
அன்பான தேவன்
ஒரு பேராசிரியர் வழக்கமாக தன் ஆன்லைன் வகுப்பு இரண்டு விதமாக நிறைவுசெய்வார். அவர், “அடுத்தமுறை சந்திப்போம்” அல்லது “ஒரு நல்ல வாரயிறுதியை அனுபவியுங்கள்” என்று நிறைவுசெய்வார். சில மாணவர்கள், “நீங்களும் அவ்வாறே செய்யுங்கள், நன்றி!" என்று வாழ்த்துவார்கள். ஒருநாள் ஒரு மாணவர் பதிலுக்கு, “நான் உம்மை நேசிக்கிறேன்” என்றானாம். அவர் ஆச்சரியத்துடன், “நானும் உம்மை நேசிக்கிறேன்!” என்று பதிலளித்தாராம். அவனோடு கூட படிக்கும் மாணவர்கள் அனைவரும், அடுத்த ஆன்லைன் வகுப்பு நிறைவுறும்போது அவ்வாறே சொல்லுவதற்கு தீர்மானித்தனர். சில நாட்களுக்கு பிறகு அவர் பாடம் நடத்திய பின் ஒவ்வொரு மாணவர்களும் “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று வாழ்த்தினார்களாம். மாதக்கணக்காய் இந்த வழக்கத்தை அவர்கள் கடைபிடித்தனராம். ஆசிரியர் இந்த “நான் உம்மை நேசிக்கிறேன் சங்கிலி” ஒரு பலமான பிணைப்பை அவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையே உருவாக்கியதால், அவர் அந்த வகுப்பை தன்னுடைய குடும்பமாய் கருதுகிறார்.
1 யோவான் 4:10-21ல், நாம் தேவனுடைய குடும்பமாய் இருப்பதால், அவரிடம் “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று சொல்ல பல காரணங்கள் இருக்கின்றன: அவர் தம்முடைய குமாரனை நம் பாவத்திற்கான பலியாகக் கொடுத்தார் (வச. 10). அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை நம்முள்ளே வாசம்பண்ண அனுமதித்திருக்கிறார் (வச. 13, 15). அவருடைய அன்பு நம்பகமானது (வச. 16). நாம் ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்து ஒருபோதும் பயப்படத் தேவையில்லை (வச. 17). “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால்” (வச. 19) அவரையும் மற்றவர்களையும் நேசிக்க உதவுகிறார்.
அடுத்த முறை தேவ ஜனத்தோடு கூடும்போது நீங்கள் ஏன் தேவனை நேசிக்கிறீர்கள் என்ற காரணங்களை பகிர்வதற்கு நேரம் செலவழியுங்கள். “நான் உம்மை நேசிக்கிறேன்” என்ற சங்கிலியை தேவனுக்காய் உருவாக்கி, தேவனை துதியுங்கள்; தேவனோடு இன்னும் கிட்டிச் சேருங்கள்.

குயவனின் சக்கரம்
1952ல் மக்களின் கவனமின்மையால் கடையில் இருக்கும் பொருட்களை உடையாமல் தவிர்க்க கடைகாரர் ஒரு அடையாளத்தை வெளியிட்டார்: “நீங்கள் உடைத்த பொருள் உங்களுடையது.” பொருளை வாங்குபவர்களுக்கு அது எச்சரிக்கையின் வார்த்தைகளாக தென்பட்டது. இதுபோன்ற வித்தியாசமான அடையாள வாக்கியங்களை இதுபோன்ற கடைகளில் அநேகம் காணலாம்.
ஆனால் பரம குயவனுடைய கடையில் முரண்பாடான ஒரு வாக்கியத்தை நாம் பார்க்கமுடியும். எரேமியா 18ல் பதிவாகியுள்ள, “நீங்கள் உடைத்தால், நாங்கள் அதைவிட சிறந்ததாய் உருவாக்குவோம்” என்னும் வாக்கியமே அது. எரேமியா ஒரு குயவனின் வீட்டிற்குச் சென்று, குயவன் எவ்வாறு “கெட்டுப்போன” மண்பாண்டத்தை கையில் எடுத்து அதை நேர்த்தியாய் “வேறே பாண்டமாக வனைந்தான்” (வச. 4) என்பதை பார்க்கிறார். தேவன் மிகத்திறமையான குயவன் என்பதையும் நாம் களிமண் என்பதையும் தீர்க்கதரிசி நமக்கு நினைவூட்டுகிறார். தேவன் சர்வவல்லவர் என்பதினால், அவர் உருவாக்கிய பாத்திரத்தைக் கொண்டு தீமையை அழிக்கவும், நம்மில் அழகை உருவாக்கவும் அவரால் முடியும்.
நாம் கெட்டுப்போயிருந்தாலோ அல்லது உடைக்கப்பட்டாலோ தேவனால் நம்மை மீண்டும் உருவாக்க முடியும். அவர் திறன்வாய்ந்த குயவன்; நம்முடைய உடைக்கப்பட்ட வாழ்க்கைத் துண்டுகளைக்கொண்டு புதிய விலையேறப்பெற்ற பாத்திரத்தை அவரால் உருவாக்க முடியும். தேவன் நம்முடைய உடைந்த வாழ்க்கைகளையோ தவறுகளையோ, கடந்தகால பாவங்களையோ பயன்படாத விஷயங்களாய் பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக, நமது உடைந்த துண்டுகளை எடுத்து, அவருடைய பார்வைக்கு நலமாய் பட்டபடி மறுவுருவம் கொடுக்கிறார்.
நாம் உடைக்கப்பட்டபோதிலும் அவர் நம்மை பொருட்படுத்துகிறார். உடைந்த துண்டுகளும் அவரின் கைகளில் உபயோகப்படும் அழகான பாத்திரங்களாய் வனையப்படுகிறது (வச. 4).

இது கிருபை
“லேஸ் மிசெரபிலெஸ்” என்ற பிரபலமான ஒரு பிரெஞ்சு வரலாற்று நாவலில், பரோலில் வெளிவந்த ஜீன் வால்ஜீன் என்ற குற்றவாளி, ஒரு மதகுருவின் வெள்ளியைத் திருடிவிடுவான். அவன் கையும் களவுமான பிடிபடுகிறான். அவன் சிறைக்கு செல்லுவான் என்று எதிர்பார்க்கும் வேளையில், அந்த வெள்ளியை தானே அவனுக்குக் கொடுத்ததாக மதகுரு கூறி, அவனை காப்பாற்றுவார். காவலர்கள் போனதும், “இனி நீ தீமைக்குச் சொந்தமானவன் அல்ல; நன்மைக்கு சொந்தமானவன்” என்று அறிவுறுத்துவதாக நாவல் நீளுகிறது.
பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு விசுவாசிகளிடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே நகரத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தனர் என்றார். மக்கள் கூட்டம் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்கிறார்கள். பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” (அப்போஸ்தலர் 2:38) என்று ஆலோசனை கூறுகிறார். அவர்களுக்கு தகுந்த தண்டனையை இயேசு ஏற்றார். இப்பொழுது அவர்கள் விசுவாசத்தை அவர் மீது வைத்ததினால் தண்டனையிலிருந்து மன்னிக்கப்படுவர்.
என்னே ஆச்சரியமான கிருபை! மக்கள்தான் கிறிஸ்துவின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள், அதினால் அந்த மரணத்தால் அவர்களுக்கே மன்னிப்பளிக்கப்படுகிறது. தேவன் கிருபையுள்ளவர், வல்லமையில் சிறந்தவர். மானுடத்தின் பெரிய பாவத்தை அவர்களின் இரட்சிப்பிற்காகவே பயன்படுத்தினார். தேவன் இயேசுவை முன்பே சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்திருந்தால் எதுவுமே நன்மையானதாக மாறியிருக்காது என்று நாம் யோசிக்கலாம். சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிற (ரோமர் 8:28) அவர் ஒருவரையே விசுவாசியுங்கள்.

தேவனிடமிருந்து ஒளித்துக்கொள்ளுதல்
நான் கண்ணாமூச்சி விளையாடியபோது என் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தேன். என் சிநேகிதிகள் ஒளிந்துகொள்ள இடத்தைத் தேடி சென்றனர். மணிக்கணக்காய் அலமாரி, டிரங்க் பெட்டி, குளியலறை என்று தேடியும் ஒரு சிநேகிதியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவள், கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த செடியின் பின்னாலிருந்து குதித்தபோது நான் சற்று முட்டாள்தனமாய் உணர்ந்தேன். அவள் ஒளிந்துகொண்டபோது, அவளின் தலையை மட்டுமே அந்த செடி மறைத்திருந்தது, அவள் உடல் முழுவதும் பார்க்கக்கூடிய வகையில் வெளியரங்கமாகவே இருந்தது.
தேவன் அனைத்தும் அறிந்தவர். ஆதலால் ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் ஒளித்துக்கொண்டபோதும், அவர்கள் அவரின் தெளிவான பார்வையில் (ஆதியாகமம் 3:8) இருந்தனர். அவர்கள் திடீரென்று ஏற்பட்ட விழிப்புணர்வாலும், அவமானத்தாலும், தாங்கள் செய்த தவறான செயலுக்காகவும், தேவன் உண்ணக்கூடாது என்று விலக்கி வைத்த மரத்தின் கனியைப் புசித்ததினாலும் தங்களை ஒளித்துக்கொண்டனர்.
ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அவரை விட்டு விலகினர். கோபத்தில் அவர்களை விட்டுவிடாமல் “நீ எங்கே இருக்கிறாய்” என்று அவர் வெளியே கொண்டுவர முயன்றார். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அவருக்கு தெரியாது என்று அர்த்தமில்லை; அவர் தாம் அவர்கள் மீது கொண்டிருக்கிற அக்கறையை அவர்கள் அறியவேண்டும் என நினைத்தார் (வச. 9).
என் சிநேகிதி மறைந்திருந்ததை நான் காணவில்லை; ஆனால் தேவன் எப்போதும் நம்மைக் காண்கிறார். நாம் அவருடைய தெளிவான பார்வையில் இருக்கிறோம். அவர் ஆதாம் ஏவாளை பின்தொடர்ந்தது போல, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). நாம் இனி ஒளிந்துகொள்ளத் தேவையில்லை.
