மைக்கல் ஒரு கடல் நண்டைப் பிடிக்கப் போனபோது, ஒரு கூம்பு திமிங்கலம் அவரைக் கவ்வியது. அதின் வாயினுள், அகண்ட இருளில் சிக்கிய அவரை, திமிங்கலத்தின் தசைகள் நொறுக்கவே, தன் கதை முடிந்ததென்று நினைத்தார். திமிங்கலங்களுக்கு கடல் நண்டு பிடிப்பவர்களை பிடிக்காது, எனவே முப்பது வினாடிகள் கழித்து, அது மைக்கலை வெளியே துப்பியது. ஆச்சரியப்படும்விதமாக, அவருக்கு எந்த எலும்பு முறிவும் இல்லை, வெளிப்புற சிராய்ப்புகள் தான் இருந்தன. அவருடைய அனுபவம் இப்பொழுது நம்முடன் பேசுகிறது. 

இதை அனுபவிக்கும் முதல் நபர் இவரில்லை. யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கியது (யோனா 1:17), அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தார், பிறகு அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது (1:17; 2:10). மைக்கலுக்கு நேர்ந்ததுபோல இதுவொரு விபத்தன்று. யோனா, இஸ்ரவேலின் எதிரிகளை வெறுத்ததாலும், அவர்களுடைய மனந்திரும்புதலை விரும்பாததாலும், அந்தப் பெரிய மீனால் விழுங்கப்பட்டார். தேவன் யோனாவை நினிவேயில் பிரசங்கிக்கச் சொல்ல, இவரோ கப்பலேறி எதிர்த்திசையாய் போனார். ஆகவே தேவன் திமிங்கலம் போன்ற பெரிய மீனை அனுப்பி, தனக்கு செவி கொடுக்கும்படி செய்தார்.

யோனா அசீரியர்களை வெறுத்தது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. பண்டைய நாட்களில் அவர்கள் இஸ்ரவேலரை துன்புறுத்தினர், இஸ்ரவேலின் வடக்கு கோத்திரங்களைச் சிறையாக்கிக் கொண்டுபோகவே, தங்கள் அடையாளத்தையே இஸ்ரவேலர் இழந்தனர். அசீரியா மன்னிக்கப்படும் என்பதை யோனா ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இப்பொழுது நமக்குப் புரிகிறது.

யோனா தேவனை விட தேவ பிள்ளைகளுக்கு மிகவும் விசுவாசமுள்ளவனாய் இருந்தார். தேவனோ இஸ்ரவேலரின் எதிரிகளையும் நேசித்தார், அவர்கள் இரட்சிக்கப்படும்படி விரும்பினார். அவர் நம்முடைய எதிரிகளையும் நேசித்து, அவர்கள் இரட்சிக்கப்படும்படி விரும்புகிறார். தேவ ஆவியானவரின் வழிகாட்டுதலோடு, இயேசுவின் நற்செய்தியைச் சுமந்து அவர்களுக்கு நேரே விரைவோம்.