வகை  |  odb

உன் பங்கு, தேவனுடைய பங்கு

என்னுடைய சிநேகிதி ஜேனிஸ், அவளுடைய வேலை பார்க்கும் அலுவலகத்தில், ஒரு துறையைப் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாள். ஆனால் அதைச் செய்வதற்கு அவள் பயந்தாள். தேவனிடம் ஜெபித்தாள். தேவன் அந்த பொறுப்பை ஏற்கும்படி அவளுக்கு உணர்த்தினார். ஆனாலும், அந்த பொறுப்பை ஏற்பதைக் குறித்த பயம் அவளிடம் காணப்பட்டது. சொற்ப அனுபவமுள்ள நான் எப்படி அந்த பொறுப்பை ஏற்பது? என்று தேவனிடம் கேட்டாள். “என்னை ஏன் இந்த ஸ்தானத்திற்கு ஏற்படுத்தினீர், நான் தோற்கப்போகிறேன்” என்று புலம்பினாள்.
பின்பாக ஒரு நாள், ஜேனிஸ் ஆதியாகமம் 12ஆம் அதிகாரத்தை வாசித்து, அதில் “நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ...அவன் புறப்பட்டுப்போனான்” என்ற ஆபிரகாமின் பங்களிப்பை அறிந்தாள் (வச.1,4). பண்டைய நாட்களில் யாரும் இது போல் செய்ததில்லை என்பதினால், இது ஒரு துணிச்சலான முயற்சி. ஆனால் எல்லாவற்றையும் பின்னாக தள்ளிவிடும்படியும், எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் அறிவித்து, தன்னை நம்பும்படிக்கு தேவன் கட்டளையிட்டார். அங்கீகாரம்? உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்; ஆசீர்வாதம்? உன்னை ஆசீர்வதிப்பேன்; மதிப்பு? உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நோக்கம்? பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும். அவனுடைய வழியில் ஆபிரகாம் சில பெரிய தவறுகளைச் செய்திருந்தாலும், “விசுவாசத்தினாலே ஆபிரகாம்... கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்”(எபிரெயர் 11:8).
இந்த புரிந்துகொள்ளுதல் ஜேனிஸின் இருதயத்தில் பெரிய பாரத்தை நீக்கியது. அவள் பின்பாக என்னிடத்தில் சொன்னபோது,“என்னுடைய வேலையில் நான் வெற்றிபெற்றவளாய் இருக்கக் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த வேலையை நான் செய்வதற்குத் தேவன் மீது நம்பிக்கை வைப்பதில் என் கவனத்தை செலுத்த வேண்டும்.” என்று சொன்னாள். நமக்குத் தேவையான விசுவாசத்தை தேவன் அருளும்போது, நம்முடைய எல்லாவற்றிலும் அவரை நம்புவோம்.

மகிழ்ச்சியாய் நன்றி செலுத்துதல்

உளவியல் நிபுணர் ராபர்ட் எம்மன்ஸ், வார நிகழ்வுகளை குறிப்பெடுக்கும்படி மூன்று குழுவினர்களை பிரித்தார். அதில் ஒரு குழுவினர், அவர்கள் நன்றி செலுத்தக்கூடிய ஐந்து காரியங்களை எழுதினர். ஒரு குழுவினர் அவர்கள் சந்தித்த ஐந்து பிரச்சனைகளை எழுதினர். ஒரு குழுவினர், தங்களுடைய வாழ்க்கையில் எளிமையான விதத்தில் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்து காரியங்களை எழுதியிருந்தனர். அந்த ஆய்வின் முடிவில், தங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்திய குழுவைச் சேர்ந்தவர்களே தங்கள் எதிர்காலத்தைக் குறித்த நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் என்றும், குறைவான சரீர வியாதிகள் உடையவர்கள் என்றும் கண்டறியப்பட்டனர்.
நன்றியுள்ளவர்களாயிருத்தல் என்பது வாழ்க்கையை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது. நன்றி சொல்லுதல் நம்மை மகிழ்ச்சியடையவும் செய்கிறது. தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருப்பதால் ஏற்படும் நன்மைகளை வேதம் நமக்கு அறிவிப்பதின் மூலம் தேவனுடைய சுபாவத்தை வெளிப்படுத்துகிறது. சங்கீதங்கள், “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்... உள்ளது (சங்கீதம் 100:5) என்றும் அவருடைய மாறாத கிருபைக்காகவும் ஆச்சரியமான கிரியைகளுக்காகவும் நன்றி செலுத்தும்படி தேவ ஜனத்திற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கிறது (107:8,15,21,31).
பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தை பவுல் நிறைவுசெய்யும்போது, அவருக்கு ஊழியத்தில் உறுதுணையாயிருந்தவர்களுக்கு தன் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதத்திலேயே அதை எழுதுகிறார். அவர் “எல்லாப் புத்திக்கும் மேலான” தேவசமாதானத்தோடு (4:7) தன் நன்றியை வெளிப்படுத்துகிறார். தேவனையும் அவர் செய்த நன்மைகளையும் நினைவுகூரும்போது, கவலைகள் இல்லாமல் எல்லா சூழ்நிலைகளிலும் நம் நன்றியை வெளிப்படுத்தமுடியும். நன்றி செலுத்துதல் என்பது நமக்கு தேவசமாதானத்தை அருளி, நம்முடைய இருதயத்தையும் சிந்தையையும் பாதுகாத்து, வாழ்க்கையின் பார்வையையே மாற்றிவிடும். நன்றியுள்ள இருதயம் மகிழ்ச்சியின் ஆவிக்கு ஊட்டமளிக்கும்.

தேவ வார்த்தையின் வல்லமை

ஸ்டீபன், வளரும் ஒரு நகைச்சுவை கலைஞன். ஆனால் ஊதாரி. கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும், தன் தந்தையின் மீதும் விமான விபத்தில் உயிரிழந்த தன்னுடைய இரண்டு சகோதரர்கள் மீதும் சந்தேகப்பட்டே வளர்ந்தான். இருபதாவது வயதில் கிறிஸ்துவை விட்டு விலகினான். ஆனால் சிகாகோ நகர வீதியின் ஒரு இடத்தில் அந்த விசுவாசத்திடம் மீண்டும் திரும்பினான். யாரோ ஒருவர் அவனுக்கு ஒரு புதிய ஏற்பாடு ஒன்றைக் கொடுத்தார். அதை அவன் திறந்தான். அதின் முகப்பு பக்கத்தில், கவலையோடிருக்கிறவர்கள் இயேசுவின் மலைப்பிரசங்க பகுதியான மத்தேயு 6:27-34 ஐ வாசியுங்கள் என்று எழுதியிருந்தது.
ஸ்டீபன் அதைத் திறந்து வாசித்தபோது, அவனுடைய இருதயம் பற்றியெரிந்தது. அவன் சொல்லும்போது, “என்னுடைய வாழ்க்கை உடனடியாக ஒளிபெற்றது. குளிர்ந்த அந்த இரவில், தெருமுனையில் நின்று இயேசுவின் பிரசங்கத்தை நான் வாசித்தேன். என்னுடைய வாழ்க்கை இதுபோல இனி இருக்கப்போவதில்லை” என்று சொன்னான்.
அதுவே வேதாகமத்தின் வல்லமை. வேதமானது மற்ற புத்தகங்களைப் போன்றதல்ல; ஜீவனுள்ளது. நாம் வேதத்தை வாசிப்பதில்லை; வேதம் நம்மை வாசிக்கிறது. வேதாகமம், “இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது”(எபிரெயர் 4:12).
நம்மை மறுரூபமாக்கி, ஆவியின் முதிர்ச்சிக்கு நேராய் வழிநடத்தும் பூமியின் மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆற்றலாக வேதம் செயல்படுகிறது. அதைத் திறந்து சத்தமாய் வாசித்து, நம்முடைய இருதயங்களை ஒளிரச் செய்யும்படிக்குத் தேவனிடத்தில் விண்ணப்பிப்போம். அவருடைய வாயிலிருந்து புறப்படும் வசனம், “வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசாயா 55:11) என்று அவர் வாக்குறுதியளிக்கிறார். நம்முடைய வாழ்க்கை இப்போது இருப்பதுபோலவே இருக்கப்போவதில்லை.

தேவ பெலத்தால் சுயகட்டுப்பாடு

1972ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆர்வத்தின் எல்லையைப் பரிசோதிக்கும் “மார்ஷ்மெல்லோ சோதனை” என்றழைக்கப்படும் சோதனை தோற்றுவிக்கப்பட்டது. அதில் பங்கேற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் மார்ஷ்மெல்லோ இனிப்பு ஒன்று வழங்கப்பட்டது. குழந்தைகளின் பசி நேரத்தில், அந்த இனிப்பை சாப்பிடாமல் பத்து நிமிடம் வரை அப்படியே வைத்திருந்தால் இன்னொரு மார்ஷ்மெல்லோ உங்களுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் தங்கள் பசியைக் கட்டுப்படுத்தி, மேலான பரிசை வாங்குவதற்காகக் காத்திருந்தனர். மற்ற குழந்தைகள் முப்பது விநாடிக்குள் சாப்பிடத் துவங்கிவிட்டனர்.
நமக்கு விருப்பமான ஒன்று நமக்குக் கிடைக்கும்போது நம்முடைய சுயகட்டுப்பாட்டை இழக்க நேரிடுகிறது. காத்திருத்தல் அதிக நன்மையைக் கொடுக்கும் என்று தெரிந்தும் நம் கட்டுப்பாட்டை இழக்கிறோம். ஆகையால் நம்முடைய விசுவாசத்தோடு சுயகட்டுப்பாட்டை சேர்க்கும்பொருட்டு பேதுரு நம்மை ஊக்குவிக்கிறார் (2 பேதுரு 1:5-6). கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டவர்களாய் நற்குணம், அறிவு, பொறுமை, சுயக்கட்டுப்பாடு, தேவபக்தி, அன்பு ஆகியவற்றில் வளரும்படிக்கு சபையையும் நம்மையும் பேதுரு உற்சாகப்படுத்துகிறார் (வச.5-8).
இந்த குணாதிசயங்கள் தேவனுடைய தயவையோ, பரலோகத்தில் நமக்கென்று ஓர் இடத்தையோ உறுதிசெய்யவில்லையெனினும்; அன்றாடம் நாம் உறவாடும் மக்களிடம் நம்முடைய சுயகட்டுப்பாட்டை ஞானமாய் வெளிப்படுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே “ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினது”(வச.3).

ஆகாயத்துப் பறவைகள்

கோடை வெயில் உதயமாகிக்கொண்டிருந்தது. என் பக்கத்து வீட்டு நபர் புன்சிரிப்போடு எதையோ காண்பித்து, என்னைப் பார்க்க வருமாறு கிசுகிசுத்தார். “என்ன?” நான் ஆர்வத்துடன் கேட்டேன். அவள் முன் வராந்தாவில் ஒரு காற்றாடி ஒலிப்பதைக் காட்டினாள், அங்கிருந்த உலோகப்படியின் மேல் சிறிதளவு வைக்கோல் இருந்தது. “பாடும் குருவிக் கூடு,” என்று அவள் கூறினாள். “குஞ்சுகளை பார்த்தாயா?” அதின் கூர்மையான அலகுகள் மேல்நோக்கி இருந்தது. “அவைகள் அதின் அம்மாவுக்காக காத்திருக்கிறது.” நாங்கள் அவைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். அதைப் படம்பிடிப்பதற்காக அலைப்பேசியை உயர்த்தினேன். “ரொம்ப பக்கத்துல போகாதீங்க” என்று என்னை எச்சரித்தாள். “அதின் அம்மாவைப் பயமுறுத்த விரும்பவில்லை.” பாடும் பறவைகளின் குடும்பத்தை தூரத்திலிருந்தே நாங்கள் பராமரித்தோம்.
ஆனால் சில நாட்களிலேயே, அவைகள் எப்படி வந்ததோ. அதேபோல அந்த தாய் பறவையும் மற்ற குஞ்சுகளும் அந்த இடத்தை விட்டுப் பறந்துபோனது. யார் அவைகளைக் குறித்து யோசிக்கப்போகிறார்கள்?
வேதாகமம் மகிமையான ஆனால் நமக்கு பரீட்சயமான பதிலை கொடுக்கிறது. அது வாக்குபண்ணியவற்றை நாம் மறக்கிற அளவிற்கு நமக்கு பரீட்சயமான பதில்: “உங்கள் ஜீவனுக்காக... கவலைப்படாதிருங்கள்” (மத்தேயு 6:25). எளிமையான, அழகான ஆலோசனை. அவர், “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்”(வச.26) என்று சொல்லுகிறார்.
சிறிய பறவையை அவர் எந்த அளவிற்குப் பொறுப்பேற்கிறாரோ, அதை விட நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவற்றைப் போஷித்துப் பராமரிக்கிறார். இது மகிமையான வாக்குறுதி. எந்த கவலையும் இல்லாமல், அனுதினமும் நாம் அவரை நோக்கிப் பார்த்து, சிறகடித்து எழும்புவோம்.