வகை  |  odb

தாகமும், நன்றியுள்ளமும்

நானும்  என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம்.  பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார்.  (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , "என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும்  நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, ​​​​சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், ​​அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், ​​அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, ​​இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.

 

தாராளமாக கொடுக்கப்பட்டது மற்றும் பகிரப்பட்டது

நானும் என் மனைவியும் எங்கள் உயர்கல்வியை முடித்தபோது, ​​குறைந்த வட்டி விகிதத்தில் ஒருங்கிணைக்க வேண்டிய கடன் நிறைய இருந்தது. நாங்கள் உள்ளூர் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தோம், ஆனால் நாங்கள் நீண்ட காலமாக அந்த நகரத்தில் வசிக்கவோ, வேலையோ  செய்யவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டோம். சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் சபையின் மூப்பராக இருந்த என் நண்பரிடம் நடந்ததைச் சொன்னேன். "நான் இதை என் மனைவியிடம் குறிப்பிட விரும்புகிறேன்," என்று அவர் போகும்போது சொல்லிவிட்டுச் சென்றார்.

சில மணி நேரம் கழித்து,அலைபேசி அழைத்தது. அது என் நண்பன்தான், “நானும் என் மனைவியும் உனக்குத் தேவையான பணத்தை வட்டியில்லாக் கடனாகக் கொடுக்க விரும்புகிறோம்,” என்று அவர் முன்வந்தார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அதனால், "அப்படி உங்களிடம் நான் கேட்கக் கூடாது" என்று பதிலளித்தேன். "நீ கேட்கவில்லை!" என் நண்பர் தமாஷாகப் பதிலளித்தார். அவர்கள் இரங்கி எங்களுக்குக் கடனைக் கொடுத்தார்கள், நானும் என் மனைவியும் எங்களால் முடிந்தவரை விரைவாகத் திருப்பிச் செலுத்தினோம்.

இந்த நண்பர்களின் தாராள குணத்திற்குத் தேவன் மீதான அவர்களின் அன்பே  காரணமென்று நான் நம்புகிறேன். "இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம் 112:5) என்று வேதாகமம் சொல்வதுபோல, கர்த்தரை நம்புகிறவர்களின் இருதயம் "திடனாயிருக்கும்" ,"உறுதியாயிருக்கும்" (வச. 7-8) .ஆகவே அவர்களின் வாழ்வில் நடக்கும் எல்லா நன்மைகளுக்கும் தேவன் தான் ஆதாரம் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

தேவன் நமக்கு வாழ்வையும் மன்னிப்பையும் கொடுப்பதில் தாராளமாக இருக்கிறார். நாமும் அவருடைய அன்பையும் நமக்குள்ளவற்றையும்  தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தாராளமாக இருப்போம்.

 

பாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கு

சிறுமியாக, என் மகள் பாலாடைக்கட்டிகளுடன் விளையாடுவதை விரும்பினாள். அதின் இரண்டு துளைகளிலிருந்து அவளது பளபளப்பான கண்கள் எட்டிப்பார்த்து, "அம்மா பாருங்கள்" என்று சொல்லி, முகமூடியைப் போல வெளிர் மஞ்சள் நிற சதுரத்தை முகத்தில் வைப்பாள். ஒரு இளம் தாயாக, அந்த முகமூடி எனது உண்மையான, அன்பு நிறைந்த ஆனால் மிகவும் அபூரணமான கிரியைகளை எனக்கு நினைப்பூட்டியது. அவை குறைவுள்ளவை, பரிசுத்தமானவை அல்ல.

தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்ட, அவரைப் போல வாழ வகையறுக்கப்பட்டிருக்கும் அந்த பரிசுத்தமான வாழ்வை வாழ நாம் எவ்வளவாய் ஏங்கினாலும் ,பரிசுத்தத்திற்கு பதிலாக,நாளுக்கு நாள் குறைவுகளே  நம்மிடம் காணப்படுகிறது.

 

2 தீமோத்தேயு 1:6-7ல், பவுல் தனது இளம் சீடன் தீமோத்தேயுவிடம் அவருடைய பரிசுத்த அழைப்பின்படி வாழ அவரை வலியுறுத்துகிறார். அப்போஸ்தலன் பின்னர் "[தேவன்]  நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும்....கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்." (வச. 9) என்று தெளிவுபடுத்தினார். இப்படிப்பட்ட வாழ்க்கை நம் குணத்தால் அல்ல, தேவனின் கிருபையாலேயே சாத்தியமாகும். இது, "ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட" (வச. 9) கிருபை என்று பவுல் தொடர்கிறார். தேவனின் கிருபையை ஏற்று, அவை அருளும் வல்லமையை அடித்தளமாக்கி வாழ முடியுமா?

பெற்றோர், கடமை, திருமணம், வேலை, அல்லது நம் அயலாரை நேசித்தல் என்று எதுவாக இருந்தாலும், தேவன் நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைக்கிறார் .நாம் பரிபூரணமாக இருக்க முயல்வதால் அல்ல, மாறாக அவருடைய கிருபையால்.

 

பீட்ஸா மூலம் இரக்கம்

என் திருச்சபை தலைவர் ஹரோல்ட் மற்றும் அவரது மனைவி பாம் ஆகியோரின் இரவு உணவிற்கான அழைப்பு என் மனதிற்கு இதமாயிருந்தது. ஆனால் அந்த அழைப்பு என்னை பதட்டப்படுத்தியது. ஏனென்றால், வேதாகமத்தின் போதனைகளுக்கு முரணான கருத்துக்களைக் கற்பிக்கும் கல்லூரி வேதாகமப் படிப்புக் குழுவில் நான் சேர்ந்தேன். அவர்கள் அதைப் பற்றி ஒருவேளை என்னிடம் பேசுவார்களோ? என்று அஞ்சினேன். 

பீட்சா உட்கொண்டவாறே, அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டனர் மற்றும் என்னுடைய குடும்பத்தையம் விசாரித்து அறிந்தனர். நான் என்னுடைய வீட்டுப்பாடம் எழுதுவது குறித்தும், என் நாய் மற்றும் நான் நேசிக்கும் நபரைக் குறித்தும் அவர்கள் இயல்பாய் பேசினர். அதன் பிறகுதான் நான் கலந்துகொண்ட குழுவைப் பற்றி மெதுவாக எச்சரித்து, அதன் போதனைகளில் என்ன தவறு என்று விளக்கினார்கள்.

அவர்களின் எச்சரிக்கை வேதாகம படிப்பில் வழங்கப்பட்ட பொய்களிலிருந்து என்னை விலக்கி, வேதத்தின் உண்மைகளுக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றது. யூதா தனது நிருபத்தில், தவறான போதகர்களைப் பற்றி வலுவான மொழியைப் பயன்படுத்துகிறார். “விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று” (யூதா 1:3) அவர்களை எச்சரிக்கிறார். கடைசிகாலத்திலே பரியாசக்காரர் இருப்பார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தி, அவர்கள் ஆவியில்லாத ஜென்மசுபாவக்காரர்கள் என்றும் குறிப்பிடுகிறார் (வச. 18-19). இருப்பினும் யூதா, விசுவாசிகளை “சிலருக்கு இரக்கம் பாராட்டுங்கள்” (வச. 22) என்று அவர்களோடு சத்தியத்தை சமரசம் செய்யாமல் அவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கும்படி சொல்லுகிறார். 

ஹரோல்டும் அவரது மனைவி பாமும் நான் என் நம்பிக்கையில் உறுதியாக இல்லை என்பதை அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் என்னை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் முதலில் தங்கள் நட்பை வழங்கினர். பின்னர் தங்கள் ஞானத்தை வழங்கினர். குழப்பத்தில் உள்ளவர்களுடன் பழகும்போது, ஞானத்தையும் இரக்கத்தையும் பயன்படுத்த, இதே அன்பையும் பொறுமையையும் தேவன் நமக்குத் தந்தருளுவாராக.

 

வார்த்தைகள் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது

கெட்டவார்த்தை உபபோகிப்பதை எவ்வாறு அகற்றுவது? ஓர் உயர்நிலைப் பள்ளி “கெட்ட வார்த்தை பேசுவதில்லை” என்று உறுதிமொழியை எடுத்தது. அந்த பள்ளியின் மாணவர்கள் “நாங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் அதின் சுவர்களிலும் எந்தவிதமான கெட்ட வார்த்தைகளையோ தவறான கருத்துக்களை கிறுக்கவோ பேசவோ மாட்டோம்” என்று உறுதிமொழியேற்றனர். இது ஓர் உன்னத முயற்சி. ஆனால், இயேசுவின் கூற்றுப்படி, எந்த விதிமுறைகளும் உறுதிமொழிகளும் ஒருபோதும் தவறான பேச்சின் வாசனையை மறைக்க முடியாது.

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளின் துர்நாற்றத்தை நீக்குவது நம் இதயத்தை புதுப்பிப்பதில் இருந்து தொடங்குகிறது. பழங்களைக் கொண்டு மரத்தின் வகையை மக்கள் அடையாளம் காண்பது போல் (லூக்கா 6:43-44), நம்முடைய பேச்சு, நம் இருதயம் அவரோடும் அவருடைய வழிகளோடும் ஒத்துப்போகிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் அடையாள சின்னமாய் இருக்கிறது என்று இயேசு கூறுகிறார். பழம் என்பது ஓர் நபரின் பேச்சைக் குறிக்கிறது. “இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” (வச. 45). நம் வாயிலிருந்து வெளிவருவதை நாம் உண்மையில் மாற்ற விரும்பினால், முதலில் நம் இருதயத்தின் நினைவுகளை மாற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார். 

மறுரூபமாக்கப்படாத இருதயத்திலிருந்து வெளிவரும் தவறான வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வெளிப்புற வாக்குறுதிகள் பயனற்றவை. முதலில் இயேசுவை (1 கொரிந்தியர் 12:3) விசுவாசித்து, பிறகு நம்மை நிரப்ப பரிசுத்த ஆவியானவரை அழைப்பதன் மூலம் மட்டுமே தவறான பேச்சை நாம் அகற்ற முடியும் (எபேசியர் 5:18). தொடர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கும் (வச. 20) ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மற்றவர்களிடம் பேசுவதற்கும் (4:15, 29; கொலோசெயர் 4:6) மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கும் அவர் நமக்குள் செயல்படுகிறார்.