
உற்சாகமாய் கொடுக்கிறவர்
மூன்றாம் நூற்றாண்டில் பிறந்த நிக்கோலஸ் என்பவர், அவர் மரித்த பல நூற்றாண்டுகள் கழித்து சாண்ட கிளாஸ் (கிறிஸ்மஸ் தாத்தா) என்று அழைக்கப்படுவார் என்பது அவருக்கு தெரியாது. அவர் தேவனை நேசித்து, மக்கள் மீது அக்கறைக்கொண்டு, தன்னுடையவைகள் எல்லாவற்றையும் உற்சாகமாய் மற்றவர்களுக்கு கொடுப்பதிலும் நற்கிரியை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு சாதாரண மனிதர். அவரைக் குறித்து சொல்லப்பட்ட ஒரு கதையில், பணத் தேவையிலிருந்த ஒரு குடும்பத்திற்கு, இரவில் அவர்களின் வீட்டு ஜன்னல் வழியே ஒரு தங்கம் நிறைந்த பையை இவர் தூக்கி வீச, அது அவர்களின் வீட்டிலிருந்த காலணிக்குள் போய் விழுந்தது என்று கூறப்படுகிறது.
நிக்கோலஸ்க்கு நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்த பவுல் அப்போஸ்தலர் கொரிந்திய திருச்சபை விசுவாசிகளை உற்சாகமாய் கொடுக்கும்படிக்கு வலியுறுத்துகிறார். எருசலேமிலிருந்த மக்களின் பெரிய பொருளாதார தேவையைக் குறித்து கூறி, அவர்களை தாராளமாய் கொடுக்கும்படிக்கு உற்சாகப்படுத்துகிறார். தங்கள் ஆஸ்திகளையும் பொருளையும் கொடுப்பவர்களுக்கு வரும் ஆசீர்வாதங்களைக் குறித்து பவுல் கூறுகிறார். “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (2 கொரி. 9:6)) என்று அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். உற்சாகமாய் கொடுப்பதினால், அவர்கள் ஒவ்வொருநாளும் சம்பூரணமுள்ளவர்களாய் மாறி (வச. 11), தேவனை கனப்படுத்துகிறார்கள்.
தகப்பனே, இந்த கிறிஸ்மஸ் நாட்களில் மட்டுமல்லாது, ஆண்டு முழுவதும் அனைவருக்கும் உற்சாகமாய் கொடுக்கிறவர்களாய் மாற எங்களுக்கு உதவிசெய்வீரா? விவரிக்கமுடியாத ஆச்சரியமான உம்முடைய குமாரனாகிய இயேசு என்னும் பரிசை எங்களுக்கு அருளியதற்காக உமக்கு நன்றி (வச. 15).

வேதத்தை உதாரணப்படுத்துவது
டச்சு தேசத்தின் வீடுகளெங்கிலும் காணப்படும் நீலமும் வெண்மையும் கலந்த பீங்கான் ஓடுகள் டெல்ஃப்ட் என்னும் நகரத்தில் உருவாக்கப்பட்டவைகள். அவைகள் பொதுவாக நெதர்லாந்தின் பிரபலமான காட்சிகளான அழகான நிலப்பரப்புகள், எங்கும் நிறைந்த காற்றாலைகள் மற்றும் மக்கள் வேலை செய்யும், விளையாடும் காட்சிகள் அகியவற்றை பிரதிபலிக்கின்றன.
19ஆம் நூற்றாண்டில் சார்லஸ் டிக்கன்ஸ் என்பவரால் எழுதப்பட்ட “எ கிறிஸ்மஸ் கேரல்” என்னும் புத்தகத்தில் இந்த பீங்கான் ஓடுகள் எவ்வாறு வேதாகமத்தை உதாரணப்படுத்துகிறது என்பதை விவரிக்கிறார். ஒரு டச்சுக்காரர் இந்த ஓடுகளைப் பயன்படுத்தி கட்டமைத்த குளிர்காயும் நெருப்பிடம் பற்றி அவர் கூறுகிறார். “அதில் காயீன் ஆபேல், பார்வோன் குமாரத்திகள், சேபாவின் ராணிகள்,... மற்றும் கடலில் பயணிக்கும் அப்போஸ்தலர்கள்” என்று அவர் வடிவமைத்துள்ளார். பல குடும்பங்களுக்கு இந்த நெருப்பிடம், குடும்பமாக அமர்ந்து வேதாகமத்தைக் கற்கும் இடமாகவும் கதைகளை பகிருவதற்கு ஏதுவாகவும் உள்ளது. தேவனுடைய குணாதிசயங்களான நீதி இரக்கம் மற்றும் கிருபை ஆகியவைகளை கற்றுக்கொள்ளமுடிகிறது.
வேதாகமத்தின் சத்தியங்கள் இன்றும் ஏற்புடையதாயிருக்கிறது. சங்கீதம் 78, “பூர்வகாலத்து மறைபொருளை விவரித்து, நாம் கேள்விப்பட்டவைகள் மற்றும் பிதாக்கள் நமக்கு அறிவித்தவைகளை” (வச. 2-3) போதிக்கும்படிக்கு அறிவுறுத்துகிறது. மேலும் “கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும்” (வச. 4,6) பின்வரும் சந்ததிக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லும்படிக்கு அறிவுறுத்துகிறது.
தேவனுடைய துணையோடு, தேவனை முற்றிலும் கனம்பண்ணும் விதத்தில், வேதாகமத்தின் சத்தியங்களை அடுத்த தலைமுறையினருக்கு நேர்த்தியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கொண்ட வழிகளை நாம் கண்டறிவோம்.

இன்றைய தலைமுறை
“முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை ஒருபோதும் நம்பவேண்டாம்” என்று 1964இல் ஜாக் வெண்பெர்க் என்ற ஓர் இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளர் சொன்னார். அவருடைய அந்த கருத்து அந்த தலைமுறையையே பாதித்தது குறித்து அவர் பின்னர் வருந்தினார். பின்னர் அவர், “என்னுடைய தலையின் உச்சியிலிருந்து நான் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டேன்... அது சிதைந்து முற்றிலும் தவறாய் புரிந்துகொள்ளப்பட்டது” என்று வருந்தினார்.
பல்லாயிரக்கணக்கான மக்களை இலக்காகக் கொண்ட இழிவான கருத்துக்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது அதற்கு நேர்மாறாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு தலைமுறையிலிருந்து மறுதலைமுறைக்கு தொடர்புகொள்ளப்படும் தவறான கருத்துக்கள், இருதரப்பினராலும் தவிர்க்கப்பட வேண்டும். நிச்சயமாக ஒரு சிறந்த வழி இருக்கிறது.
எசேக்கியா ஒரு நல்ல ராஜாவாய் இருந்தபோதிலும், அடுத்த தலைமுறையைக் குறித்த அவருடைய அக்கறை குறைவாயிருந்தது. அவருடைய இளம்பிரயாத்திலேயே அவர் வியாதிகண்டான் (2 இராஜ. 20:1). அவருடைய ஜீவனுக்காய் தேவனிடத்தில் மன்றாடினார் (வச. 2-3). தேவன் அவருடைய ஆயுசுநாட்களை 15 வருடங்கள் கூட்டுகிறார் (வச. 6).
ஆனால் அவருடைய தலைமுறை சிறைபிடிக்கப்பட்டு போகும் என்னும் தகவலை கேள்விப்படும்போது அவர் அதை பொருட்படுத்தவில்லை (வச. 16-18). “என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே” என்று எண்ணுகிறார் (வச. 19). தன்னுடைய நலத்தின் மீது எசேக்கியாவுக்கு இருந்த அக்கறையை அடுத்த தலைமுறையின் மீது காண்பிக்கவில்லை.
நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் கோட்டைக் கடக்கும் துணிச்சலுள்ள அன்பிற்கு தேவன் நம்மை அழைக்கிறார். பழைய தலைமுறைகளுக்கு இன்றைய இளைய தலைமுறையினரின் இலட்சியமும் படைப்பாற்றலும் தேவை. அதேபோன்று, இளைய தலைமுறையினரும் மூத்தவர்களின் ஞானத்தினாலும் அனுபவத்தினாலும் பயனடையவேண்டும். இது மற்றவர்களைக் குறித்து, கருத்துக்களையும் கோபங்களையும் பரிமாறும் நேரமல்ல. நல்ல சிந்தனைகளை பரிமாறுவோம். நாம் இதில் இணைந்து செயல்படுவோம்.

மெய்யான அங்கீகாரம்
நான் எடுத்த என்னுடைய சிநேகிதியின் புகைப்படத்தை அவள் பார்த்தாள். அதில் அவளுடைய உடல் உறுப்புகளின் அமைப்பை அவள் ஒரு குறையாகப் பார்த்தாள். நான் அவளை கவனமாய் உற்றுப்பார்க்கும்படி கூறினேன். “சர்வ மகத்துவமுள்ள ராஜாதி ராஜாவின் அழகான மகளை நான் பார்க்கிறேன்” என்று அவளிடம் கூறினேன். “பலபேருடைய வாழ்க்கையை மாற்றியுள்ள தயவுள்ள, தாராளமான, உண்மையான தேவனையும் பிறரையும் நேசிக்கிற ஒருவளை நான் பார்க்கிறேன்” என்றேன். அவளுடைய கண்களில் நீர்சொறிய ஆரம்பித்ததை பார்த்த நான், “உனக்கு ஒரு கிரீடத்தை வாங்கவேண்டும்” என்றேன். அன்று மதியம், அவளுடைய உண்மையான அங்கீகாரத்தை உணர்த்தும்பொருட்டு, என்னுடைய சிநேகிதிக்கு அழகான ஒரு கிரீடத்தை வாங்கினோம்.
நாம் இயேசுவை தனிப்பட்ட விதத்தில் அறியும்போது, அவர் நம்மை அன்பினால் முடிசூட்டி, நம்மை அவருடைய பிள்ளைகள் என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). “அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு” (2:28) விசுவாசத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு பெலப்படுத்துகிறார். அவர் நம்மை இருக்கும்விதமாகவே ஏற்றுக்கொண்டாலும், அவருடைய அன்பு நம்மை சுத்திகரித்து, அவருடைய சாயலுக்கு நம்மை மறுரூபமாக்குகிறது (3:2-3). அவருடைய தேவையை நம் வாழ்க்கையில் அறியச்செய்து, பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கு நம்மை பெலப்படுத்துகிறார் (வச. 7-9). அவருடைய சத்தியத்தை நம்முடைய இருதயத்தில் ஒளித்து, அவருடைய ஆவியை நம்முடைய ஜீவியத்தில் பதித்து, அவருக்கு கீழ்படியும் அன்பான வாழ்க்கையை நாம் வாழமுடியும் (வச. 10).
என்னுடைய சிநேகிதிக்கு தலைப்பாகையோ அல்லது அணிகலனோ அன்று தேவைப்படவில்லை. ஆனால் நாங்கள் தேவனுடைய பிரியமான பிள்ளைகள் என்பதை அன்று நினைவுகூர்ந்தோம்.
