வகை  |  odb

சுத்தமான பாத்திரங்கள்

“பகை, தானிருக்கின்ற பாத்திரத்தை அரித்து விடும்” என்றார் முன்னாள், சட்ட மன்ற மேலவை உறுப்பினரான ஆலன் சிம்ஸ்சன். ஜியார்ஜ் புஷ்ஷின் அடக்கத்தின் போது, அவர், தன்னுடைய நண்பனின் அன்பினை நினைவு கூர்ந்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நாற்பத்தி ஒன்றாம் ஜனாதிபதியான புஷ், தன்னுடைய தலைமைத்துவ பணியிலும், தனிப்பட்ட உறவுகளிலும் எந்த பகைமையையும் மனதில் வைத்துக் கொள்ளவேயில்லை, மாறாக நகைச்சுவையையும், அன்பையும் அணைத்துக் கொண்டார், என்றார்.

இந்த சட்ட மன்ற உறுப்பினரின் கருத்தை நானும் ஒத்துக் கொள்கின்றேன். உனக்கும் அப்படித்தானே? நான் பகையை எனக்குள் அடக்கிவைத்த போது, அது எவ்வளவு பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியது!

நாம் கோபத்தை அடக்கி வைத்தாலோ, அல்லது அதனைத் திடீரென வெளிப்படுத்தினாலோ, நமது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இருதயம் வேகமாகத் துடிக்கிறது, நம்முடைய ஆவி தொய்ந்து போகிறது, நம்முடைய பாத்திரம் அரிக்கப்படுகின்றது.

“பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்” என சாலமோன் ராஜா, நீதிமொழிகள் 10:12 ல் கூறுகின்றார். பகையினால் வரும் மோதல்கள், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த போட்டியாளர்களிடையே, இரத்தம் சிந்தும் அளவிற்கு சண்டைகளைக் கொண்டு வருகின்றது. இந்தப் பகை, பழிவாங்கும் எண்ணத்தைத் தூண்டிவிட்டு, ஒருவரையொருவர் இகழ்ந்து பேச வைக்கின்றதேயல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்காது.

மாறாக, தேவனுடைய அன்பு, எல்லாத் தவறுகளையும் மூடுகிறது, ஒரு திரையினால் மறைக்கிறது, மன்னிக்கிறது. அதற்காக நம் தவறுகளை கவனிக்கக் கூடாது என்பதாகவோ  அல்லது தவறு செய்பவருக்குத் துணை செய்வதாகவோ அல்ல. ஒருவர் தான் செய்த தவறை உணர் ந்து, உண்மையாய் மனம் வருந்தும் போது, நாம் அந்த தவறை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர், அதற்காக மனம் வருந்தவில்லையெனின், நம்முடைய உணர்வுகளை தேவனிடம் கொடுத்து விடுவோம். நம்மை அதிகமாக அன்பு செய்கிறவரை அறிந்திருக்கின்ற நாம், ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருப்போம், அன்பு திரளான பாவங்களை மூடும். (1 பேதுரு 4:8)

தேவன் தலையிடும் போது

“இந்தக் குழந்தை அருமையானது” (This Child is Beloved) என்ற தலைப்பில் வரும் கவிதையில், ஒரு அமெரிக்க போதகர், அவரை அவருடைய பெற்றோர், கருவிலேயே அழித்து விட எண்ணியும் அவர் பிறந்து விட்ட கதையை எழுதுகின்றார். அநேக எதிர்பாராத நிகழ்வுகள், அவரைக் கருவில் அழித்துவிடாதபடி தடுத்தது. கடைசியாக பெற்றோர், அக்குழந்தையை வரவேற்கத் திட்டமிட்டனர். தேவன் அவருடைய உயிரைப் பாதுகாக்க எண்ணினார் என்பதையறிந்த அவர், வருமானம் ஈட்டக் கூடிய தன்னுடைய எதிர்காலத்தை தள்ளிவிட்டு, முழு நேர ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார். இன்றைக்கு அவர், லண்டனிலுள்ள ஓர் ஆலயத்தில் உண்மையுள்ள போதகராகப் பணியாற்றுகின்றார்.

இஸ்ரவேலர்களின் சரித்திரத்தைப் பார்க்கும் போது, இந்த போதகரைப் போன்று, இவர்களின் கைவிடப்பட்ட நிலையின்போதும், தேவன் தலையிட்டுச் செயல் படுவதைக் காண்கின்றோம். அவர்கள், வனாந்திரத்தில் பிரயாணம் பண்ணி, மோவாப் எல்லையினருகில் வந்த போது, மோவாப்பின் ராஜா பாலாக் பார்க்கின்றான். அவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் பிற நாடுகளைக் கைப்பற்றியதையும் கண்ட போது, மிகவும் பயந்து, பிலேயாம் என்ற குறிசொல்கிறவனைத் தங்களுக்கு அமர்த்தி, இந்த எதிர்பராத கூட்டத்தினைச் சபிக்குமாறு கூறுகின்றான் (எண். 22:2-6).

ஆனால், வியத்தகு காரியம் அங்கு நடைபெற்றது. பிலேயாம், அவர்களைச் சபிக்கும் படி வாயைத் திறந்த போதெல்லாம், அவர்களை ஆசீர்வதித்தான், “ இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைப் பெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது,” என்றான். மேலும், “அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதுமில்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்;………தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்” (எண்.23:20-22). அவர்களுக்கு  எதிராக ஒரு யுத்தம் எழும்பிக் கொண்டிருப்பதைக்கூட அறியாத இஸ்ரவேலரை, தேவன் பாதுகாக்கின்றார்! 

நாம் பார்க்கின்றோமோ இல்லையோ,  இன்றைக்கும், தேவன் அவருடைய பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டேயிருக்கின்றார். நம்மை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றழைக்கும் நம்முடைய ஆச்சரியமான தேவனை, நாம் நன்றியோடு ஆராதிப்போம்.

பழி வாங்குவதற்குப் பதிலாக…

1956 ஆம் ஆண்டு, ஜிம் எலியெட்டும் மற்றும் நான்கு மிஷ்னரிகளும் வரானி என்ற பழங்குடியினரால் கொல்லப்பட்ட போது, அதற்குப் பின்பு என்ன நடந்தது என்பதை யாருமே எதிர் பார்க்கவில்லை. ஜிம்மின் மனைவி எலிசபெத், அவர்களின் இளம்வயது மகள், மற்றொரு மிஷ்னரியின் சகோதரி ஆகியோர் மனப்பூர்வமாக, தங்களுக்கு அருமையானவர்களைக் கொன்ற அதே மக்களோடு வசிக்கும் படி தேர்ந்து கொண்டனர். அவர்கள் அநேக வருடங்களை, வரானி சமுதாயத்தினரோடு செலவிட்டனர். அவர்களுடைய மொழியைக் கற்றுக் கொண்டனர், வேதகமத்தை அவர்களின் மொழியிலேயே எழுதினர். இந்த மூன்று பெண்களும் காட்டிய மன்னிப்பையும், இரக்கத்தையும் கண்ட வரானி இன மக்கள், தேவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொண்டனர், அநேகர் இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.

ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள் (ரோமர் 12:17) என்ற வேத வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக, எலிசபெத்தும் அவளுடைய சிநேகிதியும் நம்பமுடியாத காரியத்தைச் செய்தனர். தேவன் தங்களுடைய வாழ்வில் கொடுத்துள்ள மாற்றத்தை, அவர்கள்  தங்கள் செயலில் காட்ட வேண்டுமென, அப்போஸ்தலனாகிய பவுல், ரோமாபுரியிலுள்ள சபை மக்களை ஊக்கப்படுத்துகின்றார். பவுல் மனதில் சிந்திப்பது என்ன? அவர்களுக்குள், இயற்கையாகத் தோன்றும் பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு, இதையெல்லாம் தாண்டிய காரியங்களைச் செய்யச் சொல்கின்றார், தங்களுடைய எதிரிகளின் தேவைகளைச் சந்திக்கச் சொல்கின்றார், அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கச் சொல்கின்றார்.

ஏன் இவற்றைச் செய்ய வேண்டும்? பவுல், பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரு பழமொழியைச் சுட்டிக் காட்டுகின்றார். “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.”(ரோமர் 12:20. நீதி.25:21-22) மேலும், விசுவாசிகள் அவர்களிடம் காட்டும் அன்பின் மூலம், தங்கள் எதிரிகளையும் ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும், அவர்களின் இருதயத்தில் மனம் திரும்புதலின் நெருப்பைக் கொளுத்திவிடவும் முடியும் என்கின்றார், இந்த அப்போஸ்தலன்.

புயலைப் பின்தொடர்தல்

“புயல் காற்றை பின்தொடர்வது” என்பது கொல்கத்தா மற்றும் வேறு சில இடங்களில் உள்ள வானிலை ஆர்வலர்களின் பொழுது போக்கு நிகழ்வு. இவர்கள் புயலைப் பின்தொடர்ந்து சென்று அதன் செயலைக் குறித்துத் தெரிந்துகொள்கின்றனர், மின்னல் தாக்குவதைப் படமெடுக்கின்றனர், அவற்றின் பின் விளைவுகளையும் கண்டறிகின்றனர், இத்தகைய மோசமான வானிலையின் போது நம்மில் அநேகர், இத்தகைய வலிமையான, தீய விளைவுகளை ஏற்படுத்தும் புயலின் போது வெளியே வருவதற்கே அச்சப்படும் போது, வெவ்வேறு இடங்களில் உள்ள இத்தகைய ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து, ஊடகங்களோடு இணைந்து, புயலைப் பின் தொடர்கின்றனர்.  

என்னுடைய அநுபவத்தில், என் வாழ்வில், நான் புயல்களை பின் தொடர அவசியமில்லை, அவைகள் என்னை விரட்டிக்கொண்டே வருகின்றன. அந்த அநுபவம், சங்கீதம் 107 ல் அப்படியே கூறப்பட்டுள்ளது. அது, புயலில் சிக்கிக் கொண்ட கடல் பிரயாணிகளைப் பற்றி விளக்குகின்றது. அவர்கள், தவறானவற்றைத் தேர்ந்து கொண்டதால் வந்த பின் விளைவுகளால் துரத்தப்படுகின்றனர். சங்கீதக்காரன் சொல்கின்றார், “தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்” (சங். 107:28-30). 

நம் வாழ்வில் ஏற்படும் புயல்கள், நம்மால் உருவாக்கப்பட்டவையோ அல்லது இந்த உடைந்து போன உலகத்தில் வாழ்வதால் ஏற்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் நம்முடைய தந்தை, இவை எல்லாவற்றையும் விடப் பெரியவர். புயல்கள் நம்மைத் துரத்தும் போது, அவர் ஒருவராலேயே, அவற்றை அமைதிப் படுத்த முடியும், அல்லது நமக்குள்ளேயுள்ள புயலை அடக்க முடியும்.

உன்னிடத்தில் உள்ளதைக் கொண்டு வா

“கல் சூப்”(Stone Soup) என்பது அநேக வெளியீடுகளில் வந்துள்ள ஒரு பழங்காலக் கதை. இக்கதையில், ஒரு கிராமத்திற்கு, ஒரு மனிதன் மிகுந்த பசியோடு வருகின்றான். ஆனால், அங்கு யாருமே அவனுக்கு ஒரு பிடி உணவளிக்க முன்வரவில்லை. அவன் நெருப்பை மூட்டி, அதில் ஒரு பானைத் தண்ணீரை வைத்து, அதில் ஒரு கல்லைப் போடுகின்றான். அவன், தன் “சூப்பை” கிண்ட ஆரம்பித்தவுடன், ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்த  அந்த கிராமத்தினரில் ஒருவர், இரண்டு உருளைக்கிழங்குகளை அதனோடு சேர்க்கும் படி கொண்டுவந்தார், மற்றொருவர் சில கேரட்டுகள், வேறொருவர் சில வெங்காயங்கள் இன்னும் ஒருவர் ஒரு கை பார்லி, ஒரு விவசாயி கொஞ்சம் பால் என அதனோடு சேர்த்தனர். கடைசியாக “கல் சூப்” மிகவும் ருசியான சூப்பானது.

இந்த கதை, பகிர்ந்து கொள்வதின் மதிப்பை விளக்குகின்றது. அத்தோடு, நம்மிடம் இருப்பது சாதாரணப் பொருளாக இருந்தாலும், அதையும் கொண்டுவரும்படி சொல்லுகின்றது. யோவான் 6:1-14 வரையுள்ள வார்த்தைகளில், ஒரு பெரிய கூட்ட மக்களிடையே, ஒரு சிறு பையன் மட்டும் தான், தனக்கு உணவு கொண்டு வ ந்திருக்கின்றான். அவனுடைய கொஞ்ச உணவான ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும், கிறிஸ்துவின் சீடர்களுக்கு எந்த வகையிலும் உதவுவதாக இல்லை. ஆனால், அதை இயேசுவிடம் அர்ப்பணித்த போது, அவர் அதைப் பெருகச் செய்து, ஆயிரக்கணக்கான ஜனங்களைப் போஷித்தார்!

ஒருமுறை, ஒருவர், “நீங்கள் ஐந்தாயிரம் மக்களுக்கு உணவளித்திருக்கத் தேவையில்லை, ஒவ்வொருவரும் தங்களுடைய உணவைக் கொண்டு வந்திருக்க வேண்டும்” என்றார். இயேசு ஒருவரின் உணவை எடுத்து, ஆசிர்வதித்து, நாம் நினைக்கவும், எதிர்பார்க்கவும் முடியாத அளவிற்குப் பெருகச் செய்தது போல (வ.11), நம்முடைய  சிறிய முயற்சியையும், திறமைகளையும், சேவையையும்  அவர் ஏற்றுக் கொள்வார். அவர் விரும்புவதெல்லாம், நம்மிடமுள்ளதை, மனப்பூர்வமாக அவரிடம் கொண்டு வர வேண்டும் என்பதையே.