
தேவனுடைய உண்மைத் தன்மை
சி.எஸ். லுவிஸ் எழுதிய நார்னியாவின் நடபடிகள் என்ற புத்தகத்திலுள்ள கதையில், அநேக ஆண்டுகளுக்குப் பின், ஆஸ்லான் என்ற வல்லமையுள்ள சிங்கம் திரும்பி வந்த போது, நார்னியாவிலுள்ள சிங்கமும், அனைத்து விலங்குகளும், சூனியக்காரியும் அவளுடைய அலமாரியும் நடுங்கின. அவர்களின் மகிழ்ச்சி துயரமாக மாறியது. வெள்ளை சூனியக்காரி, கடைசியாகக் கேட்டுக்கொண்ட வேண்டுகோளை ஆஸ்லான் கொடுத்தபோதும், அவள் தோற்கடிக்கப்பட்டாள். ஆஸ்லான் உறுமியபோது அனைவரின் செவிகளும் பிளக்கும் அளவுக்கு வல்லமையுடையதாக இருந்ததால், நார்னியாவிலுள்ள அனைவரும் ஆஸ்லானின் பெலத்தையுணர்ந்தனர், அத்தோடு அந்த சூனியக்காரியும் பயத்தில் ஓடிவிட்டாள். எல்லாவற்றையும் இழந்து விட்டதைப் போன்று காணப்பட்டாலும், அசுரத்தனமான அந்த சூனியக் காரியைக் காட்டிலும், ஆஸ்லான் சர்வ வல்லமை பொருந்தியவன் என்பதை நிரூபித்தான்.
லூவிஸ்ஸின் கதையில் வரும் ஆஸ்லானின் சீடர்களைப் போன்று, ஒரு நாள் காலை எலிசாவின் வேலைக்காரன் எழுந்தபோது, அவனும் எலிசாவும் தங்கியிருக்கிற மலையைச் சுற்றிலும் எதிரியின் படைகள் சூழ்ந்திருக்கிறதைக் காண்கின்றான். அப்பொழுது வேலைக்காரன், “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என்றான் (2 இரா. 6:15). அப்பொழுது தீர்க்கதரிசி மிகவும் அமைதியாக பதிலளிக்கிறார். “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” (வச. 16) என்றார். பின்னர் எலிசா தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணி, “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” என்றார் (வச. 17). “உடனே கர்த்தர் அந்த வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (வச. 17). முதலில் வெறுமையைக்கண்ட வேலைக்கரனின் கண்களை, சர்வ வல்ல தேவன் எதிரியின் படைகளைக் காட்டிலும் அதிகமான வீரர்களைக் காணும்படிச் செய்தார்.
நம்முடைய கடினமான வேளைகள், நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என நம்பும்படிச் செய்யலாம். ஆனால் நம்முடைய கண்களைத் திறந்து, அவர் சர்வ வல்லவர் என்பதைக் காணும்படி தேவன் விரும்புகின்றார்.

நாம் நினைத்துப்பார்க்க முடியாதது
2001 ஆம் ஆண்டு, பார்ட் மில்லர்ட் என்பவர் அனைவரையும் கவர் ந்த ஒரு பாடலை எழுதினார். “என்னால் கற்பனை மட்டுமே பண்ணிப்பார்க்க முடிகிறது” (I Can Only Imagine) என்ற அந்த பாடல், தேவனுடைய பிரசன்னத்தில் இருப்பது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அடுத்த ஆண்டு, எங்களுடைய மகள் மெலிசா, அவளுடைய பதினேழாம் வயதில் ஒரு கார் விபத்தில் மரித்த போது, மில்லர்டுடைய பாடலின் வரிகள் எங்கள் குடும்பத்தினரை வெகுவாகத் தேற்றியது. அவள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருப்பது எப்படியிருக்கும் என்பதை கற்பனை பண்ணிப்பார்க்க முடிந்தது.
ஆனால் மெலிசா இறந்த சில நாட்களில் எங்கள் மீது கரிசனை கொண்ட, மெலிசாவின் சிநேகிதிகளின் தந்தையர்கள் என்னிடம் வந்து, வேதனையோடு, இதனை வேறுவகையாகக் கூறினர். “நீங்கள் எதன் வழியாகக் கடந்து செல்கிறீகள் என்பதை எங்களால் கற்பனைகூட செய்ய முடியவில்லை” என்று கூறினர்.
அவர்களின் அனுதாபங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. அவர்களும் எங்களுடைய இழப்பில் பங்கு பெற்று, எங்களின் துயரத்தில், எங்களோடு நடந்து வந்தது, எங்களால் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.
தாவீது இழப்பின் ஆழங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்” (சங். 23:4) என்று குறிப்பிடுகின்றார். தான் நேசித்தவர்களின் மரணத்தை தான் அவரும் குறிப்பிடுகின்றார். இருளை எப்படிக் கடக்கப் போகிறோம் என்று நமக்குத் தெரியாது. நம்மால் இவற்றைக்கடந்து அக்கரைக்கு வர முடியுமா என்பதும் நமக்குத் தெரியாது.
ஆனால், இருளின் பள்ளத்தாக்கினை நாம் கடக்கும் போது, தேவன் நம்மோடு இருப்பதாக வாக்களித்துள்ளார். எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையையும் தருகின்றார். இருளின் பள்ளத்தாக்கைக் கடந்ததும் அவருடைய பிரசன்னத்தில் இருப்போம் என வாக்குக் கொடுத்துள்ளார். விசுவாசிகளாகிய நாம், “ஆவி சரீரத்தைவிட்டுப் பிரிவது” என்பது தேவனோடு இருப்பது என்பதைத் தெரிந்துகொள்வோம் (2 கொரி. 5:8). அப்படியானால் நாம் கற்பனைபண்ண முடியாத இடத்திற்குச் செல்வோம், நம்முடைய எதிர்காலத்தில் நாம் தேவனோடு இணைந்து கொள்வோம்.

எப்பொழுதும் நம்மோடிருக்கும் அவருடைய பிரசன்னம்
2018 ஆம் ஆண்டு, உலக கோப்பையின் போது, கொலம்பியாவின் முன்னோடி வீரரான ரடாமேல் ஃபால்கா, எழுபதாவது நிமிடத்தில் போலந்துக்கு எதிராக கோல் அடித்து, வெற்றியைப் பிடித்தார். சர்வ தேச விளையாட்டுப் போட்டிகளில், ஃபால்காவின் கோல், முப்பதாவது கோலாகும். சர்வ தேச போட்டிகளில் பங்கு பெற்ற கொலம்பியா வீரர்களில், அதிக கோல் போட்டவர் என்ற பெயரையும் வாங்கித்தந்தது.
ஃபால்கா, கால் பந்து மைதானத்தில் இருக்கும் போது, தனது ஒவ்வொரு வெற்றியின் போதும் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு கோலுக்குப் பின்னரும் தன்னுடைய மேல் சட்டையை உயர்த்திக் காட்டுவார், உள்சட்டையில், “இயேசு உன்னோடு இருக்கும் போது, நீ தனியாயிருப்பதில்லை” என்ற வார்த்தை இருக்கும்.
ஃபால்காவின் வார்த்தைகள் நம்மையும் தேவன் தருகின்ற உறுதியளிக்கும் வாக்குத்தத்தத்திற்கு நேராக வழிநடத்துகிறது. “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத். 28:20) என்றார். அவர் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பாக, தன்னுடைய சீஷர்களிடம், அவருடைய ஆவியின் மூலமாக, அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களுடனே இருக்கும் என உறுதியளிக்கிறார் (வ.20, யோவா.14:16-18). கிறிஸ்துவின் ஆவியானவர் அவர்களோடிருந்து, அவர்கள் இயேசு கிறிஸ்துவைக்குறித்த செய்தியை அருகிலும், தூரத்திலும் உள்ள பட்டணங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, அவர்களை வழிநடத்தி, பாதுகாத்து, பெலப்படுத்தினார். அவர்கள் அறியாத இடங்களுக்குச் செல்லும் போது, அவர்கள் தனிமையை உணர்ந்த போதும், கிறிஸ்துவின் வார்த்தைகள் அவர்களின் செவிகளில் எதிரொலித்தன, தேவன் அவர்களோடு இருக்கிறார் என்பதை நினைவு படுத்தியது.
நாம் எவ்விடத்திற்குச் சென்றாலும் சரி, வீட்டிற்கு அருகிலோ, வெகு தொலைவிற்கோ அல்லது இயேசுவை அறியாதவர்களின் மத்தியில் இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம், இந்த வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். நாம் தனிமையாயிருப்பது போல உணர்ந்தாலும், நாம் இயேசுவிடம் ஜெபிக்கும் போது, அவர் நம்மோடிருக்கிறார் என்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்வோம்.

அன்பிலே பிரிவினையா
சிங்கப்பூரின், ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தைக்குறித்து, பொதுமக்களிடையே கருத்து பரிமாற்றங்கள் ஏற்பட்ட போது, அது, வெவ்வேறு கருத்துடைய விசுவாசிகளையும் பிரித்தது. சிலர் மற்றவர்களைக்குறித்து “குறுகிய மனமுடையவர்கள்” என்றனர், தங்கள் விசுவாசத்தை விட்டுக் கொடுக்கின்றனர் என்றனர்.
சர்ச்சைகள், தேவனுடைய குடும்பங்களில் பிரிவினைகளையும், மனக்காயங்களையும், மக்களிடையே மனச்சோர்வையும் கொண்டுவரும். நான், என்னுடைய சொந்த தீர்ப்புகளைக் கொடுப்பதற்கு முன்பு, வேதாகமப் போதனைகளை என்னுடைய வாழ்வில் பயன்படுத்தும்படி உணர்ந்தேன். நான் ஏற்றுக்கொள்ளாதவர்களைக் குறித்து அதிகமாக விமர்சனம் செய்த தவற்றை உணர்ந்தேன்.
நாம் ஏற்றுக்கொள்ளாத கருத்துக்கள் எவை அல்லது அவற்றை நாம் எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பது பிரச்சனையல்ல, நாம் அவற்றை வெளிப்படுத்தும் போது நம்முடைய இருதயம் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் பிரச்சனை. நாம் கருத்துக்களை மட்டும்தான் ஏற்றுக் கொள்ளவில்லையா அல்லது அக்கருத்துக்குப் பின்னால் இருக்கும் மக்களையும் கிழித்தெறிய நினைக்கிறோமா?
சில வேளைகளில் தவறான போதனைகளுக்கு எதிர்த்து பேசவேண்டிய நேரம் வரும். நம்முடைய உறுதியான கருத்துகளைக் குறித்து விளக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். எபேசியர் 4:2-6 வரையுள்ள வசனங்கள் நம்மை மிகுந்த மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும், நீடிய பொறுமையோடும், அன்போடும் ஒருவரையோருவர் தாங்கி, “ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ளுவதற்கு” ஜாக்கிரதையாய் இருக்கும்படியும் வலியுறுத்துகிறது (வச. 3).
சில சர்ச்சைக்குரிய கருத்துகள் தீர்க்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய இலக்கு மக்களின் விசுவாசத்தைக் கட்டுவதேயொழிய, அவற்றைக் கிழித்தெறிவதல்ல (வ.29). நம்முடைய விவாதத்தில் மற்றவர்களை கீழேத்தள்ளி, நாம் வெற்றிபெற நினைக்கிறோமா? அல்லது நாம் தேவனுடைய உண்மையை, அவருடைய நேரத்தில், அவருடைய வழியில், புரிந்துகொள்ள தேவன் உதவும் மட்டும் காத்திருக்கப் போகிறோமா? ஒரே கர்த்தரையும், ஒரே விசுவாசத்தையும் தான் பகிர்ந்து கொள்கிறோம் (வச. 4-6) என்பதை மறவாதிருப்போம்.
