
வைக்கோல் போர் ஜெபங்கள்
இயேசுவைப் பற்றிய சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு இன்னும் அதிக ஜனங்களைத் தேவன் அனுப்பும்படி சாமுவேல் மில்ஸ் என்பவரும், அவருடைய நான்கு நண்பர்களும் அடிக்கடி கூடி ஜெபித்து வந்தனர். 1806ஆம் ஆண்டு, ஒரு நாள், அவர்கள் தங்கள் ஜெபத்தை முடித்து விட்டுத் திரும்பியபோது, ஒரு பெரிய புயல் காற்றில் அகப்பட்டனர். எனவே அவர்கள் ஒரு வைக்கோல் போர் அண்டை அடைக்கலமாயினர். அதிலிருந்து அவர்களுடைய வாராந்திர ஜெபக்கூடுகை “வைக்கோல் போர் ஜெபக்கூடுகை” என்றழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் உலகளவில் செயல்படும் ஓர் இயக்கமானது. இன்றும் இந்த வைக்கோல் போர் ஜெபக்குழுவின் நினைவுச் சின்னம் அமெரிக்காவில் வில்லியம்ஸ் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நம் ஜெபத்தின் மூலம், தேவன் செயல்படக் கூடியதை அது நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.
அவருடைய பிள்ளைகள் ஒரு பொதுவான நோக்கத்தோடு தன்னிடம் வரும்போது, நம்முடைய பரலோகத் தந்தை வெகுவாக மகிழ்ச்சியடைகின்றார். அது, ஒரு குறிப்பிட்ட பாரத்தை குடும்ப நபர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டு, ஒரு மனதோடு குடும்ப ஜெபத்தில் வருவது போலவுள்ளது.
அதிகமான துன்பங்களைச் சந்தித்த காலத்தில், மற்றவர்களின் ஜெபத்தின் மூலம் தேவன் தனக்கு எப்படி உதவினார் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகின்றார். “அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார். அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும் பொருட்டு நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவி செய்யுங்கள்” (2 கொரி. 1:10-11) தேவன் நம்முடைய ஜெபங்களை, சிறப்பாக நம்முடைய குழு ஜெபங்களை , இவ்வுலகில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றப் பயன் படுத்துகின்றார்.
நாம் அநேகராகக் கூடி ஜெபிக்கும் போது, தேவன் தரும் நன்மைகளுக்காக நாம் சேர்ந்து மகிழ்வோம். நம்முடைய அன்புத் தந்தை, நாம் அவரிடம் வரும்படி காத்திருக்கின்றார், ஏனெனில் நாம் நினையாத வழிகளில், நம்மூலம் அவர் கிரியை செய்ய முடியும்.

பாடல் மூலம் பெலப்படல்
இரண்டாம் உலகப்போரின் போது, நாசி படைகளுக்குத் தப்பி வந்த யூத அகதிகளை ஒளித்து வைத்துக்கொள்ள, பிரான்ஸ் தேசத்தின் கிராமத்தினர் பெரிதும் உதவினர். அவர்களுடைய ஊரைச் சுற்றியுள்ள காடுகளில், சிலர் பாடல்களைப் பாடினர். அது, அகதிகள் தங்கள் மறைந்திருக்கும் இடங்களிலிருந்து வெளிவர பாதுகாப்பானது என்பதை அவர்களுக்குத் தெரிவித்தது. லீ சேம்பான் சர்லிக்னன் என்ற ஊரின் ஜனங்கள், தங்கள் போதகர் ஆன்ட்ரூ ட்ரோக்மே, அவரது மனைவி மேக்டா ஆகியோர் விடுத்த அழைப்பிற்குச் செவிகொடுத்து, யுத்த காலத்தில் தாங்களிருக்கும் பகுதியில் அடைக்கலம் தேடி வந்த யூதர்களுக்கு தைரியமாக பாதுகாப்பளித்தனர். அந்த இடம் “லா மான்டேக்ன் பிராடஸ்ட்டன்ஸ்” என்றழைக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த இசைவழி குறிப்பு, அந்த கிராமத்து மக்களின் தைரியமான செயலுக்கு ஓர் அடையாளம். இதன் மூலம் கிட்டத்தட்ட 3,000 யூதர்கள் மரணத்தினின்று காக்கப்பட்டனர்.
மற்றொரு பயங்கரமான நேரத்தில், சவுல் தாவீதைக் கொலை செய்யும் படி எதிரிகளை, இரவு நேரத்தில் தாவீதின் வீட்டிற்கு அனுப்பியபோது தாவீது பாடினான். அவனுடைய இசை ஓர் அடையாளமாக இசைக்கப்படவில்லை. அது, தனக்கு அடைக்கலமாயிருந்த தேவனுக்கு அவன் செலுத்திய நன்றி காணிக்கை. தாவீது, “நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கம் உண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும், உயர்ந்த அடைக்கலமுமானீர் (சங். 59:16).
தாவீதின் பாடல் இருளின் பயங்கரத்தில் பாடப்பட்ட பாடலல்ல. அது சர்வவல்ல தேவன் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்திய பாடல். “தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுமுள்ள என் தேவனுமாயிருக்கிறார் (வச. 17) என்று பாடினான்.
தாவீதின் துதியும், லீ சேம்பான் கிராமத்தினரின் பாடல்களும், நம்மையும் துதித்துப் பாட அழைக்கின்றது. நம் வாழ்வின் கவலைகளின் மத்தியில் நாம் அவருக்கு இசையை எழுப்புவோம் அவர் அன்போடு நமக்கு பதிலளித்து நம் இருதயங்களைப் பெலப்படுத்துவார்.

காத்திருக்க உகந்தது
டோக்கியோ பட்டணத்தில், ஷிபுயா ரயில் நிலையத்திற்கு வெளியே, ஹச்சிகோ என்றழைக்கப்பட்ட ,அகிட்டா வகை நாயின் சிலை, நினைவுச் சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது. ஹச்சிகோ, தனது எஜமானனிடம் காட்டிய மிகச் சிறந்த விசுவாசத்தை அது நினைவு படுத்துகின்றது. அதன் எஜமானன் ஒரு பல்கலைகழகப் பேராசிரியர். அவர் அந்த ரயில் நிலையத்தின் வழியாக அனுதினமும் பிரயாணம் பண்ணினார். ஒவ்வொரு நாள் காலையும் அந்த நாய் அவரோடு ரயில் நிலையத்திற்கு வரும், மீண்டும் மாலை அவரைச் சந்திக்க, அந்த ரயில் வரும் நேரத்திற்கு வந்துவிடும்.
ஒரு நாள் அந்த பேராசிரியர், அந்த ரயில் நிலையத்திற்கு திரும்பி வரவில்லை. அவர் தன் பணியிடத்திலேயே மரித்துப்போனார். அதிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தன் எஞ்சிய வாழ்நாள் முழுதும் ஹச்சிக்கோ ஒவ்வொரு நாள் மாலையும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வந்துவிடும். ஒவ்வொரு நாளும், எந்தக் காலநிலை இருந்தாலும், தன்னுடைய எஜமானன் திரும்பி வருவதை அந்த நாய் ஆர்வத்தோடு எதிர்பார்த்தது.
தெசலோனிக்கேயரின் விசுவாசத்தை பவுலும் பாராட்டுகின்றார். அவர்களின் “விசுவாசத்தின் கிரியையையும்”, “அன்பின் பிரயாசத்தையும்”, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையின் பொறுமையையும் (1 தெச. 1:2) பாராட்டுகின்றார். மிகுந்த எதிர்ப்புகளின் மத்தியில், அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கை முறையை விட்டு விட்டனர், “இனி வரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” (வச. 9-10) என்று அவர்களைப்பற்றி கூறுகின்றார்
இந்த ஆதி விசுவாசிகள், இரட்சகர் மீது வைத்திருக்கும் விசுவாசமும், தேவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பும், அவர்களை உபத்திரவங்களையும் தாண்டி தங்களுடைய விசுவாசத்தை ஊக்கத்தோடு பகிர்ந்துகொள்ளச் செய்தது. இயேசுவுக்காக வாழ்வதைவிட மேலானது ஒன்றுமில்லை என்பதில் உறுதியாயிருந்தனர். அவர்களை பெலப்படுத்திய அதே பரிசுத்த ஆவியானவர் (வச. 6) நம்மையும் பெலப்படுத்துகின்றார். இயேசுவுக்காக ஊழியம் செய்துகொண்டே, அவருடைய வருகையையும் எதிர்பார்த்திருப்பது எத்தனை நன்மையானது.

உன்னுடைய பெயரை அதில் எழுது
கிளெனிஸ் நெல்லிஸ்ட் எழுதிய “தேவனுடைய அன்புக் கடிதங்கள்” என்ற புத்தகங்கள் குழந்தைகளைத் தனிப்பட்ட முறையில் தேவனோடு ஆழமாக உறவாட அழைக்கின்றன. இந்தப் புத்தகங்களில் வரும் ஒவ்வொரு வேதாகமக் கதைக்கும் பின்னால், தேவனுடைய செய்தி என்ற பகுதியில் குழந்தைகள் தங்களுடைய பெயரை எழுதுவதற்கான இடம் விடப்பட்டிருக்கும். வேதாகமச் சத்தியங்களை, இளம் வாசகர்கள் தங்களுடையதாக்கிக் கொள்ளும்போது, வேதாகமம் வெறும் கதையல்ல என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். தேவன் அவர்கள் ஒவ்வொருவரோடும் உறவு வைத்துக் கொள்கின்றார், தான் மிகவும் நேசிக்கும் குழந்தைகளோடு வேதாகமத்தின் மூலம் பேசுகின்றார் என்பதையும் கற்றுக் கொள்கின்றனர்.
நான் இந்த புத்தகத்தை என்னுடைய உறவினரின் குழந்தைக்காக வாங்கி அதில், தேவனுடைய செய்தி என்ற பகுதியில் அவனுடைய பெயரை எழுதினேன். தன்னுடைய பெயரைப் பார்த்ததும் அவன் வெகுவாக மகிழ்ந்தான் அவன், “தேவன் என்னையும் நேசிக்கிறார்!” என்றான். நம் மீது தனிப்பட்ட அன்பு வைத்திருக்கின்ற நம்முடைய படைப்பின் கர்த்தாவைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்து கொள்வது எத்தனை ஆறுதலாகவுள்ளது.
தீர்க்கதரிசி ஏசாயாவின் மூலம் தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசிய போது, அவர்களின் கவனத்தை வானத்துக்கு நேராகத்திருப்புகின்றார். தேவன் வானத்திலுள்ள அனைத்து விண் மீன்களையும் கட்டுப் படுத்துகின்றார். அவற்றைப் பெயரிட்டு அழைக்கின்றார் (ஏசா. 40:26). ஒவ்வொரு விண் மீனுக்கும் தனிப்பட்ட மதிப்பை நிர்ணயிக்கின்றார், ஒவ்வொன்றையும் அன்போடு வழிநடத்துகிறார். அவர் தன்னுடைய ஜனங்களில் ஒருவரையும் மறப்பதில்லை, விட்டு விலகுவதுமில்லை அவர் உருவாக்கிய ஒவ்வொரு அன்பு குழந்தையையும் ஒரு நோக்கத்தோடு உருவாக்கியுள்ளார். அவர்கள் மீது முடிவில்லா அன்பு கொண்டுள்ளார்.
சர்வவல்ல தேவன், நமக்குத் தந்துள்ள வாக்குத்தத்தங்களையும், அவர் நம்மீது வைத்துள்ள அன்பையும் வேதாகமம் நமக்குக் காட்டுகின்றது .நாம் நமது பெயரை அவற்றில் எழுதிக் கொள்ளலாம். அந்தக் குழந்தை மகிழ்ந்து கூறியது போல நாமும் “தேவன் என்னையும் நேசிக்கின்றார்” என்று நம்பிக்கையோடு சொல்லுவோம்.
