அது இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியில் போடப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைப் போலவே இருந்தாலும், மிகவும் பயபக்தியை தூண்டக்கூடியதாக இருந்தது. யாத்திராகமம் 25 முதல் 27 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள நுணுக்கமான விளக்கங்களின்படியே அதே அளவிலும், அதே மாதிரியிலும் அமைக்கப்பட்டதாய் இருந்தது. ஆனால், முதலில் அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தைப் போல உண்மையான தங்கமோ, சீத்தீம் மரமோ பயன்படுத்தப்படவில்லை. அந்த மாதிரி ஆசரிப்புக் கூடாரம் இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியிலிருந்த பாலைவனத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கத்தக்கதாக உயர்ந்து நின்றது.

எங்களுடைய பயணக் குழுவினர்கள், அந்த, மாதிரி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருந்த “பரிசுத்த ஸ்தலம்”, “மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்” சென்று “உடன்படிக்கைப் பெட்டியைப் பார்க்க” அழைத்து செல்லப்பட்ட பொழுது எங்களில் ஒருசிலர் உள்ளே நுழைவதற்கு சற்றே தயங்கினார்கள். இது பிரதான ஆசாரியன் மட்டும் செல்லக் கூடிய மகா பரிசுத்த ஸ்தலமல்லவா? மிகவும் சாதாரணமாக நாங்கள் இதற்குள் நுழைவது எப்படி? என்று கூறினார்கள்.

ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் மக்கள் அவர்களது பலிகளைச் செலுத்த ஆசரிப்புக் கூடாரத்தை நெருங்கும் பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் வரப்போகிறோம் என்ற உணர்வினால் எவ்வளவு பயத்துடன் வந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க இயலுகிறது. தேவன் அவர்களுக்கு கூறவேண்டிய காரியங்களை எப்பொழுதெல்லாம் கூற வேண்டுமென்று விரும்பினாரோ, அப்பொழுதெல்லாம், மோசேயின் மூலமாக கூறிய பொழுது எவ்வளவு ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்!

இயேசு கிறிஸ்துவின் மரணத்தினாலே நமக்கும்; தேவனுக்கும் இடையே உள்ள திரை கிழிக்கப்பட்டதால், இன்று நீங்களும் நானும் தைரியமாக தேவனுடைய கிருபாசனத்தண்டையில் சேருகிறோம். (எபி. 12:22-23). நாம் விரும்பும் பொழுதெல்லாம் தேவனோடு பேசலாம்; அவருடைய வசனத்தை வாசிப்பதின்மூலம் அவர் நமக்கு கூறுவதை நேரடியாகக் கேட்கலாம். இஸ்ரவேல் மக்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவது ஒரு கனவாக இருந்தது. ஆனால், நாமோ தேவனோடு கூட நேரிடையாக தொடர்பு கொள்வதை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறோம். தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக பிதாவிடம் வரக்கூடிய பிரமிக்கத்தக்க இந்த உரிமையை மிகச் சாதாரணமாக கருதாமல் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதுகிறோம்.