எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கான் காம்பெல்கட்டுரைகள்

தத்தெடுக்கும் அழகு

“த பிளைன்ட் சைட்” என்று 2009 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமானது, மைக்கேல் ஓஹெர் என்பவரின் நிஜக்கதை. ஒரு குடும்பம் அவனுக்கு ஆதரவு தந்து, கற்றுக்கொள்ளுதலில் அவனுக்கு இருந்த குறைபாட்டை மேற்கொள்ளச் செய்து, அமெரிக்க கால்பந்து விளையாட்டில் சிறந்தவனாய் மாற்றுகிறது. அதில் ஒரு காட்சியில், அவர்களோடு பல மாதங்கள் தங்கியிருந்த மைக்கேலைப் பார்த்து, அவனை தத்தெடுத்துக்கொள்வதைக் குறித்து அவனிடத்தில் கேட்கிறார்கள். மைக்கேல் அவர்களைப் பார்த்து, நான் ஏற்கனவே குடும்பத்தின் அங்கத்தினராகவே இருப்பதாக மிக இனிமையாகவும் மென்மையாகவும் பதிலளிக்கிறான். 

இது ஒரு அழகான தருணம். தத்தெடுப்பது ஓர் அழகான விஷயம். அன்பு விரிவடைந்து, குடும்பம் ஒரு புது நபருக்கு தன் இரண்டு கரங்களையும் விரிக்கிறது. மைக்கேலின் வாழ்க்கை மாறியதுபோல, தத்தெடுத்தல் வாழ்க்கையை மாற்றுகிறது. 

விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் “தேவனுடைய பிள்ளைகளாய்” மாற்றப்படுகின்றனர் (கலா. 3:26). நாம் தேவனால் தத்தெடுக்கப்பட்டு அவருடைய குமாரனாகவும் குமாரத்தியாகவும் மாற்றப்படுகிறோம் (4:5). தேவனுடைய தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாய் அவருடைய குமாரனுடைய ஆவியைப் பெற்று தேவனை “அப்பா” என்று அழைக்கவும் (வச. 6), அவருடைய சுதந்திரனாயும் (வச. 7), கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரமாயும் (ரோமர் 8:17) மாற்றப்பட்டுள்ளோம். நாம் அவருடைய குடும்பத்தின் முழுமையான அங்கத்தினராய் மாற்றப்படுகிறோம்.  

மைக்கேல் ஓஹெரின் தத்தெடுப்பு அவனுடைய வாழ்க்கையையும், அங்கீகாரத்தையும், அவனுடைய எதிர்காலத்தையும் மாற்றியது. தேவனால் தத்தெடுக்கப்பட்ட நாம் எவ்வளவு மேன்மையானவர்கள்! அவரை தகப்பனாய் அறிந்ததினால் நம் வாழ்க்கை மாறுகிறது. அவருக்கு சொந்தமானதினால் நம் அங்கீகாரம் மாறுகிறது. மகிமையான நித்திய மாட்சிமை வாக்களிக்கப்பட்டதினால் நம் எதிர்காலமும் மாற்றப்படுகிறது. 

இயேசுவே நம் சமாதானம்

டெலிமேகஸ் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்த ஒரு துறவி இருந்தார். நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த அவருடைய மரணம் உலகத்தையே மாற்றியது. கிழக்கிலிருந்து ரோம் நகரத்தை பார்வையிட சென்ற துறவி, ரோம் நகர மைதானத்தில் அடிமைகளுக்கிடையில் நடைபெறும் கொடிய இரத்தம் தெரிக்கும் கிளாடியேட்டர் யுத்தத்தைத் தடுக்க எண்ணினார். அங்கே ஒருவரையொருவர் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்த அடிமை வீரர்களை தடுக்க எண்ணி, மைதானத்திற்குள் குதித்து அவர்களை தடுத்தார். கோபம்கொண்ட மக்கள் அவரை கல்லெறிந்து கொன்றார்கள். டெலிமேகஸின் இந்த செய்கையினால் தொடப்பட்ட ரோம பேரரசர் ஹோனோரியஸ், 500 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அடிமைகளின் இந்த மரண விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

பவுல் அப்போஸ்தலர் இயேசுவை “நம் சமாதானம்” என்று அழைக்கும்போது, அங்கே யூதர்களுக்கும் புறஜாதிகளுக்குமான விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் (எபேசியர் 2:14). தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, வேறுபிரிக்கப்பட்டு, பலவிதமான ஆசிர்வாதங்களை அனுபவித்தனர். உதாரணமாக, புறஜாதிகள் எருசலேம் ஆலயத்திற்குள் ஆராதிக்க அனுமதிக்கப்பட்ட பின்னரும், இதைத் தாண்டி வந்தால் மரணம் என்று வெளிப்புற அலங்கத்திலே யூதர்களால் தடுப்புச் சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. யூதர்கள் புறஜாதியினரை தீட்டாய் கருதினதால், இருதரப்பினருக்கும் எப்போதும் பகை நீடித்தது. ஆனால் இப்போது, எல்லோருக்குமான இயேசுவின் மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் யூதர்கள் புறஜாதிகள் அனைவரும் விசுவாசத்துடன் தேவனை ஆராதிக்கலாம் (வச. 18-22). தடுப்புச் சுவர் ஏதுமில்லை. எந்த இனத்தவருக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. தேவனுக்கு முன்பாக அனைவரும் சமம். 

டெலிமேகஸ் தன்னுடைய மரணத்தின் மூலமாய் அடிமை வீரர்களுக்கு சமாதானம் வரச்செய்தது போல, இயேசுவும் அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக அவரை நம்புகிற அனைவருக்கும் சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் வரச்செய்கிறார். இயேசு நம்முடைய சமாதானமாயிருந்தால் நம்முடைய வேறுபாடுகள் நமக்குள் பிரிவினை ஏற்படுத்துவதைத் தடுக்கமுடியும். அவருடைய இரத்தத்தினாலே நாம் ஒரே சரீரமாக்கப்பட்டுள்ளோம். 

நாம் பேசுவதை அவர் கேட்கிறார்

அமெரிக்க ஜனாதிபதியான ப்ராங்கிளின் ரூஸ்வெல்ட்டை சந்திக்க, ஒவ்வொருநாளும் அவருடைய வெள்ளை மாளிகையின் வரவேற்பறையில் நீண்ட வரிசை நின்றிருக்கும். அவர்களிடம் கைகுலுக்கும்போது, அவர் பேசுவதை யாரும் கவனிப்பதில்லை என்று அவருக்கு தோன்றியது. அவர் அதை பரிசோதிக்க எண்ணினார். அடுத்தமுறை அவரை சந்திக்கநின்ற அந்த நீண்ட வரிசையில் ஒவ்வொருவரின் கைகளைக் குலுக்கும்போதும், “இன்று காலை என்னுடைய பாட்டியை கொன்றுவிட்டேன்” என்று சொன்னாராம். பரபரப்பில் கைகுலுக்கிய பலபேர், “ஓ! மகிழ்ச்சி, தொடர்ந்து செய்ய எங்களுடைய வாழ்த்துக்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று பதிலளித்தனர். வரிசையில் கடைசியில் நின்றிருந்த பொலிவியாவின் தூதரகத் தலைவரிடமும் அதையே சொல்ல, புரிந்துகொண்ட அவர் குழப்பத்துடன், அருகாமையில் வந்து “அவர்களுக்கு அது தேவைதான்” என்று மெதுவாகச் சொன்னாராம். 

நீங்கள் பேசுவதை மக்கள் நிஜமாக கேட்கிறார்களா என்று சந்தேகித்ததுண்டா? அல்லது, நீங்கள் பேசுவதை தேவன் கேட்கிறாரா என்று நீங்கள் சந்தேகித்ததுண்டா? மக்கள் முகபாவணையையும் கண்களின் அசைவையும் வைத்து அவர்கள் நம்முடைய பேச்சைக் கேட்கிறார்களா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் தேவன் நமது பேச்சைக் கேட்கிறாரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? நம் உணர்வுகளை வைத்தா? அல்லது அவர் பதில்கொடுப்பதை வைத்தா?

பாபிலோன் அடிமைத்தனத்தில் எழுபது ஆண்டுகள் இருந்த பின்பு, தேவன் தன் ஜனத்தை மீட்டுக் கொண்டுவருவதாகவும், அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணியிருந்தார் (எரேமியா 29:10-11). எனவே அவர்கள் அவரை நோக்கிக் கூப்பிட்டவுடன், அவர் கேட்டார் (வச. 12). அவர் நம்முடைய கூக்குரலைக் கேட்பார் என்பது அவர்களுக்கு மிக நன்றாய் தெரியும். ஏனெனில் தேவன் கேட்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். நமக்கும் அப்படித்தான் (1 யோவான் 5:4). நாமும் உணர்வுகளை சார்ந்தோ, அல்லது அடையாளத்திற்கு காத்திருக்கவோ வேண்டியதில்லை. நம்முடைய ஜெபத்தைக் கேட்பதாக அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் சொன்னதை நிறைவேற்றுவார் (2 கொரிந்தியர் 1:20).

விவேகமான ஆலோசனையைக் கேட்பது

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு அரசியல்வாதியைப் பிரியப்படுத்த விரும்புவதாகக் கண்டார். எனவே அவர் சில யூனியன் ராணுவ படைவகுப்புகளை மாற்றுவதற்கான கட்டளையை வெளியிட்டார். போர் குழுவின் செயலாளர் எட்வின் ஸ்டாண்டன் இந்த உத்தரவைப் பெற்றபோது, அதை நிறைவேற்ற அவர் மறுத்துவிட்டார். ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று அவர் கூறினார். ஸ்டாண்டன் கூறியதை லிங்கனிடம் கூறினார்கள், அவர் பதிலளித்தார்: “நான் ஒரு முட்டாள் என்று ஸ்டாண்டன் சொன்னால், நான் அப்படியாக தான் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் எப்போதும் சரியானவர்; நான் என்னை சரிசெய்துக் கொள்கிறேன்.” இரண்டு பேரும் பேசினப்போது, ஜனாதிபதி தனது முடிவு ஒரு மோசமான தவறு என்பதை விரைவாக உணர்ந்தார். தயக்கமின்றி அவர் அதைத் திரும்பப் பெற்றார். ஸ்டாண்டன் லிங்கனை ஒரு முட்டாள் என்று அழைத்தபோதிலும், ஸ்டாண்டன் அவருடன் உடன்படாதபோது ஜனாதிபதி தனது தவறான முடிவை பிடித்துக்கொண்டு இல்லாதபடி, அதற்கு பதிலாக, லிங்கன் ஆலோசனையைக் கேட்டு, அதைக் கருத்தில்கொண்டு, மனதை மாற்றிக்கொண்டதின் மூலம் புத்திசாலி என நிரூபித்தார். 

ஞானமான ஆலோசனையைக் கேட்காத ஒருவரை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? (1 இராஜாக்கள் 12:1-11 ஐ காண்க.) இது எரிச்சலூட்டுகிறதல்லவா? அல்லது, இன்னும் தனிப்பட்ட முறையில், நீங்கள் எப்போதாவது ஆலோசனையைக் கேட்க மறுத்திருக்கிறீர்களா? நீதிமொழிகள் 12:15 கூறுவது போல், “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்கு செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்கு செவிக்கொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” மக்கள் எப்போதுமே சரியாக இருப்பார்கள் என்று கூறமுடியாது, அது நமக்கும் அது பொருந்தும்! எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் மட்டுமே விதிவிலக்கு என்று முட்டாள்கள் கருதுகிறார்கள். அதற்கு பதிலாக, நாம் ஆரம்பத்தில் உடன்படவில்லை என்றாலும், தெய்வீக ஞானத்தைக் கடைபிடிப்போம்; மற்றவர்களின் ஞானமான ஆலோசனையைக் கேட்போம். சில சமயங்களில் தேவன் நம்முடைய நன்மைக்காகவே அவ்வாறு செயல்படுகிறார் (வச. 2).

முட்டாள்தனத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஒரு நபர் மளிகை கடைக்குள் நடந்து சென்று கவுண்டரில் ரூ.500-யை வைத்து கொண்டு சில்லரை  கேட்டார். கடைகாரர் பணப் பெட்டியை திறந்த போது, அந்த மனிதன் ஒரு துப்பாக்கியை எடுத்து அனைத்து பணத்தையும் கேட்டார்  அந்த கடைக்காரர் உடனடியாக முழுவதையும் வழங்கினார். அந்த நபர் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார், ஐதூறு ரூபாய் நோட்டை கவுண்டரிலேயே  விட்டுவிட்டார் . அந்த பணப் பெட்டியிலிருந்து அவர் பெற்ற மொத்த பணம்?முன்னூறு ரூபாய்.

நாம் அனைவரும் சில நேரங்களில் முட்டாள்தனமாக செயல்படுகிறோம் ... இந்த திருடனைப் போலல்லாமல், நாம் சரியானதைச் செய்ய முயற்சிக்கிறோம். முக்கியமானது நமது முட்டாள்தனமான நடக்கையிலிருந்து நாம் எவ்வாறு கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். திருத்தம் செய்யவில்லை என்றால், நமது மோசமான தேர்வுகள் பழக்கமாக மாறக்கூடும், அது நம் தன்மையை எதிர்மறையாக வடிவமைக்கும். நாம் “முட்டாள்கள்” ஆகிவிடுவோம். . . மதிகெட்டவனாக” (பிரசங்கி 10: 3). 

சில நேரங்களில் நம் முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்வது கடினம், ஏனெனில் அதற்கு கூடுதலான செயல்பாடு தேவைப்படுகிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட குறைபாட்டை நாம் பிரதிபலிக்க வேண்டும், அது வேதனையானது. அல்லது ஒரு முடிவு அவசரமாக எடுக்கப்பட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும், அடுத்த முறை நாம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், நம்முடைய முட்டாள்தனமான வழிகளைப் புறக்கணிக்க அது ஒருபோதும் உதவாது.

அதிர்ஷ்டவசமாக, தேவன் நம்முடைய முட்டாள்தனத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் நம்மை வடிவமைப்பதற்கும் பயன்படுத்தலாம். எந்தச் சிட்சையும் “தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல்” துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்”(எபிரெயர் 12:11). நம்முடைய முட்டாள்தனமான நடக்கைக்காக நம்முடைய பிதாவின் சிட்சையை ஏற்றுக்கொள்வோம், அவர் விரும்பும் மகன்கள் மற்றும் மகள்களைப் போல நம்மை மேலும் மாற்றும்படி அவரிடம் வேண்டிக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.  

 

கர்த்தருடைய கரத்தின் கிரியை

ஜூலை 12, 2022 அன்று, புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து ஆழமான விண்வெளியின் முதல் படங்களை விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கிகளைவிட இதன் மூலம் பிரபஞ்சத்தை வெகு தொலைவில் பார்க்க முடியும். திடீரென்று ஒரு மூச்சடைக்கக்கூடிய படம் வெளிப்படுகிறது: கரினா நெபுலாவின் ஓர் வண்ண இடைவெளி, இதுபோல் இதுவரை பார்த்ததில்லை. அப்போது நாசா விஞ்ஞானி ஒருவர், “எங்கேயோ, நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது" என்று ஓர் பிரபலமான நாத்திகர் கார்ல் சாகனின் வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.

சில சமயங்களில் மக்கள் தேவனைக் கண்ணால் கண்டும் உணராதிருக்கிறார்கள். ஆனால் சங்கீதக்காரன் தாவீது வானத்தைப் பார்த்து, “உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்” (சங்கீதம் 8:1) என்று அவன் பார்த்ததை சரியாய் அடையாளம் கண்டுகொண்டான். “நம்பமுடியாத ஒன்று காத்திருக்கிறது” என்று சாகன் சொன்னது சரிதான். ஆனால் தாவீது பார்த்ததை அவர் பார்க்க தவறிவிட்டார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்” (வச. 3-4). 

ஆழமான விண்வெளியின் படங்களைப் பார்க்கும்போது, நாம் வியப்படைகிறோம். தொழில்நுட்பத்தின் காரணமாக அல்ல, மாறாக, தேவனுடைய கரத்தின் கிரியையை நாம் சாட்சியிடுவதினால். ஏனென்றால் அவருடைய கரத்தில் கிரியைகளின்மீது தேவன் நமக்கு ஆளுகைக் கொடுத்திருக்கிறார் (வச. 6). உண்மையில் “நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது.” கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவரிடமாய் ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாயிருக்கிறார். இதுவே ஆச்சரியமான வெளிப்பாடாகும்.