தேவனுக்கான நல்ல பிரச்சனை
ஒரு நாள் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவள் தன்னுடைய வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவன் பிளேடைக் கொண்டு தன்னுடைய கையை கீறிக்கொள்வதைப் பார்த்தாள். அதை சரிசெய்வதற்கு அவனுடைய கையிலிருந்த அந்த பிளேடைப் பிடுங்கி, தூக்கியெறிந்தாள். அவளுடைய செயலுக்கு அவள் பாராட்டப்படாமல், பத்து நாட்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். ஏன்? பள்ளியில் அனுமதிக்கப்படாத பிளேடை அவள் சிறிது நேரம் கையில் பிடுங்கி வைத்திருந்ததை குற்றமாய் கருதி, அவளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதை மறுபடியும் செய்வாயா? என்று அவளிடம் கேட்டபோது, “எனக்கு பிரச்சனை ஏற்பட்டாலும்... அதை மறுபடியும் செய்வேன்” என்று அவள் துணிச்சலாய் பதிலளித்திருக்கிறாள். நன்மை செய்யப்போன அவள் பிரச்சனையில் மாட்டிக்கொண்டாள் (அவளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொண்டனர்). இராஜ்யத்தைக் குறித்த இயேசுவின் போதனை, மார்க்கத் தலைவர்களுடன் இதுபோன்ற நல்ல பிரச்சனைக்கு வழிநடத்திற்று.
சூம்பின கையுடைய ஒரு மனிதனை இயேசு குணப்படுத்தியதை கேள்விப்பட்ட பரிசேயர்கள் தங்கள் விதிகளை மீறுவதாக குற்றஞ்சாட்டினர். ஓய்வுநாளில் குழியில் சிக்கியிருக்கும் ஒரு ஆட்டுக்குட்டியை மீட்பது அவசியம் என்று தன்னுடைய ஜனத்திற்கு விளங்கப்பண்ணிய இயேசு, “ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்” (மத்தேயு 12:12) என்று கூறுகிறார். அவரே ஓய்வுநாளுக்கு ஆண்டவர் என்பதினால், ஓய்வுநாளில் என்ன செய்யவேண்டும் செய்யக்கூடாது என்பதை இயேசுவே சொல்லுகிறார் (வச. 6-8). இயேசுவின் இந்த செய்கை மார்க்கத் தலைவர்களை கோபமூட்டும் என்பதை இயேசு அறிந்திருந்தும், இந்த சூம்பின கையுடைய மனுஷனை இயேசு சொஸ்தமாக்குகிறார் (வச. 13-14).
கிறிஸ்தவர்கள் சிலவேளைகளில் நல்ல பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. ஆனால் அதில் மனிதர்களைப் பிரியப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படாமல், தேவனை மாத்திரம் பிரியப்படுத்த பிரயாசப்படுவோம். தேவனுடைய வழிநடத்துதலின்பேரில் அதை நாம் செய்ய முற்படும்போது, நாம் இயேசுவை பிரதிபலித்து, விதிமுறைகள் மற்றும் சடங்காச்சாரங்களைக் காட்டிலும் மக்கள் முக்கியம் என்று கருத முற்படுகிறோம்.

கிறிஸ்துவுக்குள் வேற்றுமையில் ஒற்றுமை
வணிக ஆய்வாளர் ஃபிரான்சிஸ் எவன்ஸ் ஒருமுறை, 125 காப்பீட்டு விற்பனையாளர்களை ஆய்வு செய்து, அவர்களை வெற்றிகரமாக்கியது என்ன என்பதைக் கண்டறிந்தார். அவர்களின் திறமை காரணமாய் அமையவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. மாறாக, வாடிக்கையாளர்கள் அரசியல், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் தங்களோடு சரிநிகராய் இருப்பவர்களிடமே காப்பீடு எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அறிஞர்கள் இதை ஹோமோபிலி என்றழைக்கின்றனர். அதாவது, நம்மைப்போல் இருப்பவர்களை விரும்பும் போக்கு என்று அர்த்தம்.
நம்மைப் போன்ற சிந்தை கொண்டவர்களை விரும்பும்போக்கானது, திருமணம் மற்றும் சிநேகிதர்களை ஏற்படுத்திக்கொள்வது போன்ற செய்கைகளிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் அதுபோன்ற சிந்தை ஆபத்தானது. நம்மைப் போன்ற சிந்தை மற்றும் எண்ணம் கொண்டவர்களை நாம் தேர்ந்தெடுக்கும்போது, சமுதாயமானது இனம், அரசியல், பொருளாதாரம் என்று பல பிரிவுகளாய் பிரியக்கூடிய அபாயம் நேரிடுகிறது.
முதலாம் நூற்றாண்டில், யூதர்கள் யூதர்களோடும், கிரேக்கர்கள் கிரேக்கர்களோடுமே பழக்கம் வைத்திருந்தனர். பணக்காரனும் ஏழையும் சேருவதேயில்லை. ரோமர் 16:1-16இல் ரோமத் திருச்சபையில், ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் (யூதர்கள்), எப்பனெத் (கிரேக்கன்), பெபேயாள் (அநேகருக்கு உதவிசெய்தவள் என்பதினால் ஐசுவரியவாட்டியாய் இருந்திருக்கக்கூடும்), மற்றும் பிலொலோகு (பொதுவாக அடிமைகளுக்கு கொடுக்கப்படும் பெயர்) என்று பல பெயர்களை பவுல் பட்டியலிடுகிறார். இந்த வித்தியாசமான மக்களை ஒன்றிணைத்தது எது? “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை” (கலாத்தியர் 3:28) என்னும் இயேசுவே அவர்களை ஒன்றிணைக்கிறார்.
நம்மைப் போன்ற சுபாவம் கொண்டவர்களோடு வாழ்வதும், திருச்சபைக்கு செல்வதும் இயல்பானது. ஆனால் இயேசு அதைக் கடந்துசெல்வதற்கு நம்மை உந்துகிறார். பல பிரிவுகளினாலே பிளவுபட்டிருக்கும் உலகத்தில், வித்தியாசமான மனிதர்களை ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாய் கூட்டிச் சேர்க்கிறார்.

ஆயிரம் புள்ளிகள் விளக்கு
அமெரிக்காவின் வடமேற்கு அலபாமாவில் உள்ள டிஸ்மல்ஸ் கேன்யன் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்க்கிறது. இங்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒருவகையான புழுக்கள் குஞ்சுபொரித்து, பளபளக்கும் புழுக்களாக மாறி, இரவில் இந்த பளபளப்பான புழுக்கள் ஒரு நீலநிறமான ஒளியை பிரதிபலிக்கின்றன. மேலும் அதுபோன்று ஆயிரக்கணக்கான புழுக்கள் ஒன்றுகூடி பிரம்மாண்டமான ஒளியை தோற்றுவிக்கின்றன.
பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்தவர்களை அவ்விதமாய் ஒளிரும் புளுக்காய் கருதுகிறார். “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:8). ஒருசில வேளைகளில் என்னுடைய இந்த சிறிய விளக்கு எவ்விதம் ஒளிதரமுடியும் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் அது ஒரு தனிநபரின் விளக்கு அல்ல என்று பவுல் சொல்லுகிறார். அவர் நம்மை “வெளிச்சத்தின் பிள்ளைகள்” என்று அழைக்கிறார் (வச. 8). மேலும் “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு,” தேவன் நம்மை தகுதியுள்ளவர்களாய் மாற்றியிருக்கிறார் என்றும் சொல்லுகிறார் (கொலோசெயர் 1:12). உலகத்திற்கு ஒளியாயிருப்பது என்பது கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையாய் இணைந்து செயல்படுத்துகிற ஒரு கூட்டு முயற்சி. அதை ஒளிரும் புளுக்களாய், “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி” (எபேசியர் 5:19) தேவனை மகிமைப்படுத்தும்படியாய் பவுல் வலியுறுத்துகிறார்.
நாம் சோர்ந்துபோகும்போது, நம்முடைய ஜீவியத்தின் சாட்சியை நினைவுகூருவது என்பது இருண்ட சூழ்நிலையில் ஒளிரும் ஒரு விளக்கைப் போன்று தெரியலாம். ஆனால் நாம் தனியாள் இல்லை. தேவனுடைய வழிநடத்துதலின்பேரில், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பிரயாசப்படுவோம். ஒளிகொடுக்கும் புளுக்கள் ஒன்றாக இணைந்து, மற்றவர்களை வெளிச்சத்திற்கு ஈர்ப்போம்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
“மோசேயைப் போன்று நீங்கள் எங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தீர்” ஜமீலா ஆச்சரியப்பட்டார். பாகிஸ்தானில் செங்கல்சூளை முதலாளிக்கு அவர்கள் செலுத்தவேண்டிய அதிகப்படியான பணத்தை திரும்பச்செலுத்த வசதியில்லாத காரணத்தினால், அதே சூளையில் கொத்தடிமையாக அவளும் அவரது குடும்பமும் பணியாற்றினர். அவர்களின் சம்பாத்தியத்தின் பெரும்பகுதி வட்டியை செலுத்துவதற்கே செலவாகியது. அவர்களின் கடன் தொகையை ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் பரிசாக பெற்றபோது, அவர்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர். அந்த நிறுவனத்தின் பிரதிநிதிக்கு நன்றி செலுத்துகையில், கிறிஸ்துவின் விசுவாசியான ஜமீலா, இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் மோசேயை பயன்படுத்திய உதாரணத்தை சுட்டிக்காண்பித்தார்.
இஸ்ரவேலர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எகிப்தியர்களால் ஒடுக்கப்பட்டனர். கடுமையான சூழ்நிலையில் உழைத்தனர். தேவனிடம் உதவி கேட்டு மன்றாடினர் (யாத்திராகமம் 2:23). ஆனால் அவர்களது பணிச்சுமை அதிகரித்தது. ஏனெனில் புதிய பார்வோன், செங்கற்கள் செய்வது மட்டுமல்லாது அவற்றை சுடுவதற்கு தேவையான வைக்கோலை சேகரிக்கவும் அவர்களை கட்டாயப்படுத்தினான் (5:6-8). இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி கூக்குரலிட்டபோது, தேவன் அவர்களுடைய தேவனாய் இருக்கும் உடன்படிக்கையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (6:7). இனி அவர்கள் அடிமைகளாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் தேவன் அவர்களை ஓங்கிய கையினால் மீட்பதாக வாக்குப்பண்ணுகிறார் (வச. 6).
தேவனுடைய வழிநடத்துதலின்பேரில், மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்தார் (அதி. 14). இன்றும் சிலுவையில் தன்னுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் விரிந்த கரத்தினால் தேவன் நம்மை மீட்கிறார். நம்மை ஒருகாலத்தில் அடிமைப்படுத்தி வைத்திருந்த பாவத்திலிருந்து நாம் இன்று விடுதலையாக்கப்பட்டுள்ளோம். நாம் இனி அடிமைகள் இல்லை, சுதந்தரவாளிகள்!

தேவ பிரசன்னத்தின் முக்கியத்துவம்
2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு, இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில், திறன் மற்றும் நினைவக பயிற்சிகளுக்கு இடையில் ஏற்படும் மாறுதலைக் குறித்து ஆய்வுமேற்கொண்டனர். ஆச்சரியவிதமாக, ஒரே நேரத்தில் பல திறமைகளை வெளிப்படுத்தமுடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்களைக் காட்டிலும் ஒரே நேரத்தில் ஒரே திறனை வெளிப்படுத்துகிறவர்கள் சிறப்பானவர்களாய் செயல்பட்டுள்ளனர். பல்திறனாளிகள் தங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கும், தேவையற்ற தகவல்களை அப்புறப்படுத்துவதற்கும் சிரமப்படுகின்றனர். நம்முடைய மனது சிதறும்போது, அவற்றை ஒருமுகப்படுத்துவது என்பது சவாலாய் அமைகிறது.
இயேசு மரியாள் மற்றும் மார்த்தாள் வீட்டிற்குச் சென்றபோது, மார்த்தாள் மும்முரமாக பற்பல வேலைகளை செய்துகொண்டிருந்தாள் (லூக்கா 10:40). அவளது சகோதரியாகிய மரியாளோ, இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய போதனைகளை கேட்பதின் மூலம் என்றுமே தன்னைவிடட்டு எடுபடாத ஞானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்தாள். (வச. 39-42). மார்த்தாள், மரியாளை தனக்கு உதவி செய்ய அனுப்பும்புடிக்கு இயேசுவிடம் கேட்டபோது, அவர்;, “மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்” (வச. 41:42).
நாம் தேவன் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் மார்த்தாளைப் போன்று நாம் அநேக காரியங்களைக் குறித்து சிந்தித்து திசைதிருப்பப்படுகிறோம். நமக்கு தேவையான ஞானத்தையும் நம்பிக்கையையும் தேவனால் மட்டுமே நமக்கு அருளமுடியும் என்று தெரிந்தும், தேவனுடைய பிரசன்னத்தை நாம் புறக்கணிக்கிறோம். நாம் ஜெபத்தின் மூலமாகவும் வேதவாசிப்பின் மூலமாகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்போமாகில், நாம் நம்முடைய வாழக்;கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு அவர் நமக்கு வழியையும் பெலனையும் கொடுக்கிறார்.