அனுதின அதிகாரம்
“ஒவ்வொரு வினாடியும் புனிதமானது” என்பது உணவைத் தயாரிப்பது, துணி துவைப்பது போன்ற பல்வேறு செயல்களுக்கான பிரார்த்தனைகளின் அழகான புத்தகமாகும். அதாவது மீண்டும், மீண்டும் செய்யக்கூடிய பணிகள் அல்லது அவசியமான மற்றும் சாதாரணமாக உணரக்கூடிய பணிகளைக் குறிக்கிறது. இப்பணிகள் சலிப்பூட்டுகிறவைகளாயிருக்கும். இவை எழுத்தாளரான ஜி.கே. செஸ்டெர்டென்னின் வார்த்தைகளை எனக்கு நினைப்பூட்டுகிறது. “உணவுக்கு முன் கிருபை வேண்டும் என்று கேட்கிறீர்கள். அது நல்லது தான். ஆனால் நான் வர்ணம் தீட்டுவதற்கு முன்னும், நீச்சல் அடிப்பதற்கு முன்னும், வேலி இடுவதற்கு முன்னும், குத்துச்சண்டை போடும் முன்னும், நடக்கும் முன்னும், விளையாடும் முன்னும், நடனமாடும் முன்னும், பேனாவிற்கு மையை ஊற்றும் முன்னும் தேவனுடைய கிருபைக்காக கேட்கிறேன்.”
இத்தகைய ஊக்கம் எனது நாளின் செயல்பாடுகள் குறித்த எனது கண்ணோட்டத்தை மாற்றியமைக்கிறது. சில சமயங்களில் ஆவிக்குரிய வாழ்க்கையில், முக்கியமானது, முக்கியமற்றது என இரண்டு வகைகளாக பிரிக்க முற்படுகிறேன். இயேசுவுக்காக வாழத் தெரிந்துகொண்ட கொலோசே மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அந்தப் பிரிவினையை அழித்தார். அவர் இந்த வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினார்: ”வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து”. (கொலோசெயர் 3:17). இயேசுவின் நாமத்தில் காரியங்களைச் செய்வதென்பது, நாம் அவற்றைச் செய்வது மட்டுமல்லாமல், அதன் மூலம் அவரைக் கனப்படுத்துவதும், அவற்றை நிறைவேற்றுவதற்கு அவருடைய ஆவி நம்மைப் பலப்படுத்துகிறது என்ற உறுதியைக் கொண்டிருப்பதும் ஆகும்.
"நீங்கள் எதைச் செய்தாலும்." நம் வாழ்வின் அனைத்து சாதாரண செயல்களையும், ஒவ்வொரு நேரமும், தேவ ஆவியால் பலப்படுத்தப்பட்டு, இயேசுவைக் கனப்படுத்தும் விதத்தில் செய்யலாம்.

ஆழமான தண்ணீர்
1992 இல் பில் பிங்க்னி தனியாக உலகம் முழுவதும் கடல் வழி பயணம் செய்தார், அவர் ஆபத்தான “கிரேட் சதர்ன் கேப்ஸைச்” சுற்றி உள்ளதான கடினமான பாதையில் சென்றார். அவர் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக அவ்வாறு செய்தார். அவரது பயணம் குழந்தைகளுக்கான கல்வியை வலியுறுத்தி, ஊக்கம் அளித்தது. அவரது முன்னாள் சிகாகோ நகர தொடக்கப் பள்ளி மாணவர்களும் அதில் உள்ளடங்குவர். அவரது இலக்கு என்ன? கடினமாகப் படிப்பதன் மூலமும் அர்ப்பணிப்புடன் இருப்பதன் மூலமும், மாணவர்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் காட்ட வேண்டும் என்பதே. அவர் தனது படகின் பெயரை அதற்கேற்றார் போலவே தேர்ந்தெடுத்தார் (அர்ப்பணிப்பு). பில், பள்ளி மாணவர்களை “அர்ப்பணிப்பு” என்ற படகில் கூட்டிச்செல்லும் போது இவ்வாறு கூறுகிறார், “உங்கள் கையில்தான் உழவு இயந்திரம் உள்ளது, நீங்கள் சுய கட்டுப்பாட்டுடன் உங்கள் குழுவுடன் இசைந்து கற்க வேண்டும்”. வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவருக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் அவர் மாணவர்களுக்கு கற்றுத்தந்தார்.
பிங்க்னியின் வார்த்தைகள் சாலமோனின் ஞானத்தின் உருவப்படத்தை காட்டுகின்றன. ”மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்” (நீதிமொழிகள் 20:5). சாலமோன் மக்கள் தங்கள் இலக்குகளை ஆராய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். இல்லையெனில், "அது ஒரு பொறி, "என சாலமோன் குறிப்பிடுகிறார். ”பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்” (வ.25).
இதற்கு மாறாக, பிங்க்னிக்கு ஒரு தெளிவான நோக்கம் இருந்தது, அது இறுதியில் அமெரிக்கா முழுவதும் உள்ள முப்பதாயிரம் மாணவர்களை அவரது பயணத்திலிருந்து கற்றுக்கொள்ளத் தூண்டியது. அவர் “நேஷனல் செய்லிங் ஹால் ஆஃப் ஃபேம்” இல் சேர்க்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆனார். "குழந்தைகள் கவனித்துக் கொண்டிருந்தனர்," என அவர் கூறினார். இதே போன்ற நோக்கத்துடன், தேவன் நமக்குக் கற்றுக் கொடுக்கிற ஆழமான ஆலோசனையின்படியே நம் வாழ்க்கையை அமைப்போம்.

தனிப்பட்ட பொறுப்பு
நான் என்ன உணர்கிறேன் என்பதை என் நண்பனின் கண்கள் வெளிப்படுத்தின - பயம்! வாலிப வயதினரான நாங்கள் இருவரும் மோசமாக நடந்து கொண்டதால், அந்த முகாம் இயக்குனருக்கு பயந்து கொண்டிருந்தோம். அவர் எங்கள் தகப்பன்மார்களை நன்கு அறிந்தவர், எங்கள் தகப்பன்மார்கள் இதனால் பெரிதும் ஏமாற்றமடைவார்கள் என்பதை அன்புடன் எங்களுக்குச் சுட்டிக்காட்டினார். எங்கள் குற்றத்திற்கான தனிப்பட்ட பொறுப்பை நாங்கள் எண்ணிப்பார்க்கும்போது நிமிர்ந்து நடக்க கூட தகுதியற்றிருந்தோம்.
யூதாவின் மக்களுக்காக தேவன் செப்பனியாவுக்கு ஒரு செய்தியைக் கொடுத்தார், அதில் பாவத்திற்கான தனிப்பட்ட பொறுப்பைப் பற்றிய வல்லமை மிகுந்த வார்த்தைகளை (செப்பனியா 1:1, 6-7) காண்கிறோம். யூதாவின் பகைவர்களுக்கு எதிராக அவர் கொண்டு வரும் தீர்ப்புகளை விவரித்த பிறகு (அதிகாரம் 2), அவர் தனது பார்வையை குற்றம் செய்து குற்ற மனசாட்சியுடன் இருக்கும் தம் மக்கள் மீது திருப்பினார் (அதி. 3). ”இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!“ (செப்பனியா3.1). “அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்” (செப்பனியா 3: 7)
அவர் தனது மக்களின் கடின இதயங்களைக் கண்டார். அவர்களின் ஆவிக்குரிய அக்கறையின்மை, சமூக அநீதி மற்றும் மோசமான பேராசை ஆகியவற்றைக் கண்டு, அன்புடன் ஒழுக்கத்தை அவர்களுள் கொண்டு வந்தார். தனிநபர்கள், தலைவர்கள், நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள் (வ. 3-4) என்றெல்லாம் அல்ல. எல்லோரும் அவருக்கு முன்பாக குற்றவாளிகள்தான்.
பாவத்தில் நிலைத்திருந்த இயேசுவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினார், “தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக் கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்” (ரோமர் 2:5,6). எனவே, துக்கம் ஏற்படுத்தாதபடிக்கு இயேசுவின் வல்லமையில், நம்முடைய பரிசுத்தமான, அன்பான தகப்பனைக் கனம்பண்ணும் விதத்தில், மணந்திரும்பி வாழ்வோம்.

என்னை சுத்திகரியும்
"என்னை சுத்தம் செய்!" என்ற வார்த்தைகள் எனது வாகனத்தில் எழுதப்படவில்லை என்றாலும், என் வாகனம் அதை வெளிப்படுத்தியது. எனவே, நான் கார் கழுவுவதற்குச் சென்றேன். சமீபத்திய பனிப்பொழிவின் காரணத்தினால், உப்பு நீர் நிறைந்த சாலைகளில் இருந்த மோசமான அசுத்தங்களிலிருந்து நிவாரணம் பெற விரும்பும் பிற ஓட்டுநர்களும் வந்து தங்கள் வாகனங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்பே நீளமான வரிசையில் வாகனங்கள் சுத்தப்படுத்தப்படுவதற்காக இருந்தன. சேவையோ மெதுவாக இருந்தது. ஆனால் அக்காத்திருப்பு நல்லது. நான் ஒரு சுத்தமான வாகனத்துடன் புறப்பட முடிந்தது. சேவை தாமதத்தின் காரணமாக, கார் சுத்தம் செய்ததற்கான பணமும் இலவசமாக்கப்பட்டது!
வேறொருவரின் செலவில் சுத்தம் செய்யப்பட்டது. இதுதான் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி. தேவன், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம் பாவங்களுக்கு மன்னிப்பை வாங்கித்தந்தார். வாழ்க்கையின் "அழுக்கு மற்றும் கறைகள்" நம்மில் ஒட்டிக்கொண்டிருக்கும்போது "குளிப்பதன்" அவசியத்தை நம்மில் யார் உணராமல் இருக்கிறோம்? எப்பொழுது நம் சுயநல எண்ணங்கள், செயல்கள் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் தேவனுடனான நம் அமைதியைப் பறித்திருக்கிறது? தாவீது சங்கீதம் 51ல், சோதனை தன்னை மேற்கொண்டபோது அவன் அழுததை குறிப்பிடுகிறார். ஆவிக்குரிய ஆலோசகர் தேவனுக்கு விரோதமான அவன் பாவத்தை அவனுக்கு உணர்த்திய போது (2 சாமுவேல் 12 பார்க்கவும்), அவன் தேவனிடம் "என்னை சுத்திகரியும்”என ஜெபிக்கிறான்: ”நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.”(வ.51:7). உங்களிடம் பாவம் மற்றும் குற்ற உணர்வு இருக்கிறதா? இயேசுவிடம் உங்கள் வழியை செவ்வைப்படுத்தி, இவ்வசனத்தை நினைவில் வையுங்கள்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”. (I யோவான் 1:9)

புகழுக்கு உரியவர் யார்?
வீட்டு முகவர் ஒருவர், சுழல் படிக்கட்டு முதல் விரிந்த படுக்கையறை வரை, பளிங்கு தரையிலிருந்து பட்டு விரிப்பு வரை, பிரமாண்டமான சலவை அறை முதல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அலுவலகம் வரை இளம் தம்பதியினருக்கு ஏற்ற ஒரு வீட்டைக் காட்டினார். அவர்கள் திரும்பிய ஒவ்வொரு மூலையிலும் அவ்வீட்டின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “எங்களுக்கு சிறந்த இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து கொடுத்தீர்கள். இந்த வீடு மிகவும் நன்றாக இருக்கிறது!” என்றனர். அதற்கு வீட்டு முகவர், “உங்கள் பாராட்டுக்களை நான் இதை கட்டினவருக்கு தெரிவிக்கிறேன். வீட்டைக் கட்டியவராகிய அவர்தான் பாராட்டுக்குரியவர், வீடோ அதைக் காட்டின நானோ அல்ல” என பதிலளித்தார். இது சற்று விசித்திரமாக இருந்தாலும், அது தான் உண்மை
வீட்டு முகவரின் இந்த வார்த்தைகள் எபிரெய எழுத்தாளரை எதிரொலித்தது. “வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்”. (வ.3.3). எபிரெய நிருபத்தின் எழுத்தாளர் தேவ குமாரனாகிய இயேசுவின் உண்மைத்தன்மையை, தீர்க்கதரிசியாகிய மோசேயுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் (வவ. 1-6). மோசே தேவனிடம் நேருக்கு நேர் பேசுவதற்கும், அவருடைய உருவத்தைக் காண்பதற்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும் (எண்ணாகமம்12:8), அவர் தேவனுடைய வீட்டில் “ஒரு பணிவிடைக்காரனாய்" மட்டுமே இருந்தார் (எபிரெயர் 3:5). கிறிஸ்துவே படைப்பாளர் (1:2, 10). ஆவிக்குரிய "எல்லாவற்றையும் கட்டுபவர்" மற்றும் "தேவனின் வீட்டில்" குமாரன் (3:4, 6) என்ற மரியாதைக்குத் தகுதியானவர். தேவமக்களாகிய நாம்தான் அவருடைய வீடு.
நாம் தேவனை உண்மையாகச் சேவிக்கும் போது, நமது ஆவிக்குரிய ஜீவியத்தைக் கட்டி எழுப்பிகிறவராகிய இயேசுவே அந்த கனத்திற்குத் தகுதியானவர். தேவனின் வீடாகிய நாம் பெறும் எந்தப் புகழும் அவருக்கே உரியதாகும்.