எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

tim gustafsonகட்டுரைகள்

தேவனுடைய சமாதானத் தூதுவர்கள்

நோரா, நியாயத்தின் தேவையை உறுதியாய் அறிந்திருந்ததினால், அறப்போராட்டத்திற்குச் சென்றாள். திட்டமிட்டபடி, ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் டவுன்டவுன் என்ற பகுதியில் சத்தமேயில்லாமல் அமைதியான முறையில் ஊர்வலமாய் சென்றனர். 

அப்போது இரண்டு பேருந்துகள் திடீரென்று கொண்டுவரப்பட்டது. வெளியூர்களில் இருந்து போராட்டக்காரர்கள் வந்திருந்தனர். சடுதியில் ஓர் கலவரம் வெடித்தது. மனம் உடைந்தவளாய் நோரா அங்கிருந்து வெளியேறினாள். அவர்களின் நல்ல எண்ணம் பலனளிக்கவில்லை என்று அவளுக்கு தோன்றியது.

அப்போஸ்தலனாகிய பவுல் எருசலேம் ஆலயத்திற்குச் சென்றபோது, பவுலை எதிர்த்தவர்கள் அவரை அங்கே பார்த்தனர். அவர்கள் ஆசியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் (அப்போஸ்தலர் 21:27). அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறைக்கு இயேசுவை அச்சுறுத்தலாகக் கருதினர். பவுலைப் பற்றிய பொய்களையும் வதந்திகளையும் கூச்சலிட்டு, அவர்கள் துரிதமாய் பிரச்சனையைக் கிளப்பினார்கள் (வச. 28-29). ஒரு கலவரக் கூட்டத்தினர் பவுலை ஆலயத்திலிருந்து இழுத்து சென்று அடித்தது. காவலாளிகள் துரிதமாய் ஓடிவந்தனர்.

பவுல் கைதுசெய்யப்படுகையில், மக்களிடத்தில் பேச முடியுமா என்று ரோம தளபதியிடம் அனுமதி கேட்டார் (வச. 37-38). அனுமதி கிடைத்ததும், அவர் கூட்டத்தினரிடம் அவர்களின் சொந்த மொழியில் பேசி, அவர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்களை ஈர்த்தார் (வச. 40). பெரிய கலகத்தை, தான் எவ்விதம் பிரயோஜனமற்ற ஓர் மதத்திலிருந்து மீட்கப்பட்டேன் என்னும் இரட்சிப்பின் சாட்சியைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாக பவுல் மாற்றிக்கொண்டார் (22:2-21).

சிலர் வன்முறை மற்றும் பிரிவினையை விரும்புகிறார்கள். சோர்ந்துபோகாதிருங்கள். அவர்கள் ஜெயங்கொள்ளமாட்டார்கள். இந்த அவநம்பிக்கையான உலகத்தில் தம் ஒளியையும் அமைதியையும் பிரதிபலிக்க தைரியமான விசுவாசிகளை தேவன் தேடுகிறார். ஓர் நெருக்கடியான சூழ்நிலை, தேவனுடைய அன்பைப் பகிர்ந்துகொள்ளும் அழகான வாய்ப்பாக இருக்கக்கூடும். 

 

ஒரே ஒரு தொடுதல்

ஒரு சாதாரண தொடுதல் தான். ஆனால், அது காலினின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் விசுவாசிகளுக்கு அதிக எதிர்ப்பைத் தெரிவிக்கும் பகுதிக்குச் சென்று, தொண்டு செய்யும்படி அவனுடைய குழுவினர் ஆயத்தப்படுகையில், அவனுடைய மன அழுத்தம் வெகுவாக அதிகரித்தது. அவன் தன் கவலைகளை, அக்குழுவிலுள்ள ஒருவரோடு பகிர்ந்தான். அந்த நண்பன் நின்று, தன் கையை அவன் தோள் மீது வைத்து, அவனை ஊக்கப்படுத்தும் சில வார்தைகளைப் பகிர்ந்து கொண்டான். காலின் ,அந்த தொடுதலை, தன் வாழ்வின் திருப்பு முனையாக நினைத்துப் பார்க்கின்றான். தேவன் அவனோடு இருக்கிறார் என்ற உண்மை வல்லமையாக அவனுக்குள் கிரியை செய்தது.

இயேசுவுக்கு மிக அன்பான சீடனான யோவான், சுவிசேஷத்தைப் பரப்பியதற்காக நாடு கடத்தப்பட்டு, பத்மு தீவில் தனித்து விடப்பட்டான். அப்பொழுது அவன், “எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக்” கேட்டான் (வெளி. 1:10). அதனைத் தொடர்ந்து தேவனுடைய தரிசனத்தைக் கண்டான். அப்பொழுது யோவான், “செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தான்” பயந்து நடுங்கிய அந்த வேளையில், ஆறுதலையும், தைரியத்தையும் பெற்றுக்கொண்டு, எழுத ஆரம்பிக் கின்றான். “அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;” (வச. 17) என்றெழுதினான்.

தேவன் நம்முடைய வசதியான வாழ்விலிருந்து நம்மை வெளியே எடுத்து, புதிய காரியங்களைக் காண்பிக்கின்றார், நம்மை வளைய வைத்து, வளரச் செய்கின்றார். நமக்கு தைரியத்தையும், ஆறுதலையும் தந்து எல்லா சூழ்நிலைகளின் வழியாகவும் கடந்து செல்லப் பண்ணுகின்றார். நம் சோதனைகளின் மத்தியில், நம்மை அவர் தனியே விடுவதில்லை. எல்லாவற்றையும் அவர் கட்டுப்படுத்துகின்றார், நம்மை அவருடைய கரங்களில் வைத்துள்ளார்.

 

மாயக்காரரைக் குறித்து தேவன்

“என்னுடைய குழுவிலுள்ள நபர் ஒருவர் இதைச் செய்திருந்தால் நான் மிகவும் வருத்தப் பட்டிருப்பேன்’’ என்று ஒரு கிரிக்கெட் வீரர், 2016 ஆம் ஆண்டு நடை பெற்ற ஒரு போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்வீரர் ஒருவர் ஏமாற்றியதைக் குறித்து இப்படிச் சொன்னார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே கிரிக்கெட் வீரர், இதே போன்ற மற்றொரு ஏமாற்று வேலையைச் செய்தமைக்காகப் பிடிபட்டார். 

இப்படிப்பட்ட மாய்மாலமான செயல்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன .ஆதியாகமம் 38ல் குறிப்பிடப் பட்டுள்ள யூதாவின் மாய்மாலம் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. தாமாரைத் திருமணம் செய்த தனது இரு மகன்களும் மரித்த பின்பு, யூதா அவளுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் இருந்து விடுகிறான் (வச. 8-11). ஏமாற்றமடைந்த தாமார் தன்னை மறைத்து, ஒரு வேசியைப் போல முக்காடிட்டுக் கொண்டு யூதாவைச் சந்தித்து, அவனோடு சேருகின்றாள் (வச. 15-16).

ஆனால் கைம்பெண்ணான தன்னுடைய மருமகள் கர்ப்பவதியானாள் என்று கேள்வி பட்டபோது ,அவன் அவளைக் கொலை செய்யும்படி எழும்புகின்றான். “அவளை வெளியே கொண்டு வாருங்கள்; அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்கின்றான் (வச. 24). ஆனால், யூதாவே அதற்குக் காரணமானவன் என்பதற்கு அவள் சான்று வைத்திருந்தாள் (வச. 25).

அங்கு யூதா உண்மையை மறைத்திருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய இரட்டை வேடத்தை ஒத்துக்கொண்டான். அவளுடைய எதிர்காலத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றான். என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்கின்றான் (வச. 26).

யூதா மற்றும் தாமாரின் இருண்ட பகுதியை தேவன் பிணைத்து நமக்கான மீட்பின் கதையை உருவாக்குகின்றார். தாமாரின் பிள்ளைகள், இயேசுவின் முன்னோர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர் (மத். 1:2-3).

ஆதியாகமம் 38ஆம் அதிகாரம் ஏன் வேதாகமத்தில் இடம் பெற்றது? ஒன்று, மனிதனின் திருக்குள்ள இருதயத்தைக் காட்டவும் ,மற்றொன்று தேவனின் அன்பும், கிருபையும்,கருணையும் நிறைந்த இருதயத்தைக் காட்டவுமே.

 

நான் யார் ?

டேவ், தன்னுடைய வேலையை ஆர்வத்தோடு செய்து கொண்டிருந்தான். ஆனால், நீண்ட காலமாக அவன் ஏதோவொன்றை நோக்கி இழுக்கப்  படுவதை உணர்ந்தான். இப்பொழுது ,அவன் தன் கனவினை நனவாக்க, தேவபணி செய்யும் படி காலெடுத்து வைத்துள்ளான். ஆனால் அவனுக்குள் அநேக சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன.

அவன் தன் நண்பனிடம்,” நான் இந்த பணிக்குத் தகுதியானவன் அல்ல” என்றான். “இந்தப் பணிக் குழு என்னுடைய உண்மையான குணத்தை அறிந்திருக்கவில்லை. நான் நல்லவனல்ல” என்று கூறினான்.

டேவ்வைப் போன்ற ஒருவரான மோசேயை நினைத்துப் பார்ப்போம். அவருடைய தலைமைத்துவ பண்பும், பெலனும், பத்து கட்டளைகளுமே நம் நினைவிற்கு வருகின்றன. ஆனால் மோசே, ஒரு மனிதனைக் கொன்று விட்டு வனாந்திரத்திற்கு ஓடிப்போனதை நாம் மறந்து விடுகிறோம். அவருடைய முன் கோபத்தையும், தேவன் அழைத்த போது உடனே சரியெனக் கூறத் தயங்கியதையும் நாம் பெரியதாக நினைப்பதில்லை.

  தேவன் புறப்படும் படி கட்டளை கொடுத்த போது (யாத். 3:1-10), மோசே தனக்கு போதிய தகுதி இல்லையென தட்டிக் கழிக்கின்றான். அவன் தேவனோடு நீண்ட வாக்கு வாதங்களைச் செய்கின்றான். தேவனிடம், “நான் எம்மாத்திரம் ?” (வச. 11) எனக் கேட்கின்றான். தேவன் அவனிடம் “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (வச. 14) என்கின்றார். இந்த மர்மப்பெயரை நம்மால் விளக்க முடியாது. நம்முடைய விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட தேவன் தன்னுடைய முடிவில்லாத தன்மையை மோசேக்கு விளக்குகின்றார்.

நம்மை பெலவீனனாக  காட்டும் உணர்வு நமக்குள் வலுவாக உள்ளது. தேவன் நம்மை பயன்படுத்துவதற்குத் தடையாக நாம் இதனை பயன்படுத்துவோமாயின் நாம் அவரை துக்கப்படுத்துகின்றோம். நம்முடைய பெலவீனங்களைப் பெரிதாக்கி, அவருடைய பணியைச் செய்ய மறுக்கும் போது, தேவன் நமக்குப் போதுமானவராக இல்லை என கூறுகின்றோம்.

நான் யார்? என்பது கேள்வியல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர் யார் என்பதே கேள்வி.

எவ்வளவு விலையானாலும்

கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றிய திரைப்படம், ஆரம்ப நாட்களில் சபைகளில் ஏற்பட்ட துன்பங்களை அப்படியே காட்டுகின்றது. அந்த திரைப்படத்தில் வருகின்ற சிறிய கதாப்பாத்திரங்கள் கூட இயேசுவைப் பின்பற்றுவது மிகவும் ஆபத்தானது என வெளிப்படுத்துகின்றன. அப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அடிபடும் ஒரு பெண், அடிக்கப் படும் ஒரு ஆண் இன்னும் தங்கள் உயிரையேயிழந்த நபர்கள் 1, 2, 3 எனக் காணும் போது, இவ்வாறு சிந்திக்கத் தோன்றும்.

கிறிஸ்துவோடு நம்மை ஐக்கியப் படுத்துவது என்பது மிகவும் விலையேறப் பெற்றது. உலகின் பல பகுதிகளில் நடைபெறும் காரியங்கள்  இயேசுவைப் பின்பற்றுவது மிக ஆபத்தானது எனக் காட்டுகின்றது. இன்றும் அநேக ஆலயங்கள் இத்தகைய துன்பங்களைச் சந்திக்கின்றன. நம்மில் சிலர் தங்களுடைய விசுவாசத்தினிமித்தம் இழிவாக நடத்தப் படலாம், அல்லது தங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு அவர்களின் விசுவாசத்தினிமித்தம் கொடுக்கப் படாமல் தடுக்கப் பட்டிருக்கலாம்.

ஆயினும் சமுதாய அந்தஸ்தை தியாகம் செய்வதற்கும், தங்களுடைய வாழ்வையே தியாகம் செய்வதற்கும் மிகப் பெரிய வேறுபாடுள்ளது. உண்மையில் தன்னார்வம், பொருளாதார நிலைப்பாடு, சமுதாய அந்தஸ்து ஆகியவை எப்பொழுதும் மனிதனை ஈர்த்துக் கொள்ளுபவை. இத்தகைய செயல்களை இயேசுவின் காலத்தில் அவரைப் பின்பற்றியவர்களிடமும்  காண்கிறோம். இயேசு சிலுவையில் அறையப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு வரை அநேக இஸ்ரவேலர் இயேசுவைப் புறக்கணித்த போதும் (யோவா. 12:37) அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (வச. 42) என யோவான் எழுதுகின்றார். ஆனாலும் அவர்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கை பண்ணாதிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தேவனுடைய பாராட்டுதலை விட மனிதனின் புகழ்ச்சியையே அதிகம் விரும்பினார்கள் (வ42-43)

இன்றைக்கும் சமுதாயச் சூழல்கள், கிறிஸ்துவின் மீது நாம் வைத்துள்ள  விசுவாசத்தை மறைத்துக் கொள்ளச் செய்கின்றது. ஆனால் என்ன விளைவைச் சந்திக்க நேர்ந்தாலும், நாம் அனைவரும் மனிதனின் புகழ்ச்சியை நாடாமல் தேவனுடைய பார்வைக்கு நலமானதைச் செய்ய ஒன்றுபட்டு நிற்போம்.

போர்க்களத்திற்குச் செல்லாமல்

ஒரு சிறு பிள்ளையாக, தன் பெற்றோரிடம் மிகவும் கடினமான வார்த்தைகளை அவள் பேசினாள். அதுவே அவள் பெற்றோரிடம் கடைசியாக பேசின வார்த்தைகள் என்பதை அவள் சிறிதளவும் உணரவில்லை. இப்பொழுது, பல வருடங்கள் ஆலோசனை கொடுத்த போதும், அவளால் தன்னை மன்னிக்கவே முடியவில்லை. குற்ற உணர்வும், ஆழமான துக்கமும் அவளை முடக்கி வைத்தது.

நாம் எல்லாரும் ஆழமான துக்கத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில துக்கங்கள் மகா பயங்கரமானவைகள். ஆனால், வேதாகமம் இந்த மாபெரும் துக்கத்தில் இருந்து கடந்து செல்ல வழியினைக் காட்டுகின்றது. ஒரு உதாரணத்தை நாம் காணலாம்.

தாவீது ராஜா செய்ததற்கு ஒரு இனிப்பு மூலாம் பூச முடியாது. அது 'இராஜாக்கள் போருக்குப் போகின்ற காலம்." ஆனால் தாவீது 'எருசலேமிலேயே தங்கிவிட்டார்" (2 சாமு. 11:1). போர்க்களத்திலிருந்து

தூரத்தில் இருந்தபடியால், அடுத்தவனுடைய மனைவியை கொள்ளையிட்டதுமன்றி, அதை ஒரு கொலையின் மூலமாக மூடி மறைக்கிறான் (வச. 2-5, 14-15). தேவன் தாவீதின் கீழ்நோக்கி மூழ்குதலைத் தடுத்து நிறுத்தினார். ஆனால், இராஜா மீதமுள்ள தன் வாழ்நாளில், தன் பாவத்தை அறிந்தவனாக வாழவேண்டும்.

தாவீது சாம்பலில் இருந்து எழுந்தவுடனே, அவனுடைய தளபதி யோவாப், தாவீது முன்னிருந்து நடத்தவேண்டிய போரினை ஜெயித்து வந்தான். யோவாப் தாவீதிற்கு சவால் கொடுக்கிறார், 'நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டு வந்து பட்டணத்தை முற்றிகைபோட்டு பிடிக்க வேண்டும்". இறுதியாக தாவீது கர்த்தர் விரும்பின இடத்திற்கு ஒரு தேசத்தின் தலைவனாகவும், இராணுவத்தின் தலைவனாகவும் வந்து சேர்ந்தார் (வச. 29).

நாம் நம்முடைய கடந்தகால நிகழ்வுகள் நம்மை அழுத்த அனுமதிக்கும் போது, நாம் கர்த்தருடைய கிருபை போதுமானதாக இல்லை என்றே கூறுவதாக அமைகிறது. அது நாம் என்ன பாவத்தை செய்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததாக இல்லாமல் இருக்கிறது. நம்முடைய தகப்பன் நமக்கு முழுமையான மன்னிப்பினை அருளுகிறார். தாவீது தன் போர்க்களத்திற்குத் திரும்பச் சென்றதுபோல நாமும் அவருடைய கிருபையைப் பெற்று வாழலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.