நம் புகலிடம் விரைதல்
சிறுவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். அணிகளிலிருந்த சிறுவர்களின் இளைய தம்பி, தங்கையினர் எல்லாரும் அந்தப் பள்ளியின் தாழ்வாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென அபாய சங்கு ஒலிக்க, உடற்பயிற்சி கூடத்தில் விளக்குகள் ஒளிர்ந்தன. தாழ்வாரத்திலிருந்த சிறுபிள்ளைகள் பயத்துடன் உடனே உடற்பயிற்சி அறைக்கு விரைந்து, தங்கள் பெற்றோரைத் தேடினர்.
தீ விபத்து ஏற்படவில்லை, ஆனால் எச்சரிக்கை மணி எதேச்சையாக இயக்கப்பட்டிருந்தது. ஒரு ஆபத்து என்றவுடன் அந்தப் பிள்ளைகள் சற்றும் தயக்கமின்றி, தங்கள் பெற்றோரின் அரவணைப்பிற்கு ஓடியது என்னைச் சிந்திக்க வைத்தது. பயப்படும் நேரத்தில் பாதுகாப்புணர்வையும், உத்தரவாதத்தையும் அருளுபவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை ஒருக் காட்சியாகவே கண்டேன்.
தாவீது மிகவும் பயந்த நேரத்தை வேதாகமம் பதிவிடுகிறது. சவுலும், திரளான சத்துருக்களும் அவரை விரட்டி வந்தபோது (2 சாமுவேல் 22:1), தேவன் அவரைப் பாதுகாத்தார், தேவனின் உதவிக்காக தாவீது நெகிழ்ச்சியாகத் துதிப்பாடல் பாடினார். அவர் தேவனை, " என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.'' (வ.2). என்றழைக்கிறார். "பாதாளக் கட்டுகள்" மற்றும் "மரணக்கண்ணிகள்" (வ.6 ) அவரை வேட்டையாட, தாவீதோ தேவனை நோக்கி அபயமிட்டார், அவருடைய கூப்பிடுதல் தேவனின் செவிகளில் ஏறிற்று (வ.7). இறுதியில் தாவீது, அவர் என்னை விடுவித்தார் (வ.18, 20, 49) என அறிவிக்கிறார்.
பயமும், குழப்பமும் சூழும் நேரத்தில் நாமும் நம் கன்மலையிடம் விரையலாம் (வ.32). நாம் தேவனுடைய நாமத்தில் அபயமிடுகையில், அவர் மட்டுமே நமக்குத் தேவையான புகலிடத்தையும் அடைக்கலத்தையும் (வ.2–3) அருளுகிறார்.

சுமையைக் குறையுங்கள்
நாங்கள் புதிதாய் ஆரம்பித்த வேதாகம வகுப்பிற்கு வந்த ஒரு சகோதரி தொடர்ச்சியான துயரங்களைச் சந்திக்கையில், நாங்கள் எங்கள் தனிப்பட்ட அனுபவங்களை எங்களை அறியாமலேயே பகிர்ந்துகொள்ளத் துவங்கினோம். தந்தையின் மரணம், விவாகரத்திற்குப் பின் வந்த திருமண நாள் நினைவுகள், செவிடாய்ப் பிறந்த குழந்தை, அவசர சிகிச்சைப் பிரிவில் பிள்ளையின் போராட்டம் என தனியாக சுமக்கக் கூடாததாகிய பாரங்களை, ஒவ்வொருவரும் எவ்வளவாய் பாதிக்கப்பட்டோமோ, அவ்வளவாய் வெளிப்படையாய்ப் பேசினோம். ஒன்றாய் நாங்கள் அழுதோம், ஜெபித்தோம். அந்நியர்களாய் அறிமுகமான அந்தக் குழு, சிலவாரங்களிலேயே நெருங்கிய நண்பர்களின் குழுவாய் மாறியது.
இன்றும் சபையென்னும் சரீரத்தின் அங்கமான விசுவாசிகள், மற்றவர்களின் துயரங்களினூடே அவர்களுக்கு ஆழமாகவும், நெருக்கமாகவும் உதவ முடியும். கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகள் எனும் உறவில் இணைய நீண்டகால பழக்கமோ, கருத்து ஒற்றுமையோ தேவையில்லை.
மாறாக, பவுலின் அழைப்பின்படி நாம் , "ஒருவர் பாரத்தை ஒருவர் (சுமக்கிறோம்)" (கலாத்தியர் 6:2). தேவனின் பெலனைச் சார்ந்துகொண்டு நாம் கவனித்துக் கேட்கிறோம், பரிதவிக்கிறோம், இயன்ற உதவியைச் செய்கிறோம், ஜெபிக்கிறோம். மேலும் நாம் "யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை(செய்ய)" (வ.10) வாய்ப்புகளை நாடலாம். நாம் அவ்வாறு செய்கையில் “தேவனிடத்திலும் பிறரிடத்திலும் அன்புகூருதல்” என்னும் கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதாக (வ.2) பவுல் கூறுகிறார். வாழ்வின் சுமைகள் பாரமானவை தான், ஆனால் அந்தச் சுமையைக் குறைக்கவே தேவன் நமக்குச் சபையென்னும் குடும்பத்தை அளித்துள்ளார்.

துரித உணவு உற்சாகம்
அன்று மதிய உணவிற்குத் துரித உணவை மரியா எடுத்துக்கொண்டு காலியான இருக்கையில் அமர்ந்தாள். பர்கரை சுவைத்தவாறே சுற்றிலும் பார்த்த அவளின் பார்வை பல இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு வாலிபன் மீது பதிந்தது. அழுக்கான ஆடைகள், களைந்த தலைமுடி, காலியான காகித கோப்பையைக் கசக்கிக்கொண்டிருந்த கைகள். அவன் பசியோடிருக்கிறான். இவளால் எப்படி உதவக்கூடும்? பணம் கொடுப்பது நல்ல யோசனை அல்ல. உணவு வாங்கிக்கொடுத்தால், ஒருவேளை சங்கடப்படுவானோ?
அப்பொழுதுதான் ரூத்தின் சரித்திரத்தில், ஐசுவரியவானாகிய போவாஸ் வறுமையால் வாடும் அந்த புலம்பெயர்ந்த விதவை தன் வயலின் அறுவடையில் மிஞ்சியதைச் சேகரிக்க அவளை அன்பாய் ஏற்றுக்கொண்டதை மரியா நினைத்துப்பார்த்தாள். மேலும், "போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான் "(ரூத் 2:15–16). பெண்கள் தங்கள் ஜீவனத்திற்காக ஆண்களையே அதிகம் சார்ந்திருக்கும் அந்த கலாச்சாரத்தில், போவாஸ் தேவனின் அன்பான பராமரிப்பை வெளிப்படுத்தினார். இறுதியில் போவாஸ் ரூத்தை விவாகஞ்செய்து, அவளுடைய விதவை நிலையிலிருந்து அவளை மீட்டான் (4:9–10).
மரியா எழுந்து போகையில், அந்த வாலிபனின் கண்ணைப் பார்த்துக்கொண்டே, அருகிலிருந்த இருக்கையில் புதிய உணவுப்பொட்டலம் ஒன்றை வைத்துச் சென்றாள். அவன் பசியாயிருந்தால், இந்தத் துரித உணவை சேகரித்துக்கொள்ளலாம். இவ்வாறாக வேதாகமத்தில் உள்ள சம்பவங்கள் நூதனமான முறையில் நாம் செயல்படுவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகின்றன.

தேவனின் உறுதியான தேடல்
சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் சில அடிதூரம் எனக்கு முன் நடந்துகொண்டிருந்தார். அவருடைய கைநிறைய பொட்டலங்கள் இருந்தன. திடீரென, நிலைதடுமாறி அவர் விழுந்தார், பைகள் சிதறின. சிலர் அவரை தூக்கிவிட்டனர், சிதறியவற்றையும் சேகரித்து உதவினர். ஆனால் அவர்கள் அவருடைய பணப்பையைக் கவனிக்கவில்லை. நான் அதைக் கண்டு, அந்த முக்கியமான பொருளை எடுத்துக்கொண்டு, அதை அவரிடம் ஒப்படைக்கத் தீவிரமாகப் பின்தொடர்ந்தேன். "சார்,சார்" என்று நான் கத்த, இறுதியில் திரும்பினார். என்னிடம் திரும்பிய அவரிடம் நான் பணப்பையை ஒப்படைக்கையில், அவர் முகத்திலிருந்த ஆச்சரியம் கலந்த நன்றியுணர்வை என்னால் மறக்க முடியவில்லை.
அந்த மனிதரை நான் பின்தொடர்ந்தது எனக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. பிரபலமான சங்கீதம் 23 ல் "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்" (வ.6) என்பதில் வரும் "தொடரும்" என்கிற மொழியாக்கம் பொருத்தமானதுதான். என்றாலும், அதின் எபிரெய பதம் வலுவான, தீவிரமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இதன் எழுத்தியல்பான அர்த்தம் "துரத்துதல் அல்லது விரட்டுதல்", கிட்டத்தட்ட ஒரு வேட்டை விலங்கு தன் இரையைத் துரத்துவதைப்போல (ஒரு ஓநாய், ஆட்டைத் துரத்துவதாக) நினைத்துக்கொள்ளுங்கள்.
தேவனின் நன்மையும், கிருபையும் உங்களை ஏதோ கடமைக்காகப் பின்தொடர்வதைப் போலவோ, உங்கள் செல்லப்பிராணி சாவகாசமாக உங்கள் பின்னே வருவது போலவோ தவறாய் எண்ணிக்கொள்ளாதிருங்கள். நிச்சயம் இல்லை. ஒரு நோக்கத்தோடு நாம் தீவிரமாய் பின்தொடரப்படுகிறோம். பணப்பையைத் தொலைத்த அந்த மனிதன் விரட்டப்பட்டதுபோல, அழியாத மாறாத அன்பைக்கொண்டு நம்மை நேசிக்கும் நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடி வருகிறார்(வ.1, 6).

தொலைநோக்குக் கனவுகள்
கிறிஸ்துமஸிற்கு முந்தின ஒரு பரபரப்பான நாளில், மூதாட்டி ஒருவர் என் வீட்டினருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்தார். அவருடைய மெதுவான அசைவைப் பொறுமையாகக் கவனித்த தபால் நிலையத்தின் எழுத்தர், "வருக இளம் பெண்ணே" என்றார். அவர் வார்த்தைகளிலிருந்த கனிவைக் கவனித்த அனைவருக்கும் "இளம் பெண்ணே" என்று அவர் அழைத்தது பிடித்திருந்தது.
வயது முதிர்ந்தவர்கள் நமது நம்பிக்கையை ஊக்குவிப்பதை வேதத்தில் காணலாம். பிள்ளையாகிய இயேசுவைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க மரியாளும் யோசேப்பும் ஆலயத்திற்கு வந்தனர் (லூக்கா 2:23; யாத்திராகமம் 13:2, 12), அங்கே திடீரென இரண்டு முதியவர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள்.
முதலாவது சிமியோன், இவர் மேசியாவை காணப் பல ஆண்டுகள் காத்திருந்தார். இவர் இயேசுவைக் கையில் ஏந்தி, " ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" (லூக்கா 2:29–32). என்றார்.
பிறகு சிமியோன், மரியாளிடமும் யோசேப்பிடமும் பேசிக்கொண்டிருக்கையில் அன்னாள் என்னும் மிகவும் வயதான தீர்க்கதரிசி (வ.36) அங்கே வருகிறாள். திருமணமாகி ஏழே ஆண்டுகளில் விதவையான இவள், தனது எண்பத்து நான்காம் வயதுவரை தேவாலயத்தில் வாழ்ந்தவள். தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தவள். இவள் இயேசுவைக் கண்டவுடன், தேவனைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அந்தப் பிள்ளையைக் குறித்துப் பேசினாள். (வ.37–38).
நமக்கு எவ்வளவு வயதானாலும், பெரும் எதிர்பார்ப்புகளோடு தேவனுக்காகக் காத்திருப்பதை நிறுத்த வேண்டாமென்று நம்பிக்கையான இவ்விரு ஊழியக்காரர்களும் நமக்கு நினைப்பூட்டுகின்றனர்.