும்போது அவர்கள் சொல்வதை கவனமாகக் கேட்க நேரம் ஒதுக்கலாம். நம்மிடம் பணி புரிபவர்களிடம் ‘எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்கலாம். தேவையில் இருக்கும் ஒருவருக்கு உதவலாம். மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, நாம் சந்தோஷத்தைப் பெறுகிறோம் (அப்போஸ்தலர் 20:35).

அழகிய உச்சம்

நாட்டுப்புற பாடல்கள், பாரம்பரிய சங்கீதம் என்று எல்லா விதமான பாடல்களையும் ரசிக்க என் பெற்றோர் எனக்குக் கற்றுக்கொடுத்தனர். எனவே மாஸ்கோ தேசிய இசைக்குழுவின் (Moscow National Symphony) இசை விருந்தைக் கேட்க, ரஷ்யாவின் புகழ்பெற்ற சங்கீத சபைகளில் ஒன்றான மாஸ்கோ கான்ஸர்வேடரியில் (Moscow Conservatory) நான் அடி எடுத்து வைத்தபோது, என் மனம் படபடத்தது. சைக்கோவ்ஸ்கி இயற்றிய ஒரு அழகிய பாடலை சங்கீத வித்துவான்கள் இசைக்கும்படி நடத்துனர் செய்தார்.  நிகழ்ச்சியின் மையக் கருத்துக்களின் சிறிது சிறிதாக உயர்ந்து, ஆழ்ந்த, வியப்பைத் தரக்கூடிய உச்ச ஸ்தாயினைத்தை எட்டியது. பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து அந்த அழகிய தருணத்தைப் பாராட்டினார்கள்.

வேத வசனங்கள், வரலாற்றின் உச்சமான சிலுவை மற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நோக்கி முன்னேறுகின்றன. ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஒரு மீட்பர் வருவார் என்று கடவுள் வாக்குக் கொடுத்தார் (ஆதியாகமம் 3:15). பழைய ஏற்பாடு முழுவதும் இந்த மையக்கருத்து முன்னோக்கிச் செல்வதைப் பார்க்கிறோம். பஸ்கா ஆட்டுக்குட்டியிலும் (யாத்திராகமம் 12:21), தீர்க்கதரிசிகளின் நம்பிக்கையிலும் (1 பேதுரு 1;10), கடவுளின் ஜனங்களின் வாஞ்சையிலும் இந்த வாக்குறுதியைப் பார்க்கிறோம்.

இந்தக் கருத்து முன்னோக்கிச் செல்வதை 1 யோவான் 4:14 உறுதிப்படுத்துகிறது: “பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்”. எப்படி? நம்மை மன்னித்து, நம்மைப் படைத்தவரிடம் நம்மை மீட்டுக்கொடுக்க இயேசு மரித்து, உயிர்த்தெழுந்தார். இதன் மூலமாக சிதைந்த உலகை மீட்பதாக தான் கொடுத்த வாக்குறுதியை கடவுள் நிறைவேற்றினார். ஒரு நாள் மீண்டும் வந்து, தன்னுடைய படைப்பு அனைத்தையும் சேர்த்துக்கொள்வார்.

கடவுளின் குமாரன் நமக்காக மரித்ததை நினைவுகூரும்போது, கடவுளின் அருள் மற்றும் மீட்பராகிய இயேசு என்ற அழகிய உச்சத்தைக் கொண்டாடுகிறோம்.

எங்கே சமாதானம்?

1984 ஆம் ஆண்டு, பாடகர் பாப் டைலனிடம் “இன்னும் சமாதானத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?” என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.

“சமாதானம் என்பதே கிடையாது,” என்று டைலன் பதில் கூறினார். அவர் பதில் சர்ச்சைக்குள்ளானாலும், எளிதில் கிடைக்காத அரிய விஷயமாகவே சமாதானம் இருக்கிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலான தீர்க்கதரிசிகள் சமாதானத்தை முன் அறிவித்தார்கள். ஆனால் கடவுளின் தீர்க்கதரிசி அவர்களில் ஒருவராக இருக்கவில்லை. “என் வாக்குக்குச் செவி கொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” (எரேமியா 7:23) என்று கடவுள் கூறியதை எரேமியா ஜனங்களுக்கு நினைவுபடுத்தினார். கள்ளத் தீர்க்கதரிசிகள் “சமாதானம், சமாதானம்” (8:11) என்று கூறினார்கள். ஆனால் எரேமியா பேரழிவை முன் அறிவித்தார். எருசலேம் கிமு 586ல் வீழ்ந்துபோனது.

சமாதானம் என்பது அரிய விஷயம். ஆனால் பயங்கரமான தீர்க்கதரிசனங்களைக் கொண்ட எரேமியாவின் புத்தகத்தில், நம்மை இடைவிடாமல் நேசிக்கும் ஆண்டவரைப் பற்றி அறிந்துகொள்கிறோம். “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என்று கடவுள் கீழ்ப்படியாத தம் ஜனங்களிடம் கூறினார். “மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்” (31:3-4).

ஆண்டவர், அன்பு மற்றும் சமாதானத்தின் கடவுள். அவரை நாம் மீறும்போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பாவம் உலகின் சமாதானத்தை அற்றுப்போகப்பண்ணி, நம் ஒவ்வொருவருடைய உள்ளான மனச் சமாதானத்தையும் குலைத்துப்போடுகிறது. கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கி, நமக்கு மன சமாதானத்தைத் தரும்படியாக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1) என்று பவுல் எழுதுகிறார். இதுவரை எழுதப்பட்டவற்றில், பவுலின் வார்த்தைகளே அதிக நம்பிக்கை தரும் வார்த்தைகள்.

நாம் போர் நிறைந்த பகுதியில் வாழ்ந்தாலும், போர் என்ற வார்த்தைகூட காதில் விழாத அமைதியான சூழலில் வாழ்ந்தாலும், அவரில் சமாதானம் பெற கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.

பிடியில் இல்லாமல்

மெக்சிகோ வளைகுடாவில் கெய்ட்லின் தன் நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தபோது, ஒரு சுறா அவள் கால்களைக் கவ்வி, உடலை இழுத்தது. தன்னை விடுவித்துக்கொள்ள, கெய்ட்லின் சுறாவின் மூக்கில் ஓங்கிக் குத்தினாள். அந்த சுறா அவளை விடுவித்து, தோல்வியைச் சந்தித்து, நீந்திச்சென்றது. அந்த சுறா கடித்ததால் நூறு தையல்களுக்கு மேல் போடும் அளவிற்கு கெய்ட்லினுக்குக் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதனால் கெய்ட்லினை தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

இயேசு மரணத்தின் கூரை முறித்ததையும், தன்னைப் பின்பற்றுபவர்களை அச்சுறுத்தி, தோல்வியடையச் செய்ய மரணத்திற்கு இருந்த வல்லமையை முடிவுக்குக் கொண்டுவந்ததையும் இந்த நிகழ்ச்சி எனக்கு நினைவுபடுத்துகிறது. “அவர் (இயேசு) மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது” (அப்போஸ்தலர் 2:24) என்று பேதுரு கூறுகிறார்.

பேதுரு எருசலேமில் இருந்த ஒரு கூட்டத்தினரிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். அவர்களில் பலர், இயேசுவைக் கண்டனம் செய்து, “சிலுவையில் அறையுங்கள்” என்று கூச்சலிட்டவர்களாக இருந்திருக்கலாம். அதன் விளைவாக ரோம போர்ச் சேவகர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர் மரித்துவிட்டார் என்று அவர்கள் உறுதி செய்யும்வரை அவர் அந்த சிலுவையில் தொங்கினார். இயேசுவின் உடல் ஒரு கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடவுள் அவரை உயிரோடு எழுப்பும் வரை அவர் உடல் அந்தக் கல்லறையில் மூன்று நாட்கள் இருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவும், மற்றவர்களும் அவரோடு பேசி, அவரோடு சாப்பிட்டு,  நாற்பது நாட்கள் கழித்து அவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதைப் பார்த்தார்கள் (அப்போஸ்தலர் 1:9).

சரீரப் பிரகாரமான பாடுகள், மன உளைச்சல்கள் மத்தியில், இந்த உலகத்தில் இயேசுவின் வாழ்க்கை முடிவடைந்தது. ஆனால் கடவுளின் வல்லமை சாவின் கூரை முறித்தது. இதனால், மரணமோ, வேறு எந்த விதமான போராட்டமோ, அதன் பிடியில் நம்மை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. விசுவாசிகள் அனைவரும், ஒரு நாள், நித்தியமான வாழ்வையும், முழுமையையும் கடவுளின் பிரசன்னத்தில் அனுபவிப்பார்கள். இப்படிப்பட்ட எதிர்காலத்தைப்பற்றி யோசித்தால், இன்று நாம் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நான் மன்னிக்கப்படுவேனா?

பெரிய காரியங்களிலோ, சிறிய காரியங்களிலோ, நாம் உண்மையைச் சொன்னால், நாம் எல்லாவற்றிலும் குழம்பிப்போய் நிற்கிறோம். ஆயினும் உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு, கடவுளிடம் மன்னிப்புக்கேட்டு, கீழ்ப்படிந்து அவரிடம் திரும்பி வருகின்ற ஒவ்வொருவரும் உண்மையான மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. கடவுளால் மன்னிக்கப்படுதல் என்றால் என்ன, மன்னிக்கப்பட்ட வாழ்வு எப்படிப்பட்டது என்பவற்றைக் குறித்துக் கண்டுகொள்ளுங்கள்.