வகை  |  odb

வாழ்க்கையின் அடையாளங்கள்

என்னுடைய மகள் இரண்டு நண்டுகளைப் பரிசாகப் பெற்றாள். ஒரு கண்ணாடிப் பெட்டியை உண்டாக்கி, அதில் மணலைப் போட்டு, அதில் அந்த நண்டுகள் வாழ்வதற்கு ஏதுவான அமைப்பை ஏற்படுத்தினாள். அது உயிர்வாழ்வதற்குத் தேவையான தண்ணீர், புரதச்சத்து, காய்கறிகள் ஆகியவற்றை அதில் வைத்தாள். அவைகள் மகிழ்ச்சியாய் இருப்பதுபோல தெரிந்தது. ஆனால் ஒரு நாள் அந்த நண்டுகள் காணாமல் போய்விட்டது. எங்கே என்று தேடினோம். கடைசியில் அது தன்னை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டது என்று கண்டறிந்தோம். அப்படியே இரண்டு மாதங்கள் அது மண்ணுக்குள்ளேயே புதைந்து, தன்னுடைய ஓட்டை மட்டும் வெளியே காண்பித்தவண்ணம் இருந்தது.
மூன்று மாதங்கள் கடந்துபோனது. அது மரித்துவிட்டதோ என்று நாங்கள் கவலைகொள்ள ஆரம்பித்தோம். காத்திருந்து பொறுமையிழந்தோம். கடைசியில் அது உயிரோடிருப்பதற்கான அடையாளங்களைப் பார்த்தோம். மண்ணுக்குள்ளிருந்து எண்ணற்ற நண்டு குஞ்சுகள் வெளியேறியது.
இஸ்ரவேலர்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்த நாட்களில் தேவனுடைய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுமா என்று சந்தேகித்திருக்கக்கூடும் என்று நான் எண்ணுகிறேன். அவர்கள் சோர்வுற்றிருந்தார்களோ? அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிருப்பிலேயே முடிந்துவிடுமோ என்று அஞ்சினார்களோ? எரேமியாவின் மூலம் தேவன் அவர்களுக்கு, “நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் (எருசலேமுக்கு) திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்” (எரேமியா 29:10) என்று சொல்லுகிறார். எழுபது ஆண்டுகள் கழித்து, பெர்சிய மன்னன் கோரேசின் மூலம், யூதர்கள் தங்கள் சுதேசம் திரும்பி, ஆலயத்தைக் கட்டிக்கொள்ளும்படி செய்தார் (எஸ்றா 1:1-4).
எந்த மாற்றங்களும் நிகழாமல் காத்திருக்கும் நாட்களில், தேவன் நம்மை மறந்துவிடுவதில்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மில் பொறுமையை உண்டாக்கும்போது, அவர் நம்பிக்கையின் காரணர், வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர், எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தக்கூடியவர் என்பதை நாம் அறியக்கூடும்.

ஆண் பிள்ளை

ஒரு வருடத்திற்கு முன்னதாக, “ஆண் பிள்ளை” என்று வெறுமனே ஒரு குழந்தை பெயரிட்டு அழைக்கப்பட்டது. பிறந்த சில மணித்துளிகளில் புறக்கணிக்கப்பட்ட அந்த பிள்ளை, மருத்துவமனை வளாகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த பிள்ளை கண்டெடுக்கப்பட்ட மாத்திரத்தில் சமூக சேவகர்கள், அந்த பிள்ளையின் குடும்பமாய் மாறப்போகிற ஒரு தம்பதியினருக்கு அவசர அழைப்பு விடுத்தனர். தம்பதியினர் அந்த பிள்ளையைக் கையில் எடுத்து, அதை “கிரேசன்” (அவனுடைய நிஜ பெயர் அல்ல) என்று அழைத்தனர். அந்த பிள்ளையைத் தத்தெடுக்கும் ஒழுங்குகள் நேர்த்தியாய் செய்யப்பட்டு, “கிரேசன்” என்றே அப்பிள்ளைக்குப் பெயரிடப்பட்டது. இன்று உங்களோடு சகஜமாய் உறவாடக்கூடிய அளவிற்கு அப்பிள்ளை வளர்ந்திருக்கிறது. அவன் ஒரு காலத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை என்பதை உங்களால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது.
தன்னுடைய வாழ்க்கையின் பிற்பகுதியில், மோசே தேவனுடைய சுபாவங்களையும் அவர் இஸ்ரவேலுக்காய் செய்த நன்மைகளையும் புரிந்துகொண்டான். “கர்த்தர் உன் பிதாக்கள் மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம்” வைத்தார் (உபாகமம் 10:15) என்று கூறுகிறார். அன்பின் பாதை நீளமானது. “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்” (வச.18) என்று மோசே சொல்லுகிறார். “அவரே உன் புகழ்ச்சி... உன் தேவன் அவரே” (வச.21).
தத்தெடுப்பின் மூலமாகவோ அல்லது அன்பு மற்றும் சேவையின் மூலமாகவோ தேவனுடைய அன்பைப் பிரதிபலிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த தம்பதியினர், கவனிக்கப்படாத திக்கற்ற ஒரு பிள்ளைக்கு தேவனுடைய அன்பின் கரத்தை நீட்டி ஆதரவு தெரிவித்தனர். நாமும் அவருடைய கரங்களாகவும் பாதங்களாகவும் செயல்படமுடியும்.

நீ இன்னும் என்னை நேசிப்பாயா?

பத்து வயது நிரம்பிய லின்-லின் தத்தெடுக்கப்பட்டாள். ஆனால் அவள் மிகவும் பயந்திருந்தாள். அவள் வளர்ந்த ஆசிரமத்தில், சிறிய தவற்றுக்குக்கூட அவள் தண்டிக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். அவளைத் தத்தெடுத்த தாய், என்னுடைய சினேகிதி. அவள் தன் தாயைப் பார்த்து, “அம்மா, நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா?’ என்று கேட்க, என்னுடைய சினேகிதியும் “ஆம்” என்ற தலையசைக்க, “நான் தவறு செய்தாலும் என்னை நேசிப்பீர்களா?” என்று ஆர்வத்துடன் கேட்டாளாம்.
நம்மில் சிலரும் தேவனை துக்கப்படுத்திவிட்டு, “நீர் இன்னும் என்னை நேசிக்கிறீரா?” என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டப்படலாம். இந்த உலகத்தில் நாம் வாழும்வரை நாம் சிலசமயம் பாவத்தால் வீழ்வோம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் என்னுடைய தப்பிதங்கள், என் மீதான தேவனுடைய அன்பை மாற்றக்கூடுமோ? என்று நாம் வியப்படையலாம்.
யோவான் 3:16, தேவனுடைய அன்பை நமக்கு உறுதியளிக்கிறது. அவர் தன்னுடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக தந்தருளினார், அவரை விசுவாசித்தால், நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர் மீது விசுவாசம் வைத்த பின்பு நாம் பாவம் செய்தால் என்ன நேரிடும்? அந்த தருணத்தில்தான், நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார் என்னும் மேலான சத்தியத்தை நினைவுகூரவேண்டும் (ரோமர் 5:8). நாம் பாவிகளாயிருக்கும்போதே அவர் நம்மீது அன்பு வைத்திருப்பார் என்றால், இன்று அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் நாம் எப்படி அவருடைய அன்பைச் சந்தேகப்பட முடியும்?
நாம் பாவம் செய்யும்போது நம்முடைய பரமபிதா அன்போடு சிட்சித்து, நம்மை உருவாக்குகிறார். அது நம்மை புறக்கணிப்பது அல்ல (8:1); அது அன்பின் பிரதிபலிப்பு (எபிரெயர் 12:6). நம் மீதான அவருடைய அன்பு சீரானது மற்றும் நிலையானது என்னும் நம்பிக்கையில், அவருடைய அன்பின் பிள்ளைகளாய் இளைப்பாறுவோம்.

வாழ்க்கையின் எதிர்பார்ப்பு

1990ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆய்வாளர்களின் கணினி பிரச்சனை: ஜீன் காலமென்ட்டின் வயதைப் பதிவேற்றும்போது, பிழைகள் குறுக்கிட்டது. அவருடைய வயது 115. அந்த கணினியின் வரையறையில் அந்த அதிகப்படியான எண்ணிக்கை இடம்பெறவில்லை. அதை வடிவமைத்தவர்கள் அத்தனை ஆண்டுக்காலம் யாரும் வாழ்வது சாத்தியமில்லை என்று எண்ணியிருந்தனர். ஆனால் ஜீன், 122 வயது வரை உயிர் வாழ்ந்தார்.
சங்கீதக்காரன், “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷம்” (சங்கீதம் 90:10) என்று சொல்லுகிறான். இந்த உலகத்தில் எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தாலும், ஜீன் போன்று 122 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தாலும்கூட, இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கை நிலையில்லாததே. நம்முடைய வாழ்க்கை சர்வவல்லமையுள்ள ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது (வச.5). ஆவிக்குரிய உலகத்தில் தேவனுடைய காலம் என்பது “ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது” (சங்கீதம் 90:4).
“குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்” (யோவான் 3:36) என்று இயேசுவின் ஆளத்துவம் ஆயுசுக்காலத்தின் நீளத்திற்கு புதிய அர்த்தம் கொடுக்கிறது. “உடையவனாயிருக்கிறான்” என்பது நிகழ்காலத்தைக் குறிக்கிறது. நம்முடைய நிகழ்கால பிரச்சனைகள் மற்றும் கண்ணீரை மாற்றி, நம்முடைய எதிர்காலம் ஆசீர்வாதமாகவும் நம்முடைய நாட்கள் முடிவில்லாததாயும் இருக்கும் என்று அறிவிக்கிறது.
இதில் நாம் களிகூர்ந்து, சங்கீதக்காரனோடு சேர்ந்து “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” (சங்கீதம் 90:14) என்று ஜெபிப்போம்.