நம்மை அறிந்திருக்கிற இரட்சகர்
“அப்பா, நேரம் என்ன?” பின்இருக்கையில் அமர்ந்திருந்த என் மகன் கேட்டான். “5:30” என்று சொன்னேன். அடுத்து அவன் என்ன சொல்லுவான் என்பது எனக்குத் தெரியும். “இல்லை, 5:28தான் ஆகிறது!” அவனுடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி, அப்படியொரு சிரிப்பு. எனக்கும் சந்தோஷமாக இருந்தது.
பிள்ளைகளை கருத்தோடு கவனிக்கிற பெற்றோர்போலவே, நானும் என்னுடைய பிள்ளைகளை நன்கு அறிவேன். அவர்களை படுக்கையிலிருந்து எழுப்பும்போது என்ன சொல்லுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்குப் பிடித்தமான மதிய சாப்பாடு என்னவென்று தெரியும். அவர்களுடைய விருப்பங்கள், ஆசைகள், முன்னுரிமைகள் என்ன என்பதுபோன்ற பலவிஷயங்கள் அவர்களைப் பற்றித் தெரியும்.
ஆனால், நம் ஆண்டவர் நம்மைப் பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு, என் பிள்ளைகளைப் பற்றி, உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் எல்லாமே எனக்குத் தெரிந்திருந்தது என்று சொல்லமுடியாது.
இயேசு தம்முடைய மக்களை அதிகமாக அறிந்திருந்தார் என்பதை யோவான் 1ல் அறியமுடிகிறது. இயேசுவை வந்து சந்திக்கும்படி நாத்தான்வேலை பிலிப்பு அழைத்து வருகிறார், நாத்தான்வேல் இயேசுவின் அருகே சென்றதும், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று இயேசு சொன்னார். வச 47. நாத்தான்வேல் திகைத்து, “நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்கிறார். கேள்விக்கு சம்பந்தமே இல்லாததுபோல, அத்திமரத்தின்கீழ் கண்டதாக, இயேசு பதிலளிக்கிறார் வச 48
அந்தத் தகவலை இயேசு எதற்காகச் சொன்னார் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நாத்தான்வேலுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்! அதனால்தான் வியப்புநிறைந்தவராக, “ரபீ, நீர் தேவனுடைய குமாரன்” என்று சொல்லுகிறார். வச 49.
இதேபோல நம் ஒவ்வொருவரையும் நெருக்கமாக, முழுவதுமாக, பூரணமாக இயேசு அறிவார், அவ்வாறு அறிந்துகொள்ளவேண்டும் என்றுதான் நாமும் விரும்புவோம். அவர் நம்மை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறார் நாம் அவருடைய சீடர்களாக மட்டுமல்ல, அவருடைய அன்புள்ள சிநேகிதராகவும் இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார்.
புண்படுத்துகிற வார்த்தைகள்
“ஒட்டடைக்குச்சி” என்று ஒரு சிறுவன் கேலிசெய்தான். “ஒல்லிக்குச்சி” என்று ஒருவன் நக்கலடித்தான். நானும் பதிலுக்கு “குச்சிகளும் கற்களும் வேண்டுமானல் என் எலும்புகளை உடைக்கலாம், ஆனால் வார்த்தைகளால் என்னைப் புண்படுத்தவே முடியாது” என்று சொல்கிற பாடலை (skinny bones) பாடியிருக்கலாம். ஆனால் அப்போது நான் சிறுமியாக இருந்தபோதிலும், அந்தப் பாடல் சொல்லும் கருத்து பொய்யல்ல என்பது தெரியும். அன்பற்ற, சிந்தனையற்ற வார்த்தைகள் புண்படுத்துபவை. சிலசமயங்களில், உள்ளத்தின் ஆழத்திற்குச் சென்று, மோசமாகக் காயப் படுத்துபவை; கல்லால் அல்லது கம்பால் உண்டாகிற வடுவைவிட நெடுநாட்கள் நீடிக்கக்கூடியவை.
சிந்தனையற்ற வார்த்தைகள் எவ்வளவு வலிக்குமென்பது அன்னாளுக்குத் தெரியும். அவளுடைய கணவனான எல்க்கானாவுக்கு அவளைப் பிடிக்கும், ஆனால் அன்னாளுக்கு பிள்ளையில்லை. எல்க்கானாவின் இரண்டாவது மனைவியாகிய பெனின்னாளுக்கு அநேக பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகள் பெற்றால்தான் பெண்ணுக்கு மதிப்பு என்கிற ஒரு கலாச்சாரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். அன்னாளுக்கு பிள்ளையில்லை என்று சொல்லி பெனின்னாள் அவளை நித்தம் நித்தம் “மனமடிவுண்டாக்கினாள்.” அன்னாள் சாப்பிடக்கூட முடியாமல் உட்கார்ந்து அழுமளவிற்கு நிலைமை சென்றது. 1சாமுவேல் 1:6-7.
எனவே எல்க்கானா, “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ... பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா?” என்று கேட்கிறார். வசனம் 8. நல்ல எண்ணத்தோடுதான் கேட்டிருப்பார், ஆனால், யோசித்துக் கேட்டாரா என்று தெரியவில்லை. ஏனென்றால், அவர் அப்படிக் கேட்டது அன்னாளுக்கு மேலும் அதிக வேதனையாக இருந்திருக்கும்.
நம்மில் அநேகர் இதேபோல் புண்பட்டு, அவதிப்படுகிறோம். வேறுசிலர், புண்படுத்துகிறவர்களை பதிலுக்கு வசைபாடி, வார்த்தைகளைக் கொட்டி புண்படுத்துகிறோம். ஆனால், நாம் எல்லாருமே ஒன்று செய்யலாம், அன்பும் மனதுருக்கமும் நிறைந்த தேவனிடம் ஓடிச்சென்று பெலனையும் சுகத்தையும் பெறலாம். சங்கீதம் 27:5,12-14. அன்பும் கிருபையும் நிறைந்த வார்த்தைகளால் நம்மை மகிழ்ச்சியாக்குகிறார்.
நமக்காக வேண்டுதல்செய்கிறவர்
நான் ஆசியாவில் பயணம் மேற்கொண்டிருந்தபோது என்னுடைய ஐ-பாடின் திரையில் ஏற்பட்ட கோளாறால் அது செயலிழந்துபோனது. (வாசிப்பு உபகரணங்களும் பணி ஆவணங்கள் பலவும் அதில்தான் இருந்தன) எனவே ஒரு கணினி கடைக்குச் சென்றேன்; அங்கே இன்னொரு பிரச்சனை எழுந்தது. அதாவது எனக்கு சீன மொழி பேசத்தெரியாது, அந்தக் கடையிலிருந்த தொழில்நுட்பவியலாளருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. தீர்வுதான் என்ன? ஒரு மென்பொருளைத் திறந்து, தான் கேட்க விரும்பியதை சீன மொழியல் தட்டச்சு செய்தார்; அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது. அதை என்னால் வாசிக்கமுடிந்தது. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை அவர் சீனமொழியில் வாசிக்க முடிந்தது. நாங்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும், நாங்கள் தடையின்றி தகவல் தொடர்பு கொள்வதற்கு அந்த மென்பொருள் உதவியது.
சில சமயங்களில், நான் பரலோக பிதாவை நோக்கி ஜெபிக்கும்போது, என் இருதயத்திலுள்ளதைத் தெரிவிக்க இயலாத நிலையில் இருப்பேன். இதுபோன்ற அனுபவம் எனக்கு மட்டும் அல்ல, ஜெபிக்கும்போது பலருக்கு இந்தப் பிரச்சனை உண்டாகலாம். ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதுகிறார்: “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிற படியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்” (ரோம. 8:26-27).
பரிசுத்த ஆவியானவரின் இந்த ஈவு எத்தனை அருமையானது! எந்தவொரு கணினியின் மென்பொருளையும்விட என்னுடைய சிந்தைகளையும் ஆசைகளையும் பிதாவின் நோக்கங்களுக்கு இசைவான விதங்களில் அவர் தெளிவாகத் தெரியப்படுத்துகிறார். ஆவியானவரின் இந்தக் கிரியையின் நிமித்தம் ஜெபத்திற்கு பதில் கிடைக்கிறது!
சாதாரண நாடோடி வாலிபன்
1877ம் வருடத்தில் ஒருநாள் ஆலய ஆராதனையின்போது, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்கள் முன்னால் வரும்படி அழைப்புவிடுக்கப்பட்டது. ராட்னி ஸ்மித் என்கிற வாலிபர் முன்னே சென்றபோது “இவன் ஒரு நாடோடி” என்று யாரோ ஏளனமாக முணுமுணுத்தது அவர் காதில் விழுந்தது. ராட்னியின் பெற்றோரும் கல்வியறிவற்ற நாடோடிகள் தாம்; இந்த வாலிபர் பற்றி யாருமே பெரிதாக எண்ணவில்லை. ஆனால் தன்னைக் குறித்து தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டென்பதை ராட்னி நிச்சயமாக அறிந்திருந்தார். ஒரு வேதாகமத்தையும் ஆங்கில அகராதியையும் வாங்கி, வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். “இயேசுவிடம் செல்வதற்கான வழி கேம்பிரிட்ஜிலும், ஹார்வர்டிலும், யேலிலிலும் அல்லது கவிதைகளிலும் இல்லை. கல்வாரி என்கிற முற்கால மலையில்தான் உள்ளது” என்று இவர் ஒருமுறை சொன்னார். எல்லா தடைகளையும் தாண்டி, ஒரு சுவிசேஷகரானார் ராட்னி; அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் அநேகரை கிறிஸ்துவிடம் வழி நடத்தினார்.
பேதுருவும் சாதாரண ஒரு மனிதர்தான். ரபிமார்களின் மதப்பள்ளியில் படித்தவரல்ல (அப் 4:13), கலிலேயாவைச் சேர்ந்த ஒரு மீனவர். அந்த நிலையில்தான் “என் பின்னே வாருங்கள்” என்று இயேசு அழைத்தார். மத் 4:19. பேதுருவின் வளர்ப்பும், வழி நெடுகிலும் அவர் சந்தித்த தோல்விகளும் ஒரு புறம் இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் பற்றி “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்” என்று பின்னர் அவர் உறுதியாகக் கூறமுடிந்தது. 1பேதுரு 2:9.
கல்வி, வளர்ப்பு, பாலினம் அல்லது இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து இயேசுவின் மூலம் அனைவருமே தேவனுடைய குடும்பத்தில் சேரமுடியும், அவரால் பயன்படுத்தப்பட முடியும். இயேசுவை விசுவாசிக்கிற அனைவருமே “அவருடைய சொந்த ஜனமாக” மாறலாம்.
துன்பங்களை நீக்குவார்
பயங்கர கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார் மேரி அன் ஃபிரான்கோ. விபத்திலிருந்து உயிர்பிழைத்தாலும் கண்பார்வை முற்றிலும் பறிபோனது. “அதன்பிறகு இருளைத் தவிர வேறு எதையும் நான் பார்க்கவில்லை” என்று ஃபிரான்கோ சொன்னார். இருபத்தோரு வருடங்களுக்கு பிறகு, ஒரு சமயம் அவர் கீழே விழுந்ததில் அவருடைய முதுகில் அடிபட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் (கண் சம்பந்தமாக எந்தச் சிகிச்சையும் செய்யவில்லை.) அற்புதம் என்ன வென்றால், அவருடைய கண்பார்வை திரும்பக் கிடைத்தது! கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், முதன்முதலாக அப்போதுதான் தன் மகளுடைய முகத்தை அவர் பார்த்தார். ஃபிரான்கோவுக்கு எவ்வாறு பார்வை திரும்பக்கிடைத்தது என்பதற்கு விஞ்ஞான ரீதியில் பதிலில்லை என்கிறார் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர். இறுதியாக இருள் அகன்று, வெளிச்சத்தையும் அழகையும் அவரால் கண்டு ரசிக்கமுடிந்தது.
அறியாமை மற்றும் தீமையின் ஒரு மேகம் இந்த உலகத்தை மூடியுள்ளது; நாம் யாருமே தேவ அன்பைக் காணமுடியாதபடி அது செய்கிறது. ஏசா 25:7. இதை வேத வசனங்களும் சொல்லுகின்றன; நம்முடைய அனுபவத்திலும் காண்கிறோம். சுயநலம், பேராசை, சுயநிறைவு சிந்தை, அதிகாரம் மற்றும் புகழுக்கான பேராசை போன்றவை நம் பார்வையை மங்கச் செய்கின்றன; சத்தியமானவரும் மாறாதவருமான, “அதிசயமானவைகளைச் செய்த” தேவனை தெளிவாகப்பார்க்க முடியாதபடி செய்கின்றன. வசனம் 1.
'மூடியிருக்கிற மூடல்" என்கிற வார்த்தைகள் பொதுமொழிபெயர்ப்பில் 'துன்பத்துகில்" என்று உள்ளது. தனியே விடப்பட்டால் நாம் அந்தகாரத்தையும் குழப்பத்தையும் விரக்தியையும் மட்டுமே அனுபவிக்கிறோம். எதிலோ சிக்கிக்கொண்ட உணர்வும்தான் பெரும்பாலும் நம்மில் தடுமாற்றமும், காணப்படுகிறது; நமக்கு முன்னிருக்கும் பாதையை நாம் பார்க்கமுடிவதில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவன் இறுதியாக 'சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலை... அகற்றிப் போடுவார்" என்று ஏசாயா சொல்கிறார் (வச. 7).
தேவன் நம்பிக்கையற்றவர்களாக நம்மை விடமாட்டார். நம் பார்வையை மறைக்கிற எதையும் அவருடைய பேரன்பு அகற்றி, நன்மையான வாழ்க்கையும் பரிபூரண கிருபையும் நமக்கிருப்பதைக் காண்பித்து, ஆச்சரியமூட்டுவார்.
சகல ஜனங்களின் தேவன்
நியூஸ்பாய்ஸ் என்கிற கிறிஸ்தவ இசைக்குழுவின் முதன்மை பாடகராக இருந்தவர் பீட்டர் ஃபர்லர். “அவர் அரசாளுகிறார்” என்கிற துதிப்பாடலை தங்களுடைய குழுவினர் பாடும்போது ஏற்பட்ட அனுபவத்தை அவர் சொல்லுகிறார். சகல கோத்திரத்தாரும் தேசத்தாரும் ஒன்றுகூடி, தேவனைத் தொழுதுகொள்வதை அப்படியே தத்ரூபமாக அப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பாடலைப் பாடும்போதெல்லாம் கூடியிருக்கும் விசுவாசிகள் மத்தியில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலை உணரமுடிந்ததாக ஃபர்லர் கூறுகிறார்.
“அவர் அரசாளுகிறார்” பாடலின்போது ஃபர்லர் கண்டு அனுபவித்த அதே அனுபவம் பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் கூடியிருந்த விசுவாசிகள் மத்தியிலும் உண்டானது. சீடர்களை பரிசுத்த ஆவியானவர் நிரப்பியபோது (அப் 2:4), அங்கே விசேஷித்த ஓர் அனுபவம் உண்டானது. அதனால், சகல தேசங்களிலிருந்தும் கூடியிருந்த யூதர்கள் குழம்பிப்போனார்கள்; ஏனென்றால், அங்கே தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்படிக்கு அவரவர் தங்கள் சொந்த மொழியில் பேசப்படுவதைக் கேட்டனர் . வச 5-6,11. “யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” என்று பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் தேவன் சொல்லியிருக்கிறபடியே நிகழ்வதாக அங்கிருந்தவர்களுக்கு பேதுரு விளக்கினார். வச .16
அனைவரும் பிரமிக்கத்தக்க தேவவல்லமை அங்கு வெளிப்பட்டதினாலே, சுவிசேஷத்தை பேதுரு போதித்தபோது மக்கள் உடனே ஏற்றுக்கொண்டார்கள்; அன்றைய தினத்தில் மட்டும் மூவாயிரம்பேர் மனந்திரும்பினார்கள். வச 41. இந்த அற்புதமான ஆரம்பத்துடன், தங்கள் தங்கள் பகுதிக்குத் திரும்பிச்சென்ற புதிய விசுவாசிகள், அங்கே சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
அந்த நற்செய்தி இன்றும் எதிரொலித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் தேவன் தருகிற நம்பிக்கையின் செய்தி அது. நாம் ஒன்றுசேர்ந்து தேவனைத் துதிக்கும்போது, அவருடைய ஆவியானவர் நம் மத்தியில் அசைவாடுவார், சகல தேசங்களிலுள்ள மக்களிலும் அற்புதமான ஓர் ஐக்கியத்தை உண்டாக்குவார். அவர் அரசாளுகிறார்!
பகிர்ந்துண்டு வாழுதல்
ஸ்டீவுக்கு 62 வயது; இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர், வீடில்லாமல் திறந்த வெளிகளில் தங்கி வருபவர். ஒருநாள் சாயங்காலப் பொழுதில், தான் கையால் வரைந்த ஓவியம் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தார். பணம் சம்பாதிப்பதற்காக அவர் அவ்வாறு செய்வதுண்டு. அப்போது அங்கே வந்த ஒரு வாலிபப்பெண்மணி, ஸ்டீவுக்கு பல பீஸ்ஸாக்களைக் கொடுத்தாள். அதை நன்றியோடு வாங்கிக் கொண்டார் ஸ்டீவ். பிறகு தன்னிடமிருந்த அதிகமான உணவை, தன்னைப்போலவே வீடின்றி, பசியோடிருந்த ஒருவருடன் பகிர்ந்துகொண்டார். அந்தச் சமயத்தில் மீண்டும் திரும்பி வந்த அந்த வாலிபப்பெண்மணி, மறுபடியும் ஒரு தட்டு நிறைய உணவைக் கொடுத்துவிட்டுச் சென்றார். ஏற்கனவே தான் கொடுத்த உணவை ஸ்டீவ் அடுத்தவருடன் பகிர்ந்ததால், அந்த உணவைக் கொண்டுவந்ததாக அந்த வாலிபப்பெண் சொன்னாள்.
நீதிமொழிகள் 11:25ல் சொல்லப்பட்டுள்ளது போலவே ஸ்டீவின் வாழ்க்கையில் நடந்தது. நாம் மற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ளும்போது, நாமும் அதேவித இரக்கத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆனால், ஏதாவது திரும்பக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் எதையும் செய்யக்கூடாது. ஸ்டீவுக்கு நடந்ததுபோல உடனே பிரதிபலன் எப்போதும் கிடைப்பதில்லை. மாறாக, தேவன் சொல்லியிருக்கிறார் என்பதால் நாம் மற்றவர்களிடம் இரக்கமாக நடந்துகொள்ள வேண்டும். பிலிப்பியர் 2:3-4; 1யோவான் 3:17. அவ்வாறு நாம் செய்வதில் தேவன் பிரியப்படுகிறார். அவர் திரும்ப நமக்கு பணஉதவியோ, பொருள் உதவியோ பண்ணவேண்டுமென்கிற எந்த கட்டாயமும் கிடையாது. அப்படியிருந்தும், ஏதாவது வழியில் அவர் நமக்கு உதவுவார். சில சமயம் பொருள்ரீதியாகவும், சிலசமயம் ஆவிக்குரிய ரீதியாகவும் உதவுவார்.
இரண்டாவது தனக்குக் கொடுக்கப்பட்ட பீஸ்ஸாவையும் ஸ்டீவ் சிரித்த முகத்துடன் இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டார். தனக்கு வசதியில்லாவிட்டாலும் தயாளத்துடன் வாழ்வதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். தான் பெற்றதை தனக்கென வைத்துக்கொள்ளாமல், சந்தோஷமாக பிறருடன் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருந்தார். தேவன் நம்மை வழிநடத்தி, நம்மைப் பெலப்படுத்தினால், நாமும்கூட அப்படிப்பட்டவர்களாக வாழலாம்.
அபியின் ஜெபம்
அபி அப்போது உயர்நிலைபள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தாள். விமான விபத்து ஒன்றில் படுகாயமடைந்த ஒரு வாலிபனை பற்றி அபியும் அவளுடைய அம்மாவும் கேள்விப்பட்டார்கள். விபத்தில் தன் அப்பாவையும் வளர்ப்புதாயையும் அந்த வாலிபன் பறிகொடுத்திருந்தான். அந்த வாலிபன் யாரென்பது தெரியாவிட்டாலும், “அவனுக்காகவும் அவனுடைய குடும்பத்தினருக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டும்” என்று அபியின் அம்மா சொன்னார்.
ஒரு சில வருடங்கள் கடந்தன. இப்போது அபி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள். அவள் வகுப்பிற்குச் சென்றபோது, தன்னுடைய பக்கத்து இருக்கையில் அமரும்படி அபியிடம் ஒரு மாணவன் கேட்டுக்கொண்டான். அந்த மாணவனின் பெயர் ஆஸ்டின் ஹேட்ச். விமான விபத்தில் தப்பிய அந்த வாலிபனுக்காகத்தான் அபியும் அவளுடைய அம்மாவும் முன்பு ஜெபித்திருக்கிறார்கள். அபியும் ஆஸ்டினும் ஒருவரை ஒருவர் விரும்பி, 2018ல் திருமணம் செய்துகொண்டார்கள்.
பிறகு ஒரு பேட்டியின்போது, “என்னுடைய வருங்கால கணவருக்காக நான் ஜெபித்திருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று அபி சொன்னாள். நாமும், நமக்கும் நமக்குத் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே ஜெபிப்பதோடு முடங்கிவிடக்கூடாது. மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது, “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” என்று புத்திசொல்கிறார். எபே 6:18. அதிகாரத்தில் இருப்பவர்கள் உட்பட “எல்லா மனுஷருக்காகவும்” ஜெபம்பண்ணுங்கள் என்று 1தீமோ 2:1 கூறுகிறது.
எல்லாருக்காகவும், நமக்குத் தெரியாதவர்களுக்காகவும் ஜெபிப்போம். அப்படியும்கூட “ஒருவர் பாரத்தை ஒருவர்” சுமக்கலாம். கலா 6:2.
அன்றாடப் பணிகளில் அலுப்பா?
நேராக நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தண்டுகளை/பின்களை பெரிய பந்தை உருட்டி, குறிபார்த்து அடிக்கும் விளையாட்டை ஆங்கிலத்தில் பொளலிங் என்பார்கள். அவ்வாறு அந்தத் தண்டுகளை ஒரு பந்து அடிப்பதுபோல என் தோழியான எரின் தன் கணுக்காலில் பச்சை குத்தியிருந்தாள். “தண்டுகளை நேராக வையுங்கள்” என்கிற அர்த்தமுடைய சாரா குரூவ்ஸின் பாடலைக் கேட்டபிறகுதான் அவ்வாறு பச்சைக் குத்திக்கொள்ள அவளுக்கு எண்ணம் வந்ததாம். தண்டுகளை பந்து அடித்தபிறகு, அவற்றை மீண்டும் நேரே வைக்கவேண்டும், அடுத்து யாராவது அடிப்பார்கள், மீண்டும் நேராக வைக்கவேண்டும். அதுபோலத்தான் அன்றாட பணிகளும் இருக்கின்றன; சிலசமயங்களில் அவற்றைச் செய்வது அர்த்தமற்றது போலக்கூடத் தோன்றும். அத்தகைய பணிகளைச் செய்வதில் சந்தோஷங்கொள்ளுங்கள் என்று ஊக்கமூட்டுகிற பாடல் அது.
துணி துவைப்பது, சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது போன்ற வேலைகள் ஒரு நாள் முடிந்து, மறுநாளும் ஆரம்பிக்க வேண்டியவை. இது புதிதல்ல, எப்போதும் இருப்பதுதான். பழைய ஏற்பாட்டில் பிரசங்கி என்கிற புத்தகத்திலும் அதுபற்றிச் சொல்லப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் அன்றாட பணிகளை மீண்டும் மீண்டும் செய்வதில் என்னதான் பயனிருக்கிறது என்று அப்புத்தகத்தின் ஆசிரியர் அலுத்துக்கொள்கிறார். பிர 1:2-3. சில சமயங்களில் அவை அர்த்தமற்றவையாகவும் தோன்றுகிறதாம். “முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்.” வசனம் 9.
ஆனால் “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது” அப்பணிகள் அர்த்த முள்ளவையாக மாறுவதாகவும், சந்தோஷ உணர்வு கிடைப்பதாகவும் அதன் ஆசிரியர் கூறுகிறார். பிர 12:13. வாழ்க்கையின் அன்றாட பணிகளை தேவன் உயர்வாகப் போற்றுகிறார், அவற்றை உண்மை யோடு செய்பவர்களுக்கு பலனளிக்கிறார். வச 14. இதை உணரும்போது ஆறுதல் உண்டாகிறது.
நீங்கள் மீண்டும் மீண்டும் நேரே நிறுத்தவேண்டிய “தண்டுகள்”/பின்கள் யாவை? அத்தகைய வழக்கமான வேலைகளைச் செய்வது களைப்பாகத் தோன்றும்போது, தேவனுக்கான அன்பின் பணிகளாக அவற்றைச் சமர்ப்பித்து, செய்துபாருங்களேன்!