வகை  |  odb

அன்பின் நீண்ட எல்லை

மேரி லீ என்பது 16 அடி நீளமும், 3500 பவுண்டு எடையும் கொண்ட பெரிய வெள்ளை சுறாமீன். கடல் ஆய்வாளர்களால் பரப்பி பொருத்தப்பட்டு 2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் கிழக்குச் சமுத்திரத்தில் விடப்பட்டது. அதன் மேல்பக்கத் துடுப்புடன் இணைக்கப்பட்ட பரப்பி, செயற்கைகோள் மூலம் கண்காணிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக மேரி லீ மேற்கொண்ட பயணங்கள் ஆராய்ச்சியாளர்களாலும் , கடலில் பயணிப்பவர்களாலும் நேரடியாகப் பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 40,000 மைல் தொலைவு வரையும் அதனைப் பின் தொடர்ந்தனர். ஆனால், ஒருநாள் அதனோடிருந்த தொடர்பு நின்று விட்டது. ஒருவேளை, அதன் பரப்பியிலுள்ள பாட்டரி செயலிழந்திருக்கலாம்.

மனித அறிவும் ,தொழில் நுட்பமும் இவ்வளவு தான் செயல்பட முடிந்தது. மேரி லீயைப் பின் தொடர்ந்தவர்களெல்லாரும் அதன் பாதையைக் கண்டுபிடிக்க முடியாமல் விட்டு விட்டனர். ஆனால் நீயும் நானும் நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தேவனுடைய பார்வையிலிருந்து தவிர்க்க முடியாது. தாவீது, “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்’’ (சங். 139:7-8) என்று ஜெபிக்கிறார். “இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது” என வியந்தார்.

தேவன் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.ஏனெனில் அவர் நம்மை நேசிக்கின்றார். அவர் நம் வாழ்வை கவனிப்பதோடு மட்டுமல்ல, பாதுகாத்தும் வருகின்றார். நம் வாழ்வினுள் வந்து அதைப் புதிதாக்குகின்றார். இயேசுவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதலின் மூலம் நம்மை தேவனண்டை இழுத்துக் கொள்கின்றார். நாமும் அவரை அறிந்து கொண்டு, நித்திய காலமாக அவரையே நேசிப்போம். தேவனுடைய அன்பின் எல்லையை விட்டு நம்மால் கடந்து செல்ல முடியாது.

நரிகளைப் பிடித்தல்

முதன்முறையாக எங்கள் வீட்டினுள் நுழை ந்த வெளவாலை எப்படியோ வெளியேற்றி விட்டோம். ஆனால் அது, மீண்டும் இரவு நேரத்தில் வந்த போது, நான் அந்த உயிரினத்தைப் பற்றிய செய்திகளை வாசித்தேன். அவை மனிதர்கள் வாழும் இடத்தினுள் நுழைவதற்கு, ஒரு சிறிய காசு அளவு துளையிருந்தாலும் போதும், அதன் வழியாக நுழைந்து விடும் எனத் தெரிந்து கொண்டேன். எனவே நான், சிறிய துளைகளை அடைக்க உதவும் என்னுடைய காக் வகை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, வீட்டைச்சுற்றி வந்து, எல்லா சிறிய திறப்புகளையும் அடைத்தேன்.

உன்னதப்பாட்டு 2:15ல், சாலமோன் மற்றுமொரு தொல்லை தரும் உயிரினத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார். இங்கு, அவர் திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கும் “சிறு நரிகளை”ப்பற்றி குறிப்பிடுகின்றார். நம் வாழ்க்கையினுள் நுழைந்து, உறவுகளைக் கெடுக்கும் அபாயங்களைக் குறித்து, இதனை அடையாளமாகச் சொல்கின்றார். வெளவால் விரும்பிகளையும், நரி ரசிகர்களையும் புண்படுத்துவதற்காக நான் இதனைச் சொல்லவில்லை. வெளவால்களையும், நரிகளையும் வீட்டைவிட்டு துரத்துவது என்பது, பாவத்தை நம் வாழ்வை விட்டு துரத்துவதற்குச் சமம் என்கின்றார் (எபே. 5:3). தேவனுடைய கிருபையினாலும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே கிரியை செய்கிறபடியினாலும் நாம், “மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின் படி நடக்கிறதற்கு” (ரோம. 8:4) பெலனளிக்கிறார். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நாம் பாவத்திற்கு எதிர்த்து நிற்க முடியும். 

இப்பொழுது நாம் “கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறோம் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்வோம்’’ (எபே. 5:8-10) ஆவியானவர் சிறு நரிகளைப் பிடிக்க நமக்கு உதவிசெய்கின்றார்.

சாப்பிடு, மீண்டும் சாப்பிடு

கெரி, பால் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்ட போது, இருவருக்குமே சமைக்கத் தெரியாது. ஒரு நாள் மாலை கெரி, மெக்ரொனி வகை உ.ணவை அதிகமாக தயாரித்தாள். எனவே அந்த தம்பதியர் மறுநாளும் அதே உணவையே எடுத்துக் கொண்டனர். மூன்றாம் நாள் பால் அதிக அளவு பாஸ்தாவை தயாரித்தார். எனவே அவர்கள் அந்த வாரம் இறுதி வரை அதே உணவையே எடுத்துக்கொள்ளலாமெனத் திட்டமிட்டனர். அன்று இரவு அவர்கள் சாப்பிட உட்கார்ந்த போது கெரி, “இவ்வகை உணவு எனக்கு சலித்துவிட்டது’’ என்றாள்.

இஸ்ரவேலர் நாற்பது ஆண்டுகள் ஒரே வகை உணவைச் சாப்பிட்டார்களென்றால், அது எப்படி இருந்திருக்கும். ஒவ்வொரு நாள் காலையும், தேவன் அவர்களுக்களித்த இனிமையான உணவைச் சேகரித்தனர். (மறுநாள் ஓய்வு நாளாயிருந்தாலன்றி, மீதமொன்றும் வைக்க கூடாது (யாத். 16:23-26). அவர்களுடைய திறமையினால் அதைச் சுட்டனர், வேக வைத்தனர் (வச. 23), ஆனாலும், எகிப்தில் தாங்கள் அநுபவித்த கொடுமைக்கும், அடிமைத்தனத்திற்கும் பலனாகக் கிடைத்த அந்த அற்ப உணவிற்காக அவர்கள் ஏங்கினர்! (வச. 3, எண். 11:1-9).

நாமும் கூட, சில வேளைகளில் நம் வாழ்வு முன்பிருந்தது போல இல்லையே என ஏங்கினதுண்டு, அல்லது ஒரு வேளை ஒரே வகையான வாழ்க்கை முறை நம்மை சலிக்கச் செய்யலாம். இஸ்ரவேலர்கள் தேவன் மீது நம்பிக்கை வைக்கவும், ஒவ்வொரு நாளும், அவரையே சார்ந்திருக்கும் படியும், தேவன் அவர்களின் தேவைகளனைத்தையும் உண்மையாய் கொடுத்து வந்தார் என்பதை யாத்திராகமம் 16ஆம் அதிகாரம் விளக்குகின்றது.

நம்முடைய தேவைகளனைத்தையும் தருவதாக தேவன் வாக்களித்துள்ளார். அவர் நம்முடைய ஏக்கங்களை நிறைவேற்றுவார், -நம்முடைய ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார்
(சங். 107:8).

உடனடி பரிகாரம்

அந்த வன வழிகாட்டியைப் பின் தொடர்ந்து சென்று, மிகவும் பழமை வாய்ந்த, பஹாமியன் காட்டிலுள்ள தாவரங்களைக் குறித்து, அவர்  கொடுக்கும் குறிப்புகளை வேகமாக எழுதிக் கொண்டேன். சில மரங்களின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார். அந்தக் காட்டிலுள்ள ஒரு நச்சு மரம் கருமையான, ஒரு வகை திரவத்தை வெளியிடும். அது நம்மேல் பட்டால் வலியையும், ஊறலையும், தடிப்பையும் கொண்டு வரும். ஆனால் அதனைக் குறித்து கவலை கொள்ள வேண்டாம், ஏனெனில், இதற்கான மாற்று மருந்து அம்மரத்தின் அருகிலேயே கிடைக்கும். “எலீமி மரத்தின் சிவந்த பட்டையை சற்று வெட்டினால், அவ்விடத்தில் ஒரு வகை பிசின் சுரக்கும். அதை ஊறல் உள்ள இடத்தில் தடவினால், ஊறல் உடனே மறைந்து விடும்” என்றார்.

நான் ஆச்சரியத்தில் திகைத்து நின்றேன். நான் இத்தகைய ஒரு மீட்பின் செய்தியை இந்தக் காட்டினுள் எதிர்பார்க்கவேயில்லை. எலிமி மரப்பிசினில் நான் இயேசுவைக் கண்டேன். பாவமாகிய நச்சு நம்மைத் தீண்டும் போது, பரிகாரியாகிய இயேசு நம்மண்டை ஆயத்தமாக இருக்கின்றார். அந்த மரத்தின் பட்டையைப் போன்று, இயேசுவின் இரத்தம் நமக்கு சுகத்தைத் தருகின்றது.

மனித குலம் சுகத்தைப் பெற்றுக்கொள்ள ஏங்கி நிற்பதை ஏசாயா தீர்க்கதரிசி புரிந்து கொண்டார். பாவத்தின் விளைவு நம்மை வியாதிக்கு உட்படுத்தியது. நம்முடைய பாடுகளை தன்மீது ஏற்றுக்கொண்ட தேவக் குமாரனின் துன்பத்தின் வழியாக நமக்குத் தேவையான சுகம் வருகிறது என ஏசாயா தீர்க்கன் வாக்களிக்கின்றார் (ஏசா. 53:4). அந்த தேவக் குமாரன் தான் இயேசு கிறிஸ்து. நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார், நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது, நம்முடைய பாவத்தின் ஆக்கினையிலிருந்து மீட்கப்பட்டு, சுகம் பெறுவோம் (வச. 5) நம்முடைய பாவங்களை கண்டுணர்ந்து, அவற்றை தள்ளி விட்டு, நமக்குத் தரப்பட்டுள்ள புதிய அடையாளத்தை பெற்றுக் கொண்டவர்களாய், பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றவர்களாய் வாழ, நம் வாழ்நாளெல்லாம் செலவிட்டாலும், அது இயேசுவிடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.