வகை  |  odb

திராட்சை செடியில்

கடுமையான குளிர் காலத்தில், எம்மா தன்னுடைய குடும்பத்தின் நபர் ஒருவருக்கு, அவருடைய நீண்ட நாள் சுகவீனத்தில் உதவினாள். கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள அவளுடைய வீட்டினருகிலுள்ள செர்ரி மரங்களைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவளுக்கு ஓர் ஊக்கம் கிடைக்கும். அந்த இளஞ்சிவப்பு நிற செர்ரி மலர்களினூடே ஒரு வெள்ளையான மலர் கொத்து வெளிப்பட்டது. ஒரு புத்திசலியான தோட்டக்காரர் அந்த செர்ரி மரக் கிளையில் வெண்மை மலர் கொப்பு ஒன்றை ஒட்ட வைத்தார். அந்த அசாதாரணமான மரத்தை எம்மா கடந்து செல்லும் போதெல்லாம், திராட்சைக் கொடிகளைப் பற்றி இயேசு சொன்ன வார்த்தைகளை அவள் நினைவு கூர்ந்தாள். இயேசுவின் சீடர்களாகிய நாம் அவரில் கிளைகளாக ஒட்டப் பட்டுள்ளோம். அவரில் நிலைத்திருந்து அவர் தரும் ஆகாரத்தையும், பெலனையும் பெற்றுக் கொண்டோமேயானால் நாமும் மிகுந்த கனிகளைத் தர முடியும் (யோவா. 15:6).

எம்மா தன் குடும்ப நபர் ஒருவருக்கு ஆதரவாக இருந்தது போல, அவள் இயேசுவில் நிலைத்திருந்து தன்னுடைய ஆகாரத்தை இயேசுவிடமிருந்து பெற்றுக் கொண்டாள்.

இளஞ்சிவப்பு ,மலர்களினிடையே இருந்த வெண் மலர்கள், இந்த உண்மையை உறுதிப் படுத்தின. அவளும் இயேசுவில் நிலைத்திருந்தால் அவளுக்குத் தேவையான பெலனை அவர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

திராட்சைக் கொடியானது செடியில் நிலைத்திருக்க வேண்டியது எத்தனை அவசியமோ அப்படியே இயேசுவின் விசுவாசிகளான நாமும் அவரோடு நெருங்கி ஜீவிக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய விசுவாசம் உறுதியாயிருந்து பலன் தரும்.

தன்னை திராட்சைச் செடி என்று கூறும் இயேசு, இஸ்ரவேலர் அதன் கொடிகள் என்றும், அவர்கள் தம்மோடு இணைக்கப்பட்டவர்கள் என்றும் உணர்த்துகிறார். அவரில் நிலைத்திருக்கும் போது, அவருடைய போஷாக்கையும் பெலனையும் பெற்று, மிகுந்த கனிகளைக் கொடுப்பர் (யோவா. 15:5).

சிறியதாக உணர்தல்

அநேக திரைப் பட விமர்சகர்கள், டேவிட் லீன் தயாரித்த லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற திரைப் படத்தை, எல்லாப் படங்களுக்கும் மேலானதாகக் கருதுகின்றனர். அதில் வருகின்ற எல்லையில்லாத அரேபிய பாலைவனத்தின் காட்சிகள் திரைப்பட தயாரிப்பாளர்களின் தலை முறைகளைக் கவர்ந்துள்ளது. திரைப்படத் துறையில் சிறந்த விருது பெற்ற தயாரிப்பாளரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், “நான் முதன் முறையாக லாரன்ஸ் படத்தைப் பார்த்த போது,  கவரப் பட்டேன், அது என்னை மிகவும் சிறியவனாக எண்ணச் செய்தது. இன்னமும் என்னை குறுகியவனாக எண்ணச் செய்கின்றது. அதுவே அப்படத்தின் பெருமையின் அளவுகோல்” என்றார்.

நான் சமுத்திரத்தைப் பார்க்கும் போதும், துருவப் பகுதியை மூடியிருக்கும் பனியின் மேலே பறக்கும் போதும், இரவு வானத்தில் லட்சக் கணக்கான விண் மீன்களைப் பார்க்கும் போதும், இந்தப் படைப்புகளின் மத்தியில் நான் மிகச் சிறியவனாகத் தோன்றுகின்றேன்.  படைக்கப் பட்ட உலகம் இத்தனை பரந்து, விரிந்து காணப் படுமாயின், அதனை தன் வார்த்தையாலே படைத்தவர் எத்தனை பெரியவர்?

தேவனுடைய பெரிய தன்மையையும், நாம் ஒன்றுமில்லை என்ற உணர்வையும் தாவீது வெளிப் படுத்துகின்றார்.  “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் மனுஷ குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?” (சங். 8:4) என்கிறார். ஆனால் தேவன், “ ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” என்கின்றார் (மத். 6:26).

நான் என்னைக் குறித்து சிறியதாகவும், ஒன்றுமில்லாததாகவும் உணரலாம். ஆனால் என்னுடைய தந்தையின் கண்களில் நான் விலையேறப் பெற்றவன். நான் ஒவ்வொரு முறை சிலுவையைப் பார்க்கும் போதும் என்னுடைய மதிப்பு அங்கே விளங்குகின்றது.  தேவன் என்னை மீட்டு, நான் அவரோடு இருக்கும் படி மனப் பூர்வமாய் செலுத்திய கிரயம், நான் எத்தனை விலயேறப் பெற்றவன் என்பதற்குச் சான்றாகவுள்ளது.

திரும்பி ஓடு

அலி ஓர் அழகிய, புத்திசாலியான, திறமைகள் வாய்ந்த வாலிபப் பெண். அன்பான பெற்றோரைக் கொண்டவள். அவளுடைய உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் அவளுக்குள் ஏதோவொன்று, ஹெராயின் என்ற போதைப் பொருளை எடுத்துக் கொள்ளுமாறு தூண்டிக் கொண்டேயிருந்தது. அவளுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை அவளுடைய பெற்றோரும் கவனித்தனர். அவளை ஒரு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த போதை வஸ்து அவளுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை, அவள் ஒத்துக் கொண்டாள். அங்கு அவள் சிகிச்சையை முடித்த பின்னர், அவளுடைய சிநேகிதிகளுக்கு போதைப் பொருளைக் குறித்து என்ன செய்தியைக் கொடுக்கப் போகின்றாளெனக் கேட்டபோது, அவள், “உடனே திரும்பி ஓடு, என்பதே” என்றாள். வெறுமனே “இல்லை” எனக் கூறுவது போதாது, திரும்பி ஓடிவிட வேண்டுமென்றாள்.

ஆனால் அலி மீண்டும் தன் பழைய போதைப் பழக்கத்திற்குத் திரும்பினாள். அதிகப் படியான போதைப் பொருட்களை எடுத்ததால், தனது இருபத்திரண்டாம் வயதில் மரித்துப் போனாள். மனமுடைந்த அவளுடைய பெற்றோர், இத்தகைய முடிவுக்குள்ளாக மற்றவர்களும் போய் விடாதபடி முயற்சி எடுத்து, ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு வந்திருந்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த செய்தி, “அலிக்காக ஓடுங்கள்”, போதை வஸ்துக்கள் போன்ற அபாயங்களிலிருந்து வெகு தூரம் விலகி ஓடுங்கள் என்று தெரிவித்தனர்.

ஆவிக்குரிய மகனாகிய தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலனாகிய பவுல் தீமையை விட்டு விலகி ஓடும்படி கூறுகின்றார்  (2 தீமோ.த்தேயு 2::22). அப்போஸ்தலனாகிய பேதுருவும் இதனையே, “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்” (1 பேது. 5:8-9) என்று கூறுகின்றார்.

நம்மில் ஒருவருமே சோதனைகளுக்கு விலக்கப் பட்டவர்களல்ல. ஆனால் அதனை மேற் கொள்ளும் சிறந்த வழி – அப்படிப் பட்ட சூழ்நிலைகளைத் தவிர்த்து விடுதலேயாகும். ஒரு வேளை அதனை எப்பொழுதும் தவிர்க்கக் கூடாததாகயிருப்பின் தேவன் மீதுள்ள ஆழ்ந்த நம்பிக்கையோடு வேதத்தில் கூறப் பட்டுள்ளபடி ஜெபத்தின் மூலம் பெலன் பெற்றுக் கொள்வோம். “நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்தால், எப்பொழுது திரும்பி அவரிடம் ஓடி வர வேண்டுமெனத் தெரிந்து கொள்வோம்.”

தண்ணீரைக் காட்டிலும் மேலானது.

என்னுடைய குழந்தைப் பருவத்தில், என்னுடைய ஆலயத்தைக் குறித்து என் நினைவில் தங்கியிருக்கும் ஒரு காட்சி -  எங்கள் போதகர் ஆலயத்தின் நடுப் பகுதி வழியே நடந்து வந்து “ஞானஸ்நானத்தின் தண்ணீரை நினைத்துக் கொள்ளுங்கள்” என்பார். ஞானஸ்நானத்தின் தண்ணீரை நினைவு படுத்துவதா? நான் எனக்குள்ளாகவே கேட்டுக் கொள்வேன்.  தண்ணீரை எப்படி நினைவில் வைப்பது? அத்தோடு அவர் ஒவ்வொருவர் மீதும் தண்ணீரைத் தெளிப்பார். குழந்தையாக இருந்த எனக்கு அது மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது.

நாம் ஏன் ஞானஸ்நானத்தை நினைவு கூர வேண்டும்? ஒரு மனிதன் ஞானஸ்நானம் பெறும் போது தண்ணீரை விட மேலான அநேகக் காரியங்கள் அதில் அடங்கியுள்ளன. ஞானஸ்நானம் என்பது இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால் நாம் அவரையே தரித்துக் கொள்கின்றோம் (கலா. 3:27) என்பதன் அடையாளம். இன்னும் சொல்வோமாகில், நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களென்பதையும், அவர் நம்மில், நம்மோடு வாசமாயிருக்கிறார் என்பதையும் நாம் ஞானஸ்நானத்தின் மூலம் கொண்டாடுகின்றோம்.

நாம் சொல்லிக் கொள்ளக் கூடிய அளவு எந்த முக்கியத்துவமும் வாய்ந்தவர்களல்ல, ஆனால்  நாம் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டவர்களானால் நம்முடைய அடையாளம் அவர் மூலமாய் வெளிப்படுகின்றது.. நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம் (வச. 26) என இப்பகுதி தெரிவிக்கின்றது. நாம் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொண்டதாலல்ல, தேவன் மீதுள்ள விசுவாசத்தினாலேயே நீதிமான்களாக்கப் பட்டோம் (வச. 23-25). எனவே, நமக்குள் ஆண், பெண் என்றோ, கலாச்சாரத்தினாலோ அல்லது தகுதியினடிப்படையிலோ எந்தப் பிரிவும் இல்லை. நாம் விடுதலையாக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் நாமனைவரும் ஒன்றாயிருக்கின்றோம். இப்பொழுது, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் (வ 28)

எனவே, நாம் ஞானஸ்நானத்தை  நினைவு கூரவும், அதன் முக்கியத்துவத்தை உணரவும் காரணங்களுள்ளன. நாம் வெறுமனே ஞானஸ்நானத்தை சடங்காச்சாரமாகப் பார்க்காமல்,  நாம் தேவனுக்குச் சொந்தமாகிறோம், அவருடைய பிள்ளையாகிறோம், என்பதை நினைவில் கொள்ளுவோம்.  நம்முடைய அடையாளமும், எதிர் காலமும், ஆவியின் விடுதலையும் அவருக்குள் உண்டாயிருக்கின்றது.

திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே

தூண்டி விட்டு திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே. ஏனெனில் “ட்ரோல்” (TROLL)  என்றழைக்கப்படும் யுக்தி வலைதளங்களில் பரவி வருகின்றது. வேண்டுமென்றே பிறரை கோபமடையச் செய்யும், காயப்படுத்தும் கருத்துக்களை செய்திகளில் அல்லது சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிக்கின்றார்கள். ஆனால் இத்தகைய செய்திகளுக்கு செவி சாய்க்கவில்லையெனில் அவர்களால் உரையாடல்களைத் திசை திருப்புவது கடினமாகி விடுகின்றது.

ஆக்கபூர்வமான உரையாடல்களுக்குச் சற்றும் ஆர்வம் காட்டாத மக்களைச் சந்திப்பது என்பது ஒரு புதிய காரியமல்ல. “தூண்டி விட்டு திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே” என்பதற்குச் சமமான வேதவாக்கியம் நீதிமொழிகள் 26:4ல்  கொடுக்கப் பட்டுள்ளது. “மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறு உத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்” என்பது.

ஆனால் மிகவும் பிடிவாதமான குணமுடைய மனிதனும் விலையேறப்பெற்ற தேவனுடைய சாயலைப் பெற்றவன். நாம் ஒரு  வேளை பிறரோடு அதிகம் பேசுபவராக இல்லையெனில்  நாம் நம்மைக் குறித்து உயர்வாக மதிப்பிடுபவராகவும், பிறரை மதியாதவராகவும், தேவனுடைய கிருபைக்குத் தூரமானவர்களாகவும் கருதப்படக் கூடும் (மத். 5:22)

எனவே தான் நீதிமொழிகள் 26:5 இதற்கு மாறான ஓர் ஆலோசனையைத் தருகின்றது. நாம் தாழ்மையோடு ஜெபத்தில்தேவனைச் சார்ந்து கொண்டால்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அன்பை வெளிப் படுத்த முடியும். (கொலோசேயர் 4:5-6) சில வேளைகளில் நாம் பேச வேண்டும், வேறு சில வேளைகளில் அமைதியாயிருப்பதே மேலானது.

நாம் தேவனுக்குச் சத்துருவாக இருந்த போதும்  நம்மை அவரண்டை இழுத்துக் கொண்ட அதே தேவன் இன்றும் ஒவ்வொரு மனிதனின்  இருதயத்திலும் வல்லமையாகக் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை எல்லா சூழ்நிலைகளிலும் தெரிந்து கொண்டால் நாம் சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம்.  (ரோம. 5:10). கிறிஸ்துவின் அன்பை நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர் தரும் ஞானத்தைச் சார்ந்து கொள்வோம்.