வகை  |  odb

உடைத்து அழகாக்கப்படுதல்

குஜராத் மாகாணத்தின் பிரபலமான “ரோகன் ஓவியங்கள்” பார்ப்பதற்கு மிகவும் எளிமையாய் தெரியலாம். ஆனால் அந்த ஓவியத்தின் ஒரு சிறு பகுதியை வடிவமைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறதுஎன்பதை அறிந்துகொள்ளவேண்டும். நொறுக்கப்பட்ட கனிம அடிப்படையிலான வர்ணங்களை ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து, “மெல்லமான ஓவியம்” என்று நாம் அழைக்கும் இந்த ஓவியத்தை தயார் செய்வதற்கு ஆறு மணி நேரத்திற்கு மேலாக எடுக்கும். அதை உன்னிப்பாய் கவனித்தால், அதின் வேலைப்பாடுகளும் அழகும் தெரியும். சுவிசேஷமும் ஏறத்தாழ இதைப்போன்றதே. உடைக்கப்பட்ட கனிமங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தைப் போலவே, இயேசு தன் பாடுகளின் மூலம் உடைக்கப்பட தன்னை ஒப்புக்கொடுத்து, முழு உலகத்திற்குமான நம்பிக்கைக்குக் காரணரானார்.

நம்முடைய வாழ்க்கையில் உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட அனுபவங்களை தேர்ந்தெடுத்து, அதை புதிய அழகான காரியங்களாய் மாற்றுவதற்கு தேவன் விரும்புகிறார். தாவீது, தன்னுடைய சுயத்தினால் உடைக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றுவதற்கு தேவனுடைய உதவியை நாடினார். இன்னொருவனுடைய மனைவியை இச்சித்து, அவள் நிமித்தம் அவளுடைய கணவனை கொலை செய்யத் துணிந்த தன்னுடைய தவறை உணர்ந்து தாவீது பாடிய பாடலே சங்கீதம் 51. தாவீது, “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை” (வச. 17) தேவனுக்கு அர்ப்பணித்து, இரக்கத்திற்காய் கெஞ்சினான். நருங்குண்டதும் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட எபிரேயப் பதம், “நித்கே.” அதற்கு, “சுக்குநூறாய் நொருங்கியது” என்று பொருள்.

தாவீதின் இருதயத்தை தேவன் புதிதாக்குவதற்கு (வச. 10), அது முழுவதுமாய் நொறுக்கப்படவேண்டியிருந்தது. மன்னிக்கிறதில் தயைபெருத்த உண்மையுள்ள தேவனிடத்தில் தாவீது தன்னுடைய உடைக்கப்பட்ட இருதயத்தை ஒப்படைத்தான்.

விவாக உருவகம்

திருமணமாகி, 22 ஆண்டுகள் வாழ்ந்த பிறகும், மெரினோடு என்னுடைய வாழ்க்கை கடந்துபோன விதத்தைக் குறித்து நான் ஆச்சரியப்படுவதுண்டு. நான் ஒரு எழுத்தாளன். மெரின் ஒரு புள்ளியல் நிபுணர். நான் வார்த்தைகளோடு வேலை செய்கிறேன். அவளோ எண்களோடு வேலை செய்கிறாள். நான் அழகை எதிர்பார்க்கிறேன். அவளோ, செயல்பாட்டை எதிர்நோக்குகிறாள். நாங்கள் வெவ்வேறு சிந்தனை உலகத்தை சார்ந்தவர்கள். மெரின் சரியான நேரத்தை பின்பற்றுவாள். நானோ சற்று தாமதமாகவே செயல்படுபவன். ஓட்டலுக்கு சென்றால், நான் புதிய வகை உணவை சாப்பிட நினைப்பேன்; அவளோ, வழக்கமாய் சாப்பிடும் உணவையே தெரிந்தெடுப்பாள். ஆர்ட் கேலரியில் இருபது நிமிடங்களுக்கு பிறகு தான் நான் தேர்ந்தெடுக்கவே ஆரம்பிப்பேன். மெரினோ, கீழே உள்ள உணவகத்தில் அமர்ந்துகொண்டு நான் இன்னும் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வேன் என்று சலித்துக்கொள்வாள். நாங்கள் இருவரும் பொறுமையை கற்றுக்கொள்வதற்கான நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வோம்.

நாங்கள் சேர்ந்து சிரிப்போம், பிரயாணம் செய்வோம், சேர்ந்து ஜெபிப்போம். நான் அவளுடைய முன்னேற்றத்திற்கு காரணமானேன். அவள் என்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமாவாள். நாங்கள் இருவரும் சேர்ந்து தேவனுக்குள் வளர்கிறோம். பவுல், சில நல்ல நோக்கத்தோடு, திருச்சபையை திருமணத்தோடு ஒப்பிடுகிறார் (எபேசியர் 5:21-33). திருமண உறவைப்போலவே, திருச்சபையும் பலதரப்பட்ட வித்தியாசமான மனிதர்களைக் கொண்டு, அவர்களுக்குள் மனத்தாழ்மையும் நீடிய பொறுமையும் உண்டாகும்பொருட்டு, “அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (4:2) இருக்கும்படிக்கு கூறுகிறார். திருமண உறவைப்போலவே, திருச்சபையிலும் வித்தியாசமான நம்பிக்கைகளை உடையவர்கள், ஒருமன ஆவியோடு செயல்படுகிறார்கள் (வச. 11-13). உறவில் விரிசல் ஏற்படுவது திருச்சபைக்கும் திருமணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதை மேற்கொண்டு, கிறிஸ்துவைப்போல மாற முடியும்.

சோதனைகளுக்கான கிருபை

ஸ்ரீதேவி சிறுபிராயத்திலிருந்தே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவளுடைய கழுத்து முதல் கால்வரை செயலிழந்திருந்தது. மற்றப் பிள்ளைகள் வெளியில் மகிழ்ச்சியோடு விளையாடும்போது, இவள் மட்டும் மற்றவர்களை சார்ந்தே, குறிப்பாய் அவளுடைய அப்பாவை சார்ந்தே வாழவேண்டியிருந்தது. அவளுடைய கிராமத்தில் திரையிடப்பட்ட கருணாமூர்த்தி என்னும் கிறிஸ்துவின் வாழ்க்கைக் கதை அவளுடைய வாழ்க்கையைத் தொட்டது. அவள் கிறிஸ்துவுக்கு தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தாள். அதன் பின்பு, அவளை சந்திக்கும் யாவருக்கும் அவள் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதியாய் விளங்கினாள்.

அவள் தன்னுடைய அனுபவத்திலிருந்து, உபத்திரவம் என்பது எல்லோருக்கும் பொதுவானது, ஆனால் தேவனால் நேசிக்கப்படுகிறவர்களை அவர் கைவிடுவதில்லை என்பதைக் கற்றுக்கொண்டாள். சோர்ந்து போய் அவளிடம் வருபவர்களிடமெல்லாம் தேவ அன்பை பகிர்ந்து கொள்வாள். அவளுடைய வாழ்க்கையின் இறுதியில், 180 பேர் அவள் மூலமாய் இயேசுவை அறிந்துகொண்டார்கள். அதில் பெரும்பாலானவர்கள் மிஷனரிகளாகவும் ஊழியர்களாகவும் மாறியிருக்கின்றனர்.

மோசே உபத்திரவத்தையும் போராட்டங்களையும் சந்தித்தார். ஆனால் தேவப் பிரசன்னம் அவரோடிருப்பதை அவர் உணர்ந்தார். இஸ்ரவேலர்கள் மீதான தன்னுடைய தலைமைத்துவத்தை யோசுவாவிடம் ஒப்படைத்தபோது, “உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்” (உபா. 31:6) என்று ஆலோசனை கூறினார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, வல்லமை மிக்க எதிரிகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதை அறிந்த மோசே, யோசுவாவிடம், “நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” (வச. 8) என்று அறிவுறுத்தினார்.

இந்தப் பாவ உலகத்தில், கிறிஸ்துவின் சீஷர்கள் பாடுகளையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் நம்மை பெலப்படுத்தும் ஆவியானவர் நம்மோடே இருக்கிறார். அவர் நம்மை விட்டு விலகுவதில்லை.

“மான்ஸ்ட்ரோ” என்றப் பொன் மீன்

லாசி ஸ்காட், தனது ஊரில் இருந்த செல்லப்பிராணிகள் கடையிலிருந்தபோது, தொட்டியின் அடியில் ஒரு மீன் சோர்ந்திருப்பதைக் கண்டாள். அதின் செதில்கள் கருப்பாக மாறி, அதின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டிருந்தது. பத்து வயதான அந்த மீனை விலைக்கு வாங்கிய லாசி, அதற்கு “மான்ஸ்ட்ரோ” என்று பெயரிட்டு, அதை பிரத்யேகமான மீன் தொட்டியில் வைத்து தினமும் தண்ணீர் மாற்றி அதைப் பராமரித்தாள்.

மான்ஸ்ட்ரோவின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு, அது மெல்லமாக நீந்த துவங்கி, உருவத்திலும் வளர்ச்சியடைந்தது. அதின் கருப்பு செதில்கள் தங்க நிறத்திற்கு மாறியது. லாசியின் அர்ப்பணிப்புமிக்க பராமரிப்பினால், மான்ஸ்ட்ரோ புதுப்பிக்கப்பட்டது.

லூக்கா 10ஆம் அதிகாரத்தில், கள்ளர்களால் காயப்பட்டு குற்றுயிராய் கிடந்த ஒரு மனிதனைக் குறித்த கதையை இயேசு சொல்லுகிறார். காயப்பட்ட அந்த மனிதனின் வேதனையைப் பொருட்படுத்தாமல், ஆசாரியனும் லேவியனும் அவனை கடந்து சென்றனர். ஆனால் ஒதுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் அங்கத்தினரான ஒரு சமாரியன், அவனைப் பராமரித்து, அவனுடைய தேவைக்கு பண உதவியும் செய்தான் (லூக்கா 10:33-35). அந்தக் கதையில் சமாரியனே உண்மையான நண்பன் என்று நமக்கு சொன்ன இயேசு, அதையே செய்யும்படி மக்களை வலியுறுத்தினார்.

மரிக்கும் தருவாயில் இருந்த அந்த மீனுக்கு லாசி செய்ததுபோல, தேவையிலுள்ளவர்களுக்கு நாமும் நன்மை செய்வோம். ஆதரவற்ற, வேலையில்லாத, செயலிழந்த, தனிமையிலிருக்கும் நண்பர்கள் அநேகர் நம்முடைய பாதையில் இருக்கிறார்கள். அவர்களின் சோகத்தை கண்டறிந்து, அவர்களை அக்கறையோடு பராமரிப்போம். அன்பான வாழ்த்துக்கள், பகிர்ந்துகொள்ளப்பட்ட உணவு, சிறு பண உதவிகள் ஆகியவற்றின் மூலம் எல்லாவற்றையும் மாற்றக்கூடிய தேவ அன்பை மற்றவர்களிடம் பகிர்ந்தளிக்கலாம்.

பேரழிவால் அசைக்கப்படுதல்

1717ஆம் ஆண்டு வடக்கு ஜரோப்பாவில், ஒரு மாபெரும் புயல் வீசியது. நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் டென்மார்க் போன்ற தேசங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதில் பாதிக்கபட்ட ஒரு தேசத்தின் அரசாங்கம் ஆச்சரியமான தீர்மானத்தை எடுத்ததென வரலாறு தெரிவிக்கிறது. குரோனிஞ்சன் தேசத்தின் நகர அதிகாரிகள், இந்தப் பேரழிவின் காரணமாக “ஜெப நாள்” ஒன்றை ஒழுங்குசெய்தனர். ஜனங்கள் அனைவரும் திருச்சபையில் கூடி, “பிரசங்கங்களை கேட்டு, பாடல்களை பாடி, மணிக்கணக்காய் ஜெபித்தனர்” என்று ஒரு சரித்திர நிபுணர் பதிவுசெய்கிறார்.

யோவேல் தீர்க்கதரிசியும், அனுமதிக்கப்பட்ட பேரழிவினை சந்தித்து தேவ சமுகத்தில் மன்றாடிய ஜனங்களைக் குறித்துக் குறிப்பிடுகிறார். திரள்கூட்ட வெட்டுக்கிளிகள் தேசத்தைச் சூறையாடி, “அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து” பாழாக்கியது (யோவேல் 1:7). யோவேலும் அவருடைய ஜனங்களும் இந்தப் பேரழிவினால் ஆழ்ந்த துயரத்திற்குள்ளாகி, “கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்” (யோவேல் 1:19) என்று உதவிக்காய் கெஞ்சினர். 

நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாவத்தின் காரணமாகவும் விழுந்து போன இவ்வுலகத்திநிமித்தமும், வட ஐரோப்பியரும், யூதரும் பேரழிவை சந்திக்க வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 3:17-19; ரோமர் 8:20-22). அந்தத் தருணங்களில் தேவனை நோக்கிப் பார்த்து ஜெபிப்பதே சரியானதென்பதை அறிந்து செயல்பட்டனர் (யோவேல் 1:19). தேவன் அவர்களைப் பார்த்து, “ஆதலால் நீங்கள் இப்பொழுதே ... உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” (2:12) என்று சொன்னார். 

நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளையும் பேரழிவுகளையும் நாம் சந்திக்க நேரிட்டால், கண்ணீரோடும் மனந்திரும்புதலோடும் தேவனிடத்திற்குத் திரும்பக்கடவோம். அவர் “இரக்கமும்” “மிகுந்த கிருபையுமுள்ளவர்” (வச. 13), நம்மை அவரிடமாய் சேர்த்துக்கொண்டு, நமக்குத் தேவையான ஆறுதலையும் உதவியையும் நமக்கு அருளுவார்.