வகை  |  odb

மகிழ்ச்சியில் ஊழியம் செய்தல்

ஆண்ட்ரூ கார்டு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தலைமை அதிகாரியாக இருந்தார். வெள்ளை மாளிகையில் அவரது பங்கு பற்றிய ஒரு நேர்காணலில் அவர் விளக்கினார். “ஒவ்வொரு பணியாளரின் அலுவலகத்திலும், 'நாங்கள் ஜனாதிபதியின் விருப்பப்படி சேவை செய்கிறோம்” என்று ஒரு வடிவமைக்கப்பட்ட நோக்க அறிக்கை தொங்குகிறது. ஆனால் நாங்கள் ஜனாதிபதியை மகிழ்விக்கவோ அல்லது அவருடைய மகிழ்ச்சியை வெல்லவோ சேவை செய்யவில்லை; மாறாக, அவருடைய வேலையைச் செய்ய அவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு சொல்ல நாங்கள் சேவை செய்கிறோம்.” அந்த வேலை, அமெரிக்காவை நேர்த்தியாய் ஆட்சி செய்வதாகும். 

அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வற்புறுத்தியபடி, நாம் பல வேளைகளில் ஒருவரையொருவர் ஒற்றுமையில் கட்டியெழுப்புவதை விடுத்து, மனிதர்களை பிரியப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எபேசியர் 4இல் பவுல், “சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (வச. 11-13) என்று சொல்லுகிறார். 15-16 வசனங்களில், மக்களை பிரியப்படுத்த முயற்சிக்கும் செய்கையை விட்டுவிடும்படிக்கு அறிவுறுத்தி, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” செயல்பட்டால், “அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது” என்று வலியுறுத்துகிறார். 

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் மக்களைக் கட்டியெழுப்பவும் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றவும் ஊழியம் செய்கிறோம். நாம் மற்றவர்களைப் பிரியப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், அவருடைய திருச்சபையில் ஒற்றுமையை உருவாக்க அவர் நம் மூலம் செயல்படும்போது நாம் தேவனை பிரியப்படுத்துவோம்.

 

உனக்கென்ன

"அவளுக்குத் திராட்சை லாலிபாப், எனக்கு மட்டும் ஸ்ட்ராபெரி லாலிபாப்பா?" என் சகோதரியின் ஆறு வயது மகள் கேட்டாள். குழந்தைகள், தாங்கள் பெறுவதையும் பிறர் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை, என் சகோதரியின் பிள்ளைகள் ஆரம்பத்திலேயே எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒரு சித்தியாக , நான் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.

நானும் சில சமயங்களில் தேவன் எனக்குக் கொடுப்பதைப் பிறருக்குக் கொடுக்கப்பட்டதோடு ஒப்பிடுவேன். "எனக்கு ஏன் இது, அவளுக்கு மட்டும் அது?" என்று தேவனைக் கேட்டிருக்கிறேன். கலிலேயா கடலோரம் இயேசுவிடம் சீமோன் பேதுரு கேட்டதை என் கேள்வி எனக்கு நினைவூட்டுகிறது. பேதுரு தன்னை முன்பு மறுதலித்ததற்காக இயேசு அவனை மன்னித்தார். இப்போது ஒரு இரத்தசாட்சியான மரணத்தின் மூலம் தேவனை பேதுரு மகிமைப்படுத்தப் போவதாகக் கூறினார் (யோவான் 21:15-19). இருப்பினும், தம்மைப் பின்தொடரும்படியான இயேசுவின் அழைப்பிற்கு ஆம் என்று பதிலளிப்பதற்குப் பதிலாக, பேதுரு, “இவன் [யோவான்] காரியம் என்ன?” என்று கேட்டார். (வ. 21).

அதற்கு இயேசு, "உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்." (வ. 22). இயேசு நமக்கும் அதையே சொல்வார் என்று நான் நம்புகிறேன். நம் வாழ்வின் வழிகாட்டுதலை ஏற்கனவே அவர் நமக்கு அருளியிருக்கையில், ​​நம்மில் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார். நாம் நமது பாதையை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது, மாறாக நாம் அவரைப் பின்பற்றினால் போதும்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அப்போஸ்தலனாகிய பேதுரு, ஆதித்திருச்சபையின் தைரியமான தலைவராகத் தேவனைப் பின்பற்றினார். தீய பேரரசன் நீரோவின் கீழ் அவர் அச்சமின்றி மரணத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. நாமும் தேவனைப் பின்பற்றுவதில் உறுதியாகவும், கேள்விக்கு இடமில்லாமல் அவருடைய அன்பையும் வழிநடத்துதலையும் நம்புவோமாக.

 

நீ பிரியமானவன்(ள்)

தன் சோகத்தை வெளிப்படுத்த, அந்த இளம் பெண் மாலினி, ஒரு மரத் துண்டில், "“உண்மையைச் சொல்வதானால், நான் சோகமாக இருக்கிறேன். யாரும் என்னுடன் சேர விரும்பவில்லை, என்னை நேசிக்கும் ஒரே நபரையும் நான் இழந்துவிட்டேன். நான் தினமும் அழுகிறேன்" என்றெழுதி எழுதி பூங்காவில் வைத்துவிட்டாள்.

யாரோ ஒருத்தி அந்தக் குறிப்பைக் கண்டெடுத்தபோது, ​​பூங்காவிற்கு ஒரு பெரிய எழுத்துப் பலகையைக் கொண்டு வந்து, மக்கள் தங்கள் எண்ணங்களை மாலினிக்காக எழுதச் சொன்னாள். அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், "நாங்கள் உன்னை நேசிக்கிறோம்", "தேவன் உன்னை நேசிக்கிறார்", "நீ பிரியமானவள்" என்றெல்லாம் பல ஆதரவான வார்த்தைகளை எழுதிச் சென்றனர்.  பள்ளி முதல்வரும் "அவளிடம் உள்ள வெறுமை நிரம்பும்படி அவளுக்கு உதவிட நாம் எடுக்கும் சிறிய முயற்சி இது. அவள் நம் அனைவரையும் பிரதிபலிக்கிறாள், ஏனெனில் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சோகத்தையும் துன்பத்தையும் அனுபவிப்போம் அல்லது அனுபவிக்கிறோம்" என்றார்.

"நீ பிரியமானவள்" என்ற வார்த்தை, மோசே இறப்பதற்குச் சற்று முன்பு  இஸ்ரவேல் கோத்திரமான பென்யமீனுக்கு அளித்த அற்புதமான ஆசீர்வாதத்தை எனக்கு நினைவூட்டுகிறது, " கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்" (உபாகமம் 33:12). மோசே தேவனுக்காக ஒரு வலிமையான தலைவராக இருந்தார், எதிரி நாடுகளைத் தோற்கடித்தார், பத்து கட்டளைகளைப் பெற்றார், தேவனைப் பின்பற்ற அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர் அவர்களைத் தேவனின் கண்ணோட்டத்தில் கண்டு மரித்தார். பிரியமானவன் என்ற வார்த்தையை நாமும் நமக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இயேசு கூறினார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

இயேசுவின் ஒவ்வொரு விசுவாசியும் அவருக்கு "பிரியமானவர்கள்" என்ற சத்தியத்தில் உறுதியாக இளைப்பாறிட  அவர் நமக்கு உதவுவதால், மாலினியின் புதிய நண்பர்களைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க முற்படுவோம்.

 

நம்பிக்கையான எதிர்காலத்தைப் பார்த்தல்

2005 இல் கத்ரீனா புயலின் பேரழிவிற்குப் பிறகு, நியூ ஆர்லியன்ஸ் மெதுவாக மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. லோயர் நைந்த் வார்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும், கத்ரீனாவின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதை மாற்ற பர்னெல் காட்லன் பணியாற்றினார். நவம்பர் 2014 இல், கத்ரீனாவுக்குப் பிறகு லோயர் நைந்த் வார்டில் முதல் மளிகைக் கடையைத் திறந்தார். "நான் கட்டிடத்தை வாங்கியபோது, ​​​​எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றெண்ணினார்கள். ஆனால் எனது முதல் வாடிக்கையாளரோ அழுது “தனது சுற்றுப்புறம் திரும்பக் கிடைக்குமென்று ஒருபோதும் நினைத்ததில்லை" என்றதை காட்லன் நினைவு கூர்ந்தார். அவரது தாயார் தனது மகன் “நான் பார்க்காத ஒன்றைப் பார்த்தான்.  அந்த வாய்ப்பை பயன்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

ஏசாயா தீர்க்கதரிசிக்கு, அழிவினூடே எதிர்பாராத நம்பிக்கையான எதிர்காலத்தைக் காணத் தேவன் உதவினார். "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல்" (ஏசாயா 41:17) இருப்பதால் "வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்(குவேன்)" (வ.18) என்று தேவன் வாக்குப் பண்ணினார். பசிக்கும், தாகத்திற்கும் பதிலாக, அவருடைய ஜனங்கள் மீண்டும் ஒருமுறை செழுமையை அனுபவிக்கும்போது, ​​"கர்த்தருடைய கரம் அதைச்செய்தது" (வ. 20) என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

அவரே இன்றும் புனரமைப்பின் ஆக்கியோன், "சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு" (ரோமர் 8:20) , சுதந்திரம் என்ற எதிர்கால நிலைக்கு உருவாக்கும் பணியில் கிறிஸ்து ஈடுபட்டுவிட்டார். அவருடைய நற்குணத்தில் (அன்பில்)நாம் நம்பிக்கை கொள்கையில், ​​நம்பிக்கை சாத்தியமாகும் எதிர்காலத்தைக் காண அவர் நமக்கு உதவுவார்.

 

வாழ்வின் யாத்திரை

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப்  பலர் கருதுகின்றனர். 

எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை   நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.

இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது.  ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).

நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம்   கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், ​​வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக.