
உறுதியான தேவ அன்பு
அலிசா மென்டோசாவுக்கு 2020இல் அவளுடைய அப்பாவிடமிருந்து ஒரு ஆச்சரியமூட்டும் மின்னஞ்சல் வந்திருந்தது. அவர்களுடைய 25ஆம் திருமண நாளில் அவளுடைய அம்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏன் அதைக் கண்டு அவள் ஆச்சரியப்பட்டாள்? ஏனெனில் பத்து மாதங்களுக்கு முன்னரே அவளுடைய அப்பா இறந்துவிட்டார். அவர் வியாதியாயிருக்கும்போதே தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்து, அந்த மின்னஞ்சலை குறிப்பிட்ட தேதிக்கு போய்சேரும்படி ஏற்பாடு செய்திருந்தார் என்பதை அறிந்துகொண்டாள். அத்துடன், இனி வரப்போகிற தன்னுடைய மனைவியின் பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம் ஆகிய அனைத்திற்கும் பூங்கொத்து பரிசளிக்கும்படிக்கும் முன்னமே ஏற்பாடு செய்துவிட்டே இறந்திருக்கிறார்.
இந்த அன்பு, உன்னதப்பாட்டு புத்தகத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ள அன்பிற்கு ஒப்பாயிருக்கிறது. “நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது” (உன்னதப்பாட்டு 8:6). மரணத்தையும் பாதாளத்தையும் அன்போடு ஒப்பிடுவது சரியில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் அவைகளில் சிறைப்பட்டவர்கள் மீண்டு வருவதில்லை. அதேபோன்று உண்மையான நேசமும் தான் நேசித்தவர்களை என்றுமே விடுவதில்லை. 6-7 வசனங்களில் புத்தகம் உச்சநிலை அடைந்து, “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது” என்று திருமண அன்பின் மேன்மையை உருவகப்படுத்துகிறது (வச. 7).
வேதாகமம் முழுவதிலும் கணவன்-மனைவி அன்பு தெய்வீக அன்பிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது (ஏசாயா 54:5; எபேசியர் 5:25; வெளி. 21:2). இயேசுவே மணவாளன், சபையானது அவருடைய மணவாட்டி. கிறிஸ்துவை இந்த உலகத்திற்காக மரிக்க ஒப்பக்கொடுத்ததின் மூலமாய் தேவன் தன் அன்பை நமக்கு காண்பித்துள்ளார். அதினால் இனி நாம் மரிக்க தேவையில்லை (யோவான் 3:16). நாம் திருமணமானவரோ அல்லது தனிநபரோ, ஆனால் தேவனுடைய அன்பு நாம் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவு உறுதியான அன்பு.
தேவன் கொடுக்கும் மகிழ்ச்சி
திவ்யா வீதியில் நடக்கும்போதெல்லாம் எதிர்படுபவர்களை எல்லாம் புன்முறுவலோடு எதிர்கொள்வது வழக்கம். சிநேகிக்கும் முகங்களை பார்க்க விரும்புபவர்களை அவள் வரவேற்கும் விதம் அப்படியாக இருந்தது. பல வேளைகளில் பெரும்பாலானோரின் உண்மையான புன்னகை அவளுக்கு பதிலாக கிடைக்கும். முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டபின், அவளுடைய முகத்தை யாரும் பார்க்க முடியாததால், அவள் சிரிப்பையும் யாரும் பார்க்கமுடியாது என்பதை அவள் உணர்ந்தாள். அது கடினம் என்றாலும் “நான் அதை நிறுத்தப்போவதில்லை, நான் சிரிப்பதை மற்றவர்கள் என் கண்களின் மூலமாய் பார்க்கட்டும்” என்று தீர்மானித்தாள்.
இந்த தீர்மானத்திற்கு பின் ஒரு சிறிய அறிவியல் பூர்வமான காரியம் உண்டு. வாயின் இருபுறமுள்ள தசைகளும் கண்களை சுறுக்கச்செய்யும் தசையும் இணைந்தே செயல்படும். இதனை “டுசென்னே” புன்னகை என்று அழைப்பர். அதற்கு, “கண்களால் சிரிப்பது” என்றும் அர்த்தம் உண்டு.
நீதிமொழிகள், “கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கட்டும்” என்றும் “மனமகிழ்ச்சி நல்ல ஓளஷதம்” (15:30; 17:22) என்றும் குறிப்பிடுகிறது. பெரும்பாலான நேரத்தில் தேவ பிள்ளைகளாகிய நம்மிடத்திலிருந்து வெளிப்படுகிற புன்னகை நாம் பெற்றிருக்கிற உன்னதமான மகிழ்ச்சியிலிருந்து வெளிப்படுகிறது. அது, அதிகமான பாரத்தை சுமக்கிற மக்களை உற்சாகப்படுத்தவும், வாழ்க்கையில் கேள்வியோடு பயணிக்கிறவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் நம் வாழ்க்கையிலிருந்து வழிந்தோடும் தேவனுடைய வரமாய் இருக்கிறது. நாம் உபத்திரவத்தைச் சந்திக்கும்போது என் மகிழ்ச்சி புன்னகையில் பிரதிபலிக்கும்.

இயேசுவுக்காய் பூத்துக் குலுங்குதல்
நான் அந்த அல்லிப் பூக்களுக்கு உண்மையாய் இல்லை. வெளிநாட்டிற்கு சென்று அமெரிக்கா திரும்பிய என்னுடைய மகள் எனக்கு பரிசாக வாங்கி வந்த அல்லிப்பூக்களின் பூண்டுகள். அவளை மீண்டும் நான் சந்தித்த ஆச்சரியத்தைப் போலவே அந்த பரிசைப் பார்த்ததும் ஆச்சரியப்படுவதுபோல காண்பித்துக்கொண்டேன். ஆனால் எனக்கு அல்லிப் பூக்கள் மீது ஆர்வம் இல்லை. ஏனெனில், அவைகளில் சிலவை சீக்கிரம் பூத்து, சீக்கிரம் வாடிவிடும். ஜூலை மாதத்தின் வெட்பமான சூழ்நிலை அதை பயிரிடுவதற்கு உகந்ததும் இல்லை.
செப்டம்பர் மாத இறுதியில் என் மகள் பரிசளித்த அல்லிப் பூண்டுகளை அன்போடு விதைத்தேன். பாறை மணலில் அதின் வளர்ச்சியைக் குறித்து நான் சந்தேகித்தேன். அதற்கென்று ஒரு மணல் பரப்பில் அதை நட்டு, அது வசந்தகாலத்தில் பூக்கும் என்ற நம்பிக்கையோடு கடைசியாய் அதனை தடவி “நன்றாய் தூங்கு” என்று சொல்லிவிட்டு வந்தேன்.
என்னுடைய இந்த செய்கை, நாம் விரும்பாத நபராயினும் ஒருவரையொருவர் நேசியுங்கள் என்று தேவன் நமக்கு கொடுத்த அழைப்பை நினைவுபடுத்துகிறது. நம் ஒவ்வொருவரின் கடந்தகால தவறான “களைகளை” திரும்பிப்பார்த்து, வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் நம் அன்பைப் பிரதிபலிக்க தேவனால் ஊக்குவிக்கப்படுகிறோம். காலங்கள் நகர, மெய்யான அன்பு பூக்கத் துவங்குகிறது. “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். அவரால் கிளைநறுக்கப்பட்டு, வசந்த காலத்தில் என் அல்லிப் பூக்கள் பூத்துக் குலுங்கியதைப் போன்று நாமும் பூத்துக் குலுங்குவோம்.
அந்த வாரயிறுதியில் என் மகள் மீண்டும் வீட்டிற்கு வந்தாள். “பார்! அங்கே என்ன பூத்திருக்கிறது” என்று அவளுக்கு காட்டினேன். நானும் மலர்ந்திருந்தேன்.
ஜெபமும் மணலும் நட்சத்திரங்களும்
அதீதியும் ஆகாஷும் குழந்தைக்காய் ஏங்கினர். ஆனால் அவர்களுடைய மருத்துவர் அது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். அதீதி தன் சிநேகிதியிடம் “நான் தேவனோடு நேர்மையாக பேசவிரும்புகிறேன்” என்றாள். அவ்வாறு பேசியதின் விளைவாய், அவளும் ஆகாஷும் அவர்களின் போதகரை சந்தித்து, சபையில் குழந்தை தத்தெடுக்கும் ஊழியத்தைத் துவங்க ஆலோசித்தார்கள். சரியாய் ஒருவருடம் கழித்து, அவர்கள் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர்.
ஆதியாகமம் 15இல், ஆபிராமுக்கும் தேவனுக்கும் இடையில் நேர்மையான உரையாடல் ஒன்று நிகழ்கிறது. தேவன் அவனிடம், “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்கு… மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்” (வச. 1). ஆனால் தன் எதிர்காலத்தைக் குறித்து நிச்சயமில்லாதிருந்த ஆபிராம், “கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே” என்று வெளிப்படையாய் பேசுகிறான் (வச. 2).
ஆபிராமுக்கு ஏற்கனவே தேவன், “உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்” என்று வாக்குப்பண்ணியிருக்கிறார் (13:16). தற்போது தேவன் அதை மீண்டும் அவனுக்கு நினைவுபடுத்துகிறார். இங்ஙனம் தேவனுடைய பதிலைப் பாருங்கள்: தேவன் அவனை வானத்தை அண்ணாந்து பார்க்கும்படி செய்து, “நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு” என்று சொல்லி, அதைப்போலவே எண்ணக்கூடாத அளவு அவனுடைய சந்ததி இருக்கும் என்று குறிப்பிடுகிறார் (15:5).
பின்பாக, தேவன் அவனுடைய பெயரை ஆபிரகாம் (ஜாதிகளுக்கு தகப்பன்) என்று மாற்றுகிறார். ஆபிரகாமைப் போல் நீங்களும் நானும் நேர்மையாய் நம்மை வெளிப்படுத்தி, நமக்கும் மற்றவர்களுக்கும் அவர் நன்மை செய்வார் என்று பூரணமாய் நம்புவோம்.
