களிகூரும் அன்பு
ரவியும் பானுவும் ஒருவரையொருவர் பார்த்து முகமலர்ந்தனர். அவர்கள் அகமகிழ்ச்சியைப் பார்க்கும்போது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களது திருமணத் திட்டங்கள் பல தலைகீழாய் மாற்றப்பட்டிருந்ததை உங்களால் யூகிக்கவே முடியாது. இருபத்தைந்து குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோதும், இருவரிடமிருந்தும் மகிழ்ச்சியும் சமாதானமும் ஒளிர்ந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பினிமித்தம் திருமண உடன்படிக்கை செய்து, தங்களைத் தாங்கிய தேவனின் அன்புக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
தேவன் தம் ஜனங்கள் மீது கொண்டிருக்கும் மகிழ்ச்சி மற்றும் அன்பை விவரிக்க ஏசாயா தீர்க்கதரிசி, மணவாளனும் மணவாட்டியும் ஒருவர் மீதொருவர் கொண்டிருக்கும் களிப்பை உருவகமாக வடிக்கிறார். தேவனின் வாக்குப்பண்ணப்பட்ட விடுதலையை விளக்க அழகான கவிதை நடையில், ஏசாயா தமது வாசகர்களுக்குத் தேவன் அவர்களுக்கு வழங்கிய இரட்சிப்பானது உருக்குலைந்த உலகில் வாழும் யதார்த்தத்தில் பிரதிபலிக்கிறது என்று நினைவுபடுத்தினார். அது இதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதல், துயரப்படுபவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அவரது ஜனங்களின் தேவைகளுக்கான ஏற்பாடு (ஏசாயா 61:1-3). தேவன் தம் ஜனங்களுக்கு உதவினார், ஏனென்றால் மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பில் களிப்பதுபோல, "உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்" (62:5).
தேவன் நம்மில் களிகூருகிறார் மற்றும் நம்முடனான உறவை விரும்புகிறார் என்பது வியத்தகு உண்மை. உருக்குலைந்த உலகில் வாழ்வதன் விளைவுகளால் நாம் போராடும்போது கூட, நம்மை நேசிக்கும் தேவன் ஒருவருண்டு. அதிருப்தி கொள்ளாமல், களிப்புடன் "என்றென்றும் நிலைத்திருக்கும்" (சங்கீதம் 136:1) நீடித்த அன்புடன் நேசிக்கிறார்.

அழுத்தப்படுகையில்
பல ஆண்டுகளுக்கு முன்பு, பல சாலைகள் குறுக்கிடும் ஒரு தெருவைக் கடக்க முயன்றபோது அவள் எவ்வளவு பயந்தாள் என்று தோழி என்னிடம் கூறினாள். "இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை; தெருவைக் கடப்பதற்கு எனக்கு கற்பிக்கபட்ட விதிகள் பயனற்றதாகத் தோன்றியது. நான் மிகவும் பயந்து போனேன், நான் மூலையில் நின்று, பேருந்திற்காகக் காத்திருந்து, தெருவின் மறுபக்கம் கடக்க அனுமதிப்பீர்களா என்று பேருந்து ஓட்டுநரிடம் கேட்பேன். இந்தச் சந்திப்பில் பாதசாரியாகவும், பின்னர் ஓட்டுநராகவும் வெற்றிகரமாகச் செல்ல நான் கற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்" என்றாள்.
ஆபத்தான போக்குவரத்து சந்திப்பு எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், வாழ்க்கையின் சிக்கல்களில் வழிநடப்பது இன்னும் அச்சுறுத்தலாக இருக்கலாம். சங்கீதம் 118 இல் உள்ள சங்கீதக்காரரின் சூழ்நிலை பற்றி நமக்குத் தெரியாது, ஆனால் அது கடினமானது மற்றும் ஜெபத்திற்கு ஏற்றது என்பதை அறிவோம்: "நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்" (வ.5) என்று சங்கீதக்காரர் கதறினார். மேலும் தேவன் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது "கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்.. எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்" (வ.6–7).
வேலை, படிப்பு அல்லது வீடுகளை மாற்ற வேண்டியிருக்கும் போது பயப்படுவது சாதாரணமானது. உடல்நலம் குறைகையில், உறவுகள் மாறுகையில், அல்லது பணம் கரைகையில் கவலைகள் மேலோங்கும். ஆனால் இந்த சவால்களுக்கு, நாம் தேவனால் கைவிடப்பட்டதாக அர்த்தம் இல்லை. நாம் அழுத்தப்படுகையில், ஜெபத்துடன் அவருடைய பிரசன்னத்திற்கு அழுத்தம் கொடுப்பவர்களாக இருப்போமாக.

தகவலும் ஆதாரமும்
டோரிஸ் கியர்ன்ஸ் குட்வின் ஆபிரகாம் லிங்கனைப் பற்றி ஒரு புத்தகம் எழுத முடிவு செய்தபோது, அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியைப் பற்றி ஏற்கனவே சுமார் பதினான்காயிரம் புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பது அவரை மிரட்டியது. இந்த அன்புத் தலைவரைப் பற்றி என்ன சொல்ல முடியும்? தளராத குட்வின் பணியின் விளைவுதான் A Team of Rivals: The Political Genius of Abraham Lincoln. லிங்கனின் தலைமைத்துவ பாணி பற்றிய அவரது புதிய கண்ணோட்டம், அதைச் சிறந்த மற்றும் மதிப்பாய்வு செய்யப்பட்ட புத்தகமாக உருவாக்கியது.
அப்போஸ்தலராகிய யோவான் இயேசுவின் ஊழியம் மற்றும் பாடுகள் பற்றிய தமது சுவிசேஷத்தை எழுதுகையில், வித்தியாசமான சவாலை எதிர்கொண்டார். யோவானின் நற்செய்தியின் இறுதி வசனம், "இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்." (யோவான் 21:25) என்கிறது. யோவானிடம் அதிகமான காரியங்கள் இருந்தன.
எனவே யோவானின் உத்தியானது, அவருடைய சுவிசேஷம் முழுவதும் இயேசுவின் "நானே" கூற்றுக்களை ஆதரிக்கும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட அற்புதங்களில் (அடையாளங்கள்) மட்டுமே கவனம் செலுத்துவதாகும். ஆயினும்கூட, இந்த உத்திக்குப் பின்னால் இந்த நித்திய நோக்கம் இருந்தது: "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது " (வச. 31). மலைபோன்ற ஆதாரங்களில், இயேசுவை நம்புவதற்கு யோவான் ஏராளமான காரணங்களைச் சொன்னார். இன்று அவரைப் பற்றி யாரிடம் சொல்ல முடியும்?

தகுதியற்ற பரிசு
சமீபத்தில் என் தோழி எனக்குப் பரிசளித்தபோது, நான் ஆச்சரியப்பட்டேன். அவளிடமிருந்து இவ்வளவு நேர்த்தியான பரிசுக்கு நான் தகுதியானவள் என்று நான் நினைக்கவில்லை. நான் அனுபவிக்கும் சில பணிச்சுமைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு அவள் அதை அனுப்பினாள். ஆனாலும், வயதான பெற்றோர், மாற்றுத்திறனாளி குழந்தைகள், வேலையில் பாரம், திருமண உறவில் நெருக்கடிகள் என என்னை விட அதிக மன அழுத்தத்தை அவள் அனுபவித்தாள். அவள் தன்னை காட்டிலும் என்னைப் பற்றி நினைத்தாள் என்று என்னால் நம்ப முடியவில்லை, அவளுடைய எளிய பரிசு கண்ணீரை வரவழைத்தது.
உண்மையில், நாம் அனைவரும் தகுதியற்றவர்களாகவே ஒரு பரிசைப் பெற்றவர்கள். பவுல் அதை இவ்வாறு சொல்கிறார், "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்... அவர்களில் பிரதான பாவி நான்" (1 தீமோத்தேயு 1:15 ). ஒரு காலத்தில் அவர், " தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்(தார்).. கர்த்தரின் கிருபை கிறிஸ்து..பெருகிற்று (வ. 13–14). உயிர்த்த இயேசு, கிருபையின் இலவச பரிசைப் பற்றிய ஆழமான புரிதலை பவுலுக்கு வழங்கினார். இதன் விளைவாக, அந்தப் பரிசைப் பெறுவதற்குத் தகுதியற்றவராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை அவர் கற்றுக்கொண்டார், அவர் தேவனுடைய அன்பின் வல்லமையான கருவியானார், மேலும் தேவன் அவருக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி பலரிடம் கூறினார்.
தேவனின் கிருபையால் மட்டுமே நாம் ஆக்கினைக்குப் பதிலாக அன்பையும், நியாய தீர்ப்புக்குப் பதிலாக இரக்கத்தையும் பெறுகிறோம். இன்று, தேவன் அருளிய தகுதிக்கு மேலான கிருபையைக் கொண்டாடுவோம், மற்றவர்களுக்கு அந்த கிருபையை வெளிப்படுத்துவதற்கான வழிகளைத் தேடுவோம்.

தேவனிடம் வீட்டிற்கு திரும்புதல்
ஒரு மாலை வேளையில், ஒரு கட்டுமான பகுதியருகில் நான் ஜாகிங் செய்து கொண்டிருந்தபோது, ஒல்லியான, அழுக்கான பூனைக்குட்டி ஒன்று என்னையே ஏக்கத்தோடு பார்த்து, பின்தொடர்ந்து வீட்டிற்கு வந்தது. இன்று, மிக்கி ஒர் ஆரோக்கியமான, அழகான வளர்ந்த பூனை. எங்கள் வீட்டில் வசதியான வாழ்க்கையை அனுபவித்து, என் குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்படுகிறது. நான் அதைக் கண்ட சாலையில் ஜாகிங் செய்யும்போதெல்லாம், "நன்றி தேவனே" என்று அடிக்கடி நினைப்பேன். மிக்கி தெருவிலிருந்து மீட்கப்பட்டது. அதற்கு இப்போது வீடு உள்ளது.
சங்கீதம் 91, தேவனை தங்கள் அடைக்கலமாக்கி "உன்னதமானவரின் மறைவில்" இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறது (வ.1) . இதிலுள்ள "தங்குவான்" என்பதின் எபிரேய பதத்திற்கு "நிலைத்திருத்தல், நிரந்தரமாகத் தங்குதல்" என்று அர்த்தம். நாம் அவரில் நிலைத்திருக்கும்போது, அவருடைய ஞானத்தின்படி வாழவும், எல்லாவற்றிற்கும் மேலாக அவரை நேசிக்கவும் நமக்கு உதவுகிறார் (வ.14; யோவான் 15:10). நித்தியத்திற்கும் அவருடன் இருக்கப்போகும் ஆறுதலையும், பூமிக்குரிய கடினங்களிலும் நம்முடன் இருக்கும் அவரது பாதுகாப்பையும் தேவன் நமக்கு வாக்களிக்கிறார். பிரச்சினைகள் வந்தாலும் அவருடைய சர்வ ஆளுகை, ஞானம், அன்பு நம்மைப் பாதுகாத்து விடுவிக்குமென்ற அவருடைய வாக்குத்தத்தங்களில் நாம் இளைப்பாறலாம்.
நாம் தேவனை அடைக்கலமாகக் கொள்கையில், நாம் "சர்வ வல்லவரின் நிழலில்" வாழ்கிறோம் (சங்கீதம் 91:1). அவருடைய எல்லையற்ற ஞானமும் அன்பும் அனுமதிப்பதைத் தவிர எந்த பிரச்சினையும் நம்மைத் தொட முடியாது. இதுவே நமது கூடாரமாகிய தேவனின் பாதுகாப்பு.