வகை  |  odb

உன் பெயர் அவருக்கு தெரியும்

வெகுநாளாய் நாங்கள் போகாமல் இருந்த எங்கள் திருச்சபைக்கு மூன்று ஆண்டுகள் கழித்து நானும் எனது கணவரும் போகத் தீர்மானித்தோம். மக்கள் எங்களை எப்படி நடத்துவார்கள்? மறுபடியும் எங்களை எப்படி வரவேற்பார்கள்? எப்படி நேசிப்பார்கள்? சபையை விட்டுச் சென்றதை மன்னிப்பார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் அந்த ஞாயிற்றுக் கிழமை காலையிலே பதில் கிடைத்தது. சபைக்குள்ளே நாங்கள் நுழைந்தபோது, எங்கள் பெயர்கள் தொடர்ந்து எங்கள் காதுகளில் ஒலித்தது. “பாட்! டான்! உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி!” என்று மகிழ்ச்சியோடு வரவேற்றனர். மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் சிறுவர்களுக்காய் எழுதிய புத்தகமொன்றில், “வாசகர்களே, இந்த சோகமான உலகத்தில், நீங்கள் விரும்பும் நபர் உங்களை பேர்ச்சொல்லி அழைப்பதைக் காட்டிலும் இன்பம் வேறொன்றுமில்லை” என்கிறார். 

தேவன் அதேபோன்று ஒரு உறுதியை இஸ்ரவேல் ஜனத்திற்கு கொடுத்துள்ளார். நாங்கள் தற்காலிகமாக வேறொரு திருச்சபையைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் இஸ்ரவேலர்கள் தேவனை விட்டு விலகினார்கள். ஆனாலும் தேவன் அவர்களை மீண்டும் வரவேற்றார். அவர் ஏசாயா தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பி, “பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன் ; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசாயா 43:1) என்று உறுதிகொடுத்தார்.

இந்த உலகத்தில் நாம் கண்டுகொள்ளப்படாதவர்களாய், பாராட்டப்படாதவர்களாய், கவனிக்கப்படாதவர்களாய் இருக்கலாம். ஆனால் தேவன் நம் ஒவ்வொருவரையும் பேர்பேராய் அறிந்திருக்கிறார். “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்” (வச. 4) என்று வாக்களிக்கிறார். “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (வச. 2). இது இஸ்ரவேலுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் அல்ல. இயேசு தன்னுடைய வாழ்க்கையையே நமக்காய் பலியாய் கொடுத்துள்ளார். அவருக்கு நம்முடைய பெயர்கள் தெரியும். ஏன்? அன்பில் நாம் அவருக்கு சொந்தமானவர்கள்.

காணாத ஆச்சரியம்

திருமதி. கூட்ரிச்சின் சிந்தையில் பல ஆண்டுகளாய் அவள் கடந்து வந்த சவால்கள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைப் பாதையைக் குறித்த நினைவுகள் அவ்வப்போது வந்துவந்து போய்கொண்டிருந்தது. நீரோட்டத்தை பார்வையிட்டபடி ஜன்னலின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவள் தன்னுடைய கையேட்டில் எழுதத்துவங்கினாள். “என்னுடைய பிரியமான நாற்காலியில் அமர்ந்து, என் கால் தரையில்பட, என் இருதயம் காற்றில் பறந்தது. சூரியஒளியில் மின்னிய நீரோட்டம் தொடர்ந்து ஓடுகிறது - எங்கே என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே – உம்முடைய அளவில்லா ஆசீர்வாதத்திற்காகவும் அழிவில்லா அன்பிற்காகவும் நன்றி! அது எப்போதும் என்னை மெய்சிலிர்க்கப் பண்ணுகிறது – காணமுடியாத ஒருவரை இந்த அளவிற்கு நான் நேசிக்கிறேனே, அது எப்படி?” என்று மெய்மறந்து எழுதினாள். 

அப்போஸ்தலர் பேதுருவும் இந்த ஆச்சரியத்தை அனுபவித்துள்ளார். அவர் இயேசுவை தன் சொந்த கண்களினால் பார்த்திருக்கிறார். ஆனால் அவருடைய நிருபத்தை வாசித்தவர்கள் பார்த்ததில்லை. “அவரை நீங்கள் காணாமலிருந்தும்… அவரிடத்தில் விசுவாசம் வைத்து... சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்” களிகூருகிறோம் (1 பேதுரு 1:8). அவருடைய கட்டளையின்பேரில் அல்ல மாறாக, பரிசுத்த ஆவியின் துணையினாலே (வச. 11) நாம் அவரை நேசிக்கிறோம்; அவர் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்றும் அறிகிறோம்.

நம்மைப் போன்றவர்கள் மீது அவர் அக்கறை செலுத்துகிறார் என்பதை வெறும் கேள்விப்படுவது மட்டுமல்ல நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய காணப்படாத ஆச்சரியமான பிரசன்னத்தையும் பரிசுத்த ஆவியையும் முழுமையாய் அனுபவிப்பது. 

நீ யார்?

எங்கள் காணொலிக் காட்சியின் தலைவர், “காலை வணக்கம்!” சொன்னார். நானும் பதிலுக்கு “ஹலோ” சொன்னேன். ஆனால் நான் அவரைப் பார்க்கவில்லை. காணொலியில் என்னுடைய தோற்றம் எனக்கு இடைஞ்சலாய் இருந்தது. நான் இப்படியா இருக்கிறேன்? அந்த காணொலி கூடுகையில் எங்களோடு இணைந்த மற்றவர்களின் சிரித்த முகங்களையும் பார்த்தேன். அது அவரவரின் தோற்றத்தை சரியாய் காண்பித்தது. ஆக, இது நானாகத்தான் இருக்கமுடியும். நான் சற்று எடையைக் குறைக்கவேண்டும்; முடிவெட்ட வேண்டும்.

பார்வோனுடைய எண்ணத்தில் அவன் மேன்மையானவனாய் தெரிந்தான். அவன் “ஜாதிகளுக்குள்ளே.. பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்.. பெருந்தண்ணீர்களில் முதலையை” போன்று இருந்தவன் (எசே. 32:2). ஆனால் தேவனுடைய பார்வையில் அவன் யார் என்பது அறிவிக்கப்படுகிறது. அவனுடைய சரீரத்தை மிருகஜீவன்களுக்கு இரையாக்குவான் என்றும், “அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன் ; அவர்களின் ராஜாக்கள்…மிகவும் திடுக்கிடுவார்கள்” (வச. 10) என்றும் உரைக்கிறார். தன்னைக் குறித்து மேன்மையான எண்ணத்திற்கு பார்வோன் தகுதியுள்ளவன் இல்லை.

தேவன் நம்முடைய பாவத்தை பார்க்கும்பார்வையில் நாம் நம்மை பார்க்காத வரையில், நம்முடைய ஆவிக்குரிய தோற்றம் நமக்கு அழகாய் தெரியலாம். தேவனுடைய பரிசுத்த வரையறைக்கு ஒப்பிடும்போது, நம்முடைய “நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது” (ஏசா. 64:6). ஆனால் தேவன் நிஜமான வேறொன்றை நம்மில் பார்க்கிறார்: அவர் இயேசுவைப் பார்க்கிறார், இயேசுவில் நம்மைப் பார்க்கிறார்.

உன்னுடைய தோற்றத்தைக் குறித்து சோர்ந்துபோயிருக்கிறாயா? உன்னுடைய தோற்றம் உண்மையில் நீங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசுவை நம்பினால், அவரில் நிலைத்து, அவருடைய பரிசுத்தம் உன்னை மூடும்படி செய்யலாம். அப்போது, நீ கற்பனை செய்ததைக் காட்டிலும் அழகாய் தெரிவாய்.

ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு நேராய் நகர்தல்

வாழ்க்கையின் எந்த பருவத்தில் ஒரு மனிதன் முதிர்ச்சியடைகிறான் என்னும் புள்ளிவிபர கணக்கிற்கான கேள்வியுடன் சமீபத்தில் பலரை அனுகினர். தாங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டோம் என்று நம்புகிற பலர், குறிப்பிட்ட சில சுபாவங்களை சுட்டிக்காண்பித்து தங்களுடைய முதிர்ச்சியை ஆதாரமாய் காண்பித்தனர். வரவுசெலவைத் திட்டமிட்டு, சொந்தமாக வீடு வாங்கியதே முதிர்ச்சிக்கு அடையாளமாய் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும், சமைத்தல், மருத்துவரைச் சந்திக்க முன்பதிவுசெய்தல், நொறுக்குத் தீனியை தானே தேர்ந்தெடுத்தல் போன்ற வேடிக்கையான பதில்கள், அல்லது இரவில் தனியே நடந்துசெல்லுதல் போன்ற பல்வேறு காரியங்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

வேதாகமமும் நாம் ஆவிக்குரிய முதிர்ச்சியடையவேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கிறது. பவுல் எபேசு சபைக்கு எழுதும்போது, சபையின் மக்களை “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்...” என்று உற்சாகப்படுத்துகிறார் (எபே. 4:11). நம்முடைய விசுவாசத்தில் குழந்தைகளாயிருந்தபோது, நமக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்திய “காற்றினாலே அலைகளைப்போல அடிபட்(ட)” பலவித போதனைகளுக்கு செவிசாய்த்தோம். அதற்கு பதிலாக, சத்தியத்தைக் குறித்த அறிவில் முதிர்ச்சியடையும்போது, “தலையாகிய கிறிஸ்துவுக்குள்” (வச. 15) ஒன்றாக்கப்பட்ட சரீரமாய் செயல்படுகிறோம்.

தேவன் யார் என்று அறிகிற பூரண அறிவில் தேறுவதற்கு அவருடைய ஆவியை நமக்கு தருகிறார் (யோவான் 14:26). அத்துடன், விசுவாச முதிர்ச்சிக்கு நேராய் நம்மை வழிநடத்துவதற்கு மேய்ப்பர்கள் மற்றும் போதகர்களை தேவன் கொடுத்துள்ளார் (எபே. 4:11-12-13). நம்முடைய சரீர முதிர்ச்சியை அடையாளப்படுத்த சில காரியங்கள் இருப்பதுபோல, தேவனுடைய சரீரத்தின் அவயவங்களாய் ஒன்றிணைவதே ஆவிக்குரிய முதிர்ச்சிக்கான அடையாளம்.

தெய்வீக மீட்பு

நேரிடப்போகிற ஒரு பெரிய ஆபத்தைக் குறித்த செய்தியை தொலைபேசி வாயிலாக கேள்விப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் தன்னுடைய வாகனத்தை இருட்டான இரயில் பாதையில் வேகமாய் செலுத்தி, அந்த இரயில் பாதையில் கார்  சிக்கியிருந்த இருந்த இடத்திற்கு வந்துசேர்ந்தார். வெகுவேகமாய் வந்த இரயிலானது அந்த காரை உடைத்து நொறுக்கியது அருகிலிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. “50லிருந்து 80 மைல் வேகத்தில்” அந்த இரயில் வந்தது என்று அந்த அதிகாரி அறிவித்தார். அந்த இரயில் காரை உடைத்து நொறுக்குவுதற்கு சற்று முன், சற்றும் யோசிக்காமல் அந்த காவல் அதிகாரி, காரில் சுயநினைவிழந்திருந்த நபரை வெளியே இழுத்து கனப்பொழுதில் அவரின் உயிரைக் காப்பாற்றினார்.    

நம்பிக்கையிழக்கும் வாழ்க்கைத் தருணத்திலெல்லாம் தேவன் நம்மை விடுவிக்கிறவர் என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது. எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கி, ஒடுக்கப்பட்டு தவித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலர்கள், தாங்கள் விடுவிக்கப்படுவது சாத்தியமேயில்லை என்று நினைத்தனர். யாத்திராகமத்தில் தேவன் அவர்களுக்கான நம்பிக்கையின் வார்த்தையைக் கொடுக்கிறார்: “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து,” “அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன்,” “அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” (3:7). தேவன் பார்ப்பது மட்டுமின்றி, கிரியையும் செய்கிறார். “அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்க... இறங்கினேன்” (வச. 8) என்று கூறுகிறார். அதற்கேற்ப, தேவன் இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். இதுதான் தெய்வீக மீட்பு.

தேவன் இஸ்ரவேலை மீட்கும் இந்த சம்பவம், இக்கட்டில் சிக்கித் தவிக்கும் நமக்கு தேவனுடைய இருதயத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறது. தேவன் வந்து விடுவித்தாலொழிய வாய்ப்பே இல்லை என்று அழிவின் பாதையில் பயணிக்கும் நம்மில் பலருக்கு உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார். நம்முடைய சூழ்நிலைகள் சாத்தியமில்லாமல் தெரியலாம். அதிலிருந்து நம்மை விடுவிக்க வல்லவரான தேவனை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து, நம் இருதயத்தை அவரிடமாய் திருப்புவோம்.