எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் உல்ப்கட்டுரைகள்

தேவனை அறியும் அறிவு

எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்தே ஒரு தாயாக வேண்டும் என்று அதிகமாய் வாஞ்சித்தேன். திருமணமாகும், கருத்தரிப்பேன், குழந்தை பிறக்கும், கையிலெடுத்து கொஞ்சுவேன் என்றெல்லாம் கனவு காண்பேன். ஒருவழியாக எனக்கு திருமணமும் ஆனது. நானும் என் கணவரும் கர்ப்பத்தின் கனி பிறக்க ஆவலாய் இருந்தோம். ஆனாலும், ஒவ்வொரு முறையும் கர்ப்பப் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக வரும்போது, மலட்டுத்தன்மையோ என்னவோ? என்று பயந்தோம். மாதக்கணக்கில் மருத்துவமனை சந்திப்புகளுக்குப்பின் அடுத்தடுத்து மிஞ்சியது கண்ணீரே. சூறாவளிக்குள் இருந்தது போன்ற உணர்வு. இந்த நிலையை ஜீரணிக்கமுடியாத எங்களுக்கு தேவனுடைய நன்மை மற்றும் உண்மையின் மேல் இருந்த விசுவாசம் தடுமாறியது.

எங்களுடைய பயணத்தைப் பார்க்கும்போது, யோவான் 6-ஆம் அதிகாரத்தில், புயலின் நடுவே சிக்கின சீடர்களின் கதை தான் ஞாபகம் வருகிறது. புயல்வீசும் இரவில் அலைமோதும் படகில் அவர்கள் தவிக்கையில், எதிர்பாராதவிதமாக கொந்தளிக்கும் அலைகளின்மேல் இயேசு அவர்களிடமாய் நடந்துவந்தார். தம்முடைய பிரசன்னத்தின் மூலம் அவர்களை அமைதியாக்கி, “நான்தான், பயப்படாதிருங்கள்” என்றார் (வச. 20).

சீடர்களைப் போன்றே, எங்களுடைய வாழ்க்கையில் வீசிக்கொண்டிருந்த இந்தப் புயலின் நடுவே என்ன நடக்குமென்றும் அறியாதிருந்தோம். ஆனாலும், எப்போதும் சத்தியம் நிறைந்தவராய், உண்மையுள்ளவராய் அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொண்டோம். ஒருவேளை எங்களுடைய எதிர்பார்ப்பின்படி எங்களுக்கென்று ஒரு குழந்தை இல்லாதுபோனாலும், எங்களுடைய எல்லா போராட்டங்களிலும் எங்களை அமைதிப்படுத்தும் அவருடைய வல்ல பிரசன்னத்தை உணர்ந்திடமுடியும் என்பதை புரிந்துகொண்டோம். எங்களுடைய வாழ்க்கையில் அவர் வல்லமையாய் இடைபடுவதால், நாங்கள் கலங்கவேண்டியதில்லை.

கவலைக்கு மருந்து

என் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தது. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும், அங்கு வசிக்க ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும் தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன். நான் செய்ய வேண்டிடும் என்ற பட்டியலைப் பார்த்தபொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. கவலைப்படாதே ஜெபம் பண்ணு (பிலி. 4:6-7).

தனக்கு என்ன நேரிடும் என அறியாத நிலையில், எதிரிட இருக்கும் சவால்களையும் அறியாதநிலையில், கவலைப்பட வேண்டிய ஒரு மனிதன் உண்டானால் அது பவுலாகத்தான் இருக்கும். கப்பற்சேதம் ஏற்பட்டது, அடிக்கப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். பிலிப்பி சபையில் தங்களுக்கு நேரிடப் போகும் காரியங்களை அறியாமலிருந்த தன் நண்பர்களை உற்சாகப்படுத்த “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (வச. 6) என்றெழுதினார்.

பவுலின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. வாழ்க்கை எதிர்பாராத, நம்பமுடியாத சம்பவங்களைக்கொண்டது. அது வாழ்க்கையைத் தலைகீழாக்குகிற பெரிய மாற்றமாயிருக்கலாம், குடும்பப் பிரச்சனைகளாயிருக்கலாம், உடல் நலக்கேடாயிருக்கலாம் அல்லது பொருளாதார நெருக்கடியாயிருக்கலாம், இவையெல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுகொள்வதென்னவென்றால் தேவன் நம்மைக் கரிசனையோடு விசாரிக்கிறார். அறியாதவைகளைக்குறித்த பயத்தை விட்டுவிட்டு அதை அவரிடம் கொடுத்துவிட அழைக்கிறார். நாம் அதைச் செய்யும்பொழுது, எல்லாவற்றையும் அறிந்த தேவன், “அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7) என்கிறார்.

எது வரைக்கும்?

எனக்கு திருமணம் ஆனவுடனேயே எனக்கு குழந்தைகள் பிறந்துவிடும் என்று எண்ணினேன். உடனே குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தை பெறுவதற்கு இயலாத என்னுடைய நிலைமையினால் ஏற்பட்ட மனவேதனை குழந்தை பேற்றுக்காக தேவனிடம் மன்றாட எனக்கு வழிவகுத்தது. நான் அடிக்கடி தேவனிடம் “எவ்வளவு காலம்?” என்று முறையிடுவேன். எனது சூழ்நிலைகளை தேவனால் மாற்றி அமைக்க இயலும். என்று அறிவேன். ஆனால், அவர் ஏன் மாற்றவில்லை?

நீங்கள் தேவனுக்கு காத்திருக்கிறீர்களா? நாம் வாழும் இப்பூமியிலே நியாயம் நிலை நிறுத்தப்பட எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா? கேன்சர் நோய் சுகமாகக் கூடிய காலம் எப்பொழுது வரும் என்று கேட்கிறீர்களா? நான் கடனில் விழுந்து விடாமல் இருக்க எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா?

ஆபகூக் என்ற தீர்க்கன் அதுபற்றி தெளிவான எண்ணம் கொண்டிருந்தான். “கர்த்தாவே நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் கேளாமல் இருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் என்னை இரட்சியாமல் இருக்கிறீரே. நீர் எனக்கு அக்கிரமத்தை காண்பித்து என்னை தீவினையை பார்க்கப் பண்ணுகிறது என்ன?” (ஆப. 1:2-3) என்று அவன் தேவனை நோக்கிக் கதறினான். நீதியும் வல்லமையுமுள்ள தேவன், பொல்லாப்பு அநீதி, சீர்கேடு ஆகியவற்றை எவ்வளவு காலம் தொடர தேவன் அனுமதிப்பார் என்று அவன் அங்கலாய்த்தான். ஏன் தேவன் இடைப்படவில்லை. ஏதும் செயல்படவில்லை என்ற கேள்விகளைக் குறித்து ஆபகூக் அதிகமாக சிந்தித்தான்.

நாமும் இவ்விதமாக தேவன் ஏன் செயல்படாமலிருக்கிறாரென்று எண்ணுகிற நாட்கள் உண்டு. ஆபகூக்கைப் போல “எது வரை?” என்று தேவனிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆயினும் நான் தனிமையாக இல்லை. ஆபகூக்கின் குரலைக் கேட்டவர் நம்முடைய பாரங்களைப் பற்றியும் விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியினால் நமது பாரங்களை அவர்மேல் வைத்துவிட வேண்டும். தேவன் நமது விண்ணப்பங்களை கேட்கிறார். அவரது நேரத்தில் அவர் அவைகளுக்குப் பதிலளிப்பார்.

தடைகளை அகற்றுதல்

முன்னால் கைதிகள் மீண்டும் சமுதாயத்தோடு இணைந்து வாழ உதவும் ஒரு அமைப்பாகச் செயல்படும் அந்த இல்லத்தைப் பார்வையிடும் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் நான் மேரியைப் பார்ப்பதுண்டு. என்னுடைய வாழ்வு அவளுடைய வாழ்க்கையை விட வித்தியாசமானது. அவள் இப்பொழுதுதான் சிறையை விட்டு வெளியே வந்தவள். போதையிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மகனிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டாள். இப்படியாக அவள் சமுதாயத்தின் ஓர் ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.

மேரியைப் போன்று சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்வதென்றால் என்னவென்று அடிமையான ஒநேசிமுக்குத் தெரியும். ஒநேசிமு தன்னுடைய கிறிஸ்தவ எஜமான் பிலேமோனுக்குத் துரோகம் இழைத்த காரணத்தினால், இப்பொழுது சிறையில் இருக்கிறான். அங்கிருக்கையில் அவன் பவுலைச் சந்தித்து, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையுள்ளவனாகிறான் (வச. 10). மனம்மாறியவனாக இருந்த போதிலும் ஒநேசிமு ஒரு அடிமை. பவுல் அவனை மீண்டும் பிலேமோனிடம் ஒரு கடிதத்தோடு அனுப்புகிறான். அதில் ஒநேசிமுவை “இனிமேல் அவன் அடிமையானவனாக அல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும், பிரியமுள்ள சகோதரனாகவும் இருக்கும்படிக்கு (பிலே. 1:15) ஏற்றுக் கொள்ளும்படி எழுதுகிறான்.

பிலேமோன் இப்பொழுது ஒநேசிமுவை அடிமையாகவா? அல்லது கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனாகவா? எதைத் தேர்வு செய்யப் போகிறான்? நானும் இப்பொழுது எதைத் தேர்ந்து கொள்ளப் போகிறேன்? மேரியை ஒரு முன்னாள் குற்றவாளி, போதையின் அடிமைத் தனத்திலிருந்து மீண்டு வருபவளாகவா? அல்லது இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் முழுவதும் மாற்றப்பட்டவளாகவா? மேரி கிறிஸ்துவுக்குள் என்னுடைய சகோதரி எங்களுடைய விசுவாசப் பயணத்தில் இருவரும் இணைந்து நடக்கும் பாக்கியம் பெற்றவள்.

நம்முடைய சமுதாய பொருளாதார நிலைகள், பரிவுகள், கலாச்சார வேறுபாடுகள் நம்மை எளிதில் பிரித்துவிடலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இந்த அனைத்துத் தடைகளையும் அகற்றி நம் வாழ்வையும் உறவுகளையும் நிரந்தரமாக மாற்றி நம்மைப் புதிப்பிக்கும்.

பயத்திலிருந்து விசுவாசத்துக்கு!

மருத்துவரின் சொற்கள் அவளது இருதயத்;தை அதிரவைத்தது. அது புற்று நோய். அவளது கணவரையும் பிள்ளைகளையும் நினைத்தபோது அவளது உலகமே நின்றது போலிருந்தது. வேறு விதமான முடிவை வேண்டி அவர்கள் கருத்தாய் ஜெபித்தார்கள். இப்போது அவர்கள் என்ன செய்யக்கூடும்? கன்னங்களில் நீர் கொட்ட அவள் மென்மையாய் ஜெபித்தாள், “தேவனே, இது எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது தயவுசெய்து நீர் எங்கள் பெலனாயிரும்.”

நமது முன்கணிப்பு, நம்பிக்கையைச் சிதறடிப்பதாகவும் நமது சூழ்நிலைகள் நமது கட்டுப்பாட்டிற்கு மீறினதாகவும் இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம்? நமது எதிர்காலம் நம்பிக்கையற்றதாய்த் தோன்றும்போது நாம் எங்கே நோக்குகிறோம்?

தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கின் நிலைமை அவரது கட்டுப்பாட்டில் இல்லை, அவர் மிகவும் திகிலடைந்தார். வருகின்ற நியாயத்தீர்ப்பு பேரழிவைக் கொண்டுவருவதாயிருந்தது (ஆபகூக் 3:16-17) என்ற போதிலும், வரப்போகின்ற குழப்பங்களின் மத்தியில் தன் விசுவாசத்தில் நிலைகொண்டிருக்க (ஆபகூக் 2:4) ஆபகூக் தெரிந்துகொண்டார். தேவனில் மகிழத் தீர்மானித்தார் (3:18). தனது சூழ்நிலைகளின் மேல் தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையம் வைக்காமல், தேவனுடைய நற்குணம் மற்றும் வல்லமையைச் சார்ந்துகொள்ள முடிவு செய்தார். தேவன் மேலுள்ள தனது நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தினார்: “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்” (3:19)

வியாதிகள், குடும்பப் பிரச்சனை, நிதி நெருக்கடி போன்ற கடின சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போது நாம் நமது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தேவனில் வைக்க வேண்டும். அவர் எந்தச் சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கிறார்.

தலை சிறந்த மேன்மை

நான் ஜமைக்காவில் வளர்ந்த பொழுது என் பெற்றோர் என்னையும், என் சகோதரியையும் “நன் மக்களாக” இருக்கத்தக்கதாக எங்களை வளர்த்தார்கள். பெற்றோருக்கு கீழ்ப்படிதல், உண்மையைச் சொல்லுதல், பள்ளியிலும் மற்ற வேலைகளிலும் தலை சிறந்துவிளங்குதல். கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர்காவது ஆலயத்திற்குச் செல்லுதல், இவைகளே நல்லவர்கள் என்பதின் அடையாளமாக எனது வீட்டில் இருந்தது. நான் மேலே கூறிய விளக்கமே எல்லா நாட்டிலும் நல்லவர்கள் என்பதற்கு சரியான விளக்கமாக இருக்குமென்று நான் கற்பனை செய்கிறேன். உண்மையில் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தில் நல்லவர் என்ற பதத்திற்கு கொடுத்துள்ள விளக்கமானது, அதைவிட மேலான ஒரு காரியத்தை குறிப்பதாக இருக்கிறது .

பவுல் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தியுள்ள யூதனாக நியாயப்பிரமாண விதிகளை ஒழுங்காக கைக்கொண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறந்த கல்வியை கற்று, சிறந்த மதத்தை கைக் கொண்டு வந்தார். யூத பழக்க வழக்கங்களை கைக் கொண்டு நடப்பதில் பவுல் உண்மையாகவே நல்ல மனிதனாக விளங்கினார். அவர் விரும்பினால், அவருடைய மேன்மையான குணங்களைப்பற்றி அவர் மேன்மை பாராட்டலாம் என்று வசனம் 4இல் கூறுகிறார். அவர் மிக நல்லவர்தான் ஆயினும் நல்லவராக இருப்பதைவிட மேலான ஒரு காரியம் உள்ளதென்று, அவருடைய நிருபத்தை வாசிப்பவர்களுக்கு (நமக்கும்) கூறியுள்ளார். நல்லவராக கருப்பதும் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதும் ஒரே காரியம் அல்ல என்பதை பவுல் அறிந்திருந்தார்.

இயேசுவை பிரியப்படுத்துவது என்பது, இயேசுவை அறிந்து கொள்வதுதான் என்று வசனம் 7,8ல் பவுல் எழுதியுள்ளார். இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதும், இயேசு கிறிஸ்துவின் மேன்மைகளைய ஒப்பிடும் பொழுது, அவருடைய மேன்மைகள் எல்லாம் குப்பை என்று கருதினார். நாம், நமது மேன்மையை நம்பாமல், நமது நம்பிக்கையும், விசுவாசமும் கிறிஸ்துவில் மட்டுமே இருக்கும் பொழுது, நாம் நல்லவர்களாக இருக்கிறோம், தேவனை பிரியப்படுத்துகிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.  

 

கர்த்தருடைய கரத்தின் கிரியை

ஜூலை 12, 2022 அன்று, புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து ஆழமான விண்வெளியின் முதல் படங்களை விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கிகளைவிட இதன் மூலம் பிரபஞ்சத்தை வெகு தொலைவில் பார்க்க முடியும். திடீரென்று ஒரு மூச்சடைக்கக்கூடிய படம் வெளிப்படுகிறது: கரினா நெபுலாவின் ஓர் வண்ண இடைவெளி, இதுபோல் இதுவரை பார்த்ததில்லை. அப்போது நாசா விஞ்ஞானி ஒருவர், “எங்கேயோ, நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது" என்று ஓர் பிரபலமான நாத்திகர் கார்ல் சாகனின் வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.

சில சமயங்களில் மக்கள் தேவனைக் கண்ணால் கண்டும் உணராதிருக்கிறார்கள். ஆனால் சங்கீதக்காரன் தாவீது வானத்தைப் பார்த்து, “உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்” (சங்கீதம் 8:1) என்று அவன் பார்த்ததை சரியாய் அடையாளம் கண்டுகொண்டான். “நம்பமுடியாத ஒன்று காத்திருக்கிறது” என்று சாகன் சொன்னது சரிதான். ஆனால் தாவீது பார்த்ததை அவர் பார்க்க தவறிவிட்டார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்” (வச. 3-4). 

ஆழமான விண்வெளியின் படங்களைப் பார்க்கும்போது, நாம் வியப்படைகிறோம். தொழில்நுட்பத்தின் காரணமாக அல்ல, மாறாக, தேவனுடைய கரத்தின் கிரியையை நாம் சாட்சியிடுவதினால். ஏனென்றால் அவருடைய கரத்தில் கிரியைகளின்மீது தேவன் நமக்கு ஆளுகைக் கொடுத்திருக்கிறார் (வச. 6). உண்மையில் “நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது.” கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவரிடமாய் ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாயிருக்கிறார். இதுவே ஆச்சரியமான வெளிப்பாடாகும்.