மின்னிசோட்டா மிக அழகான அநேகம் ஏரிகள் நிறைந்த ஒரு இடம். அங்கு திறந்த வெளியில் முகாமிடுவது எனக்கு அதிகப் பிரியம். அங்கிருந்து தேவனுடைய ஆச்சரியமான படைப்புகளைக் கண்டு வியப்பேன். ஆனால், முகாமில் கூடாரங்களில் தங்குவது பிடிக்காது. ஏனென்றால் மழைபெய்யும்பொழுது கூடாரம் ஒழுகி படுக்கை நனைந்துவிடும்.

நம்முடைய விசுவாச வீரர்களில் ஒருவரான ஆபிரகாம் நூறாண்டுகள் கூடாரங்களில் வாழ்ந்தார் என்பதை நினைத்து ஆச்சரியப்படுவேன். அவன் எழுபத்தைந்து வயதாயிருக்கையில் தேவன் அவனைப் பெரிய ஜாதியாக்குவதற்காக (ஆதி. 12:1-2) அழைத்த அழைப்பைக் கேட்டு தன் ஊரை விட்டுப்புறப்பட்டான். ஆபிரகாம் தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று நம்பி கீழ்ப்படிந்தான். அவன் 175 வயதில் மரிக்கும் வரை வாழ்நாள் முழுவதும் தன் வீட்டை விட்டு கூடாரங்களிலேயே வசித்தான் (25:7).

வீட்டைவிட்டு நாடோடியாய் வாழும்படி ஆபிரகாமுக்கு வந்த அழைப்பைப் போன்றதொரு அழைப்பு நமக்கில்லாமலிருக்கலாம். நாமும் இந்த பூமியில் வசிப்பதற்கு ஏற்ற ஒரு நல்ல வீட்டை வாஞ்சிக்கலாம். பலமான காற்றடித்துக் கூடாரத்தின் திரைகள் தூக்கப்பட்டு மழை கூடாரத்தினுள் அடிக்கும்பொழுது ஆபிரகாம் தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு காத்திருந்திருப்பான் (எபி. 11:10). நாமும் ஆபிரகாமைப்போல தேவன் உருவாக்கிக்கொண்டிருக்கும் பரம தேசம் போன்ற நல்ல தேசத்தைத் தருவார் (வச. 16) என்ற நம்பிகையோடு இருக்கலாம்.