வகை  |  odb

ஒரு அன்பான உழைப்பு

டாக்டர் ரெபேக்கா லீ க்ரம்ப்ளர் என்பவரே முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார். எனினும் வாழ்நாள் முழுதும் ((1831–95) அவர் நிராகரிப்பட்டதையும், பொருட்படுத்தப்படாததையும், உதாசீனமாக்கப்பட்டதையும் அவரால் மறக்க முடியவில்லை. அவர் தன்னுடைய குறிக்கோளான மருத்துவத் தொழிலில் அர்ப்பணிப்போடிருந்தார். சிலர் நிறத்தையும், இனத்தையும் கொண்டு இவரை மட்டுப்படுத்தினாலும் "கடமை என்னை எங்கே, எப்போது அழைத்தாலும்; அதைச் செய்யும் புதிதான துணிவையும் ஆயத்தத்தையும் உடையவளாகவே" தாம் இருப்பதாக அவர் கூறுகிறார். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சிகிச்சையளித்ததும் ; விடுதலையான அடிமைகளுக்கு மருத்துவ பராமரிப்பை வழங்கினதும் தேவனுக்கே செய்த ஊழியமாக அவர் நம்பினார். கவலைப்படும் வண்ணமாக, கிட்டத்தட்ட அடுத்த நூற்றாண்டு வரை அவர் தன்னுடைய சாதனைகளுக்காகக் கௌரவிக்கப்படவில்லை. நாமும்கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டு, குறைவாய் மதிப்பிடப்பட்டு, பாராட்டப்படாமல் இருக்கலாம். எனினும், வேதம் நமக்கு நினைப்பூட்டும் காரியம் யாதெனில், தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்தால்; உலகத்தாரால் அங்கீகாரம் பெறுவதையும், பாராட்டப்படுவதையும் நோக்காமல், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்ய” (கொலோசெயர் 3:24) அழைக்கப்படுகிறோம். நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதை நோக்கினால், கடினமான காரியங்களையும்கூட அவருடைய பெலத்திலும் வழிகாட்டுதலிலும், விடாமுயற்சியுடன் மகிழ்ச்சியோடு செய்து முடிப்போம். அப்பொழுது நாம் உலகத்தாரால் அங்கீகரிக்கப்படுவதைக் குறித்து கரிசனையற்றவர்களாக, கர்த்தராலே மட்டும் உண்டாகும் பலனைப்பெற (வ.23) வாஞ்சையுள்ளவர்களாவோம்.

கிறிஸ்துமஸ் ஒளி

எனது பார்வைக்கு அந்த கிறிஸ்துமஸ் மரம் பற்றியெரிவது போலிருந்தது. இது செயற்கை விளக்குகளின் அலங்காரத்தால் உண்டாகும் வெளிச்சம் அல்ல மாறாக நிஜமான நெருப்பு. எனது ஜெர்மானிய நண்பரின் பாரம்பரியமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு நாங்கள் குடும்பமாக அழைக்கப்பட்டோம், "பழைய ஜெர்மானிய முறை" எனும் அந்த கொண்டாட்ட முறையில் கிறிஸ்துமஸ் மரத்தைப் பாரம்பரிய இனிப்பு வகைகளாலும், எரியும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரித்திருந்தனர் (பாதுகாப்பு காரணமாக ஒரு இரவு மட்டுமே அந்த புதிதாய் வெட்டப்பட்ட மரத்தை எரியும்படி செய்தனர்).

பற்றியெரிவதைப் போலக் காட்சியளித்த அம்மரத்தை நான் காண்கையில், எரியும் செடியில் தேவன் மோசேயை சந்தித்ததை நினைத்தேன். வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசே, அங்கே பற்றியெரிந்தும், கருகாமலிருக்கும்  முட்செடியின் காட்சியினால் வியந்தான். அதை ஆராயச் சற்றே அருகில் சென்றபோது, தேவன் அழைத்தார். முட்செடியிலிருந்து வெளிவந்த செய்தி நியாயத்தீர்ப்புக்கானது அல்ல மாறாக இஸ்ரவேலர்களின் மீட்புக்கானது. எகிப்தில் அடிமைகளாய் இருந்த தன் ஜனத்தின் உபத்திரவத்தைப் பார்த்து, அவர்களிடும் கூக்குரலைக் கேட்டு, அவர்களை மீட்கத் தேவன் இறங்கினார் (யாத்திராகமம் 3:8).

இஸ்ரவேலர்களை எகிப்தியரிடமிருந்து தேவன் மீட்டிருக்க, இந்த ஒட்டுமொத்த மனிதக்குலத்திற்குமே மீட்பு தேவையாயிருந்தது. வெறும் சரீர ரீதியான உபத்திரவங்களிலிருந்து மட்டுமல்ல மாறாகத் தீமையும் மரணமும் இந்த உலகத்தில் ஏற்படுத்தின பாதிப்புகளிலிருந்து மீட்பு தேவை. இதற்குப் பல நூற்றாண்டுகள் கழித்து தேவன் பதிலளித்தார், தம்முடைய குமாரனாகிய இயேசு எனும் ஒளியை அனுப்பினார் (யோவான் 1:9–10). உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி அல்ல, அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் ((3:17).

நீங்கள் யார்?

பத்தாண்டுகளாகப் பிள்ளை இல்லாத நானும் எனது மனைவியும், 2011 ஆம் ஆண்டு புது நாட்டில் புதிய வாழ்வைத் துவங்கினோம். இந்த குடியேற்றம் உற்சாகமளித்தாலும், நான் அதிகம் நேசித்த ஒளிபரப்புப் பணியை விடவேண்டியிருந்தது. குழப்பமடைந்த நான், என் நண்பனிடம் யோசனை கேட்டேன்."என் அழைப்பு என்னவென்றே எனக்குத் தெரியவில்லை" என்று அவனிடம் மனச்சோர்வோடு பேசினேன்.

"நீ இங்கே ஒளிபரப்பு செய்யமாட்டாயா?" என்று கேட்ட அவனிடம். இல்லையென்றேன். "உன் திருமண வாழ்க்கை எப்படியுள்ளது" என்று அவன் கேட்க, எங்கள் பேச்சு சற்று திசைமாறினாலும்; நானும் என் மனைவியும் நன்றாக இருப்பதாகவே அவனிடம் கூறினேன். நாங்கள் இருவருமே மனமுடைந்து இருந்தோம், ஆனால் இந்த சோதனை எங்களை இன்னும் நெருக்கமாக்கியிருந்தது.

"சுவிசேஷத்தின் அஸ்திபாரமே அர்ப்பணிப்புதான்" என்று, அவன் புன்னகைத்தான். "உன்னுடைய இந்த அர்ப்பணிப்பான திருமண வாழ்க்கை இந்த உலகிற்கு எவ்வளவாய் தேவை! நீ செய்வதைக் காட்டிலும், நீ வாழும் விதமே இந்த உலகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை." என்றான்.

கடினமான பணிச்சூழல் தீமோத்தேயுவை மனஞ்சோர செய்கையில், அப்போஸ்தலன் பவுல் அவனுக்கு எந்த இலக்கையும் தரவில்லை. மாறாக தீமோத்தேயுவை பக்தியுள்ள ஒரு வாழ்வு வாழவும், அவனுடைய பேச்சு, நடக்கை, அன்பு, விசுவாசம் மற்றும் கற்பின் மூலம் ஒரு முன்மாதிரியைக் காட்டவும் உற்சாகப்படுத்துகிறார் (4:12–13,15). அவருடைய விசுவாச வாழ்வினால் பிறர்வாழ்விலும் தாக்கம் ஏற்படுத்தலாம்.

நம்முடைய பணிகளின் வெற்றியைக் கொண்டு நமது வாழ்வை மதிப்பீடு செய்வது சுலபம், ஆனால், நமது குணாதிசயமே முக்கியம். நான் அதைத்தான் மறந்துபோனேன். உண்மையான வார்த்தை, கருணையான செயல், அர்ப்பணிப்பான திருமண வாழ்க்கையும்கூட பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். ஏனெனில் இவைகள் மூலம் தேவனுக்கே உரித்தான நன்மைகள் இவ்வுலகை அசைக்கின்றன.

ஒருவருக்கொருவர் ஊக்குவித்தல்

 மருத்துவ ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்த ஒரு வாரத்திற்குப் பின்  சோர்ந்துபோய் நான் சோபாவில் அமர்ந்தேன். எதைக்குறித்தும் சிந்திக்கப் பிடிக்கவில்லை, யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை, ஜெபிக்கவும் முடியவில்லை. சந்தேகமும், ஊக்கமின்மையும் என்னை அமிழ்த்த, தொலைக்காட்சியைப் பார்த்தேன். அதில் வந்த விளம்பரம் ஒன்றில், ஒரு சிறுமி தன் தம்பியிடம், "நீ சிறந்த வீரன்" என்றாள். அவ்வாறே அவனை அவள் தொடர்ந்து ஊக்கமளிக்கையில், அச்சிறுவன் சிரித்தான். நானும் சிரித்தேன் .

தேவஜனங்கள் எப்போதுமே மனமடிவினாலும், சந்தேகத்தாலும்  பாதிக்கப்பட்டனர்.  தேவனுடைய சத்தம் பரிசுத்த ஆவியானவரால் மனிதருக்குக்  கேட்கும் என்பதை உறுதிப்படுத்தும் சங்கீதம் 95 ஐ மேற்கோள்காட்டி, எபிரெய நிருபத்தின் ஆக்கியோன் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தர பயணத்தில் செய்த தவறுகளை விசுவாசிகள் தவிர்க்கும்படி எச்சரிக்கிறார் (எபிரெயர் 3:7–11). "சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில்  ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." என்றும் "நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் (ஊக்கமளியுங்கள்)" என்றும் எழுதினார் (வ.12–13).

நம்முடைய நம்பிக்கை கிறிஸ்துவில்  இருக்க, நமக்குத் தேவையான உதவி. நாம் நீடிய பொறுமையோடு இருப்பதற்குத் தேவையான பெலனை விசுவாசிகளின் ஐக்கியம் மூலம் பெற்றுக் கொள்கிறோம் (வ.13). ஒருவர் சந்தேகிக்கையில், மற்றொருவர் அவரை  உறுதிப்படுத்தி உத்தரவாதம் செய்யலாம். இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்த,  தேவஜனமாகிய நமக்குத் தேவனே பெலனளிக்கிறார்.