
தேவனுடைய பிள்ளைகள்
குழந்தையில்லாத தம்பதியினருக்காக ஒழுங்குசெய்யப்பட்ட பொதுவான கருத்தரங்கில் நான் பேச வேண்டியிருந்தது. அதில் பங்குபெற்ற அநேகர் குழந்தையில்லாமையால், எதிர்காலத்தைக் குறித்து சோர்ந்துபோயிருந்தார்கள். அந்த பாதையில் நடந்த அனுபவம் எனக்கும் இருந்ததால், அவர்களை உற்சாகப்படுத்த நினைத்தேன். “பெற்றோராக முடியவில்லையென்றாலும் உங்களால் அழகான வாழ்க்கை வாழமுடியும்” என்றும், “நீங்கள் பிரமிக்கத்தக்க ஆச்சரியமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள்; உங்களைக் குறித்த புதிய நோக்கத்தை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்” என்றும் அவர்களை உற்சாகப்படுத்தினேன்.
சிறிது நேரம் கழித்து, ஒரு பெண் கண்ணீரோடு என்னிடத்திற்கு வந்து, நன்றி சொன்னாள். “குழந்தையின்மையால் சோர்ந்துபோயிருந்த நான் பிரமிக்கத்தக்க ஆச்சரியமாய் உண்டாக்கப்பட்டவள் என்பதை இன்று அறிந்தது ஆசீர்வாதமாய் இருந்தது” என்றாள். “நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டவரா” என்று கேட்டேன். “வெகுநாட்களுக்கு முன்பு தேவனை விட்டு பின்வாங்கிப்போனேன்” என்ற அவள், “நான் மீண்டும் அந்த உறவைப் புதுப்பிக்க வேண்டும்” என்று தீர்மானம் எடுத்தாள்.
இதுபோன்ற தருணங்களில் சுவிசேஷத்தின் மேன்மை என்ன என்று புரிந்துகொள்ளமுடிகிறது. “அம்மா” “அப்பா” ஸ்தானத்தை அடைவது சிலருக்கு கடினம். நம் வேலை ஸ்தலங்களில் கொடுக்கப்படும் பதவி அந்தஸ்தையும் அவ்வப்போது நாம் இழக்கநேரிடும். ஆனால் இயேசு நமக்குக் கொடுக்கும் “பிரியமான பிள்ளைகள்” என்னும் ஸ்தானத்தை யாரும் நம்மிடத்திலிருந்து பறிக்கமுடியாது (எபேசியர் 5:1). அந்த அங்கீகாரத்தோடு இந்த உலகம் கொடுக்கும் எல்லா ஸ்தானங்களுக்கும் மேலான அன்பின் பாதையிலே நாம் நடக்கமுடியும் (வச. 2).
மனிதர்கள் அனைவரும் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்” உண்டாக்கப்பட்டுள்ளனர் (சங்கீதம் 139:14).இயேசுவை பின்பற்றுபவர்கள் அவருடைய பிள்ளைகளாய் மாறுகின்றனர். குழந்தையின்மையால் சோர்ந்திருந்த அந்த பெண், இந்த உலகம் கொடுப்பதைக்காட்டிலும் மேன்மையான ஸ்தானத்தையும் அங்கீகாரத்தையும் தேடிப் புறப்பட்டாள்.

உன் விசுவாசத்தைப் பகிர்தல்
அயர்லாந்தில் தங்கியிருந்த எழுத்தாளரும் சுவிசேஷகருமான பெக்கி பிப்பர்ட், தான் செல்லும் அழகு நிலையத்தில் பணிபுரியும் ஹீதர் என்ற பெண் பணியாளருக்கு சுவிசேஷம் அறிவிக்க விரும்பினார். ஆனால் ஹீதருக்கு அதில் பெரிய ஆர்வம் இருப்பதுபோல் தெரியவில்லை. தன் பேச்சை எப்படி துவங்குவது என்று தயங்கிய பெக்கி, அவளுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் வாய்ப்பிற்காய் ஜெபித்தாள்.
ஒரு நாள் அழகு நிலையத்திற்கு சென்ற பெக்கி, அங்கிருந்த மாத இதழைப் புரட்டிக்கொண்டிருக்க, அதில் இடம்பெற்றுள்ள ஒரு மாடலிங் பெண்ணின் புகைப்படத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ஹீதர், அவள் யார் என்று கேட்க, அது மாடலிங் துறையில் பல ஆண்டுகளாய் இருக்கும் தன்னுடைய சிநேகிதி என்று பெக்கி பதிலளித்தாள். அத்துடன், தன் சிநேகிதி கிறிஸ்துவின் அன்பிற்குள் வந்த சாட்சிகளையும் அவளிடம் தொடர்ந்து சொல்ல, ஹீதரும் ஆர்வத்துடன் கேட்டாள்.
அயர்லாந்தை விட்டு திரும்பிவந்த பெக்கி, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கு போக நேரிட்டது. ஆனால் அதற்குள் ஹீதர் பணிமாற்றம் செய்துகொண்டு வேறிடத்திற்கு போய்விட்டாள் என்பதைக் கேள்விப்பட்டாள். பெக்கி, “சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் வாய்ப்பு கொடுக்கும்படி தேவனிடத்தில் கேட்டேன்; அவர் கொடுத்தார்” என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டார்.
தன் பெலவீனத்தில் பெக்கி, பவுல் அப்போஸ்தலரைப் போல தேவனுடைய உதவியை நாடினாள். பவுலும் தன் சரீரத்தில் கொடுக்கப்பட்ட முள்ளைக் குறித்து தேவனிடத்தில் மன்றாடியபோது, “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்று தேவன் நம்பிக்கைக் கொடுக்கிறார். சிறியதோ அல்லது பெரியதோ, எந்த காரியத்திலும் தேவனைச் சார்ந்து வாழ பவுல் பழகிக்கொண்டார்.
நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களை நேசிக்கும் இருதயத்தை தேவனிடத்தில் கேட்டால், நம்முடைய விசுவாசத்தை அதிகாரப்பூர்வமாய் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.

கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள்!
பிரபலமான வீடு புதுப்பிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினி அடிக்கடி “கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்” என்று கூறுவது வழக்கம். அதற்கு பின்பு, தாங்கள் வர்ணம் பூசி, புதுப்பித்த வீட்டைக் காண்பிப்பாள். அப்படி ஒருநாளின் நிகழ்ச்சியில், தங்களுடைய புதுப்பிக்கப்பட்ட வீட்டின் பிரமிக்கத்தக்க அழகைப் பார்வையிட்ட அதின் உரிமையாளர், ஆச்சரியத்தில், “ஓ! அழகாயிருக்கிறது” என்று மூன்று முறை உணர்ச்சிப்பொங்க கூறினாள்.
வேதாகமத்தில் “கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்” என்று சொல்லத்தூண்டும் வேதப்பகுதிகளில் ஒன்றுதான், ஏசாயா 65:17-25. என்ன ஆச்சரியமான காட்சி! புதிய வானமும் புதிய பூமியும் மீண்டும் உண்டாக்கப்படபோகிறது (வச. 17). அது மிகவும் நிஜமான ஒரு உலகம்; வாழ்க்கையை மாற்றும், பாதுகாப்புள்ள உலகம். அங்கே “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்” (வச. 21). வன்முறைகள் எல்லாம் கடந்த காலமாய் மாறிவிடும்: “என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லை” (வச. 25).
ஏசாயா 65இல் பதிவாகியுள்ள இந்த பிரமிக்கத்தக்க படைப்புகள் எதிர்காலத்தில்தான் நடக்கப்போகிறது. அதை நடப்பிக்கும் தேவன் தற்போது வாழ்க்கை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பவுல் அப்போஸ்தலர், “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்று உறுதியளிக்கிறார். சீரமைக்கப்படவேண்டிய தேவை உனக்கு இருக்கிறதா? சந்தேகம், கீழ்ப்படியாமை, வேதனை போன்றவற்றால் உன் வாழ்க்கை சிதைக்கப்பட்டிருக்கிறதா? இயேசு, வாழ்க்கையை சீரமைத்து அழகாய் மாற்றுவது நிஜம். அவரை நம்பி, அவரையே சார்ந்துகொள்ளுகிறவர்களுக்கு அது சாத்தியமாகிறது.

தேவன் இருக்கிறார்
ஆப்ரே தன் வயதான அப்பாவிற்காக தோலினால் தைக்கப்பட்ட ஒரு மேலுறையை வாங்கினாள். ஆனால் அதை அணிவதற்குள் அவர் இறந்துவிட்டார். எனவே அந்த தோல் மேலுறையின் பாக்கெட்டில் ஒரு உற்சாகப்படுத்தும் வாக்கியம் எழுதப்பட்ட துண்டுகாகிதத்தையும், அத்துடன் 20 டாலர்கள் பணத்தையும் வைத்து, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுத்துவிட்டாள்.
சமாதானமில்லாத தன் குடும்பச் சூழ்நிலையை தாங்கிக்கொள்ள முடியாத கெல்லி, தன் வீட்டை விட்டு வெளியேறினான். போகும்போது அவன் மேலுறையை எடுக்க மறந்துவிட்டான். அவனுக்கு தெரிந்த ஒரே இடம், அவனுக்காய் ஜெபிக்கும் அவனுடைய பாட்டி வீடு. 90 மைல்கள் தூரத்திலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். குளிரின் தாக்கம் அதிகமாய் இருந்ததால், அவனுக்கு ஒரு மேலுறையை வாங்க வேண்டும் என்று பாட்டி சொன்னார்கள். அருகிலிருந்த மிஷன் கடையை நாடி, கெல்லி தனக்கு பிடித்த ஒரு மேலுறையைத் தேர்ந்தெடுத்தான். அதின் பாக்கெட்டில் கைவிட்டுப்பார்த்த கெல்லியின் கைக்கு, 20 டாலர்கள் பணமும் ஆப்ரேயின் உற்சாக வார்த்தை எழுதப்பட்டிருந்த துண்டு காகிதமும் சிக்கியது.
தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாகவே யாக்கோபும் தன்னுடைய வீட்டை விட்டு வெறியேறினான் (ஆதியாகமம் 27:41-45). இரவில் ஓரிடத்தில் தங்கி, தூங்கும்போது, தேவன் சொப்பனத்தில் அவனுக்கு வெளிப்பட்டு, “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து” நடத்துவேன் என்று வாக்குப்பண்ணுகிறார். உடனே யாக்கோபு, “தேவன் என்னோடே இருந்து... உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்(தால்)... கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்” என்று பொருத்தனை செய்கிறான் (வச. 20-21).
யாக்கோபு அந்த இடத்தில் ஒரு கல்லை நாட்டி, அந்த இடத்திற்கு “தேவனுடைய வீடு” என்று பேரிட்டான் (வச. 22). கெல்லி, ஆப்ரேயின் துண்டுகாகிதத்தையும் 20 டாலர்கள் பணத்தையும் நினைவுகூரும்பொருட்டு, போன இடத்திற்கெல்லாம் கொண்டு சென்றான். இந்த இரண்டுமே, நாம் போகுமிடத்திலெல்லாம் தேவன் நம்மோடிருக்கிறார் என்பதை நினைவுகூறவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
