
தேவன் அங்கே இருக்கின்றாரா?
லீலா புற்று நோயால் பாதிக்கப் பட்டு, மரித்துக் கொண்டிருந்தாள். ஓர் அன்பான தேவன், ஏன் தன்னுடைய மனைவி இத்தனை கஷ்டங்களையும் அநுபவிக்கும்படி விட்டார் என்பதை அவளுடைய கணவன் தீமோத்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் வேதாகம ஆசிரியையாக இருந்து கிறிஸ்துவுக்காக உண்மையாய் பணிபுரிந்தாள், அநேகரை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினாள். “நீர் ஏன் இதனை அனுமதித்தீர்?” என்று கதறினான். ஆனாலும், தீமோத்தி தேவனோடு கூட நடப்பதில் உண்மையாய் இருந்தான்.
“அப்படியானால் ஏன் நீ இன்னமும் தேவன் மீது நம்பிக்கையோடு இருக்கின்றாய்?”, “அவரை விட்டுத் திரும்பாமல் இருக்க காரணம் என்ன?” என்று நான் அவனிடம் கேட்டேன்.
“ஏனெனில் இதற்கு முன்பு நடந்தவற்றிற்காக” என்று திமோத்தி பதிலளித்தான். இப்பொழுது நான் தேவனைக் “காண” முடியவில்லை, ஆனால், தேவன் அவனைப் பாதுகாத்து, உதவி செய்த நாட்களை அவன் நினைத்துப் பார்த்தான். இன்னமும் தேவன் அவனுடைய குடும்பத்தைப் பாதுகாத்து வருகின்றார் என்பதற்கு இவை அடையாளம், “நான் நம்பியிருக்கின்ற தேவன், அவர் குறித்த நேரத்தில் வருவார்” என்றான்.
திமோத்தியின் வார்த்தைகள், ஏசாயா 8:17 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விசுவாசத்தைக் குறித்து ஏசாயாவின் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது. அவனுடைய ஜனங்கள், எதிரிகளால் வரும் துன்பத்தை எதிர் நோக்கியிருந்த போது, அவனால் தேவனுடைய பிரசன்னத்தை உணர முடியவில்லை, எனினும் அவன் “நானோ கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்” என்கின்றார், ஏனெனில், தேவனுடைய பிரசன்னம் அவர்களோடு இருக்கும் என்ற அடையாளத்தை அவர் கொடுத்தபடியால், அவன் தேவன் மேல் நம்பிக்கையோடு இருந்தான் (வ.18).
சில வேளைகளில் நம்முடைய துன்பங்களின் மத்தியில் தேவன் இல்லையோ என்று நாம் எண்ணும்படியான சந்தர்ப்பங்கள் நேரலாம். அப்படிப்பட்ட நேரங்களில், நம்முடைய வாழ்வில், கடந்த நாட்களிலும், தற்சமயமும் அவர் செய்த காரியங்களை நினைத்துப் பார்ப்போம். இவையே, நம்மால் காணக்கூடாத தேவன் செய்த, காணக்கூடிய நினைப்பூட்டிகள். அவர் எப்போதும் நம்மோடிருக்கும் தேவன், அவர் தான் தீர்மானித்திருக்கின்ற நேரத்தில், அவருடைய வழியில் பதிலளிப்பார்.

பூரண வாழ்வு
பதினேழாம் நூற்றாண்டு தத்துவ ஞானி தாமஸ் ஹாப்ஸ் என்பவர், “மனித வாழ்வு இயற்கையிலேயே தனிமையானது, மோசமானது, ஏழ்மையானது, முரட்டுத்தனமானது மற்றும் குறுகியது” என எழுதினார். மேலும் மற்றவரைக் காட்டிலும் நாம் உயர வேண்டும் என்ற உள் நோக்கத்தினால், சண்டையிடும் தூண்டுதலைக் கொண்டுள்ளது என்றார். எனவே, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ஓர் அரசாங்கம் தேவை என்றார்.
மனிதகுலத்தைப் பற்றிய இந்த இருண்ட கருத்து, இயேசு கூறியவற்றை விளக்குவதாக உள்ளது. “எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக் காரருமாயிருக்கிறார்கள்” (யோவா.10:8) என்று இயேசு கூறுகின்றார். ஆனால், விரக்தியின் மத்தியில் இயேசு நம்பிக்கையைத் தருகின்றார். “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறோன்றுக்கும் வரான்” என்கின்றார், ஆனால், தேவன் நற்செய்தியைத் தருகின்றார். “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்கின்றார்.
மேய்ப்பனானவர் தன் ஆடுகளுக்கு கொடுக்கும் புதிய வாழ்வைப் பற்றி சங்கீதம் 23, காட்டுகின்றது. அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு குறைவு ஒன்றும் ஏற்படுவதில்லை (வ.1), நாம் புத்துணர்ச்சி பெறுகின்றோம் (வ.3). அவர் தன்னுடைய சித்தத்திற்கு நேராக, சரியான பாதையில் நம்மை நடத்துகின்றார், ஆகையால் நம்முடைய வாழ்வின் இருண்ட வேளைகளிலும் நாம் பயப்படத்தேவையில்லை. அவர் நம்மைத் தேற்றும்படி, நம்மோடு இருக்கின்றார் (வ.3-4). நாம் துன்பங்களைச் சந்திக்கும் போது, அவற்றை வெற்றியாக முடியப் பண்ணுகின்றார், நம்மை அவருடைய ஆசீர்வாதங்களால் நிரப்புகின்றார் (வ.5). ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பும் நன்மையும் நம்மைத் தொடரும். அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடிருக்கும் பாக்கியத்தை நாம் பெற்றுள்ளோம் (வ.6).
மேய்ப்பனின் குரலுக்கு நாம் செவி கொடுப்போம். அவர் நம்மோடு இருந்து நமக்குத் தரும் செழிப்பான பரிபூரண வாழ்வை நாம் பெற்று, அநுபவிப்போம்.

நேராக முன்னோக்கி
நேர் வரிசையில் டிராக்டரைச் செலுத்துவதற்கு, விவசாயியின் நிலையான கண்களும் உறுதியான கரங்களும் தேவை. ஆனாலும், ஒரு நாளின் இறுதி வேளையில், திறமையான கண்களும், உறுதியான கரங்களும் கூட சோர்வடையும் போது, வரிசைகள் மேற்பொருந்துமாறு டிராக்டரைச் செலுத்திவிட நேரிடும். ஆனால், தற்சமயம் தானியங்கி கியர் மற்றும் ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் மூலம் உழுதல், செடி நடுதல், தெளித்தல் போன்றவற்றை ஓர் அங்குலம் வரை துல்லியமாக செய்ய முடிகின்றது. இது வியத்தகு திறமையை கொண்டுள்ளது, நம்முடைய கரங்களுக்கு வேலையை குறைக்கின்றது. ஒரு பெரிய யானை அளவு மிகப் பெரிய டிராக்டரில் அமர்ந்து கொண்டு, அதன் திசைதிருப்பி சக்கரத்தை கரத்தில் பிடித்திருப்பதற்குப் பதிலாக, ஒரு சிக்கன் 65 ஐ கையில் பிடித்து உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்துபார். இது நம்மை நேராக முன்னோக்கிக் கொண்டு செல்லும் ஒரு வியத்தகு சாதனம்.
யோசியா என்ற பெயரை நினைவிருக்கலாம். அவன் ராஜாவாக முடிசூட்டப்பட்ட போது, அவனுக்கு வயது எட்டு (2 இரா.22:1). அநேக ஆண்டுகளுக்குப் பின்பு, கிட்டத்தட்ட இருபத்தைந்து வயதாகிறபோது, பிரதான ஆசாரியனான இல்க்கியா கர்த்தரின் ஆலயத்திலே “நியாயப்பிரமாணப் புத்தகத்தைக்” கண்டுபிடித்து (வ.8), அதை இந்த இளம் அரசனுக்கு முன்பாக வாசித்தான். தன்னுடைய முன்னோர்கள் தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கவில்லை என்பதை அறிந்த யோசியா, வருத்தத்தில் தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டான். பின்னர் அவன் “கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்ய” (வ.2) முற்பட்டான். ஜனங்களை இடது புறம், வலது புறம் சாயாமல், நேரான பாதையில் கொண்டு செல்ல வழிகாட்டும் கருவியாக இந்த புத்தகம் செயல் பட்டது. காரியங்களைச் சரிசெய்ய தேவனுடைய வார்த்தை இருந்தது.
நம் வாழ்வில், தேவனுடைய சித்தத்தை அறிந்து, அதற்கு நேராக நம்மை வழி நடத்தும்படி, வியத்தகு கருவியான வேத வார்த்தைகளைக் கைக்கொள்ளுவோமாயின், நாம் நேராக முன்னோக்கிச் செல்ல முடியும்.

தேவனுக்கு முன்பாக நடனம்
அநேக வருடங்களுக்கு முன்பு, என்னுடைய மனைவியும் நானும் அருகிலுள்ள ஒரு சிறிய ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். அங்கு ஆராதனை வேளையில், ஒரு பெண் நடுப்பகுதியில் நடனம் ஆட ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில், அவளோடு மற்றும் அநேகர் இணைந்து கொண்டனர். கேரலினும் நானும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டோம். “நான் இல்லை!” என எங்களுக்குள்ளே பார்வையாலே தெரிவித்துக் கொண்டோம். நாங்கள் ஓர் அமைதலான ஆராதனை முறையை வழக்கமாகக் கொண்டுள்ள ஆலயத்திற்குச் செல்வதால், இந்த மாற்று ஆராதனை முறை எங்களுக்குப் பொருந்திவரவில்லை.
மாற்கு கூறும், மரியாளின் கதையில் வரும் “வீண் செலவு” என்பது அவள் இயேசுவின் மேல் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்று, அது மற்றவர்களுக்குப் பொருந்திவரவில்லை (மாற்.14:1-9). மரியாள் செய்த தைலாபிஷேகத்தின் மதிப்பு, ஒருவருடைய ஒரு வருட கூலிக்குச் சமம். இது ஒரு “ஞானமற்றச்” செயல் என்று சீஷர்கள் முறுமுறுப்பதற்குக் காரணமாயிருந்தது. முறுமுறுப்பவர்களின் அதிருப்தியையும் இவர் இதற்குத் தகுதியற்றவர் என்பதாக இழிவு படுத்தினதையும் மாற்கு குறிப்பிடுகின்றார். இயேசு என்ன சொல்லுவாரோ என்று எண்ணி மரியாளும் பின்வாங்கியிருக்கலாம். ஆனால் இயேசுவோ அவளுடைய தன்னலமற்றச் செயலைப் பாராட்டினார், அவளைத் தன்னுடைய சொந்த சீஷர்களிடமிருந்து பாதுகாக்கின்றார், ஏனெனில், அவர் இச்செயலைத் தூண்டிய அவளுடைய அன்பைப் பார்க்கின்றார், மற்றவர்கள் அவளுடைய செயலை, செய்யக் கூடாததாக கருதிய போதிலும், அவர் “ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” (வ.6) என்றார்.
வெவ்வேறு வகையான ஆராதனைகள் – பாரம்பரிய முறை, பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்டது, அமைதியான முறை அல்லது ஆரவாரத்தோடு ஆராதிப்பது எல்லாமே இயேசுவின் மீதுள்ள அன்பை உண்மையாக வெளிப்படுத்துவதாகும். உள்ளதின் ஆழத்திலிருந்து வரும் அன்போடு, ஆராதிக்க அவர் தகுதியானவர்.
