அயர்லாந்தில் தங்கியிருந்த எழுத்தாளரும் சுவிசேஷகருமான பெக்கி பிப்பர்ட், தான் செல்லும் அழகு நிலையத்தில் பணிபுரியும் ஹீதர் என்ற பெண் பணியாளருக்கு சுவிசேஷம் அறிவிக்க விரும்பினார். ஆனால் ஹீதருக்கு அதில் பெரிய ஆர்வம் இருப்பதுபோல் தெரியவில்லை. தன் பேச்சை எப்படி துவங்குவது என்று தயங்கிய பெக்கி, அவளுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் வாய்ப்பிற்காய் ஜெபித்தாள்.

ஒரு நாள் அழகு நிலையத்திற்கு சென்ற பெக்கி, அங்கிருந்த மாத இதழைப் புரட்டிக்கொண்டிருக்க, அதில் இடம்பெற்றுள்ள ஒரு மாடலிங் பெண்ணின் புகைப்படத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ஹீதர், அவள் யார் என்று கேட்க, அது மாடலிங் துறையில் பல ஆண்டுகளாய் இருக்கும் தன்னுடைய சிநேகிதி என்று பெக்கி பதிலளித்தாள். அத்துடன், தன் சிநேகிதி கிறிஸ்துவின் அன்பிற்குள் வந்த சாட்சிகளையும் அவளிடம் தொடர்ந்து சொல்ல, ஹீதரும் ஆர்வத்துடன் கேட்டாள்.

அயர்லாந்தை விட்டு திரும்பிவந்த பெக்கி, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கு போக நேரிட்டது. ஆனால் அதற்குள் ஹீதர் பணிமாற்றம் செய்துகொண்டு வேறிடத்திற்கு போய்விட்டாள் என்பதைக் கேள்விப்பட்டாள். பெக்கி, “சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் வாய்ப்பு கொடுக்கும்படி தேவனிடத்தில் கேட்டேன்; அவர் கொடுத்தார்” என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டார்.

தன் பெலவீனத்தில் பெக்கி, பவுல் அப்போஸ்தலரைப் போல தேவனுடைய உதவியை நாடினாள். பவுலும் தன் சரீரத்தில் கொடுக்கப்பட்ட முள்ளைக் குறித்து தேவனிடத்தில் மன்றாடியபோது, “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்று தேவன் நம்பிக்கைக் கொடுக்கிறார். சிறியதோ அல்லது பெரியதோ, எந்த காரியத்திலும் தேவனைச் சார்ந்து வாழ பவுல் பழகிக்கொண்டார்.

நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களை நேசிக்கும் இருதயத்தை தேவனிடத்தில் கேட்டால், நம்முடைய விசுவாசத்தை அதிகாரப்பூர்வமாய் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.