2001 ஆம் ஆண்டு, பார்ட் மில்லர்ட் என்பவர் அனைவரையும் கவர் ந்த ஒரு பாடலை எழுதினார். “என்னால் கற்பனை மட்டுமே பண்ணிப்பார்க்க முடிகிறது” (I Can Only Imagine) என்ற அந்த பாடல், தேவனுடைய பிரசன்னத்தில் இருப்பது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அடுத்த ஆண்டு, எங்களுடைய மகள் மெலிசா, அவளுடைய பதினேழாம் வயதில் ஒரு கார் விபத்தில் மரித்த போது, மில்லர்டுடைய பாடலின் வரிகள் எங்கள் குடும்பத்தினரை வெகுவாகத் தேற்றியது. அவள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருப்பது எப்படியிருக்கும் என்பதை கற்பனை பண்ணிப்பார்க்க முடிந்தது. 

ஆனால் மெலிசா இறந்த சில நாட்களில் எங்கள் மீது கரிசனை கொண்ட, மெலிசாவின் சிநேகிதிகளின் தந்தையர்கள் என்னிடம் வந்து, வேதனையோடு, இதனை வேறுவகையாகக் கூறினர். “நீங்கள் எதன் வழியாகக் கடந்து செல்கிறீகள் என்பதை எங்களால் கற்பனைகூட செய்ய முடியவில்லை” என்று கூறினர்.

அவர்களின் அனுதாபங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. அவர்களும் எங்களுடைய இழப்பில் பங்கு பெற்று, எங்களின் துயரத்தில், எங்களோடு நடந்து வந்தது, எங்களால் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.

தாவீது இழப்பின் ஆழங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்” (சங். 23:4) என்று குறிப்பிடுகின்றார். தான் நேசித்தவர்களின் மரணத்தை தான் அவரும் குறிப்பிடுகின்றார். இருளை எப்படிக் கடக்கப் போகிறோம் என்று நமக்குத் தெரியாது. நம்மால் இவற்றைக்கடந்து அக்கரைக்கு வர முடியுமா என்பதும் நமக்குத் தெரியாது.

ஆனால்,  இருளின் பள்ளத்தாக்கினை நாம் கடக்கும் போது, தேவன் நம்மோடு இருப்பதாக வாக்களித்துள்ளார். எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையையும் தருகின்றார். இருளின் பள்ளத்தாக்கைக் கடந்ததும் அவருடைய பிரசன்னத்தில் இருப்போம் என வாக்குக் கொடுத்துள்ளார். விசுவாசிகளாகிய நாம், “ஆவி சரீரத்தைவிட்டுப் பிரிவது” என்பது தேவனோடு இருப்பது என்பதைத் தெரிந்துகொள்வோம் (2 கொரி. 5:8). அப்படியானால் நாம் கற்பனைபண்ண முடியாத இடத்திற்குச் செல்வோம், நம்முடைய எதிர்காலத்தில் நாம் தேவனோடு இணைந்து கொள்வோம்.