வகை  |  odb

காலத்தின் விதைகள்

1879 ஆம் ஆண்டில் வில்லியம் பீலுடைய செய்கைகள் பார்ப்பவர்களுக்கு முட்டாள்தனமாய் தெரிந்தது. ஏனெனில் தாவரவியல் பேராசிரியரான அவர் இருபது பாட்டில்களில் விதைகளை நிரப்பி, அதை மண்ணில் புதைத்து வைத்தார். ஒரு விதையின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் பீலின் இந்த முயற்சியானது நூற்றாண்டுகள் நீடிக்கக்கூடியது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இருபது வருடங்களும் ஒரு பாட்டிலை தோண்டியெடுத்து அது முளைத்திருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

விதைக்கிறதைக் குறித்து இயேசு அநேக போதனைகளை செய்திருக்கிறார். விதைக்கிறதை கர்த்தருடைய வார்த்தையை பறைசாற்றுவதோடு ஒப்பிடுகிறார் (மாற்கு 4:15). சில விதைகளை சாத்தான் கெடுத்துப்போடுகிறான்; சில விதைகள் வேரூன்றுவதில்லை; சில விதைகள் முள்ளுகளுக்கிடையே சிக்கி வளராமல் போய்விடுகிறது (வச. 15-19). நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் போது, எந்த விதை பலன்  கொடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. நம்முடைய வேலை விதைப்பது, அதாவது, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது: “உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (16:15).

2021ஆம் ஆண்டு, பீலின் மற்றுமொரு பாட்டில் தோண்டி எடுக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், 142 ஆண்டுகளுக்கு மேலாக விதைகள் உயிர்பிழைத்திருக்கிறது கண்டறியப்பட்டது. நம்முடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்படிக்கு தேவன் நம் மூலமாய் கிரியை செய்தால், நாம் பகிர்ந்துகொள்ளும் வார்த்தை எப்போது வேரூன்றும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்முடைய நற்செய்தி விதையானது, ஒரு நாள் நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டு, “ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாக” (4:20) பலன் கொடுக்கும்.

தேவனிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்தல்

சமையலறை மேடையில் பொருந்தக்கூடிய அளவிற்கு ஒரு ஆலமரத்தை கற்பனை செய்து பாருங்கள். போன்சாய் என்ற மரம் அப்படித்தான், காட்டில் நீங்கள் பார்க்கும் பெரிய ஆலமரத்தின் மிகச்சிறிய உருவமே இந்த போன்சாய் மரம். பெரிய மரத்திற்கும் இந்த போன்சாய் மரத்திற்கும் இடையே எந்த மரபணு வித்தியாசமும் கிடையாது. அதை நட்டு வைத்திருக்கிற தொட்டியின் அளவினாலும், அதின் வேர் அடிக்கடி  சுத்திகரிக்கப்படுவதினாலும் அதின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு சிறியதாகவே இருக்கிறது.

இந்த போன்சாய் மரங்கள் அழகாய் அலங்காரமாய் தெரிந்தாலும், அது கட்டுப்பாட்டை உருவகப்படுத்துகிறது. மரங்கள் அதின் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்தாலும், அவற்றை வளரச் செய்வது தேவனே.

தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியிடத்தில், “கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன்” (எசேக்கியேல் 17:24) என்று பேசுகிறார். பாபிலோனிய சிறையிருப்பை அனுமதிப்பதின் மூலம் இஸ்ரவேல் தேசத்தை “வேறோடு பிடுங்கும்” எதிர்காலத்தைக் குறித்து தேவன் முன்னறிவிக்கிறார். ஆகிலும் தேவன் இஸ்ரவேலில் கனி தரக்கூடிய ஒரு புதிய விருட்சத்தை ஓங்கி வளரச்செய்வார்; அதின் நிழலில் “சகலவிதப்பட்சி ஜாதிகளும்” வந்து அடைக்கலம் தேடும் (வச. 23).

சம்பவிக்கப்போகிற நிகழ்வுகள் அனைத்தும் கட்டுப்பாட்டை மீறியதாக தென்பட்டாலும், தேவன் அதை கட்டுக்குள் வைத்திருந்தார். இந்த உலகம், நம்முடைய சூழ்நிலைகளால், கடின உழைப்பின் மூலம் நாமே கட்டுப்படுத்த முடியும் என சொல்லுகிறது. ஆனால் வளரச்செய்யும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போதே, மெய்யான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

திட்டங்களும் நடத்துதலும்

2000ஆம் ஆண்டு, வளர்ந்துவரும் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தை ரூ.375 கோடிக்கு மற்றொரு நிறுவனத்திற்கு விற்க முன்வந்தது. திரைப்படங்கள், மற்றும் வீடியோ கேம்களை வாடகைக்கு எடுக்கும் இந்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சுமார் 300000 சந்தாதாரர்களை கொண்டிருந்தது. ஆனால் அதே சமயத்தில், பெரிய திரைப்பட காணொலி நிறுவனங்களில் மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள் இருந்தனர். இவர்கள் இந்த சிறிய நிறுவனத்தை விலைகொடுத்து வாங்க மறுத்துவிட்டனர். அதன் விளைவு? இன்று நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 18 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களையும், 15 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமுமாய் உருவெடுத்திருக்கிறது. வளர்ந்து வந்த மற்ற நிறுவனங்களெல்லாம், அதை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்காலத்தை யாராலும் தீர்மானிக்கமுடியாது.

நம்முடைய வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றும், நம்முடைய எதிர்காலம் சிறப்பானதாய் இருக்கும் என்றும் நாம் நம்புவதற்கு துண்டப்படுகிறோம். ஆனால் யாக்கோபு சொல்லும்போது, நம்முடைய வாழ்க்கையானது “கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே” (4:14) என்று குறிப்பிடுகிறார். வாழ்க்கை என்பது, சொற்பமானதும், துரிதமானதும், எளிதில் நொறுங்கக்கூடியதுமாயிருக்கிறது என்பதை நாம் உணர்வதுண்டு. திட்டமிடுதல் அவசியம் தான். ஆனால், நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் தான் அனைத்தும் இயங்குகிறது என்பது பாவம்.

ஆகையினால் தான் யாக்கோபு, “உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்டbமேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது” (வச. 16) என்று குறிப்பிடுகிறார்.  தேவனோடு உள்ள நெருங்கிய உறவின் மூலமே இந்த பழக்கத்திலிருந்து நாம் விடுபடமுடியும். நன்றியுள்ள ஜீவியமே, “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. நாம் தேவனை அணுகும்போது, நம்முடைய நிகழ்கால மற்றும் எதிர்கால திட்டங்களை ஆசீர்வதிக்கும்படிக்கு மட்டும் கேட்காமல், அவருடைய சித்தத்திற்கு உகந்த வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுப்போம். “ஆண்டவருக்குச் சித்தமானால்” (4:15) என்பதற்கான அர்த்தம் இதுவே.

கேட்டுப்பாருங்கள்!

என் வீட்டின் அடித்தளத்திலிருந்து என்னுடைய மனைவி ஷர்லியின் ஆனந்த கூச்சல் சத்தம் கேட்டது. ஒரு பத்திரிக்கையில் கட்டுரை எழுத அவள் மணிக்கணக்காய் போராடி, எழுதி முடிந்திருந்தாள். அதை எப்படி தொடர்ந்து எழுதுவது என்று குழம்பியிருந்த அவள் தேவனுடைய உதவியை நாடினாள். அவளுடைய முகநூல் நண்பர்களின் உதவியையும் நாடி அந்த கட்டுரையை குழு முயற்சியாய் நிறைவுசெய்தாள்.  

பத்திரிக்கைக் கட்டுரை என்பது வாழ்க்கையில் சின்ன விஷயம். ஆனால் சிறிய விஷயங்கள் கூட வாழ்க்கையில் கவலையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும். ஒருவேளை, நீங்கள் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் புதிய பெற்றோராய் இருக்கலாம், ஒரு மாணவனாய் கற்பதற்கு போராடிக்கொண்டிருக்கலாம், நேசித்தவர்களை இழக்கக் கொடுத்தவராய் இருக்கலாம். அல்லது வீடு, அலுவலகம், ஊழியத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். சிலவேளைகளில் நாம் அவற்றோடு தனியாய் போராடிக்கொண்டிருக்கிறோம், ஏனெனில் நாம் தேவனிடத்தில் உதவி கேட்பதில்லை (யாக்கோபு4:2).

பிலிப்பு பட்டணத்து விசுவாசிகளுக்கும், நமக்கும் பவுல் “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று ஆலோசனை கொடுக்கிறார். வாழ்க்கையில் நம்பிக்கையிழக்கும் தருணங்களில், கீழ்க்கண்ட ஆங்கில பாடல் போன்று பாடல்களை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்:  

இயேசுவில் நமக்கு ஒரு நண்பர் இருக்கிறார், நாம் ஏன் சமாதானத்தை  அடிக்கடி இழக்க வேண்டும், ஓ, என்ன தேவையற்ற வலியை நான் பொறுக்க வேண்டும், எல்லாவற்றையும் நான் சுமக்கத் தேவையில்லை, ஜெபத்தில் தேவனிடத்தில் ஒப்படைக்கிறேன். 

தேவனிடத்தில் நாம் உதவிக்காய் நாடும்போது, நமக்கு உதவிசெய்யும் நபர்களை தேவன் நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருவார்.